Monday, April 23, 2012

ப்ரான்ஸ் காஃப்காவும் ஐன்ஸ்டீனும்! எஸ்.வைதீஸ்வரன்


ப்ரான்ஸ் காஃப்காவும் ஐன்ஸ்டீனும்!

எஸ்.வைதீஸ்வரன்



ப்ரான்ஸ் காப்கா [Franz Kafka}  எப்போதும் மன உலகத்தில்   வாழுகின்ற எழுத்தாளன்.   அவன் கதைகள் மூலம் வெளிப்படும்  உலகம் பூடகமானது.

புற உலக மனித உறவுகளை   ஒரு மனோதத்துவப் பார்வையில்  வெளிப்படுத்துவது அவன் கதைகள்.

 அவன் வாழ்ந்த வாழ்க்கையும் ஊரும் ஒரு கனவுத் தன்மையுடன் தான் அவன் எழுத்து மூலம்   வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அவன் Prague  கலாசாலையில்   மாணவனாக சேர்ந்து படித்துக் கொண்டிருந்த  போது விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அங்கே  பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

 உணவு  இடைவேளைகளில்    நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஐன்ஸ்டீனும்     சகஜமாக அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

இருந்தாலும்  காப்கா  போலவே  ஐன்ஸ்டீனும் அதிகம் பேசாமலிருப்பவர். ஆனாலும்  காப்கா அவர் எப்போதாவது பேசும் ஒன்றிரண்டு  வாக்கியங்களைக் கேட்பதற்கு மிக ஆவலாகக் காத்துக் கொண்டிருப்பான்.

 அப்படி  ஒரு தடவை   "ஒரு  குடிமகன்  அவன் நாட்டின் மேல்  எந்த அளவுக்கு   தேசப்பற்றுடன் இருக்க வேண்டும்" என்று   ஒரு விவாதம் தொடங்கிய போது   காஃப்கா  ஒரு கருத்தை சொல்ல நினைத்தான். ஆனால் அதற்கு சற்று முன்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  சொன்னார்....

  "நான் எந்த ராஜ்ஜியத்தில் குடியிருந்தாலும்   அந்த ராஜ்ஜியம் என் அக வாழ்க்கையை அல்லது பரிணாமத்தை  எந்த  விதத்திலும் பாதிப்பதில்லை

 ஒரு அரசாங்கத்துக்கும்  அதன்  குடிமகனாக  வாழுகின்ற எனக்கும் உள்ள   பிணைப்பு ஒரு நேர்மையான வியாபார ஒப்பந்தம்  போன்றது....அதாவது  ஒரு  காப்பீட்டு நிர்வாகத்துடன் நாம்  ஏற்படுத்திக் கொள்ளும்   உறவைப் போல. " 

காஃப்காவை இந்த பதில் வெகுவாக பாதித்தது.  ஏனென்றால் அவனும் தான் வாழும் நாட்டுடன் அப்படிப்பட்ட  உறவைத்தான்  வைத்துக் கொண்டிருந்தான்

ஐன்ஸ்டீன்   ஒரு மகா மனிதர் என்று அப்போதே காஃப்காவுக்குத் தோன்றியது.  சில வருஷங்களுக்குப் பிறகு தான் ஐன்ஸ்டீன் உலகப்புகழ் வாய்ந்த விஞ்ஞானியாக   பிரசித்தமாகப் போகிறார்.

 0

No comments:

Post a Comment