Tuesday, February 16, 2016

நான் அறிந்த திருலோக சீதாராம்


                   நான்  அறிந்த   

திருலோக சீதாராம்       

                  வைதீஸ்வரன்



வாழ்க்கையில்  நல்லவர்களையும்;  அருமையான  கலைஞர்
களையும் லட்சிய மனிதர்களையும் சந்திப்பதற்கு  நாம்  பேறு
பெற்றிருக்க வேண்டும். எனக்கு அவ்விதத்தில் நிறையவே  
நல்லருள்  வாய்த்திருக்கிறது.

அப்படிப்பட்டஒரு  நல்ல  மனிதரை ; இலக்கிய  பத்திரிகையா
ளரை கவிஞரை -மிழ்க் கவிதையின்  நல்லோசைகளின் மூலம்சமூகத்தில்  நல்லதிர்வுகளை  ஏற்படுத்துவதற்காக தன் 
வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட இலட்சிய மனிதர்
திருலோக சீதா ராம் அவர்களை  சந்திக்கும்  வாய்ப்பு எனக்கு  
நேர்ந்தது.

அந்த  வருடம்  1959.  நான்  சேவாஸ்டேஜ்  நாடக மன்றத்தில்  
ஒரு நடிகனாக  இருந்தேன் கர்ணன்  கதையை அடிப்படையாகக்
கொண்டு தயாரிக்கப்பட்ட பி.எஸ்.ராமையாவின் தேரோட்டிமகன் 
நாடகம்  அப்போது நல்ல  வரவேற்புடன்  நிகழ்ந்துகொண்டிருந்தது. 

அப்போது தமிழ்நாடு இயல் இசை  நாடகமன்றத்தார்  நாடகங் களின் மறுமலர்ச்சிக்காக  சிறப்பான  நாடகங்களை  தயாரிக்க
வேண்டுமென்றும்  அதன் தயாரிப்புக்காக உதவித்தொகை  
வழங்குவதாகவும் அறிவித்தது.

திரு எஸ்.விஸஹஸ்ரநாமம்[ஸேவாஸ்டேஜ்]அவர்களை கவிதை
நாடகம் தயாரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டது 
டி. கே. ஷண்முகம் இதை வலுவாக ஆமோதித்தார்.

அதன்படி மகாகவி பாரதியாரின் பாஞ்சாலிசபதத்தை கவிதை 
நாடகமாக  மேடையேற்ற  வேண்டுமென்று  தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் நாடக வரலாற்றில் ஒரு  மறுமலர்ச்சி  நாடகமாக அரங்கே
ற்றப்பட்ட  முதல் கவிதை  நாடகம்  அது தான்  என்று  நினைக்கி
றேன்.

ஆனால் பாஞ்சாலி சபதத்தின் தயாரிப்பின் ஆரம்பத்தில் அதன்  
உத்திகள்பற்றிய நிறைய தயக்கங்களும் சவால்களும் உணரப்
பட்டன. 

வசன நாடகங்களே வழக்கத்தில் இருந்துவந்த அந்தக் காலத்தில் 
கவிதை மொழி பார்வையாளர்களுக்கு எவ்விதம்  போய்ச் சேரும்  
என்ற கவலை தயாரிப்பாளர்களுக்கும்  நடிகர்களுக்கும்  இருந்தது.  

மேலும்  கவிதைகளைப் பாடுவதா? பேசுவதா? எப்படிப் பேசுவது 
என்பது போன்ற கேள்விகள்  பாடினால் அது வேறு விதமாக பழங்
கால  இசை நாடகமாக  மாறிவிடும். ஆனால் இது வேறுவிதமான 
 முயற்சி.

ஆனால்  பாரதியாரின் கவிதைகளை ஆழ்ந்து  வாசிப்பவர்களுக்கு  
பாஞ்சாலி சபதம் ஒரு வீரியமான உரைநடைக்கவிதையாக நாடக
க்குரலை செழுமையாக எதிரொலித்த படைப்பாக ரஸித்து உணர 
முடியும். அதை விட  அதன்  அற்புதமான  எளிமை  ரஸனையை  
மெருகூட்டியது.

பாரதியார் என்றவுடன் அப்போது திருச்சியில் இருந்த திருலோக 
சீதாராம் தான் நினைவுக்கு வந்தது. 

திருலோக சீதாராம் அவர்கள்அப்போது திருச்சியில் சிவாஜி 
இலக்கிய இதழை நடத்திக்கொண்டிருந்தார்.எங்கே மேடை 
கிடைத்தாலும் அங்கே  பாரதியார்  கவிதைகளை இசைநிகழ்ச்சி
யாக கதாகாலட்சேபமாக   நெக்குருகிப் பாடி  பாரதியின் புகழை வளர்த்துவந்தார்... பாரதியின்  மானஸீக  புத்திரனாக தன்னை  
வரித்துக்கொண்டு  தந்தையின்  ஞாபகத்தை  பரப்புவதையே 
ஒரு தொண்டு மனப்பான்மையுடன்  ஆற்றிவந்தார்.

எஸ்.வி ஸஹஸ்ரநாமம் அவர்கள்  பி.எஸ்.ராமையா மூலம் திரு
லோக  சீதாராம் அவர்களை  சென்னைக்கு  வருமாறு அழைப்பு விடுத்தார். பாஞ்சாலி  சபதம்  நாடகத் தயாரிப்பு  பற்றி  தெரிவி
த்து நடிகர்களுக்கு  பாஞ்சாலி சபதத்தின்  கவிதை மொழியையும்  
அதன் நுண்மையான  ரஸனைகளையும்  நிகழ்த்திக்காட்டவேண்டு மென்றும் தெரிவித்தார்.

 திருலோகசீதாராம் அவர்களுக்கு  இது  பெரிய  உவப்பான  செய்தி. 
அவர்  ஆர்வமுடன்  சென்னைக்கு வந்தார்.  அவர்  சௌகரியமாகத் தங்குவதற்கும் உணவுக்கும் தன்வீட்டிலேயே ஏற்பாடுகள் செய்து
கொடுத்தார்  சஹஸ்ரநாமம்.

திருலோக சீதாராம் தினமும் காலை ஒரு மணிநேரம் எங்களுக்கு முன் பாஞ்சாலி சபதத்தை  படித்துக்காட்டுவார்....பாடிக்காட்டினார் 
என்றுதான் சொல்ல வேண்டும்.அவருக்கு புத்தகம் எதுவும் தேவைப் படாது. பாரதியின்  அத்தனை எழுத்துகளும் அவர் நினைவில் பதிந்து போயிருந்தன.  அவர்  பாஞ்சாலி  சபதத்தை  மகத்தான
கவிதை நாடகமாக குறுங்காவியமாக பார்த்தார்.

ஆனால்  தொழில்முறை நடிகர்களுக்கு அவர்  வாசித்த விதத்தை  
எவ் விதம்  உள்வாங்கிக்கொள்வது என்று தெரியவில்லை. அவர் 
ராகம் போட்டு பாட்டிசையாக.  நிகழ்த்திய  கவிதைகளை  நாடகப் 
பாங்குக்கு  ஏற்றவாறு  எப்படி மாற்றிக்கொள்வதென்ற நடைமுறை
க்குழப்பம்  இருந்தது..

ஆனாலும் திருலோக சீதாராம்அவர்களின் உள்ளம் நெகிழ்ந்த 
வாசிப்பும்  குரலும்  பாரதியை  ஆராதிக்கும்  அவருடைய பக்தியும் கேட்ட  நடிகர்களுக்குஅது  ஒரு ஆழ்ந்த உள் அனுபவமாக  
தோய்ந்தது.

பிறகு நாடகம்-திரைஅனுபவங்கள்  நிறைய இருந்த பி.எஸ். 
ராமையா பாஞ்சாலி சபதத்தை மேடையில் நிகழ்த்தும் வடிவ
மாக மாற்றுவதின் அவசியத்தைப் புரிந்துகொண்டார். அதில் உள்ள  வசனப்பகுதிகளை  பிரித்தெடுத்து  நாடக நிகழ்வின் 
ஓட்டத்திற்கு பொருத்தமாக  அதை சற்று முன்னும்பின்னு மாக கோர்வைப்படுத்தி  நிகழ்த்துவதற்கு ஏற்ற பொருத்த
மான நாடகப்பிரதியாக  மாற்றினார்.

வரிகள் கவிதையாக.  இருந்தாலும்; நடிகர்கள்  தங்கள்  பாத்திர
ங்களின் குணங்கள்; அதற்கேற்றமாதிரியான  உணர்ச்சி;  இவை
களைமனதில்கொண்டுகவிதைகளைபேசவேண்டும் என்று எல்
லோருக்கும் சொல்லப்பட்டது.

வழக்கமான உரைநடைக்கும் எழுதப்பட்ட  கவிதைக்கும் இடை
யில் ஒரு வித்யாசமான  தொனியைக் கொண்டுவரவேண்டும் 
என்று தீர்மானித்து  பயிற்சிஅளிக்கப்பட்டது.

பாரதியின் வரிகள்  நல்ல  நடிகர்களின் முயற்சியால் மேடையில்  
அற்புதமான  உரைநடைக்கவிதையாக ஒரு ஷேக்ஸ்பியர்  நாட
கம் போல் அமைந்தது. கவிதையின் உன்னதமான உச்சரிப்பை வசனத்தின் தொனியில் பேசியது மிக வெற்றிகரமான சோதனை முயற்சி.  பார்வையாளர்கள் மிகவும் ஒன்றி  நெகிழ்ந்து  ரஸித்
தார்கள்.

திருலோக சீதாராம் அவர்களுக்கும் இதைக்கண்டபோது இரட்டிப்பு 
மகிழ்ச்சி.  இந்த  நாடகம்  எப்போது  நிகழ்ந்தாலும்  பார்ப்பதற்காக  
வந்து விடுவார்.  இந்த  நாடகம்  டெல்லி  பம்பாய்  நகரங்களிலும்  
நிகழ்த்தப் பட்ட்து.  அப்போது  அவரும்  எங்களோடு  வருவார். 

அவருடன்  ரயில் பயணம் செய்வது  மிக  ஸ்வாரஸ்யமாக இருக்
கும். ரயில்ஓட்டத்தின் தாளத்துக்கு இசைவாக அவர் பாரதியின் 
கவிதைகளை  பாடிக்கொண்டே  வருவார்,  

அவர் மனம் வாக்கு செயல் எல்லாமே கவிதைக்காகவும் இலக்கிய
த்துக்காகவுமே இயங்கிக்கொண்டிருந்ததோ என்று நினைக்கத்
தோன்றுகிறது.  

யதார்த்தமாக குடும்பம் பொருள் புகழ் சொத்து இந்தமாதிரி பற்று
களில்அவர் அக்கறைகொண்டுள்ளதாகத் தெரியவில்லை..ஆனா
லும் அவரிடம் பக்தியும் பாசமும்  கொண்ட  சில  புரவலர்களின்  
கனிவும் ஆதரவும்  அவருக்கு  இருந்திருக்கிறது..

பாரதியின்  குடும்பத்தாருடன் ஒரு ரத்த உறவினரைப்போல் பழகி வந்திருக்கிறார்.

அவர்  சீரிய அக்கறையுடன் நடத்திவந்த சிவாஜி  பத்திரிகையில் 
பல நல்ல ழுத்தாளர்களின்  படைப்புக்கள்  வெளி வந்திருக்கின்
றன. அவர் எழுத்தாளர்களைப் பார்க்காமல் அவருக்குப் பிடித்த 
தரமானபடைப்புகளை அதில் பிரசுரித்துவந்தார் என்பது  சிவாஜி  
இதழ்களைப் பார்த்தால் தெரியும்.

பாஞ்சாலி சபதம் காரணமாக அவர் சென்னைக்கு  வந்த போது  
அவரிடம்  நெருங்கிப்பழக எனக்கு  வாய்ப்புக் கிட்டியது.அப்போது ஏதோ ஒரு  துணிச்சலில்  நான்  எழுதிய  இரண்டு  கவிதைகளை  
அவரிடம்  படிக்கக் கொடுத்தேன்.

அடுத்தடுத்த சிவாஜி  இதழ்களில்  அந்தக்  கவிதைகள்  பிரசுர
மாயின. எனது  ஆரம்பக் கவிதைகள்  பிரசுரமானது  சிவாஜியில்
தான்!! 

இவரைப்  பற்றி  மேலும்  பல  வாழ்க்கைத் தகவல்களுடன்  
நண்பர் ரவி சுப்பிரமணியன்  ஆவணப்படம் தயாரித்திருக்கிறார்.

அவருடைய கவிதைகளும் அருமையான மொழிபெயர்ப்புக்களும் 
மேலும் பரவான வாசிப்பைப் பெறவேண்டும்.


 .         



No comments:

Post a Comment