vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, April 30, 2019



கை நழுவும் உலகம் 


நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் Chinua Achebeயின் Things Fall Apart என்கிற குறுநாவலில் வரும் சில சுவாரசிமயமான தொன்மக் கதைகள் இங்கே தரப் படுகின்றன...பகிர்வுக்காக.

மொழி பெயர்ப்பு  : வைதீஸ்வரன்  



******************

வானம் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மழையைப் பொத்தி சிறை வைத்திருந்தது. பயிர்பச்சைகள் காய்ந்து மடிந்து போயின. வறண்ட காற்றால் குத்துக் கோல்கள் காய்ந்து வறண்டு ஒடிந்து போனதால் இறந்தவற்றை தோண்டிப் புதைக்க முடியாமல் போயிற்று.

கடைசியாக வானத்திடம் மழையை வேண்டி முறையிட்டுக் கெஞ்ச கழுகு ஒன்று அனுப்பப் பட்டது. வானத்தை நோக்கிப் பாடிய நெஞ்சை இளக வைக்கும் பூமியின் துக்கத்தை எதிரொலிக்கும் கழுகின் அந்த இசை---

அவன் அம்மா அதை எப்போது தாலாட்டாக இதை இசைத்துப்பாடினாலும் என் குழந்தை மனம் அந்தக் கழுகு பூமியின் நேசதூதனாக வானத்தை சாந்தப்படுத்த பாடிய அந்த நெடுங்காலப் பிரதேசத்துக்கு போய் விடும்.

முடிவாக வானம் மனம் இளகியது. அது மழையை சில கோகோ இலைகளில் பொத்திப் பொதிந்து கட்டி கழுகிடம் கொடுத்தது. அதைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் பறந்து வந்த போது கழுகின் கூரிய அலகுகள் அந்த இலைகளைத் துளைத்து விட்டதால் மழை அத்தனையும் நடுவழியிலேயே கொட்டித் தீர்ந்து போய் விட்டது. .

மழை கொட்டித் தீர்ந்ததால் கழுகு பூமிக்குத் திரும்பாமல் எங்கோ தூரமான பிரதேசத்தை நோக்கிப் போய் விட்டது. அங்கே கீழே அது ஒரு தீஜுவாலையைக் கண்டது. அருகில் போய்ப் பார்த்த போது அங்கே ஒரு மனிதன் பரித்யாகம் செய்து கொண்டிருந்தான். தன்னைத் தானே எரித்துக் கொண்டு குடலைத் தின்று கொண்டிருந்தான்!

**************

அடிவானத்தில் திடீரென ஈசல் கூட்டமாகத் தோன்றும் விட்டில்பூச்சிகள் ஏதோ கரும்புயல் திரண்டது போல் வருகின்றன. இந்தப் பூச்சிக் கூட்டங்கள் ஏதோ குகைகளில் வாழும் குள்ள மனிதர்களால் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பறக்க விடப் படுகின்றன....என்று சொல்லுவார்கள்


**************

ஆமைகளின் முதுகு ஓடுகள் ஏன் கரடு முரடாக இருக்கின்றன?

ஒரு காலத்தில் வண்ண வண்ணமாக இறகடித்துப் பறக்கும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடிப் பேசி உயரே மேகக் கூடங்களின் மத்தியில் ஒரு அருமையான கொண்டாட்டம் நிகழ்த்த வேண்டுமென்று தீர்மானித்தன.

இதை தூரத்திலிருந்து ஒட்டுக் கேட்ட ஒரு வயதான ஆமை தானும் இந்தப் பறவைகளின் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டது. அது பறவைகளை அணுகி மிகவும் இரக்கமான குரலில் கெஞ்சி தன்னையும் அந்தக் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று முறையிட்டது. “ உனக்கு இறகுகள் இல்லை. உன்னால் எங்களோடு பறக்க முடியாது" என்று பறவைகள் பதிலளித்தன. அப்போது மனம் இளகிய ஒரு பறவை சொன்னது " நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு இறகை இந்த ஆமைக்கு கொடுத்து ஒட்டவைத்து நம்மோடு அழைத்துப் போவோம்" என்றது. எல்லாப் பறவைகளும் உடனே அதற்கு ஒப்புக் கொண்டு ஆளுக்கு ஒரு இறகைக் கொடுத்து ஆமையை பறக்கச் செய்தது.


மேலே விருந்து தொடங்கு முன் எல்லான பறவைகளும் அதனதன் பெயரை சொல்ல வேண்டு மென்று தெரிவிக்கப் பட்டது. அப்போது ஆமை தன் பெயரை "எல்லாம் எனக்கே" என்று அறிவித்து விட்டு அங்கு விரித்து வைக்கப் பட்டிருந்த அத்தனை உணவுப் பண்டங்களையும் தானே உண்ண ஆரம்பித்தது.

பறவைகள் மிகுந்த கோபத்துடன் இதைக் கவனித்துக் கொண்டு மீதமிருந்த துண்டு உணவுகளை உண்டு விட்டு திருட்டு ஆமையின் தந்திரத்தை எண்ணிப் பொருமிக் கொண்டே இருந்தன.

அப்போது உயரத்தில் கடவுள் மாதிரி இவற்றை கவனித்துக் கொண்டிருந்த ஒரு கழுகு பாய்ந்து வந்து அந்த ஆமையிம் ஒட்டி வைத்த சிறகுகளை கிய்த்தெறிந்து கீழே பூமிக்குத் தள்ளி விட்டது.

பூமியில் விழுந்த ஆமையை மற்ற ஆமைகள் சூழ்ந்துக்  கொண்டு அதன் முதுகில் பிய்ந்து ஒட்டிக் கிடந்த ஒறகு மிச்சங்களை கடித்துக் கடித்துப் போட்டன. அதன் வடுவால் ஆமையில் முதுகு அதற்குப் பிறகு கரடுமுரடான கடினமான ஓடாக ஆகி விட்டது!!


________________________________________________


Wednesday, April 3, 2019


காலத்தின் நீளம்

அசோகமித்திரனும் புதுக் கவிதையும்

வைதீஸ்வரன் -


அசோகமித்திரன் அவருடைய இலக்கிய ஈடுபாடுகளில் உரை நடையில் தான் மிகுந்த நம்பிக்கையும் ஆழமான ஈர்ப்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். ஆனாலும் அவர் அறுபது எழுபதுகளில் புதுக் கவிதைகளிலும் ஆர்வமுடன் அக்கறை செலுத்தியிருக்கிறார்..

IOWA வில் இருந்த போது ஞானக்கூத்தனின் "அம்மாவின் பொய்கள்"   கவிதையை மொழிபெயர்த்து அங்கே ஒரு கவிதை நிகழ்வாக ஏற்பாடு செய்திருக்கிறார். என்னுடைய பல கவிதைகள் அவர் மொழிபெயர்ப்பின் மூலம் Indian Literature / National Book Trust Antholoy பிரசுரங்களில் வெளி வந்துள்ளன..


அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஞானக்கூத்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். இரண்டாவதாக வந்த " இன்னும் சில நாட்கள் " என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்தது.!

ஆனாலும் அவருடைய புதுக் கவிதைகளை மதிப்பிடும் போது சற்று நிதானத்துடன் தான் தன் அபிப்ராயங்களை தெரிவித்து வந்ததாக தோன்றுகிறது. செறிவான புதிரான மனித உறவுகளை இப்படிப்பட்ட கவிதைகளை விட உரை நடைகள் மூலம் தேர்ச்சியுள்ளவர்களால் சொல்லி விடமுடியும் என்று அவருக்குள் ஒரு அபிப்ராயம் இருந்து வந்திருக்கிறது.

அவர் மிக நேரடியான எளிமையான நேர்மையுள்ள வெளிப்பாடுகளைத் தான் நேசித்தார். வார்த்தைப் புதருக்குள் கருத்தைப் புதைத்து அனுபவத்தை ஒரு சோதனையாக மாற்றி விடும் எழுத்துக்களை பற்றி அடங்கிய குரலில் கிண்டலாக பேசுவார்.

ஷேக்ஸ்பியரின் படைப்புகளை விட Anton Chekov படைப்புகள் சற்று மேலானவையாக பல சமயம் எனக்குத் தோன்றுகிறது " என்று சொல்லுவார். அவருடைய கருத்து எனக்கு நம்பமுடியாமல் இருக்கும்.

இந்தக் கவிதைகள் சம்பந்தமாக அவர் ஆற்றிய இரண்டு விஷயங்கள்
எனக்கு இன்னும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன அவற்றைப் பகிர்ந்து கொள்வது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

முதலாவது விஷயம் அவர் தயாரித்து அளித்த ஒரு கவிதை மொழிபெயர்ப்பு நூல். 1994ல் நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
ஒரிய மொழியில் மிகச் சிறந்த கவிஞராக அங்கீகரிக்கப் பட்ட சீதாகாந்த் மஹாபாத்ராவின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கவிதைகளை இவரும் மேலும் இரண்டு பேரும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இப்புத்தகத்துக்கு முன்னுரையாக சீதாகாந்த் மஹாபாத்ராவின் கவிதைகள் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் அருமையான முன்னுரை எழுதி இருக்கிறார் அசோகமித்திரன்.

சீதாகாந்த் மஹாபாத்ரா அப்போது ஞானபீட பரிசு பெற்றிருந்தார். . ஆங்கிலத்தில் மிகுந்த தேர்ச்சி உடையவர் . அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் I A S அதிகாரியாகவும் இருந்தவர்.
தன் படைப்புகளைத் தவிர இந்தியப் பழங்குடி மக்களின் கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டவர்.
கவிதைக்காக நிறைய விருதுகள் பெற்றவர். ஞானபீடத்தின் மத்திய தேர்வுக் குழுவில் அங்கத்தினராக இருந்தவர்.

ஒரு கவிஞரைப் பற்றிய தீவிரமான மதிப்புரையை தமிழில் அசோகமித்திரன் முன்னுரையாக எழுதியது இது ஒன்று தான் என்று நினைக்கிறேன். இது அபூர்வமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.


இரண்டாவது அசோகமித்திரனே தன் வாழ்க்கையில் ஒரே ஒரு புதுக் கவிதையை எழுதி இருக்கிறார். இதுவும் அபூர்வமான விஷயம்.. இந்தக் கவிதையை உங்கள் வாசிப்பிற்காக இங்கே தருகிறேன்......


காலத்தின் நீளம்
---------------------------

யாருக்கு நினைவிருக்குமோ என்னவோ
மௌண்ட் ரோடு பச்சை சிவப்பாக
மாறும் விளக்கில்லாத மௌண்ட் ரோடாக
இருந்த காலமது.
நடுத் தெருப் போலீஸ்காரனுக்கு
இருட்டில் விளக்குத் தொப்பி.
அவனும் எட்டு மணிக்குப் போய் விடுவான்.
விளக்குத் தொப்பி மட்டும் இருக்கும்.
இன்னும் சிறிது நேரம்.
நான் சைக்கிளில் நடுத் தெருவில்.....
எதிரே வெகு வேகமாய் லாரி ஒன்று.
அதுவும் நடுத் தெருவில்!...எனக்கு
என்னென்னமோ மனச்சுமைகள்.
தக்க தருணத்தில் சைக்கிளை
சிறிது ஒடித்து சுமை தாங்கி வரும்
அந்த லாரியில் மோதினால்
இருட்டில் யாருமில்லா அந்தத் தார்பரப்பில்
யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரிந்தாலென்ன?
பின் எனக்குத் தெரியாதே!
அந்த ஒரு கணத்தில் கணமா?
அது கணத்தில் ஐந்தில் பத்தில் நூறில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தானிருக்கும்.

அந்தக் கால அணுவில்
என்னை சைக்கிளை ஒடித்துப் போகாமலிருக்க
எது செய்தது?

எது செய்ததோ...அந்தக் கால அணு
இப்போது இருபது ஆண்டுகளுக்கும்
மேல் நீண்டு விட்டது......
இன்னும் நீண்டு கொண்டே இருக்கும்.

நான் இருக்கும் வரை
நானிருக்கும் வரை காலமே அணு.

________________________________________________