vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, December 17, 2018




பஞ்சான பாறாங்கல்





கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரே கும்மிருட்டு. வெளி முழுதும் என்னை சுற்றி இருட்டு அப்பிக் கிடந்தது. ஏதோ பாதாள குகைக்குள் நான் சிக்கிக் கொண்டது போல் இருட்டுக்கு இரையாகிக் கிடந்த உயிராக உட்கார்ந்திருந்தேன். சில வினாடிகள் கூட சில யுகமாகத் தெரிந்த உணர்வு. இந்த குருட்டுச் சிறையிலிருந்து தப்பிக்க முயலும் முயற்சியையும் கை விட்டேன். அர்த்தமற்றுப் போன என் விழிகளை அகல விழித்தவாறு அமைதியை என் போர்வையாக்கி அமர்ந்திருந்தேன். உலகம் நிச்சயமாக சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. எல்லாமே எல்லாக் கணமும் மாறிக் கொண்டே தான் இருந்தாக வேண்டும்.


என் கண்களின் மேல் திரையை மெல்ல அசைத்தது போல் ஒரு அசைவு. இருட்டு இப்போது அத்தனை அடர்த்தியாக இல்லையோ! ஏதோ ஒரு சின்ன மென்மையான மாற்றம். என்னை சுற்றி இருந்த அறைச் சுவர்கள் மிதக்கும் துணிகளைப் போல் லேசான ஒரு பிரமை. மூலையில் இருந்த நாற்காலியில் இரண்டு கால்கள் மெதுவாக தோற்றம். உயரே மூடிய ஜன்னல் துளையிலிருந்து ஆடும் அகல் ஒளி போல் ஒரு படரும் வெளிச்சம் கீழே பார்த்தேன். தரையின் மொசெய்க் கோடுகள் தானாக தெரிய ஆரம்பித்தன. இப்போது கிழே வைத்திருந்த கூஜாவும் கிண்ணமும் என் அம்மாவின் சின்ன உருவப் படமும் ….நிலைக் கதவும் செல்லும் வழியும் இப்போது என் கை ரேகையும் படுக்கையில் இரைந்திருந்த புத்தகங்களும் இப்போது எல்லாமே எப்போதும் போல் தெரிய ஆரம்பித்து விட்டன.
அந்த இருண்ட பாறாங்கல் என்னவாயிற்று? யார் அதை உடைத்து பஞ்சாக்கி ஒன்றுமில்லாமலாக்கி அப்புறப் படுத்தினார்கள்? அமைதியாய் இருந்ததைத் தவிர என்னால் என்ன செய்ய முடிந்தது? ஒரு வேளை நம்மை சுற்றி இறுக்கும் இருட்டு விலக இது தான் நமக்கு தரப்பட்ட ஒரே மனவிழிப்போ?


வாழ்க்கையில் துன்பங்களும் அப்படிப்பட்ட இருட்டு தான்..என்று தோன்றியது. . தானாக நம்மை சூழ்ந்து கொண்டு தானாக நம்மை விட்டு விலகக் கூடியது தான்.என்று மனம் உணர ஆரம்பித்தது.


அமைதியாக விழிப்புடன் சலனமற்று சும்மா இருப்பது தான் அதற்கு தீர்வு என்று எனக்குள் ஒரு வெளிச்சம் நேர்ந்ததை இன்று விடியலில் கண்டுணர்ந்தேன்.. எல்லா இருட்டுக்குள்ளும் நிச்சயம் ஏதோ ஒரு சூரியன் மறைந்து கொண்டிருக்கிறான்!


கவிஞர்   வைதீஸ்வரன்,
18 டிஸம்பர் 2018   


__________________________________________________________________________________________

Thursday, December 13, 2018



முரளீதரனின் கதை சொல்லும் 

உன்னத ஓவியங்கள்






பல ஆண்டுகளுக்குப் பிறகு இளைய நண்பர் ஓவியர் முரளீதரன் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்கிறேன், சந்தோஷமாக இருந்தது. பழைய நினைவுகளை மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தோம். அவருடைய அருமையான ஓவியக் கண்காட்சி இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நிறைய வளர்ந்திருக்கிறார். அவர் ஓவியங்கள் விசேஷ அனுபவத்தைக் தரக் கூடியவை.

புறக்கண்கள் பார்க்கும் காட்சியை அச்சு அசலாக வரைபவன் திறமையை பாராட்டினாலும் அவன் மகா கலைஞனல்ல!

சிறந்த ஓவியங்கள் காலத்தின் நுண்ணுர்வை மீட்டிப் பார்க்க வேண்டும். முரளியின் ஓவியங்கள் அப்படிப்பட்டவை.

. நீங்கள் செவிகளால் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது ஒரு Zen கவிதை!! . முரளியின் ஓவியங்கள் உங்கள் காதிலும் ஒலிக்கக் கூடும்.!

தொன்மையான வரலாற்று ஞாபகங்கள் நினைவில் நிழலாடக் கூடும்.

அறையிருட்டில் பாட்டியின் அரவணைப்பில் கேட்ட புராணக் கதைகளின் மாயாஜாலங்களின் சிலிர்ப்பு உங்கள் மனதில் நிகழக் கூடும்.. அதே சமயம் ஓவியங்கள் தற்கால வெளிப்படையான சகஜத் தன்மை மாறாமல் இருப்பதைக் கண்டறிந்து வியக்கக் கூடும்.


முரளி தனக்குள் தோய்ந்து கண்டறிந்த ஆழ்மன காட்சி அனுபவத்தை நேர்மையுடன் துணிச்சலுடன் நேர்த்தியான ஓவியங்களாக படைத்திருக்கிறார்.. மிகவும் வித்யாசமான படைப்புகள். மேலும் சிறப்பான அங்கீகாரங்களைப் பெற நண்பர் முரளிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


- கவிஞர்   வைதீஸ்வரன்








_________________________________________


Thursday, November 22, 2018



                 ஐந்து கவிதைகள் 


                 - வைதீஸ்வரன் - 






வினை

பூக்கடை மார்க்கட்டுக்குள்
பல நீளமாய்க் கை நீட்டும்
வண்ணத் தோரண வாசனைகள்...
ஆவலாதியுடன்..........
அடியில் நயவஞ்சகம் போல்
மெல்லக் கடக்கும்

சாக்கடை நீர்.

_________________________________________________________________________


----------

அவன்
சந்தோஷமாக நின்று
பேசிக் கொண்டிருந்தான்....
கால் கட்டை விரலுக்கடியில்
துடித்துக் கொண்டிருந்த சிற்றெரும்பை
அறியாதவனாய்!.........


_____________________________________________________________________________________


அன்புக்கும் வெளி உண்டு


….....எழுந்தவுடன்....
அதுவும் பறக்க ஆரம்பித்து விட்டது.
இதோ நானும் எழுந்து விட்டேன்..”
என்றது போல!
சின்ன வண்ணப் பூச்சி.
Good Morning “ என்றேன்....
ரொம்பத் தெரிந்தவன் போல்.
சிறகால் சிரிக்கிறது.
நகர நகர எனக்கு ஆசைகாட்டி
காற்றில் நடைபாவாடை விரிக்கிறது!

அன்பு மீறும் போது
என் கைகள் நீண்டு போகுமென்று
அதற்கு எப்படியோ தெரிகிறது...

இடைவெளியை எப்போதும்
குறைத்துக் கொள்வதில்லை!

_________________________________________________________________________



எல்லோரும் ஓரினம்

வெள்ளை முகிலெனக்
குட்டிப் பூனை.....
மூன்று நாள் முட்டைக் கண்கள்
வயிற்றருகில் வளைத்துப்
பாசமுடன் நாத்தடவும்
பழுப்புத் தாய்
ஆவலால் முகிலைத்
தொட்டுத் தடவ நீளும்
என் விரலை சீறிப் பிறாண்டி
விரட்டுது எப்போதும்....
காவல் படைபோல் அப்பூனை

பார்த்து ஏங்குவது தவிர
ஸ்பரிஸம் சாத்தியமில்லை எனக்கு
நாட்கள் கடந்து போகிறது

மதில் மேல் இன்று
பூனைகள் …..... தாயும்....மகளுமா!!......

திடீரென்று பாய்ந்து சிறுசைக்
கடித்து துரத்துகிறது
பெரிசு.
நிழலைக் கூட வெறுக்கும்
கொதிப்புடன்!!
இப்படி துவேஷமா தாய்க்குள்!

விவரம் தெரிந்த பிறகு
விரட்டி விடும் ஜாதிகளில்
இந்தப் பூனைகளையும்
சேர்த்துக் கொள்ளலாம். போல!
_________________________________________________________________________




பரிவர்த்தனை


நண்பனை பார்த்த போது
நண்பனை பார்க்கவில்லை....

அவனிடமிருந்து சிரிப்பை
வாங்கிக் கொள்ளத் தான் ஆதங்கப்பட்டேன்.

அவன் குழந்தையைக் கொடுத்தான்.
நான் அழுகையை வாங்கிக் கொண்டேன்....

அரைக் கணம் அவஸ்தைக்குப் பின்..
நான் திரும்பக் கொடுத்தேன்.

அவன் சிரிப்பை வாங்கிக் கொண்டான்!

_________________________________________________________________________