vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label பூனைகள். Show all posts
Showing posts with label பூனைகள். Show all posts

Tuesday, September 12, 2017

பூனைகள்


 பூனைகள்     ----------------------------
      வைதீஸ்வரன்           கணையாழி  செப் 2017   



பூனைகளைத்  தெருவில்  பார்ப்பது
வர வர  அரிதாகி  விட்டது.
இப்போது  அடிக்கடி  குறுக்கே போவதில்லை அவைகள்
ஒரு  வேளை  நம்மை  விட  உயிர்ஆபத்து அதற்குத்  தான்
என்று  உணர்ந்திருக்கலாம்
பார்க்காத  போது நுழைந்து
பால்கனி  வழியாக  தப்பித்துப் போவது தான்
பூனை   என்றாலும்
அது  தப்பிக்கும்  லாகவத்தை
நீங்கள்  எப்போதாவது  பார்க்க வேண்டும்
அளவோடு  திருடுவதில்
பூனைகள்  பெருந்தன்மையானவை
அடுக்குப்  பாலின்  உயரத்தைக்  கொஞ்சமாக
குறைத்து  விட்டுப் போகிறது.
நமக்கு  எச்சம்  வைத்து  விட்டு!
பூனையின்  எச்சத்தை நாம்
நிராகரிப்பதில்லை....நாயினதைப்  போல!
ஏதோ ஒரு  ஆசாரத்தனம்!.
உதவாத சுயநல ஜன்மமென்றாலும் 
உள்ளே  வளைய  வரும்  சகஜத்தைத்
 தடுப்பதில்லை  வீடுகள்.
தனியாக  விடப்பட்ட  முதியோர்களுக்கு
 பகலில் வளைந்து வரும்  பேச்சுத் துணை..
 ஆனாலும் இப்போது வரவர
 பூனைகளைக்  கண்டாலும்  வாயடைத்துக்
கொள்ளுகின்றன..வீடுகள்
சில வீடுகளில்  முதியோர்களும் பூனைகள்  தான்!