vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, November 28, 2019




வைதீஸ்வரனின் கவிதைகள்

- வெங்கட்  சாமிநாதன் -






யார் என்னதான் சொல்லிக்கொண்டாலும், கூட்டம் கூட்டிப் பேசினாலும், பாராட்டுரைகளைச் சேகரித்துக் கொண்டாலும் , தருமு சிவராமு ஒரு முறை சொன்னது போல, "அவர்கள் சொல்வதெல்லாம் அபிப்ராயங்களே, நான் சொல்வது judgement " என்று தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டாலும் , எல்லாம் அபிப்ராயங்கள் தாம். காலம் நிர்ணயிக்கும் என்று சொல்வது கூட, அந்தந்தக் காலத்தின் குணம் நிர்ணயிப்பதுதான் . இதில் ஏதும் judgements கிடையாது . 1973 -ல் ஞானரதம் படைப்பிலக்கியத் தேர்வு கருத்தரங்கு நடத்தியது. எனக்கு வைதீஸ்வரனின் ஒரு குட்டிக் கவிதை தொகுப்பு, உதய  நிழல் தான் ஒரே கவிதைத் தொகுப்பாகப் பட்டது. வல்லிக்கண்ணனுக்கு, நா. காமராசனின் கருப்பு மலர்கள் சிறந்ததாகப்பட்டது. காமராசன் அந்நாட்களில் மிகவும் பேசப்பட்டவர். அலங்கார சொல் ஜாலங்களில் வல்லவர். இன்று நா. காமராசனையும் காணோம். அவர் கவிதைகள் எனச் சொல்லப்பட்டவையும் போன இடம் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற காமராசன்கள் வெவ்வேறு பெயர்களில் அவரவர் பேட்டைகளில் குறுநில மன்னர்களாக , சக்ரவர்த்திகளாக கோலோச்சுகிறார்கள் . ஆனால் வைதீஸ்வரன் காணாமல் போய்விடவில்லை. அவரிடமிருந்து இன்னமும் கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பெரிதும் பேசப்படுவர்களிடம் புதுச்செய்யுள் ஆகியுள்ளது. இன்றும் அன்று போல வடிவம் பார்த்து கவிதை பெயர் பெறுகிறது, கவித்வம் உணர்ந்து அல்ல. இதிலிருந்து காலம் என்ன புண்ணாக்கைச் செய்துவிட்டது என்றுதான் சலித்துக் கொள்ளத் தோன்றுகிறது.

உதய நிழல் வைதீஸ்வரனைத் தான் இப்போது 50 வருடங்களுக்குப் பின்னரும் பார்க்கிறோம். அதே ஆளுமைதான் வளர்ந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் அவர் கவிதைகளில் எனக்குப் பிடித்தவை பிக்காதவை பற்றி எழுதியிருந்தேன். "எனக்கு" என்ற சொல்லுக்கு அடிக்கோடிட வேண்டும். இப்போதும் அவருடைய "கால்- மனிதன்" தொகுப்பைப் பார்க்கும் பொழுதும், எனக்குத் தோன்றுவனவற்றை , "எனக்கு" என்ற அடிக்கோடிட்ட சொல்லுடனேயே எடுத்துக்கொள்ள வேண்டும். இது, எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்றாலும், அவ்வப்போது இதை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று தொலைக்காட்சியில் ஒரு கவிஞரின் பேட்டி நடந்துக் கொண்டிருந்தது. தான் எழுதிய கவிதைகள் 3000  பக்கங்களுக்கு இருக்கும் என்றார். அவன் காலத்திய ஆசுகவியேயான கம்பனுக்கும் மேல் மூன்று மடங்கு கவித்வம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அவரைப் பேட்டி கண்டவரைப்பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. ஆனாலும், அவர் பேட்டியாளர் சொல்வதைப் புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தார். அதில் கேலி தொக்கியிருக்கிறதோ  என்றுப் பார்த்தேன். இல்லை. ஷெல்லியைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். கவிதை மேற்செல்ல மறுக்கிறது. ஷெல்லியும் வலுக்கட்டாயமாக உட்கார்ந்திருக்கவில்லை. கவிதை அத்தோடு நிற்கிறது. அடுத்த சரியான சொல் கிடைக்கும் வரை. அது எப்போது, நாட்கள் கழிந்து பொறி தட்டுவது போல் உதயமாகிறது. "wandering " என்ற சொல் கிடைத்ததும் கவிதை மேல் செல்கிறது. இந்த மாதிரி அவஸ்தைகள் எல்லாம் 3000  பக்கம் எழுதும் கவிஞருக்கு இல்லை. அன்று , தினம் தன்  கவிதைகளை வாசிப்பவரும் வந்தார். அவர், அத்தொலைக்காட்சியின் ஆஸ்தான கவிஞர் போலும். அவரும் கவிஞரே இல்லை என்று 40  வருடங்களுக்கு முன் நான் சொன்னதை கவிஞரோ அல்லது காலமோ லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. நான் கவிதை இல்லை என்று சொன்னது 26 வது பதிப்பு வந்துள்ளது, காலமும் மக்களும் பதில் சொல்லியாயிற்று என்று அந்த கவிஞர் தீர்மானத்தோடு சொன்னார். இவ்வளவு பலசாலிக் கவிஞர் முன் நான் என் எளிமையைத் தான் உணர்ந்தேன். ஆனாலும், இவை எதுவும் கவிதையாக இன்னமும் எனக்குத் தோன்றவில்லை. 50  வருடங்களாக. எனக்குத் தலை நரைத்து விட்டது. அவர்கள் இளமைத் தோற்றத்துடன் தான் இருக்கிறார்கள். எனக்குத் தான் என்ன பட்டாலும் புத்தி வராது என்று தோன்றுகிறது. 

ஐம்பது வருடங்களாக கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன், புதுக்கவிதையின் தோற்ற வருடங்களிலேயே தன்  கால் பதித்துவிட்ட வைதீஸ்வரன் , கால்-மனிதன் தொகுப்பின் கடைசி பக்கங்களில் பல பெரிய சிறிய தலைகளின் பாராட்டுகளையும் இணைத்துள்ளார். "பூக்கள் ஏன் மலர்கின்றன", போன்ற கேள்விகளுடன் தொடங்கும் ஒரு கவிதை,

"பதில் கிட்டாமல்
பொருள் பூத்து  விட்டால்
எனக்கும் கவிதை தோன்று மெனத்
தோன்றுகிறது இத்தருணம்"

என்று சொல்லும்போதே ஒரு கவிதை தோன்றிவிடுகிறது, நமது வைதீஸ்வரனுக்கு. ஆனால் அவர் முதல் கவிதையாகவும் , பின் அட்டையிலும் பிரதானப்படுத்தியிருக்கும்

"இந்த உலகம்
நம்மால்
அழியாமலிருக்கட்டும்"


ஒரு கவிதையாக எனக்குப் படவில்லை. நல்ல சிந்தனைகளை நன்றாக சொல்லிவிட்டால் கவிதையாகிவிடுமா ?  "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்பதில் நல்ல சிந்தனை மட்டுமில்லை. மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம். ஏற்ற முகபாவத்துடன் சப்தமிட்டு சொல்ல தோன்றும் உணர்வுடன் வருவது அது. இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் வைதீஸ்வரன் கவிஞன்.

"இருட்டைவிட்டு
இன்னும் பிரித்தறிய முடியாத,
ஒற்றைக் காகம்
அதன் ஒற்றைக் குரல்
மௌனத்தை இன்னும்
முழுதாய்த்  திறக்க முடியவில்லை.

குவிந்த விரல்களின் மழலையாய்
விரியும் கோலங்கள்...

வெள்ளையாய்ச் சிரிக்கிறது  விடிவு
ஒரு குழந்தையின் கள்ளத் தனத்துடன்".


போன்றக் காட்சிகளைக் காண்பவர், இது போன்று எழுதுபவர் கவிஞர் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

கதவு திறக்கும் ஒலி
கேட்கிறது..
.

என்று தொடங்கும் ஒரு கவிதை,

கதவு பொதுவாக
குற்றமற்று நிற்கிறது"


என்று முடியும் ஒரு கவிதை சிறப்பான ஒன்று தான். ஆனால் "பொதுவாக" என்ற சொல்லை நீக்கிவிட்டால், இன்னும் சிறப்பாக ஆகியிராதா? "பொதுவாக" என்னும் சொல் கருத்து விளக்கமாக வருவதல்லவா? கவிதை ஏன் கருத்து  விளக்கமாக வேண்டும்?

இப்படியெல்லாம் சில கண்களில் பட்டாலும், அவை டி.கே.சி. அருமையாக சொல்லும் "அப்பளத்தில் கல்லாக" நெருடினாலும், கைவிரல்களுக்கிடையில் பெரிதாக ஒரு அப்பளம் கிடைத்துள்ளதே.

இப்படி நெருடும் கற்கள் பரவிக் கிடக்கின்றன பல இடங்களில், சில பதங்களாகவும், பதக் சேர்க்கைகளாகவும் (உதாரணங்கள் சில வேண்டுமா - எண்ணக்கோல், காற்றுச் சாட்டை, மேக மிருகங்கள், திசைப் போர்வை, மந்திரவாதிக் கம்பளி, "அந்த இடித்(தடி) திருடனை,\"; 

 சில வரிகளாகவும்,

"இப்படிப் பட்ட அபவாதச் செயல்
எதுவானாலும் அதைச்
சட்டமாக்கி விட்டால் தான்,
ஜனநாயகத்தின்  மீசையில்
மண் ஒட்டாமலிருக்கும்."

இப்படி இன்னும் பல உண்டு தான்.

வைதீஸ்வரனுக்கு சுற்றிக் காணும் அரசியல் பற்றி, சில மனித சுபாவங்கள் பற்றி, கோஷங்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் உண்டு. ஆரோக்கியமானதும், கிண்டலாக வெளிப்படுவதும் ஆனவை அவை. அது ஐம்பது வருடங்களாக தொடரும் ஒரே பார்வை. அவரது ஆளுமைச் சார்ந்தது. இப்போதைய மதிப்புகளை, தேவையைச் சார்ந்ததல்ல. "சோரம் அல்லது களவியல்" என்று ஒரு கவிதை:

"சோரத்தின்
சுகமே அலாதி - அது
எதிர் நீச்சலின் வீர முடிவு
அவிழ்த்துவிட்ட ஆண்மையின்
தன்னிச்சைத் துள்ளல்"


என்று எழுதும் வைதீஸ்வரனின் சமூக மதிப்புகள் அவரதே. வேறு எங்கிருந்தும் பெற்றதல்ல. கூட்டத்தோடு போடும் கோவிந்தா அல்ல. அதை வெளிப்படவும் சொல்கிறார். இது நம் கவிதை உலகில் வெகு அரிதாகக் காணப்படும் குணம். கடைசியில் அக்கவிதை முடிகிறது இவ்வாறு:

"பூமியின் பொய் வாடை கடந்த
புனிதப் புணர்ச்சி என்று
புரிந்துக் கொள்வாய் நீ.
ஒப்புதலுடன் இருபாலும்
இனைந்து செய்யும் குற்றத்தை
குற்றம் என்று
எப்படி ஒப்புக்கொள்வது?"


இது போல இன்றைய பொய்க்கோஷமான ஜாதி பற்றியும், கவிதையாக, கோஷமாக அல்ல, எழுதுகிறார், மக்களுடன். இவரது விமரிசனங்கள் எல்லாம் நக்கலுடன் தான் வெளிப்படும்.

'கட்சிக்கு கொடிகள் காற்றில் பதற
"காக்கை குருவி எங்கள் ஜாதி"
என ஓலமிட்டு ஒலிபெருக்கிகள்.

அலறிப் புடைத்துப் பறந்தன
அத்தனைக் காகங்களும்
மனித ஜாதிக்குப் பயந்து '


அவருக்கு மொழி என்னமாக விளையாடுகிறது. அவர் பார்வைகளிலேயே கவித்வம்:

"வைத்தியன் பார்த்த கண்களும்
காதலன் கண்ட கண்களும்
அர்த்தங்கள் வெவ்வேறு சொல்லும்...

காடுகளைக் கடத்திக் கொண்டு
போனது நாகரிகம்...

குடிகாரன் கழுத்து துண்டாய்
பக்கவாட்டில் தொங்கும்
பேருந்து மக்கள் பத்து மணி வண்டிகளில்...

சொர்க்கத்திலேறும் முயற்சியை
தாற்காலிகமாய்த் தள்ளி வைத்தாற்போல்
சாத்தி வைத்த ஏணிகள்
மொட்டை மாடியில்..."


"மௌனத்தைப் போர்த்திக்கொண்டு கனவு காணும்
மாடு போல் படுத்திருக்கறது காடு.. "

வைதீஸ்வரன் எழுத்திலும், சிந்தையிலும், பார்வையிலும், காணும் காட்சிகளிலும் கவிஞர்தான். ஆனாலும் பல இடங்களில் அவர் கேலியும், சொல்லாட்சியும், பதச் சேர்க்கைகளும் கை விட்டுவிடுகின்றன. ஏன், பி.டி.உஷாவுக்கு  கால் சுளுக்கிக் கொள்ளாதா , இல்லை நித்யஸ்ரீ மகாதேவனுக்குத் தான் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாதா? எனவே, 166 பக்கங்களுக்கு விரியும் இக்கவிதைத் தொகுப்பில் எனக்குப் பிடிக்காத கவிதை வரிகள், பதங்கள், பதச் சேர்க்கைகள் , படிமங்கள் என்று சொல்லப்படுபவை, நகையாடல் என்று  கொள்ள்ளப்படுபவை, முழுக் கவிதைகள், கவிதைப் பொருட்கள் எல்லாம் உண்டு தான். அவை எனக்குப் பிடிக்காது போவதில், அல்லது பிடித்துப் போனவையிலும் எந்த தெய்வ சாந்நித்யமும் கிடையாது. என் ஒருவனின் ரசனை வட்டத்தில் சிறை படுபவை. இதனால் பல நஷ்டங்கள் என்னமோ இருக்கும் தான். எனக்குப் பிடித்துப் போகிறவற்றிற்கு தமிழ் நாட்டிலும், இந்தியப் பரப்பிலும், அதிகார மட்டங்களில் அங்கீகாரம், பரிசு, விருதுகள், பொன்னாடைகள், ஏதும் அவரது ஜாதகத்தில் இல்லாது போகலாம். 28 பதிப்புகள் அவர் கவிதை வராது போகலாம். 

ஆக, இந்த கணிசமான எண்ணிக்கையும் பக்கங்களும் கொண்ட தொகுப்பில் எனக்குப் பிடித்தவை என நிறையவே கவிதைகள் உள்ளன. முடிவில், கடலோர மனித, ஸீஸர், மகா கவி, அழிப்பு, பரிசு, கண்காட்சி, மிருகம், ஆஹா, சுகம், அகராதி, எதிராளி, நெருப்புப் போர்வை, ரிஷிகேஷ், ஒரு துளி காவியம், பிச்சமூர்த்தி, நகல் முகம், நடுப்பகல்,சிலிர்ப்பு, காத்திருப்பு, ஒரு கொலையின் கொண்டாட்டம், இக்கட்டு, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சொர்க்கத்தில் சோதனை என்று ஒரு நீண்ட கவிதை, அல்லது குறுங்காவியமும் இத்தொகுப்பில் உள்ளது. புதுக்கவிதையில் நீண்ட கவிதைகள் என்று பிச்சமூர்த்தியிடமிருந்தும் , சி. மணியிடமிருந்தும் தான் கவிதை என்று சொல்லத்தக்கவை வந்துள்ளன. மற்றவை எல்லாம் வேறு அளப்புகள் தான். வைதீஸ்வரனும் அதற்கு விலக்கல்ல. இருப்பினும், வைதீஸ்வரன் கவிஞர் ஆவார். அவர் பார்வையும், எள்ளலும், சமூகம் பற்றி , அரசியல் பற்றி, சக மனித மதிப்புகள் பற்றி கவிதையாக நமக்கு வந்துள்ளன. அதோடு, அவர் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அனுபவித்து எழுதுகிறாரே, அதனை அழகுடன் அவையும் கவிதையாகி வந்துள்ளன.

கிளையில் காக்கை
தன்னையே கொத்திக் கொள்கிறது
சுய விமரிசனம் போல்.


சரி,இதெல்லாம் போகட்டும், வைதீஸ்வரனின் கவித்வ ஆளுமைக்கு ஒரு சிறிய, ஆனால் முழுமையான உதாரணமாக ஒரு கவிதை. பரிசு என்ற தலைப்பில்.

நெருங்கியவன்
தெரிந்த முகம் என்று
சிரித்து விட்டேன்
மிக சிநேகிதமாய். பதிலுக்கு,
அவனும் சிரித்துவிட்டான்
நாகரீகமாய்

கடந்த பின் தான்
புரிந்தது..அவனை
அறிந்தவன் நான் இல்லையென்று

எறிந்த சிரிப்பை மீண்டும்
திரும்ப வாங்க சாத்தியமில்லை

இருந்தாலும்
அறிமுகமற்ற மனிதனிடம்
அன்பு காட்ட முடிந்தது
இன்று ஒரு நல்ல ஆரம்பம்தான்
தவறுதலாக இருந்தாலும் கூட.


இப்படி எழுதும் கவிஞருக்கு பொன்னாடையோ , சாகித்ய அகாடமி பரிசோ கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால்தான் என்ன?
***
நூல் பற்றிய விவரம்:
கால் - மனிதன்
(கவிதைகள்)
ஆசிரியர் : எஸ். வைதீஸ்வரன்
(சந்தியா பதிப்பகம், அசோக் நகர் , சென்னை 83  )

25.10.2006

_________________________________________________________________

வெங்கட் சாமிநாதன் பற்றி :

வெங்கட் சாமிநாதன்   (Venkat Swaminathan, 1933 - 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர் .  இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர்.
 நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர்.

இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல் விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.


Tuesday, November 26, 2019



கால் முளைத்த மனம்

( சிறுகதைத் தொகுப்பு  : 
ஆசிரியர் எஸ். வைதீஸ்வரன் )

(விருட்சம் வெளியீடு)

நூல் விமர்சனம்  - " சிட்டி"  ( P. G. சுந்தரராஜன் )




இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்கள் பல மாறுதல்களுக்கு உட்பட்டுப் புத்துருவம் பெற்றிருக்கின்றன. புதுக்கவிதையும், நாவலில் நனவோடை உத்தி கையாளப்படுவதும் இவ்வகையில் ஒரு வளர்ச்சி. இத்தகைய மாறுதல்களுக்கு சிறுகதை உட்பட்டதாக அதிகமாகத் தெரியவில்லை. சிறுகதை என்பதை மேல் நாட்டில், அமெரிக்காவில்தான் அதிகமாகக் கையாண்டார்கள். ஆகவே, இதை அமெரிக்க தேசிய இலக்கியம் என்றும் சொல்வதுண்டு. ஆங்கில இலக்கிய வரலாற்றில் சிறுகதைக்குத் தனி இடம் கொடுக்கப்பட்டதில்லை. வரலாற்று நூல்களில் கவிதை, உரைநடை, புனைக்கதை என்ற பகுதிகளைக் காணலாம். ஆனால், சிறுகதைக்கென தனி அத்தியாயத்தைப் பார்க்க முடியாது. புனைக்கதையின் ஒரு அம்சமாகவே அந்த வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பாட்டியிடம் கதை கேட்பது, புராண பிரவசனங்கள் கேட்பது போன்ற பழக்கம் வேரூன்றிய  தமிழ் பண்பாட்டில் சிறுகதை ஒரு தனியிடத்தைப் பிடித்ததில் வியப்பில்லை. இங்கும், மேல்நாட்டிலும் இந்த வடிவத்தில் அதிகமான மாறுதல்கள் குறிப்பிடும் படியான விதத்தில் ஏற்பட்டுவிடவில்லை. சிறுகதையை ஒரு முக்கிய வடிவமாகக் கையாண்ட மணிக்கொடி எழுத்தாளர்களிடையேக் கூட, அது ஒரு நடப்பியல் ரீதியில் தான் அதிகமாகப் புலப்பட்டது. பொருளடக்கத்தில் சோதனை செய்த மௌனி தம்முடைய முயற்சிகளில் வெற்றியடைந்ததாக சொல்வதற்கில்லை. மொழியின் நெளிவு சுளிவுகளை லாவகமாகக் கையாண்ட லா. ச. ரா. நடையில் மட்டுமே மாறுதல்களை உண்டாக்கினார். மற்றபடி இதைப் பல படைப்பாளிகள் சோதனையாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறுகதைக்கென பத்திரிகைகளும், கணிசமான சன்மானமும், பாராட்டுதலும் அடிக்கடி நிகழும் தமிழ் இலக்கிய உலகில், சிறுகதை இயல்பான வடிவத்துடன்தான் இன்னும் நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதில் சோதனை முயற்சிகளும். நவீனப் போக்குகளும் ஆங்காங்கே தென்பட்டாலும், வாசகர்களின் கவனத்தை  அதிகமாகப் பெற்றதாகத் தெரியவில்லை. 

வைத்தீஸ்வரனின் "கால் முளைத்த மனம்" என்ற சிறுகதைத் தொகுப்பு இவ்வகையில் மிகவும் வித்தியாசமானது. இலக்கிய விமர்சனத்தில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது. இந்த ஆசிரியர் ஒரு ஓவியரும் என்பதால்தானோ என்னவோ, கதைகளில் ஓவிய அம்சங்களான சர்ரியலிசம் (surrealism), impressionism , symbolism போன்ற உத்திகள் மிகுந்து கதைகளை புதுமையாகக் காட்டுகின்றன. கதைகளின் உள்ளடக்கம் நடப்பியல் பாணியிலான சம்பவங்கள்தான் என்றாலும், அவைகளில் பொதிந்திருக்கும் உளவியல் நோக்கு, கலையுணர்வு, வாசகர் எதிர்பாராத , ஆனால் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஆகியன சில கதைகளில் மேஜிக்கல் ரியலிசம் வரை இட்டுச்செல்கின்றன.

தலைப்புக்கதை ஒரு ஓவியக்கலப்படம் (collage). காலை முதல் இரவு வரை சாதாரணமாக  மனித வாழ்க்கையில் நிகழும் காட்சிகள் கோர்த்துக் கொடுக்கப்பட்டிருன்றன. அந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் தொனிக்கும் ஓசைகளைக் கூடக் கேட்கும் பிரமை ஏற்படுகிறது.

"கட்டையும் கடலும்", "மலைகள்" இரண்டும் கவிதையில் நனைத்தெடுத்த உரைச்சித்திரங்கள். ஒன்றில், வெறும் கட்டை, கடல் அலைகளின் உயிர்த்துடிப்பு வாசகரைக் கவர்கிறது.   "வார்த்தை"  கதையில் பல எண்ணங்களால் அலைக்கழிக்கப்டும் சிறுவனின் ஆத்திரத்தை உணர முடிகிறது. சொற்களின் பொருள் தெரியாவிட்டாலும் பழக்கத்தில் அவைகளை உபயோகிப்பதன் பின்னணியை அந்தச் சிறுவன் உணர்ந்திருப்பது இயல்பாகவே இருக்கிறது. " சைக்கிள் சாமி" கதையில் சாமியின் செயல்கள் இறுதியில் ஒரு இயல்பான முடிவைத்தான் காண்பிக்கின்றன என்றாலும், அந்த முடிவை ஆசிரியர் பயன்படுத்தும் உத்தியில் புகழ் பெற்ற அமெரிக்க  ஆசிரியர் ஓ. ஹென்றியின் சாயல் புலப்படுகிறது. "ஒரு பயணத்தின் சில மின்னல்கள்"  இதே வகையில் எதிர்பாராத முடிவை இயல்பாக உணர்த்தும் சாதனை. " சிருஷ்டி " யில் அப்பாவின் சிற்பத்திறமையைப் பற்றி மேலான கருத்து கொள்ளாத மகனின் அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது.

"கனவில் கனவு" மிகவும் உன்னிப்பாக, தேர்ந்த கலை உணர்வின் விளைவாக படைக்கப்பட்ட ஒரு impressionistic  (futuristic  என்றுக்கூடச் சொல்லலாம்) ஓவியம். "காக்கைக் கதை" ஒரு புதுமையான நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டாலும் அங்கத உணர்வுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

"ஹே பரோடா" சாதாரண நிகழ்ச்சி ஒன்றின் ரசமான அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யாருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான். "ஒரு துளியில்" நேரும் நேசமின்மையும், அவசரமும் , சரியாக செயல்பட முடியாத நிலையும் நடப்பியல் வகைதான். "ஜன்னல் இரண்டு" சிறுகதை வடிவத்தை மீறிய குறுநாவல் வகை. இந்தக் கதையில் ரங்கனின் அனாவசிய உணர்ச்சிகளும், தலையீடும் சரியான விளைவைத் தருகின்றன. மொத்தத்தில் இந்தக் கதைகள் ஒரு திட்டமிட்ட இலக்கிய சோதனையின் ஆரம்பக்கட்டமாகவே தொனிக்கின்றன. சில, நல்ல வெற்றியையும் பெற்றிருக்கின்றன. சிறுகதை வளர்ச்சியில் இவைகளை ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். 

________________________________________________

மேற்கண்ட கட்டுரையை எழுதிய ஆசிரியர் பற்றி:

" சிட்டி " ( பெரியகுளம் கோவிந்தஸ்வாமி சுந்தரராஜன் ) (20 April 1910 - 23 June 2006)  -  " மணிக்கொடி"  இதழ் காலத்து முன்னோடி தமிழ் எழுத்தாளர். மேற்கண்ட புத்தக விமர்சனத்தை எழுதியபொழுது, அவருக்கு சுமார் 88 வயது. இசைக் கலைஞர் மதுரை மணியின் நெருங்கிய நண்பர். எழுத்தாளர் தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய " நடந்தாய் வாழி, காவிரி " என்ற புத்தகம் குறிப்பிடத் தகுந்தது ( " “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” )

Sunday, November 10, 2019



இருட்டுக்குள் உரியும் தோல்


- வைதீஸ்வரன் -






“ இதெல்லாம் பேசித் தீத்துக்கற பிரச்னை
என்று தான் கூடினார்கள்.
பேச ஆரம்பித்தவுடன்
வந்தது மின்சாரத் தடை.

“ இது ஒரு தடை இல்லை....பேச்சுக்கு! “
என்று கருதி  மேலும் தொடர்ந்தார்கள்..
இருட்டின் பொதுவான சுதந்திரத்தில்
பிரச்சினையைத்   தயக்கமின்றி
அவரவர் மூலையிலிருந்து அலசினார்கள்.
ஆரவாரம் அதிகமில்லாமல் அடக்கமாக மொழிந்தார்கள்

மெதுவாக ஆனால் தெளிவாக இரைந்தன
முகமற்ற குரல்கள்.

யாரும் கையோங்கியது கண்ணுக்குத் தெரியவில்லை
மேலும்...நறநறப்பு..முறைப்பு உடல் மொழி வன்முறைகளுக்கு
பொருத்தமற்ற சூழல் அது.
வாய்ப்பேச்சு மட்டும் தான்.

ஒருத்தன் பேச்சின் ஒலி முடிந்த பின்பே
அடுத்தவன் மறுப்பதும் ஆமோதிப்பதும் ஆக இருந்தது.

பிரச்சினைக்கு  வெளிச்சம் வந்தது போல
பெருமுச்சு கேட்டது...இரண்டு கைத்தட்டலுடன் சேர்ந்து.

அதே சமயத்தில் தான்
மின்சாரம் மீண்டது.
பளிச்சென்றன கூட்டத்தில் கூசிய கண்கள்
ஏதோ வெளிச்சத்தினால் வெட்கப்பட்டது போல!
இருட்டென்ற நிர்வாணத்தில்
சகஜமாயிருந்த இயல்பு முகங்கள்
திடீரென்று சங்கடப்பட்டு
உஷாராகி அவசரமாய் அவரவரின் அன்றாட முகங்களைப் 
பூட்டிக் கொண்டனர்....அதனதன் முரண்பாடுகளையும் சேர்த்து

மீண்டு வந்த போலி உலகவெளிச்சத்தில்
பிரச்சினையின்  தீர்வு பழையபடி
அகங்காரத்தின் இருட்டுக்குத் தள்ளப்பட்டது

(2019)

______________________________________________________________________________

Monday, September 9, 2019




எறும்பும் நிழலும்

- வைதீஸ்வரன்- 




நான் அந்த எறும்புக்குள் எப்போது நுழைந்தேன்?

என் உடம்புக்குள் வாழ்க்கை ஓயாமல் பரபரக்கிறதுஉயிரைப் பற்றிய பயங்கள் ஆயிரம் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தினால் நான் அன்றாடம் உயிர்வாழ  முடியாது.

எனக்குத் தூக்கமில்லைஆயுள் முழுதும் பரபரத்துக் கொண்டே இருப்பது தான் எனக்கு வாழ்க்கை,

ஆனால் ஒரு சாபமாக இந்த நிழல் ஏன் என்னை ஒட்டிக் கொள்ளுகிறது?

இரவில் சற்று நேரம் தொலைந்து போகும் இந்த நிழல் பகலில் நான் பெற்றெடுத்த குறைப் பிரசவம்  போல் என்னைத் துரத்திக் கொண்டே அலைகிறதுநான் கடித்துக் குதற முடியாத ஒரு குட்டிப் பேயாக பீடித்துக் கொண்டு தொடர்கிறது.

இந்தக் கருப்புப் படையிலிருந்து நான் விட்டு விடுதலையாவது எப்போது?

நான் தரையெல்லாம் சத்தமற்ற ஓலத்துடன் நாளெல்லாம் அலைகிறேன்என் மௌன ஓலம் அந்த தெய்வத்துக்கு   கேட்பதில்லையோ  
என்னவோ?

நின்று மௌனமாக மூச்சற்று எனக்குள் மூழ்கி விடை தேடி விசாரத்தில் மெய்மறந்து நிற்கிறேன்பளிச்சென்று ஒரு மின்னலடித்தது.

 "நானற்றுப் போய் விடு ...நிழலற்றுப் போவாய்!".

"நானற்றுப் போவதாஎவ்வாறு? "

"சாத்தியமுண்டுஆனால் உன்னுடைய பிறவியில் அது இயலாத காரியம்அதற்கு முன் நீ இறக்க நேரிடலாம். நிழலையும் நீயாக பாவித்து அரவணைத்துக் கொள்அது தான் உன் இயல்புக்கு இடம் கொடுக்கும் ஒரு பாவனை!. பேதங்கள் பார்ப்பது அறியாமையென்று அறிந்து கொள்.
வாழ்க்கை பிறகு சகஜமாகும். துயரற்ற வாழ்க்கையும் ஒரு வகையில் சாபமேஎன்று புரிந்து கொள்! " என்றது ஒரு குரல்

நான் எறும்பை விட்டு புத்துயிர் பெற்றவனாக எப்போது வந்தேன் என்று எனக்கு நினைவில்லை.
__________________________________________________

Saturday, June 1, 2019


( சிறுகதை )

ஒவ்வாமை

- வைதீஸ்வரன் -



இரவு கடந்து மணி நான்காகி விட்டது. சாம்பு சுருண்டு படுத்துக் கொண்டு அந்த முள் நகருவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சை ஒரு கை பிடித்துக் கொண்டே இருந்தது. அந்த இருமல் இன்னும் வரவில்லை!
கடந்த ஒரு வாரமாக அவன் இந்த நேரத்தில் பயங்கரமாக குலுங்கிக் குலுங்கி இருமிக் கொண்டிருப்பான். முழங்கால்களை மடித்துக் கொண்டு தலையை தலையணையில் ஓயாமல் முட்டிக் கொண்டு வயிற்றை எக்கி எக்கி இருமிக் கொண்டிருப்பான். வீடே நிலைகுலைந்து போயிருக்கும். செய்வதற்கு எதுவுமில்லாமல் அவன் அம்மாவும் அப்பாவும் அரற்றிக் கொண்டிருப்பார்கள். அம்மா முதுகைத் தடவி தடவிக் கொடுப்பாள். சாம்புவின் முகமெல்லாம் கண்ணீரும் சளியுமாக மூச்சுக்குத் தவித்தவாறு பதறிக் கொண்டிருக்கும். வெளியில் நிரம்பி இருந்த அத்தனை காற்றும் அவன் நுரையீரலுக்கு மட்டும் எப்படி போகாமல் விரோதமாக இருக்கிறது ?

இந்த இருமல் வேதனை அவனுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்திருந்தது. அவ்வபோது குடும்ப டாக்டர் வந்து ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார். “இது வியாதியல்ல. ஏதோ allergy ஒவ்வாமை " என்று சொல்லுவார். ஓரளவு சகித்துக் கொள்ளும்படியாக பள்ளிக் கூடத்துக்கு போக முடிந்தது. ஆனால் இந்த முறை அந்த அவஸ்தை மிகவும் தீவிரமாகி விட்டது. எழுந்து நடக்க முடியாத அளவுக்கு மூச்சு இரைத்தது. அநேகமாக படுத்த படுக்கையாகி விட்டான் . .

ஒரு வாரமாக பள்ளிக் கூடம் போகமுடியாமல் சாம்பு இந்த அவஸ்தையில் வீட்டில் முடங்கிக் கிடப்பதை நினைத்து நினைத்து துக்கப் பட்டுக் கொண்டிருந்தான். . இன்றாவது எப்படியாவது பள்ளிக் கூடம் போய் விட வேண்டும். ..அவன் படிப்பதில் எப்போதும் மிகுந்த ஆசையும் அக்கறையும் உள்ளவன். அன்றன்று பாடங்களைப் படிப்பதிலும் வீட்டுப்பாடங்களை கருத்தாக எழுதிக் கொண்டு போவதிலும் அவன் கவனமாக இருப்பான்.

உடம்பின் அவஸ்தையை விட இப்படி ஒரு வாரமாக பள்ளிப் பாடங்களை தவற விட்ட வருத்தம் அவன் மனதை பாரமாக்கிக் கொண்டிருந்தது. எப்படியாவது இன்னிக்கு பள்ளிக் கூடம் போய் விட வேண்டும்! என்று ஆதங்கத்துடன் நினைத்துக் கொண்டான்.

ஏதோ சித்த வைத்தியர் மூலமாக தழைகளையும் மூலிகைகளையும் காய்ச்சிக் கஷாயம் வைத்து இரண்டு நாட்களாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இருமல் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தது, கொஞ்சம் வேதனைகள் குறைந்தாலும்...விடியலில் நான்கு மணியானால் இந்த இருமல் பிசாசு அவனைப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

சாம்பு இன்றும் அந்த கடிகாரத்தை பயத்துடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். நான்கு மணி ஆகும் போது அவனை உலுக்கி வருத்தக்கூடிய அந்த இருமல் ஆரம்பமாகப் போவதை பயத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான். ஆனால் அதிசயமாக அவன் சாதாரணமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான் . அவனுக்கு சரியாகி விட்டதா!! அவனால் நம்ப முடியவில்லை! அவனுக்குள் சந்தோஷம் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு கண்ணில் நீர் தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

சாம்புவின் அவஸ்தையை வழக்கம் போல் எதிர்பார்த்தவாறு அவன் அம்மாவும் நான்கு மணியானால் எழுந்து விடுவாள். இன்றைக்கு வீட்டிலிருமல் சத்தமே இல்லாமல் இருந்ததால் அவளுக்கு நம்ப முடியாமல் இருந்தது. எழுந்து போய் சாம்புவை பார்த்தாள். சாம்பு உட்கார்ந்து கொண்டிருந்தான். .

“ என்னடா கண்ணூ!....ஒனக்கு நன்னாயிடுத்தாடா!..”

அம்மா அவனை நெருங்கி அவன் தலையையும் முதுகையும் வருடி விட்டாள். அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டான்..அவள் கண்ணில் நீர் வழிந்தது.

“ அம்மா! இன்னிக்கு பள்ளிக்கூடம் போறேம்மா! “...

“ தைரியமா போய்ட்டு வாடாப்பா!...உனக்கு உடம்பு சரியாயிடுத்து...இனிமே அந்த பீடை இருமல் ஒனக்கு வராது. எழுந்து வந்து குளி. சாமிக்கு நமஸ்காரம் பண்ணு"
அவனுக்கும் பரபரப்பாக இருந்தது.

சாம்பு தயாராகி விட்டான். பாட புத்தகங்களையெல்லாம் பார்த்து பைக்குள் போட்டுக் கொண்டான். சாம்புவின் அப்பா அவனை கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

“ சாம்பு .நெஜமாகவே .சரியாயிடுத்தாடா? ஸ்கூலுக்கு போறயா? “ என்று முதுகைத் தடவிக் கொண்டே சற்று கவலையுடன் கேட்டார்.

“சரியாயிடுத்துப்பா!.....நான் போறேன். இன்னும் ரெண்டு வாரத்துலே பரிட்சை வந்துடும்!...” என்று பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான்.
பிறகு சட்டென்று அப்பாவைப் பார்த்தான்.

“ அப்பா....எனக்கு இப்பத் தான் நினைவுக்கு வந்தது. நான் ஒரு வாரமா ஸ்கூலுக்கு போகலே!. எங்க க்ளாஸ் டீச்சர் டாக்டர் கிட்டேருந்து லெட்டர் கேப்பாங்க! “

“ ஆமாம்... எனக்குக் கூட மறந்து போயிடுத்து!. இப்ப யார் கிட்டே லெட்டர் வாங்கலாம்?...சித்த வைத்தியரெல்லாம் லெட்டர் கொடுக்க மாட்டாங்க! அப்படிக் கொடுத்தாலும் ஸ்கூல்ல ஒத்துக்க மாட்டாங்க!
“ இதுக்கு என்ன கஷ்டம்! பக்கத்துத் தெருவுல தான் நம்ம டாக்டர் ஈஸ்வர மாமா இருக்காரே!. . அவரு கிட்டே சொல்லி ஒரு சர்டிபிகேட் வாங்கிடுங்களேன்! “ என்றாள் அம்மா அவசரமாக.

“அதுவும் நல்ல யோசனை தான்! “ அப்பா சாம்புவைப் பார்த்து சொன்னார்.

ஈஸ்வரன் அவர்கள் குடும்ப டாக்டர். சாம்புவையும் அவர் அப்பாவையும் பார்த்தவுடன் சந்தோஷமாக சிரித்தார்.

“என்னடா சாம்பூ...உடம்பு நன்னாயிடுத்தா?..என்று கேட்டுக் கொண்டே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

“ “ இன்னிக்குப் பரவாயில்லே!...அதான் ஸ்கூலுக்கு போறேன்னு பிடிவாதம் பிடிக்கிறான்....ஒரு சர்டிபிகேட் வேணும்!...” என்றார் சாம்புவின் அப்பா.

“ ஸ்கூலுக்குப் போறதுலே அக்கறையா இருக்கானே..உங்க பிள்ளை!..நல்ல பையன் தான்..” என்று டாக்டர் ஈஸ்வரன் அவன் மார்பில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து பரிசோதித்தார். பிறகு சற்று நீண்ட யோசனையுடன்

“ஸர்டிபிகேட் கொடுக்கறேன். .ஆனா அதிகம் அலையாமே இருக்கணும்!”
என்றார்.

சாம்பு சர்டிபிகேட்டை மகிழ்ச்சியுடன் பையில் போட்டுக் கொண்டு அப்பாவுடன் சைக்கிளில் போய் பள்ளிக் கூடத்தில் இறங்கிக் கொண்டான்

பள்ளிக் கூட வாசலில் இருந்து அவன் வகுப்புக்குப்போக அந்தப் புல் வெளி மைதானத்தைக் கடந்து போக வேண்டும். சாம்பு பரபரப்பாக விரைந்து போய்க் கொண்டிருந்தான். இரண்டு வாரங்களுக்கு பின் அவன் பள்ளிக் கூடம் போகிறான்! அவனுக்குள் அந்தக் கவலை பரவிக் கொண்டிருந்தது. தூரத்தில் சில பையன்கள் கூடி நின்று கொண்டிருந்தார்கள். அங்கே ட்ரில் மாஸ்டர் மகிமை தாஸும் நின்று கொண்டிருந்தார்.
மகிமைதாஸ் மாஸ்டரைப் பார்த்தாலே பொதுவாக பையங்களுக்கு ஒரு பயம் வந்து விடும். அவருடைய கருமையான முகத்தில் முறுக்கு மீசையும் எப்போது சற்று சிவப்பாகவே இருக்கும் கண்களும் கட்டைக் குரலும் பையன்களை கைகட்டி நிற்கச் சொல்லும். அவர் ட்ரில் க்ளாஸில் அவர் சொன்னபடி கை கால்களை நீட்டிப் பயிற்சி செய்யா விட்டால் அவர் தன் பிகில் மாட்டியிருக்கும் ரப்பரால் சுரீரென்று அடிப்பார். “ஏன்னடா பெராக்குப் பாக்கறே? “ என்று கத்துவார்.
சாம்புவால் ஒரு சம்பவம் மறக்கவேமுடியாமல் பதிந்து போயிருந்தது.

அன்று பையன்களை குனிந்தும் நிமிர்ந்தும் வளைந்தும் நிற்கச் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு கைகளை அகலமாக விரித்து நிற்கச் சொன்னார். எல்லோரும் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவருக்குத் தெரிந்த ஒருவர் அவருடன் பேச வந்தார்.

மகிமைதாஸ் அவருடன் பேசிக் கொண்டே இருந்தார். ஐந்து நிமிஷத்துக்கு மேல் பேச்சு நீண்டு கொண்டே இருந்தது. பையன்களுக்கு கைகளின் வலி தாங்கவில்லை. நரம்புகள் விண்ணென்று இழுத்துக் கொண்டு நின்றது. அதற்கு மேலும் கைகளை விரித்து நிற்க முடியாமல் எல்லோரும் நெளிந்து கொண்டே இருந்தார்கள். ட்ரில்மாஸ்டர் கவலைப் படவே இல்லை. சாம்பு வலி தாங்க முடியாமல் சற்றுக் கைகளை கீழே இறக்கினான். மகிமைதாஸ் அப்போது தான் பேச்சை முடித்துக் கொண்டு அவனைப் பார்த்தார். எல்லோரையும் கைகளை இறக்க சொல்லிவிட்டு சாம்புவை நெருங்கி சுளீரென்று ரப்பரால் இரண்டு முறைஅடித்தார். “ஏன்னடா! அவ்வளவு வலியா உனக்கு? என்னடா சோறு திங்கறே!.. “
என்று கைகளை அமுக்கினார்
சாம்பு விக்கி விக்கி அழுது கொண்டே தோளைப் பிடித்துக் கொண்டு வகுப்புக்கு போனான். அந்த ட்ரில் வாத்தியாரைப் பார்த்தாலே அவனுக்கு எப்போதும் ஒரு கிலி வரும்.

இன்று மகிமைதாஸ் அவனுக்கு எதிரிலேயே நிற்கிறார்!

சாம்பு வேக வேகமாக புல் வெளியில் நடந்து வகுப்புப் பக்கம்போய்க் கொண்டிருந்தான். மகிமைதாஸ் அவனைப் பார்த்து விட்டார். அவருடைய பார்வை அவன் நடையைத் தளர்த்தி நிற்க வைத்தது.

அவர் இவனைப் பார்த்து கூப்பிட்டது போல் சாம்புவுக்கு ஒரு பிரமை.
அவன் அவரிடம் தன்னிச்சையின்றி நெருங்கிப் போனான். மகிமை தாஸுக்கு ஞாபகம் அதிகம்

சாம்புவைப் பார்த்தவுடன் அவனை ஊடுருவது போல் கண்ணை உருட்டி இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டார்.

“என்னாடா சோம்பு....ரொம்ப நாளா பள்ளிக் கூடம் பக்கமே வரலே! ஊர் சுத்தப் போயிட்டயா? “ கட்டைக் குரலில் அதட்டலாகக் கேட்டார்.

சாம்புவுக்கு ஒரு நிமிஷம் தலைசுற்றுவது போல் இருந்தது. உடம்புக்குள் ஒரு நடுக்கம்!

“ இல்லே ஸார்!...உடம்புக்கு வந்துடுத்து ஸார்...ரொம்ப இருமல் ஸார்..அதான் வரலே! “ வாய் குழறி பேசினான்.

மகிமைதாஸ் அவனை ஊடுருவது போல் பார்த்தார்.
“ அப்பறம் என்னாச்சு? இப்போ உடம்புக்கு சுகமாயிருச்சா? ஆங்.....”
ஏன்று அவன் தோளை அழுத்திக் கொண்டு கேட்டார்.

“ சரியாயிடுத்து ஸார். இப்போ மூச்செல்லாம் வாங்கறதில்லே! இருமல் சரியாயிடுத்து ஸார். டாக்டர் கூட சர்டிபிகேட் கொடுத்திருக்காரு! “

மகிமைதாஸ் அலட்சியமாக சிரித்தார். “ஓ …..சட்டிபிகேட் வாங்கிட்டு வந்திருக்கயாடா? எங்கே காட்டு...பாக்கலாம்! “ .

சாம்புவுக்கு "இதையெல்லாம் இவரிடம் ஏன் நான் சொல்ல வேண்டும்? என்று ஒரு கணம் தன் தவறை எண்ணிக் கடிந்து கொண்டான். . பயமாக இருந்தது.
சட்டைப் பையிலிருந்து தயக்கமுடன் சர்டிபிகேட்டை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அந்த சர்டிபிகேட்டைப் பிரித்து அதில் இருந்த கையெழுத்தைப்பார்த்தவுடன் மகிமைதாஸின் முகத்தில் ஜிவ்வென்று ஒரு உஷ்ணம் மின்னலடித்து மறைந்தது.

“ ஓ அப்படியா?..இங்கே கிட்ட வாடா பாக்கலாம்..” மகிமைதாஸ் சாம்புவை தன் பக்கம் இழுத்து அவன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தார்.

“ இப்ப ஒனக்கு இளைப்பு வாங்காதோ!..”

“ சாம்பு நடுங்கிக் கொண்டே பதில் சொன்னான். “ எனக்கு சரியாயிடுத்து ஸார்...மருந்தெல்லாம் சாப்பிட்டேன் ஸார்..”

“ அப்படியா! ஒங்க டாக்டர் சொல்லிட்டாரோ?.”

“ ஆ ….மா...ம்..ஸார்..”

அப்போது பள்ளிக் கூடத்தில் முதல் மணி அடித்து விட்டது. இன்னும் ஐந்து நிமிஷத்தில் இரன்டாம் மணி அடிக்கும் போது எல்லோரும்வகுப்புக்குள் போய் விட வேண்டும்.

மகிமை தாஸ் சாம்புவின் தோளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.
“ டேய்.....ஒனக்கு இப்ப நல்லா ஆயிடுச்சின்னா..நான் சொல்ற மாதிரி செய்யணும். அதோ பாரு அங்கே கோல் போஸ்ட் தெரியுதுல்லே!. வேகமா ஓடிப் போயி அதைத் தொட்டுட்டு வேகமா திரும்பி ஓடி வந்து நேரா க்ளாசுக்குப் போவணும்! தெரியுதா! நடுவுலே நின்னே.....அப்பறம் பாரு! “
சரியா!......இப்பொ .ஓடுரா!” என்று முதுகில் தட்டித் தள்ளி விட்டு வகுப்புப் பக்கம் நடந்தார்.

சாம்புவுக்கு ஒரு கணம் படபடப்பாக இருந்தது. தோளில் கனக்கும் புத்தகப் பையுடன் மெள்ள ஓட ஆரம்பித்தான். மற்ற பையன்கள் வேகமாக வகுப்புகளுக்கு ஓடி விட்டார்கள்.

இரண்டு வாரமாக படுக்கையில் இருந்த அவனுக்கு அப்படி ஓடுவது மிகவும் கடினமாக இருந்தது. கால்கள் பின்னிக் கொண்டன.

முக்கால் தூரம் ஓடுவதற்குள் நெஞ்சு முட்டிக் கொண்டு வந்தது. இரண்டுவாரமாக படுத்த படுக்கையாக இருந்தவன். அவன் வேகமாக நடந்தே பல நாட்களாகி இருக்கும். எங்கே அந்த கோல் போஸ்ட்? அது அவனை நெருங்காமல் மேலும் மேலும் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அவன் இருதயத்தின் துடிப்பு மேலும் மேலும் சத்தமாகி காதில் இரைந்து கொண்டே இருந்தன. மூச்சின் இரைப்பு பெரிதாகிக் கொண்டிருந்தது,
வியர்வை வெள்ளமாக உடம்பு முழுதுவதும் வழிந்து கொண்டிருந்தது. . பின்னால் மகிமைதாஸ் வாத்தியார்..அவனை துரத்திக் கொண்டே வருவது போல் மனதில் பயமும் கிலியும் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. . எங்கே அந்த கோல் போஸ்ட்? மேலும் மேலும் அது விலகிப் போய்க் கொண்டே இருந்தது. அதைத் தொட்டு விட்டு திரும்பி ஓடி வகுப்புக்குப் போக வேண்டும்! வகுப்பு ஆரம்பித்திருப்பார்களோ!...எங்கே அந்த சர்டிபிகேட்? பத்திரமாக வாத்தியாரிடம் கொடுக்க வேண்டுமே! அய்யோ! இதென்ன!!... சாம்பு நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். எல்லாம் இருட்டாக இருக்கிறதே!.. கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லையே!. மூச்சு முட்டுகிறதே! நெஞ்செல்லாம் புடைத்துக் கொண்டு பறக்கிற மாதிரி...இதென்ன!....அய்யோ....அய்யோ! குதிரைக் குளம்பு மிதித்த மாதிரி விலா எலும்புகள் விண் விண்ணென்று தெறித்தன.. …
சாம்பு வாயை அகல விரித்துக் கொண்டு உண்ட சோறெல்லாம் வழிய தரையில் போட்ட மீனாக மூச்சு விட முடியாமல் மைதானத்தில் விழுந்து விலாப் புடைக்க அரற்றிக் கொண்டிருந்தான்...சுற்றிலும் எல்லாம் இருண்டது போல் நினைவற்றுப் போய்விட்டது..


* * *

கண் விழித்து பார்த்த போது அவன் எங்கோ மிதந்து கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றிக் கூட்டமாக நின்று கொண்டிருந்த முகங்கள் மெல்ல மெல்ல தெளிவாகிக் கொண்டிருந்தன. டாக்டர் ஈஸ்வரன் அவன் கையில் ஊசி போட்டு விட்டு தேய்த்துக் கொண்டிருந்தார்.

“ ஏண்டா கண்ணு...என்னடா ஆச்சு? எப்படிடா இப்படி ஆச்சு? “ என்று கண்களில் நீர் தளும்ப சாம்புவின் அப்பாவும் அம்மாவும் அவன் முகத்தினருகில் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

சாம்புவுக்கு வார்த்தைகள் வெளி வரவில்லை. மூச்சின் இறுக்கம் இன்னும் தளரவில்லை. சுற்றிலும் பார்த்து விக்கி விக்கி அழுகை வந்தது. கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது

"” கம்பௌண்டர் கந்தசாமி தான் ஒன்னைத் தூக்கிண்டு வந்து எல்லா விவரத்தையும் வந்து சொன்னான்...
யாரு..... அந்த மகிமை தாஸ் ஒன்னை வெரட்டினானா?....அவன் ஓடச் சொன்னா நீ ஓடணமா? க்ளாசுலே தான் அவன் சொன்னதைக் கேக்கணும். மத்தபடி அநாவசியமா ஒன்னைத் தண்டிக்க அவனுக்கு அதிகாரம் கிடையாது!..” தெரிஞ்சுக்கோ! “ என்றார் டாக்டர் ஈஸ்வரன் அவன் நெஞ்சைத் தொட்டவாறு. .

“ ஆமாம்....நல்ல வேளையா அந்த வழியா ஒங்க கம்பௌண்டர் கந்தசாமி சைக்கிள்ளே போனதினாலே சாம்பு கீழே கெடக்கறதைப் பாத்து இங்கே தூக்கிண்டு வந்தான்.......சாம்பு... கடவுள் தான் ஒன்னைக்காப்பாத்தி இருக்கார்!” என்றார் சாம்புவின் அப்பா.

சாம்புவுக்கு இன்னும் மூச்சு சமனமாகவில்லை. மனதுக்குள் விவரிக்க முடியாமல் துக்கம் ஆறாமல் பொங்கிப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. “ இந்த ட்ரில் மாஸ்டர் ஏன் என்னிடம் இப்படிக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா? க்ளாசுக்கு போக முடியவில்லையே!.... வார்த்தை வராமல் அந்த நிகழ்வு ஆறாத ரணமாக அவன் பிஞ்சு மனதைக் கீறிக் கொண்டிருந்தது. .

சாம்பு அம்மாவுக்குத் தாங்கவில்லை.
“டாக்டர்...ஒரு உடம்பு நலிந்த குழந்தை மேல் அந்த மகிமை தாசுக்கு அப்படி என்ன ஒரு மிருகத்தனமான வன்மம்! இப்படி ஏன் அவன் நடந்து கொள்ள வேண்டும் ? என்று கேட்டாள்..

டாக்டர் அவர்களை கையமர்த்தி நகர்ந்து வந்தார்.
" அம்மா..........குழந்தை கொஞ்சம் தூங்கட்டும். ஏதோ கெட்ட வேளை.....தற்செயலாக நேர்ந்து விட்ட அசம்பாவிதம். எனக்கு விவரமா இப்போ சொல்ல முடியலே! இது எனக்கும் மகிமைதாஸ் குடும்பத்துக்கும் எப்போதோ ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம்...அது இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இன்று சாம்பு அவதிப்பட்டு விட்டான். சூழ்நிலை தான் காரணம் அது மாற வேண்டும். “ என்றார்.

“ சாம்பு இதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“டாக்டர் மாமா.....அப்போ என் இருமலுக்கும் சூழ்நிலை தான் காரணும்னு சொன்னீங்க! அப்படீன்னா இதுவும் அந்த மாதிரி அலெர்ஜியா..டாக்டர்” ..” என்றான் மெதுவான குரலில்.

டாக்டர் ஈஸ்வரனுக்கு சாம்பு தான் இதைப் பேசினானா என்று ஒரு கணம் நம்ப முடியவில்லை.

_________________________________________________________________________


(அம்ருதா ஜூன் 2019)

Tuesday, May 21, 2019




வெம்மைச் சுவடுகள்  

(கோடை கவிதைகள் )



- வைதீஸ்வரன் -




















பகல்

உருளும் சக்கரங்களில் 
ஒளி பளிச்சிட்டுத் தெறிக்கும்.
பாதையின் குறுக்குமறுக்காய்
பாதரஸம் பாயும்
நிழல்முனைகள் நீர்மூழ்கிப் பிணங்களாய்
மிதந்து தொட்டுப் புரளும் மரத்தடிகள்.
அறிவிலிக் குரங்குகள் உயிரைத் துணிந்து
ஊஞ்சலாடும் கிளைகள்...
உதிரும் கனிகள்.
கடலில் 
கத்தரித்த கந்தல் துணியலைகள்
ஒழுங்கற்று சிதறிப் பின் சிடுக்கு நீங்கும்.
அஜீர்ணவயிறாய்...மந்தக்காற்று
மேலும் கீழும் ஏறி திசையின் குடலைத்
தடவிப் பொருமும்.
ஒளி ஏறும் உலகில் 
களைப்பு மீறும் உடல்கள்.
எதிரில் வீசும் காற்றில்
முதுகேறும் வெய்யில்.

______________________________________________________________________________________



முட்கள்


கோடை சூரியன்
கொதித்தெழுந்த முள்ளம்பன்றி
முள் விரித்து உயரே
சீறி எழும்பி
நிலத்தைத் துரத்துது
மேற்கும் கிழக்குமாய்!.

நீண்ட நீண்ட நெருப்பு நகங்கள்
முதுகைக் கீறி ஆற்றை உறிஞ்சிக்
கூரைகள் மீது ரத்தம் கக்குது!

சாலை மரங்களின் விதவைக் கோலங்கள்
வறுமையின் சாட்சிகள்.
இலையற்ற கொம்பில் பறவைகள் அலகை
அகல விரித்துக் காற்றைக் கெஞ்சும்!

நாக்கு வறண்ட நாய்கள் இறைத்து
நீரை நினைத்து மண்ணைப் பிறாண்டும்.
தாரில் ஈக்கள் இறகு பொசுங்க
இலைகள்
விழுந்து வாழ்வைப் பழிக்கும்.

துணிவால் இறங்கி நடையில் தளர்ந்து
மணல்வாய் சபிக்கத் துடிப்பன கால்கள்
ஒட்டும் நாக்கின் உமிர்நீர்த் தவிப்பு.
உளறும் பேச்சு.....உஷ்ணம் வெறுப்பு
முலையை இழுத்துக் களைத்த கன்றுகள்
சுவரை நக்கும் நடை பாதைகள்.

தாகம்...தாகம்....சோடா....கோலா.....
அக்கினிக் குளத்தில் அடியிலோர் உடைப்பா!.....

ஓட்டுள் இறங்கி உள்ளைப் பொசுக்குது....
கிளையாடும் மரங்கள் எங்கே?...
கிழியாத குடைகள் வேண்டும்.
மணிக் கூண்டின் முள்ளைத் தொற்றி
மணியை மாற்றேன்!..உடனே....மாலையை ஏற்றேன்!..

கொதிக்கும் மனங்கள் வியர்ப்பது வியர்க்காத தோலுக்கு!

ஈரம் கண்டோ....எத்தனை யுகங்கள்?....
நீரில் கால் பட நிழலில் தலைபடப்
பாடும் இரவுக்கு பகlலெல்லாம் துடிப்பு.
ஐஸ்க்ரீம் கனவு!

உடல்கள் எரிவது ஒரே ஒரு நெருப்பால்.
ஊர்கூடி வியர்ப்பது ஒரே ஒரு நினைப்பால்!
முடகள் மடங்கினால் பன்றி நிலவாகலாம்.
பகலின் வியர்வையை நிலவில் துடைக்கலாம்
                                                                                                                                                             (1960)                                                                      
______________________________________________________________________


வியர்வைப் பாட்டு

வரும் கோடை வந்ததென்று
வெறும் கிளைகள் கைகொட்ட
வறண்ட நிலம் பொய்வியப்பால்
உடல் நெறித்து வாய் பிளந்த

உடற்த்தோல் ஊற்றெடுத்து
புதுவியர்வை பெருக்கெடுக்க
பனியன்கள் மிகநனைந்து
கட்கங்கள் கிழிந்தன.

கால்ர்கள் கட்டறுந்து
கழுத்துக்கள் அழுதன.
பகலென்ற பாம்புக்குப்
புதுப்பற்கள் முளைத்துப் போய்
பார்த்தவரைக் கடித்துப்
பதுங்கியவரை புழுக்கின.

பைத்தியத்தின் மூளையாய்
பாதைத் தார் இளகிப்
பாதங்கள் குதிகொதிக்க
ஓரத்து மரங்களெல்லாம்
உள்ளூரில் சொர்க்கமாச்சு.

திருட்டுக்குப் பயந்து
திறந்து வைத்த ஜன்னல்கள்
திடீர்த்துறவி நானென்று
படாரென்று வாய் திறந்தன.

பாட்டாளி -படிப்பாளி"”
பாகுபாடு கரைத்தொழுகும்
கோடைப் பொது வியர்வை
கொண்டாடிப் பனை விசிறிக் கைகள்
ஒயாமல் பகலாடி இரவாடிப்
பின் ஓயும் ஒரு வேளை
ஒரு மனம் தலைதூக்கி
வருமாறு நினைத்தது.----

“” வெள்ளிக்குடை வடிவிருந்தும்
வெய்யிலையா கொட்ட வேண்டும்?
கொல்லும் சூரியனை
சொல்லாமல் பதவி மாற்ற
ஊருக்குள் வாக்கெடுத்தால்
வியர்த்தவர் எவரும்
விரைந்து வந்து கையடிப்பார்.

ஆனாலும் எச்சரித்தேன்....
அரசியலில்
வியர்வை உலர்வதற்குள்
விஷயங்கள் முடிய வேண்டும்
காலம் தாமதித்தால்
ஊர்புத்தி
கமபளிக்குள் ஒளிந்து கொண்டு
சூரியனே வேண்டுமென்று
சொன்னலும் சொல்லும்......

உருண்டு
குளிர்காயும் பூமிக்குள்
யார்புத்தி நிலைக்கிறது??

_____________________________________________________________________________________