vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, October 4, 2020

எப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)

 



 எப்போதோ  எழுந்த விசாரங்கள்  

(1962  டைரிக் குறிப்பிலிருந்து)

வைதீஸ்வரன் -



                                   

நான்  ஒரு  குழந்தையிடம்  கேட்டேன் :  ”நீ  ஏன்  அப்பாவை  நேசிக்கிறாய்?”  என்று.

எங்க அப்பா  தான் எனக்கு சட்டை பொம்மையெல்லாம் வாங்கித்     தராங்க!  அதனால  தான்…”  என்றது

"நீ ஏன் அம்மாவை  நேசிக்கிறாய்?"  என்று கேட்டேன்.

எங்க அம்மா தான் எனக்கு  சாதம் பாலு  எல்லாம் தராங்க!”  என்றது.

இதை விட  நேரான  எளிமையான யதார்த்தமான  பதிலை    பெரியவர்களால் கூட  சொல்ல முடியாது.  இதே கேள்வியை  பெரியவர்களிடம் கேட்டிருந்தால்  பொய் சொல்லி யிருப்பார்கள்அன்பு  பாசம்  நேசம் என்றல்லாம் வார்த்தைகளால்  விளையாடி யிருப்பார்கள்  ஆனால்  உண்மை  குழந்தை  சொன்ன  பதிலில் தான்  நிறைய  இருக்கிறது

இதே  விஷயத்தை  இன்னும் சற்றுத் தொடர்ந்து  பார்ப்போம்.  ஒரு  குழந்தைக்கு அப்பா இல்லை என்று வைத்துக் கொள்வோம்அந்தக்  குழந்தைக்கும் சட்டை பொம்மை எல்லாம் கிடைத்து விடுகிறது.   என்றாலும்

எனக்கு அப்பா இல்லையாம்மா?   எனக்கு  அப்பா வேண்டும்!“  என்று கேட்கும்.

அப்பா  இருக்கிற  குழந்தைக்கு  பொம்மை சட்டை   கிடைக்காவிட்டால் அதை  வாங்கித் தாவென்று  அப்பாவிடம்  அழும்.

ஆக குழந்தைக்கு  அப்பாவும் வேண்டியிருக்கிறது..  பொம்மையும்   வேண்டியிருக்கிறது. !!!

பொம்மையும் வேண்டும் அதை வாங்கித் தர அப்பாவும் வேண்டும்!  பொம்மை வாங்கித் தந்த  நற்பணிக்காக   அப்பாவை  நேசிக்கவும் வேண்டும்

ஆக,  குழந்தையின் அன்பு  அப்பாவிடம் மட்டுமில்லை.   பொம்மையிடம் மட்டுமில்லை.  அப்பா –பொம்மை   என்ற  இரண்டு  வளையங்களுக்கு நடுவே ஏதோ  ஒரு  இடத்தில் பதிந்து  போயிருக்கிறது.

அந்த  அன்பு  எங்கே  இருக்கிறது?  ஏன் ஏற்பட்டது?

அந்த இடத்தில் தான் மனிதப் பிராணிகளின் இயல்பான  தொன்மையான தற்காப்பு நிலை  தெரிய வருகிறது.

டார்வின் ஆய்ந்தறிந்த  முடிவின் உண்மையை மேற்கூறிய  குழந்தையின் இயல்பிலிருந்து ஊகிக்க முடியும்.

தன்னைப் பாது காத்துக் கொள்ளவும் தன்னை  துன்பங்களிலிருந்தும் அபாயங்களிலிருந்தும் மீட்கவும்  தனக்கு சௌகரிங்களை  உண்டாக்கித் தரவும்  ஒரு சாதனத்தை  தேடுகிறது குழந்தை

அந்த சாதனமே  முடிவில்  அப்பாவாக  முடிகிறது.  அதுவே  உயிரினங்களின் இடையறாத தொடர்ச்சிக்கு  அணு சக்தியாக  அமைகிறது.

 

                                                   **************

                     

எப்படித்  துதிப்பேன்?

                  

கோவில் சன்னிதியில் நின்று கொண்டு  பக்தர்கள் தெய்வத்தை  சேவிக்கும் போது நான் அவர்களையே பார்த்துக் கொண்டு  நின்றேன் .  அந்த பக்த கோடிகளின் முகங்களைப் பார்வையிட்டேன். அத்தனை  முகங்களிலும் ஏதோ  இனமறியாத சோகம்  கவ்விக்  கொண்டிருந்தது.  ஏன் என்று விளங்கவில்லை

தெய்வத்தைத் தொழும்போது  மனிதன் ஏன்  வருத்தமாக  தோன்ற  வேண்டும்?

வருத்தமாக  துன்பத்தில்  உழலுவது போல் கடவுளிடமே  பாசாங்கு  செய்து  விட்டு நிறைய  புண்ணியங்களை  அள்ளிக் கொள்ளலாம்  என்று  அசட்டு சாதுர்யமா?

அல்லதுஎதற்காக  கோவிலுக்கு  வந்தோம்எதற்காக தொழுகின்றோம் ?  என்ற அடிப்படைக் கேள்விகளை –பக்தியினாலோ  அறியாமையினாலோ –சரியாகப் புரிந்து  கொள்ளாத  குற்றத்தால்  வழி தெரியாத  குருடன்  நிலையில் அலை மோதும் குழப்பத்தினாலா??

அல்லது -  நான் எதை  வேண்டுவது?  எனக்கு என்ன வேண்டும்நான் வேண்டினால் கிடைத்து விடுமாஅது கிடைத்து விட்டால்  எனக்கு  வேறெதுவும்  வேண்டாமா?  என்ற  தீராத  சந்தேகங்கள்  க்ஷண  நேரத்தில்  புற்றீசல்  மாதிரி  கிளம்பி மடிந்த அயர்வு தான்  முகத்தில்  பிரதி பலிக்கிறதா?

அல்லது -  நான்  செய்வது  பாபமா?  புண்ணியமா?  பாபம் எதுபுண்ணியம் எது?  நான் இதைச் செய்த  காரணத்திற்காகத் தான்  இதாக  ஆனேனா?  அப்படியானால்  எதாக  ஆவதற்கு  எதைச்  செய்ய வேண்டும்  என்கிற  தொன்மையான மனக்    கிலேசங்களுக்கு  தீர்மானமான விடை  தெரிந்து கொள்ள  முடியாத ஜன்மத்தை  எடுத்த மனத் தாபமா?.....

இவ்வளவு கேள்விகளும் எழாத  மன நிலை  நமக்குக்  கிட்டி விட்டால்நாம் கோவில் சன்னிதியில் மலர மலர  சிரிக்க முடியும்கோலாட்டம்  ஆட முடியும்கவிதைகளைப் பொழிய முடியும்கடவுளை  பயமில்லாமல் ஒரு  சக நண்பனைப் போல்  பார்த்து  சம்பாஷிக்க முடியும்

இப்போது  என்னுடைய  பிராத்தனை  -  அத்தகைய மனநிலை  கிட்ட வேண்டும்  என்பது  தான்!!


(நன்றி : அம்ருதா  அக்டோபர் 2020 )    

____________________________________________________________________________________