உறுத்தல் _ கவிதை
உறுத்தல்
வைதீஸ்வரன்
இருபது வருஷங்களுக்கு முன்
திருடிய என் சைக்கிளில்
இன்னமும் அவன்
போய்க் கொண்டு தான் இருந்தான்.
சகஜமாக என்னை
சிரித்துக் கடந்து போவதும்
வழக்கமாச்சு வருஷங்களாக
இப்போது குற்ற உணர்வு
சுத்தமாக மறைந்து போய்
இருவருமே பொதுவாய்
வழியில் நின்று
பேசிக் கொள்கிறோம்.
நேற்று அவன்
சைக்கிள் இல்லாமல்
தடுமாறி வருவதைப் பார்த்ததும்
கவலையுடன்..
“சௌக்கியமா?” என்றேன்
அவன் நெஞ்சில் கைவைத்தவாறு
“ஸார்....இப்பெல்லாம் காத்து நிக்கறதில்லே...
ஒக்காந்தா...மல்லாக்கத் தள்ளுது!....
இனியும் எத்தினி நாளு
ஓட்ட முடியுமோ தெரியலே!...
ஒவ்வொரு சமயம் எதுவுமே
நம்புளுது இல்லையோன்னு தோணுது!...”
என்று பெருமூச்செறிந்தான்..
நான் தலையை சொறிந்து கொண்டேன்......
“உடம்பா?........சைக்கிளா?
இவன் எதைச் சொல்லுகிறான்?
No comments:
Post a Comment