vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, May 29, 2020

பேத்தியின் ஓவியம்






 பேத்தியின் ஓவியம்

வைதீஸ்வரன் 


(Still Life - By K H Ara)


                                       
                     
விடிந்தவுடன்  நான்  எப்போதும்  என் பேத்தியைத் தான்  தேடுவேன்.  அவள்  படுக்கையை விட்டு எழாமல்  தூக்கமும் விழிப்புமாக தனக்குள் பேசிக் கொண்டிருப்பாள்.  கனவின் மிச்சத்தை ஏதோ கதையைப் போல் சொல்லிக் கொண்டு  சிரித்துக் கொண்டிருப்பாள்.   அதை   நானும் கேட்க வேண்டுமென்று எனக்கு ஆவலாக  இருக்கும் அவள் கதைகளில்  சில சமயம் மகாபாரத  கடோத்கஜனும் டைனசோரும்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.  ஆஞ்சனேயரும்  மிக்கி மௌஸும்  ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள் .


“ எப்படி கண்ணு...உனக்கு  கனாவிலே  இப்படியெல்லாம்  வருது?  ன்னு கேப்பேன்.
அவள்  கண்ணை சிமிட்டிக் கொண்டு  "  இல்லே தாத்தா..இதுலே  பாதி  கனா....பாதி  புருடா!...”  என்று கண்ணை சிமிட்டிக் கொண்டு பலமாக  சிரித்தவாறு  படுக்கையிலிருந்து  குதிப்பாள்.


ஆனால்  இன்று அவள்  படுக்கையில் காணவில்லை.  வீட்டின் பின்புறம் தோட்டத்துக்கு போகும் கதவுக்கருகில் இருந்த வாசற்படிகளில்  உட்கார்ந்து  கொண்டு  உன்னிப்பாக  தலையைக் கவிழ்த்துக் கொண்டு ஒரு வெள்ளைக் காகிதத்தில்  என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.


நான்  அருகில்  சென்று என்னவென்று பார்த்தேன்.  வெள்ளைக் காகிதம் முழுவதும்  கருப்புக்கலர் பென்சிலால் மேலும் கீழுமாகக் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.  அடிக்கடி முன்னே விழும் தலை மயிரை ஒதுக்கி விட்டுக் கொண்டே கிறுக்கிக் கொண்டிருந்தாள்.


 “ கண்ணூ.... என்ன  பண்றே?  காயிதம் பூரா...ஒரே  கிறுக்கலா  இருக்கேஎன்று  கேட்டேன்.
அவள்  கூந்தலை ஒதுக்கிக் கொண்டு தலை தூக்கி என்னை பார்த்து  " டிராயிங்க்..வரையரேன்......தாத்தா!..”   என்றாள்.


 “டிராயிங்கா!..இதுவா..டிராயிங்க்!....என்ன  சொல்றே..நீ?  ….என்றேன்

 “ஆமாம் தாத்தா....இது  டிராயிங்க் தான்....இது  என்னோட  HAIR  டிராய்ங்க்!     என்று சொல்லி விட்டு பலமாக  சிரித்தாள்.


அதை  தமிழில்  சொன்னால்  ஒரு வேளை கொச்சையாக  இருக்கும்  என்று  நினைத்தாளோ!.!!..

அவள்  சொன்ன  பதிலை  என்னால்  மறுக்க முடியவில்லை. 

இதைப் போய்  டிராய்ங்க  வரையணுமா?....என்று இயல்பாக  எழுந்த கேள்வியை  நான் அடக்கிக் கொண்டேன். 

பெரிய  ஓவியர்கள்  இப்படி  ஏதாவது  வரைந்திருந்தால்  இந்தக் கேள்வியை  நான் கேட்க முடியுமா?  என்ற  சிந்தனை எழுந்தது..


 சில கலைஞர்கள்  " fucks ...”  என்று  சொல்லி  என்னை ஈனமாக  பார்த்திருப்பார்கள்.  “  ஏன் இது  உன்  கண்ணைக் குத்துதா?”  என்று  கேட்டிருப்பார்கள்.


இந்தக் குழந்தைக்கு  அப்படிக் கேட்கத் தெரியாது.  ஆனால்  தன் சுதந்திரத்தை ஏன் தாத்தாவால்  பாராட்ட முடியவில்லை...என்று அதன் உள்மனத்தில் ஏதோ உறுத்தல் நேர்ந்திருக்கலாம்.


 நவீன  ஓவிய  வளர்ச்சியில்  Dadaism “  என்று ஒரு  வகை போன நூற்றாண்டின்  ஆரம்பத்தில் சில ஆண்டுகள் அதிர்ச்சிகரமான சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.    கலைகளில்  உன்னதம் சாதாரணம் என்று எதுவுமே கிடையாது.   தனி மனித சுதந்திரத்துடன் இந்த  உலகத்தை வாழ்க்கையை எந்தவித  யதார்த்த ஒழுக்கத்துக்கும் கட்டுப் படாமல் விடுதலையாக  வெளிப் படுத்துவது தான் இந்தக் குழுவின் நோக்கமாக  இருந்தது.  
மலத்தைக் கூட  மனம் விரும்பினால்  ஓவியமாக வரையலாம்!...


அறுபதுகளில் நான் சில மாதங்கள்  மும்பையில் இருந்தேன். {அப்போது  அது  பம்பாய்!}   அங்கே  அப்போது  Progressive Artist Association என்ற பெயரில் மிக முற்போக்கான  ஓவியக் குழு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் மிக முக்கியமான நவீன ஓவியக் கலைஞர்கள்  அப்போது இளைஞர்களாக  ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள்  நானும் K.K. Hebbar அவர்களின் சிபார்சு மூலம்  ஒன்றிரண்டு ஓவிய வகுப்புகளுக்குப் போயிருக்கிறேன்!


    
அப்போது  அவர்கள்  ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள்.  அதில் ஒரு ஓவியம்  எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது...  கவர்ந்தது என்பதை விட மிகவும் உறுத்தியது என்று சொல்ல வேண்டும்.


அது ஒரு பெரிய படமாக மாட்டப் பட்டிருந்தது.  ஆனால் அதில் படம் எதுவும் இல்லை!   கேன்வாஸின் குறுக்கே  கத்தியால் நறுக்கென்று கீறி விடப் பட்டிருந்தது.  அவ்வளவு தான் படம்  அந்தப் படத்தை வரைந்தவர் அல்லது  கீறியவர்  பெயர்  K. H. Ara...அப்போது  ஓரளவு பிரபலமான நவீன ஓவியர்.


நான் அதிர்ச்சியுடன்  அதைப் பார்த்து அருகில் இருந்த  நண்பரிடம் " இது என்ன? “  என்று கேட்டேன்  "  உனக்கு என்ன தோன்றுகிறதோ..அது தான்! “ என்றான் 
"எனக்கு எதுவும் தோன்றவில்லை.யே!!  .ஆனால் மிகவும் வேதனையாக இருக்கிறது.......ஒரு நல்ல  கேன்வாஸை ஏன் இப்படிக் கிழிக்க வேண்டும்.  மனதைக் கீறிய மாதிரி இருக்கிறது,,” ….. என்றேன் .


 “அது  தான்  இது...Heart of an Artist “  [ ஓவியனின் சோகம்]    என்றான் ….


  “Heart of That  Artist”  (அந்த ஓவியனின் சோகம்) "  என்று  மனதுக்குள்  சொல்லிக் கொண்டேன்..


அவசரமாக  நகர்ந்து போய்  அந்தக் கண்காட்சிக் கூடத்தின் இன்னொரு பகுதியில்  மாட்டியிருந்த  பால் கொகானின் தஹிதி  ஓவியங்களைப் பார்க்க சென்றேன்  அவைகள் பிரதி எடுக்கப் பட்ட ஓவியங்கள் தான். இருந்தாலும் மிக நேர்த்தியான  பிரதிகள்...


தஹிதியின் பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த அதீதமான வாழ்க்கையை  அது  உன்னதமான அழகுடன் கனவுலகம் போல்  சித்தரிக்கப் பட்டிருந்தது.


மனித வாழ்க்கையின் சந்தோஷத்துக்காக என்று எண்ணிக் கொண்டு  நாம் இன்று உற்பத்தி செய்து கொண்டிருக்கும் அநேக சாதனங்கள் நமக்குத் தேவையே  இல்லாதவை.  மிகவும் அற்பமானவை  என்று தோன்ற வைக்கும் அந்தப் படம் என்னை நெகிழச் செய்தது. 


நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது பால் கோகினை நினைத்துக் கொண்டேன்.

இந்தப் படங்களை  அவர் வரைந்து கொண்டிருந்த போது அவனுக்கு கைகளில்  விரல்களே  குறைந்து போய் வளைந்து போயிருந்தது. கைகளில் துணி கட்டிக் கொண்டு வரைந்து கொண்டிருந்தான்!!!!


அந்தக் கலைஞனின்  தனிப்பட்ட வேதனையை அந்தப் படங்கள் பிரதி பலிக்கவே இல்லை!!    That was  the  Heart of  a  Great  Artist.



____________________________________________________________________________

(அம்ருதா -  அக்டோபர்2018 )











No comments:

Post a Comment