vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, March 25, 2012

வைதீஸ்வரன் கவிதைகள்:1. குழுக்கள் 2. தமிழ் பாடம்

வைதீஸ்வரன் கவிதைகள்:


1. குழுக்கள்

இரண்டையுமே
ஒன்றுபோல நேசித்து வந்தேன்
ஏதோ.....
ஒரு மனிதனுக்கு அது தான்
உயர்ந்த பக்குவம் போல

இரண்டுமே என்னை
ஏகமாகப் பாராட்டின
ஏதோ....
தங்களை மட்டும் நேசிப்பதாக
தவறாக எண்ணிக்கொண்டு
உண்மை ஒருநாள்
பொதுவாக விடிந்தவுடன்
இரண்டுமே என்னை
தூக்கி எறிந்தன தெருவில்
ஒற்றுமையாக!
ஏதோ.........
தங்கள் நேசத்துக்கு நான்
தகுதியற்றவன் என்பது போல
தெருமண் ஒட்டிய உடம்போடு
ஊன்றி எழுந்தபோது தான்
நியாயம் எனக்கும் உறைத்தது
ஊரோடு இனி ஒட்டி வாழவேண்டுமென்று
ஒரு ஆரம்பமாக
அருகில் நின்ற நண்பனை
அந்தரங்கமாக வெறுக்கத் தொடங்கினேன்
முகத்தின் புன்சிரிப்பு மாறாமல்.

0
2. தமிழ் பாடம்

வீரமாக தமிழ் நடத்த வேணுமென்று
வாத்தியார் விரும்பினார்
அந்த நாளில் அது பரவலமான மோகம்
நான் ஆறாம் வகுப்பென்று ஞாபகம்
வீரம் விளங்காத வயது
பயம் அறியாத கன்று
அரையடி உயர மேடையில் வாத்தியார்
சிகை பறக்கும் வேகமும்
நாற்றிசையும் தெறிக்கும் ஈர வசனமும்
கரகரத்த குரலும் விரிந்த நாசியும்.....
எனக்கு 'பக்கென்று' சிரிப்பு
பொத்துக்கொண்டது
அவர் அதட்டினாலும்அடங்கவில்லை
மறுகணம்
மேடைவீரம் தமிழ்ப்புயலாய்
கோலோடு குதித்தது என்மேல்
நய்யப் புடைத்தார் நாச்சிமுத்து வாத்தியார்
அடியோ பலம்
ஆனால் ஏனோ 'அய்யோ அய்யோ'வென்று கத்தவில்லை
பேச்சைப்போல் கோபம்
பாசாங்காக இல்லை போலும்!
ஒழுங்கைத்தான்
உதைத்து சொல்லியது



0

No comments:

Post a Comment