vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts sorted by relevance for query கட்டையும் கடலும். Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query கட்டையும் கடலும். Sort by date Show all posts

Thursday, June 7, 2012

கட்டையும் கடலும் - வைதீஸ்வரனின் முதல் சிறுகதை






கட்டையும் கடலும்             



[*1961 ல்   எழுத்துவில் வெளியான  என்  முதல் சிறுகதை]
 _________________________________________________________________

வைதீஸ்வரன்






கடற்கரையோரம் ஒரு நீண்ட கட்டை கிடந்ததுநல்ல வைரம் பாய்ந்த  பழங்கட்டை.  பல்லுபோன முகம் போல்  தலைப்பக்கம் குழியும்மேடுமாக ஒடுங்கிஒரு கோணத்தில்  பார்த்தால் பைத்தியம் சிரிப்பதுபோல் இருக்கும். அது மல்லாந்து கிடக்கும் அலட்சியபாவமும்,  நிச்சிந்தையும்  காணும்போது எல்லோருமே பொறாமைப்படுவதுண்டு.  அதுவும்இரவு பகல் ஓயாமல் சதா காலமும்   அல்லாடித் தவிக்கும் அலைக்கூட்டங்களுக்கோ   பொறாமையும்   பொட் டெரிச்சலும்  கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கட்டை மேல்...  தங்களைப் பழித்துக்காட்டற   மாதிரி இப்படி ஒரு கட்டை  இடிச்ச புளியாக சுகமாகப் படுத்துக்கொண்டிருப் பதைப் பார்க்கப்பார்க்க பொறுக்கவில்லை அலைகளுக்கு.


நாலு அலைகள் சேர்ந்துகொண்டு "இந்தக் கிழத்துக்கு என்னடீ வேலை இங்கே“ என்று கிசுகிசுக்கும். இன்னும் நாலு அலைகள் எதற்கோ வந்த மாதிரி கட்டையின் காலைச் சீண்டிவிட்டுப் பின்னோடும். ஒரு சிற்றலை ஓசைப்படாமல் வந்து அடி மண்ணைப்  பறித்துவிட்டு கெக்கலிக்கும் ஒன்று சற்றுத் துணிச்சலாக அதன் முகத்தில் ஒரு வாளித் தண்ணீரை வாரியிறைத்துவிட்டு  “என்னஇன்னும் மயக்கம் தெளியலையா?“    என்று    விசாரித்து விட்டு  வளையும்.


ஆனால் கட்டையோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தது. கோபத்தின் சாயலைக் கூடக் காணோம். ஒரு காதில் புகுந்த தண்ணீரை மறு காதில் வடித்துவிட்டு ஒரே மாதிரி கிடந்தது.

இதையெல்லாம் வெகுநாட்களாக கவனித்துக்கொண்டிருந் தது ஒரு  நீலி. அவள் மேனகை ஜாதி.  அசையாததை   அசைய வைப்பதில் ஒரு ஆவல்.  அடம்.


மெள்ள பாவாடையை சுருட்டி சுருட்டி அடித்துக்கொண்டு அது கட்டையை சுற்றிச் சுற்றி வந்தது. தொட்டும் தொடாத துமாய்   பல முறை வளையவந்தது. பிறகு முகத்தில் பொய்யாக நீரை வடித்துக்கொண்டு,

  கட்டே...ஒனக்கு   என்ன  வேணும்?


கட்டை சிரித்தது. பேசவில்லை.


ஒண்ணுமே பேசாம இருந்தா ரொம்ப பெரிய மனுஷன்னு அர்த்தமோ?”  கொஞ்சலாக இடித்தது .  கட்டை அசைய வில்லை.
   

நீலிக்கு  அவமானம் ஒரு பக்கம்  ஆத்திரம் ஒரு பக்கம்....


சும்மா இப்படி சோம்பேறித்தனமா மல்லாந்து கெடந்தா  பெரிய ஞானீன்னு அர்த் தமோஒன் மனசுலே நீ என்ன  தான் நெனைச்சிண்டிருக்கே?” என்று செவிடனிடம் பேசுவதுபோல் கத்தியது. கட்டை காற்றுக்கு அசைந்த மாதிரி தோன்றியது. அந்தக் காற்றின்  ஓசையோடு இசைந்து மெதுவான  வார்த்தைகள் கட்டையிலிருந்து வெளிப்பட்டது.


நீ.. இப்போ  இங்கே என்ன செய்யறே?”


” நானா....நான்...அலை.......


நீ ஏன் அலையறே?“ குறுக்கிட்டது கட்டை.


நான் ஒண்ணும் அலையலே...ஆடிப் பாடறேன்.. .துள்ளிக் குதிக்கிறேன்.“  ஓடி வெளையாடறேன்......


’ இல்லையே... நீ வெறுமனே  தத்தளிக்கிறே...?


” இல்லே  நான் கலகலன்னு கொழந்தை மாதிரி சிரிக்கி றேன்...


இல்லே...வளவளன்னு கெழவி மாதிரி சலிக்கிறே....


நீலிக்குப் பொல்லாத கோபம் வந்துவிட்டது. அடிபட்ட முள் ளம்பன்றி போல  உச்சஸ்தாயியில் கத்தியது.


ஒனக்கு ரொம்பத் தெரியுமோநீ ஒரு பொணம்..நான் இத்தனை  காலமே உன் தரையை மெழுகிக் கோலம் போடறேனே... அந்த உதவிக்கு நன்றி   சொல்லக்கூட   ஒனக்கு ஈரங் கிடையாது..


 கட்டை அடித்தொண்டையில் சிரித்துக்கொண்டது.


அடி அசடே..நீ பொறந்ததுலேருந்து மணலுக்கு   முதுகு   தேக்கிற  அடிமைத்தொழி லைத்  தவிர  வேறெ என்னத்தை சாதிச்சுட்டதா  நெனைச்சிண்டு இருக்கே! “


கேட்டதும் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஓவென்று  இரைந்து கறுவிக்கொண்டே  ஓடியது நீலி.


இரவுமுழுவதும் கடலில் பேச்சுமூச்சையே காணோம்.அமைதியற்ற  மௌனம். வழக்க மான சளசளப்பும் வம்பும் அடங் கிப் போய் அலைகள் இருட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தன.  ஆத்திரம் அடங்கிவிட்டதாகத்  தெரியவில்லை...பொருமல் மீறும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக “டப் டப்’  என்று  தங்களையே அடித்துக்கொண்டன.


விர்ரென்று அடித்த காற்றில் லேசாக அசைந்தவாறு கிடந் தது கட்டை.  நிலத்தையும்  நீரையும் தேய்த்துக்கொண்டு திக்குத் தெரியாமல் சுழன்றது சூறைக்காற்று.


வானத்தில் முதல் வெளிச்சம் படிந்தவுடன் அலைகள் அத்த னையும் கூடிக்கொண்டு சதிகாரர்கள்போல்  கட்டையை வளைத்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தன. நெஞ்சி லும் முதுகிலும் முகத்திலும் குத்திப் புரட்டின. கட்டை புரண்டது. புரண்டுகொண்டே சிரித்தது.  இல்லை... சிரித்துக்கொண்டே புரண்டது.


ஜோவென்று எக்காளமிட்டுஅலைகள் தாக்கிய சிலகணத்துக் குள் கட்டை அவர்கள்  முதுகில் ஏறிக்கொண்டது.   நர்த்தன மாடியது. ஒவ்வொரு அலையும் முதுகை நெளித் துக் கொண்டு துடித்தன. கட்டை அவற்றை  மீன்குட்டி மாதிரி எகிறி எகிறி தாண்டிப் பாய்ந்து சென்றது.


 “ஐய்யோ....போகாதே...நில்...நில்... என்றது ஓரலை.


கரைக்கு வா...போ கரைக்கு   வா.. என்று தடுத்ததுமறித் தது    ஒரு பேரலை.


வந்து விடு..வந்து...விடு... என்று கெஞ்சியது நீலி.


கட்டை திரும்பவில்லை.அதற்கு திசை தெளிந்துவிட்டது. அடிவானத்தில் தெரிந்த ஜாஜ்வல்யம் அதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது.


சுட்டெரிக்கும் வெளிச்சப் பகலில் அலைகள் பரபரவென்று அங்குமிங்கும் கரைக்கு வந்து கட்டை கிடந்த இடத்தை சுற்றிச்சுற்றி பரபரத்தன. கட்டை கிடந்த பள்ளத்தை தோண்டி தோண்டி  ஓயாமல் வட்டமிட்டன.


எதையோ தொலைத்ததுபோல் ஒரு பதற்றம்,வருத்தம். என்றுமே  நிலையற்ற அந்த ஜன்மங்களுக்கு ஒரு  “தாய்ச்சி”  போலிருந்தது அந்த  பழங்காலத்துக்  கட்டை.  அது இப்போது இல்லை.


அந்த மீளாத இழப்பின் ஆறாத ஓலம் என்றென்றும் நிரந்தர மாகிவிட்டது அலைகளுக்கு.















Tuesday, November 26, 2019



கால் முளைத்த மனம்

( சிறுகதைத் தொகுப்பு  : 
ஆசிரியர் எஸ். வைதீஸ்வரன் )

(விருட்சம் வெளியீடு)

நூல் விமர்சனம்  - " சிட்டி"  ( P. G. சுந்தரராஜன் )




இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்கள் பல மாறுதல்களுக்கு உட்பட்டுப் புத்துருவம் பெற்றிருக்கின்றன. புதுக்கவிதையும், நாவலில் நனவோடை உத்தி கையாளப்படுவதும் இவ்வகையில் ஒரு வளர்ச்சி. இத்தகைய மாறுதல்களுக்கு சிறுகதை உட்பட்டதாக அதிகமாகத் தெரியவில்லை. சிறுகதை என்பதை மேல் நாட்டில், அமெரிக்காவில்தான் அதிகமாகக் கையாண்டார்கள். ஆகவே, இதை அமெரிக்க தேசிய இலக்கியம் என்றும் சொல்வதுண்டு. ஆங்கில இலக்கிய வரலாற்றில் சிறுகதைக்குத் தனி இடம் கொடுக்கப்பட்டதில்லை. வரலாற்று நூல்களில் கவிதை, உரைநடை, புனைக்கதை என்ற பகுதிகளைக் காணலாம். ஆனால், சிறுகதைக்கென தனி அத்தியாயத்தைப் பார்க்க முடியாது. புனைக்கதையின் ஒரு அம்சமாகவே அந்த வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பாட்டியிடம் கதை கேட்பது, புராண பிரவசனங்கள் கேட்பது போன்ற பழக்கம் வேரூன்றிய  தமிழ் பண்பாட்டில் சிறுகதை ஒரு தனியிடத்தைப் பிடித்ததில் வியப்பில்லை. இங்கும், மேல்நாட்டிலும் இந்த வடிவத்தில் அதிகமான மாறுதல்கள் குறிப்பிடும் படியான விதத்தில் ஏற்பட்டுவிடவில்லை. சிறுகதையை ஒரு முக்கிய வடிவமாகக் கையாண்ட மணிக்கொடி எழுத்தாளர்களிடையேக் கூட, அது ஒரு நடப்பியல் ரீதியில் தான் அதிகமாகப் புலப்பட்டது. பொருளடக்கத்தில் சோதனை செய்த மௌனி தம்முடைய முயற்சிகளில் வெற்றியடைந்ததாக சொல்வதற்கில்லை. மொழியின் நெளிவு சுளிவுகளை லாவகமாகக் கையாண்ட லா. ச. ரா. நடையில் மட்டுமே மாறுதல்களை உண்டாக்கினார். மற்றபடி இதைப் பல படைப்பாளிகள் சோதனையாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறுகதைக்கென பத்திரிகைகளும், கணிசமான சன்மானமும், பாராட்டுதலும் அடிக்கடி நிகழும் தமிழ் இலக்கிய உலகில், சிறுகதை இயல்பான வடிவத்துடன்தான் இன்னும் நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதில் சோதனை முயற்சிகளும். நவீனப் போக்குகளும் ஆங்காங்கே தென்பட்டாலும், வாசகர்களின் கவனத்தை  அதிகமாகப் பெற்றதாகத் தெரியவில்லை. 

வைத்தீஸ்வரனின் "கால் முளைத்த மனம்" என்ற சிறுகதைத் தொகுப்பு இவ்வகையில் மிகவும் வித்தியாசமானது. இலக்கிய விமர்சனத்தில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது. இந்த ஆசிரியர் ஒரு ஓவியரும் என்பதால்தானோ என்னவோ, கதைகளில் ஓவிய அம்சங்களான சர்ரியலிசம் (surrealism), impressionism , symbolism போன்ற உத்திகள் மிகுந்து கதைகளை புதுமையாகக் காட்டுகின்றன. கதைகளின் உள்ளடக்கம் நடப்பியல் பாணியிலான சம்பவங்கள்தான் என்றாலும், அவைகளில் பொதிந்திருக்கும் உளவியல் நோக்கு, கலையுணர்வு, வாசகர் எதிர்பாராத , ஆனால் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஆகியன சில கதைகளில் மேஜிக்கல் ரியலிசம் வரை இட்டுச்செல்கின்றன.

தலைப்புக்கதை ஒரு ஓவியக்கலப்படம் (collage). காலை முதல் இரவு வரை சாதாரணமாக  மனித வாழ்க்கையில் நிகழும் காட்சிகள் கோர்த்துக் கொடுக்கப்பட்டிருன்றன. அந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் தொனிக்கும் ஓசைகளைக் கூடக் கேட்கும் பிரமை ஏற்படுகிறது.

"கட்டையும் கடலும்", "மலைகள்" இரண்டும் கவிதையில் நனைத்தெடுத்த உரைச்சித்திரங்கள். ஒன்றில், வெறும் கட்டை, கடல் அலைகளின் உயிர்த்துடிப்பு வாசகரைக் கவர்கிறது.   "வார்த்தை"  கதையில் பல எண்ணங்களால் அலைக்கழிக்கப்டும் சிறுவனின் ஆத்திரத்தை உணர முடிகிறது. சொற்களின் பொருள் தெரியாவிட்டாலும் பழக்கத்தில் அவைகளை உபயோகிப்பதன் பின்னணியை அந்தச் சிறுவன் உணர்ந்திருப்பது இயல்பாகவே இருக்கிறது. " சைக்கிள் சாமி" கதையில் சாமியின் செயல்கள் இறுதியில் ஒரு இயல்பான முடிவைத்தான் காண்பிக்கின்றன என்றாலும், அந்த முடிவை ஆசிரியர் பயன்படுத்தும் உத்தியில் புகழ் பெற்ற அமெரிக்க  ஆசிரியர் ஓ. ஹென்றியின் சாயல் புலப்படுகிறது. "ஒரு பயணத்தின் சில மின்னல்கள்"  இதே வகையில் எதிர்பாராத முடிவை இயல்பாக உணர்த்தும் சாதனை. " சிருஷ்டி " யில் அப்பாவின் சிற்பத்திறமையைப் பற்றி மேலான கருத்து கொள்ளாத மகனின் அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது.

"கனவில் கனவு" மிகவும் உன்னிப்பாக, தேர்ந்த கலை உணர்வின் விளைவாக படைக்கப்பட்ட ஒரு impressionistic  (futuristic  என்றுக்கூடச் சொல்லலாம்) ஓவியம். "காக்கைக் கதை" ஒரு புதுமையான நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டாலும் அங்கத உணர்வுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

"ஹே பரோடா" சாதாரண நிகழ்ச்சி ஒன்றின் ரசமான அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யாருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான். "ஒரு துளியில்" நேரும் நேசமின்மையும், அவசரமும் , சரியாக செயல்பட முடியாத நிலையும் நடப்பியல் வகைதான். "ஜன்னல் இரண்டு" சிறுகதை வடிவத்தை மீறிய குறுநாவல் வகை. இந்தக் கதையில் ரங்கனின் அனாவசிய உணர்ச்சிகளும், தலையீடும் சரியான விளைவைத் தருகின்றன. மொத்தத்தில் இந்தக் கதைகள் ஒரு திட்டமிட்ட இலக்கிய சோதனையின் ஆரம்பக்கட்டமாகவே தொனிக்கின்றன. சில, நல்ல வெற்றியையும் பெற்றிருக்கின்றன. சிறுகதை வளர்ச்சியில் இவைகளை ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். 

________________________________________________

மேற்கண்ட கட்டுரையை எழுதிய ஆசிரியர் பற்றி:

" சிட்டி " ( பெரியகுளம் கோவிந்தஸ்வாமி சுந்தரராஜன் ) (20 April 1910 - 23 June 2006)  -  " மணிக்கொடி"  இதழ் காலத்து முன்னோடி தமிழ் எழுத்தாளர். மேற்கண்ட புத்தக விமர்சனத்தை எழுதியபொழுது, அவருக்கு சுமார் 88 வயது. இசைக் கலைஞர் மதுரை மணியின் நெருங்கிய நண்பர். எழுத்தாளர் தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய " நடந்தாய் வாழி, காவிரி " என்ற புத்தகம் குறிப்பிடத் தகுந்தது ( " “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” )