vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, May 2, 2019




நாரணோ ஜெயராமன்  கவிதைகள்


- வைதீஸ்வரன் -




(நூல் முன்னுரை)


பிறந்த கணம் தான் நம் வாழ்க்கையின் மிக சத்தியமான தருணமாக இருக்க வேண்டும். காலம் நகர நகர நம் மேல் தோல் மாதிரி பல அமானுஷ்யமான திரைகள் வளர்ந்து வளர்ந்து நம் சுயத்தை மறைத்துக் கொண்டே நம் வயதை வளர்த்துகின்றன. அல்லது பௌதீகப் படுத்துகின்றன.

பிறகு புத்தி சாலித்தனத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு பல முன்னோடி சிந்தனைகளை நமக்குள் நிரப்பிக் கொண்டு மீண்டும் நாம் நம் சுயத்தை தோண்டியெடுக்க ஆர்வம் கொள்ளுகிறோம். அந்த ஆர்வம் தீராத ஏக்கமாக தொன்மையான தாகமாக விசாரமாக நெக்குருகி தேம்பும் துக்கமாக விரக்தியாக தவமாக இப்படி பலவித அவஸ்தைகளை நாம் தீவிரமாக அனுபவிப்பதே நம் வாழ்க்கையாக மாறி விடுகிறது.

இப்படி ஏன் ஒரு தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தத்துக்கு நாம் தள்ளப் படுகிறோம்? புற வாழ்க்கை திடீரென்று ஏன் காரணமில்லாமல் ஒவ்வாமை ஆகி விடுகிறது. ? காலம் நம்மை ஏன் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவே ஒரு உணர்வு நமக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது? பார்ப்பதெல்லாம் முடிவான சத்தியம் இல்லையென்பதும் சத்தியத்தைக் கண்டுணருவது தான் நம் ஜீவித நோக்கம் என்பதும் நமக்குள் உந்துதல் நேருவதற்கு பல பிரத்யட்சக் காரணங்களும் நமக்கு தோன்றுகின்றன.

ஒரு வாகனத்தை ஒருவன் வாழ்க்கை முழுவதும் ஓயாமல் துடைத்து துடைத்து பிரித்து மாட்டிக் கொண்டே இருப்பது தான் அவனுக்கு விதிக்கப்பட்ட காரியமா? அந்த வாகனத்தின் சிருஷ்டிப் பயனை அழகான ஓட்டத்தை மேடுகளிலும் பள்ளங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் கடக்கும் அதன் அற்புதமான சுகமான பாய்ச்சலை என்றாவது அனுபவம் கொள்வானா?

Enlightenment என்பது ஒரு மாயமான் ...வெறும் வார்த்தை. விரலை விரலால் பிடிக்கவே முடியாது. என்று ஒரு கருத்தும் நம்மை பல சமயம் சமாதானப் படுத்துகிறது.


*******





திரு நாரணோ ஜெயராமனின் அன்றாடம் மனக் காகிதத்தில் தனக்கு மட்டும் எழுதி வைத்துக் கொண்ட மனக்குறிப்புகள் போன்ற வீர்யமான சின்ன சின்ன கவிதை வரிகள் என்னை மேற்கண்ட எண்ணப் பான்மைக்கு தூண்டி விட்டன.

இப்போது எழுபதைத் தொட்டுக் கொண்டிருக்கும் திரு நாரணோ ஜெயராமன் எழுபதுகளில் புதுக் கவிதையின் இளம் பிராயத்திலேயே இத்தைகைய தனித்தன்மை வாய்ந்த குறுங்கவிதைகளை எழுதி கவனம் பெற்றவர். கசடதபற,  ஞானரதம் போன்ற சிறந்த சிறு பத்திரிகைகளில் பிரசுரம் கண்டவர்.

பிரஞ்சு கவிஞன் ARTHUR RIMBAUD மாதிரி ஏழெட்டு வருடங்களுக்குள்ளாகவே தனக்குள் சொல்ல நினைத்த காத்திரமான வரிகளை சொல்லி விட்டு மௌனத்தில் அமைதியில் ஆழ்ந்து போனவர்.

இவர் படைப்புகள் எல்லாமே கவிதைகள் என்று பொதுவாக சொல்லப்படும் சில கவர்ச்சிகரமான அம்சங்களைத் தாண்டி சீரிய தனிமையில் நுண்மையாக செதுக்கப்பட்ட  உள்ளோசைகள்.

அநேகமாக எல்லா வரிகளுமே மிக எளிமையாக ஆதங்கமாக வேதாந்தமாக புறவாழ்க்கையின் அவசங்களால் தன்னியல்பாக எழும்பிய கேள்விகள். .
வாழ்வைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் அதன் மர்மங்களை புரிந்து கொள்ளத் தவிக்கும் ஏக்கங்களுடன் எழுப்பப் படும் கேள்விகள்..... விசாரங்கள்... சமாதானங்கள்

"வாழ்வை ஒரு பொறியில் கண்டு துன்புறுகிறேன்
ஒன்றவும் முடியாமல் வேறாய் விலகவும் முடியாமல்..” என்கிறார்
.
புற வாழ்க்கையின் அநிச்சயங்களால் ஆழமற்ற அலைக்கழிப்புகளால் அமைதி ஒரு கானல் நீராய் நம்மை அலைக்கழிக்கும் நிகழ்வுகளால் ஒரு மிக நுண்மையான கள்ளமற்ற மனம் தீர்வுக்காக அலையும் தீர்வற்ற போராட்டம் தான் இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை கவிதைகளாக இவருக்கு சொல்லத் தூண்டுகின்றன.

கிருஷ்ணபரமாத்மா, வேதங்கள், தத்துவ ஞானிகள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,  மார்ஸல் ப்ரௌஸ்ட்,  கேன்ட், இவர்கள் யாருமே இவருக்கு விடையளிப்பதில்லை.
"நான் நானாக இருத்தல் என்று ஒன்று உண்டா?" என்று கேட்டுக் கொள்கிறார்.

கண்ணாடித் தரையில் விழுந்த பாம்பாக இவருடைய வாழ்க்கையின் வியர்த்தமான அசைவுகள் மீண்டும் மீண்டும் விடுதலையை கனவு காண்கின்றன

சுய வீர்யத்துடன் சார்பில்லாமல் இவர் தேடும் வாழ்க்கையின் புதிர்களுக்கு அங்கங்கே அவ்வப்போது மனித வாழ்க்கையை யோகமாக அமானுஷ்யமான அருளுக்குப் பாத்திரமாகும் யோக்யதையுடன் புனித விரதங்களுடன் அணுக வேண்டுமென்ற இந்து மத ஆச்சார்யர்களின்  போதனைகளும் இவருக்கு சில புரிதல்களில் ஒரு கலங்கரை விளக்கமாக தெரிகிறது.

இவருடைய கேள்விகள் பிரபஞ்ச பூர்வமானவை. நிரந்தரமானவை. எப்போதும் புதுமை குறையாததாக வாசிக்கும் சீரிய உள்ளத்தை எப்போதும் பல வினோதமான விபரீதமான திசைகளில் சிந்திக்கத் தூண்டுபவை. தட்சிணாமூர்த்தியின் மௌனம் போல.

நான் எனப் படுகிற என்னையும் சேர்த்து
எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகக்
கழட்டிப் பிரித்துப் பார்த்து விட்டேன் ….
என்னவோ இருக்கிறோம்...என்னவோ செய்கிறோம்..
எதுவும் சாத்தியமில்லை!
மொத்தத்தில் ஒன்றுமில்லை போங்கோ!!"  ….என்கிறார்


*******

ஆனால் இந்தக் கவிதை ஆழமானது.. அவ்வளவு எளிமையானதல்ல!.

உயிரோடு மனிதனை அறுவை சிகிச்சை செய்து திறந்து பார்த்து உயிர் இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடிக்க முயற்சிக்கும் பிரும்மாண்டமான அபத்தத்தை [ colossal absurdity } நுண்மையாக சுட்டிக் காட்டுகிறது.

எப்போதும் வாசிக்கக் கூடிய பிரபஞ்சக் கவிதைகளை எழுதிய நாரணோ ஜெயராமன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

                                                                                             *******

நாரணோ ஜெயராமனின் கவிதைகள் சில இதோ: 

பிளவு

கடந்து சென்ற பின்
வீசிப் பரவிய வாசனைக்கு
அழகில்லை; அழகின்மையில்லை
கருப்பில்லை; சிவப்பில்லை
ஒல்லியில்லை; பருமன் இல்லை
குட்டையில்லை; நெட்டையில்லை
பகுத்தலின் எதிரெதிர் இரட்டை
எதன் ஆக்கம்?

******

முடிவு

இதென்ன கூத்து?
அவனவன்
அவனவனுக்குப் பிடித்ததை
உசத்தியென்று
சிண்டு முடிந்து; சிண்டைப் பிய்த்து
நரகமாக்குகிறார்கள்.
இதொன்றும் சரிப் படாது.
என்றென்றைக்கும்
எழுதப் படாத சிலேட்டுப் பலகையாக
திறந்து வைத்திருக்கிறேன்
வாழ்க்கைக்கு என்னை!

******

உருவமற

எனக்குப் பின்னால்
படுக்க வந்த பேரன்
என் போர்வையை விலக்கி
நீங்கள் இருக்கிறதே தெரியலை" என
கண்ணாடியில் மாயபிம்பங்கள்.        

_______________________________________________________________________________________



No comments:

Post a Comment