Tuesday, October 4, 2016

உள்ளே ஒரு ஓசை - வைதீஸ்வரன்

      உள்ளே  ஒரு  ஓசை   

வைதீஸ்வரன்

*************************


வயது  ஒரு  உயிர்மானி
காலத்துக்குள்  நம்மை
எறும்புகளாக்கி மெல்ல  நகர்த்தி
வளர்ப்பதும் வதைப்பதுமாக 
திக்குத் தெரியாத  சம்பவக் காட்டுக்குள்
இழுத்துச் செல்லுகிறது
வருஷங்களை  வாழ்வாகச் சித்தரிக்கிறது
வெவ்வேறு  பிம்பங்களை 
எழுப்பி அழித்து  ‘நான்என்று 
நம்பவைத்து  நடுவாழ்க்கை
பள்ளத்தாக்குகளில்  விழுத்துகிறது.
மேலும்  எழுந்து வந்து   நமக்குள்
தன்னேய்ப்பை  உணர்ந்து தடுமாறும் சமயம்
கைத்தடியைக் கொடுத்து கரையேற்றி  விடுகிறது
நகரமுடியாமல்  விதி முடிந்த வீதியில் நின்று
திரும்பிப் பார்க்கும்  போது
வயது  இருந்ததாகத் தெரியாமல்
சுவடற்ற  கனவாய்  தொலைந்து விடுகிறது.
சிரிப்பதற்கு  எனக்கு  வாயில்லை.



No comments:

Post a Comment