vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, February 16, 2017

உள் பயணம்

உள் பயணம்
----------------
வைதீஸ்வரன்


இப்போதெல்லாம்  பயணம் போவதென்றால்  பயமாக
இருக்கிறது.  வெளியே காற்றாட நடமாடுவது என்பது கனவில்
தான் சாத்தியமாகும் போலிருக்கிறது.  வெளியே  நடப்பதற்கு
தெருவும் இல்லை காற்றும் இல்லை.

வீட்டிற்குள்ளிருந்து  வெளியே ஒரு வாகனத்துக்குள் பதுங்கிக்
கொண்டு  மீண்டும் போகிற இடத்துக்குள் பதுங்கிக் கொள்ள வேண்டிய பரிதாப நிலை இன்றைய சராசரி மனிதனுக்கு நேர்ந்து
விட்டது .


’காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்று
சொல்லமுடிந்த ஒரு  இறந்த காலம் இங்கே இறந்தே  விட்டது.

இன்று கவிதைகள் அவ்வளவு சுலபமாக  வெளி நடையில்
கிடைப்பதில்லை.. நாராசமான வாகன ஒலிகளும்  சுவற்றோடு
உயிருக்கு பயந்து நகரும் பாதசாரிகளும்  நாற்சந்துகளில்
ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில்  கும்பல் கும்பலாக
குடிக்கும்  மதுக்கடைகளின்  மதுர கீதங்களும்  நரகத்தில்
நாம்  சற்றும் வித்யாசமில்லாமல் வாழ்வதற்கு  சௌகரிய
மானஅனுபவமாக இருக்கிறது. நம் கவிதைகளும் இந்த 
அழகைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

.நா  மனித  உரிமை கொள்கைகளில் அடிப்படையான ஒன்றான
ஒரு தனி மனிதன்  தடங்கலின்றி அச்சமின்றி அன்றாடம் நடமாடும்
சுதந்திரம்  இன்று அறை குறையாகத்தான் நடைமுறையில்
அரசியல் நிர்வாகிகளால்  அமுல்படுத்தப்படுகிறது..

இப்படி நடை தள்ளாடிப் போன  மனிதன்  இன்றைய வீதிகளை
தன்னுடைய விதியாக ஒப்புக் கொண்டு  ஊமையாகி போய்க்
கொண்டிருக்கிறான். தன்னுடைய அடிப்படை  சௌகரியங்களை  
உரிமையை உரத்த குரலில் கேட்டுப் பெற போதிய அவகாசமோ  
சக்தியோ அவனுக்கு இல்லை.. அப்படி  குரல் எழுப்பினாலும்  
அது  சரியான பான்மையோடு கவனிக்கப்படுமா என்று  அவனுக்கு
ஐயமாக இருக்கிறது..

மேலை நாடுகளில்  சில தடங்கல்களை  நீக்குவதற்காக கட்டிய
வீட்டையே இடம் பெயர்த்து நகர்த்துகிறார்கள். ஒரு நகரத்தின்
மொத்த அமைப்பின்  கலைத் தன்மை பழுது பட்டு விடாமல்  
ஒவ்வொருவிஸ்தரிப்பையும் ஒவ்வொரு தெருவையும்
ஒவ்வொரு வீட்டின் கட்டிட அமைப்பின் பொருத்தத்தையும்  
பார்த்து பார்த்து திட்டம் இடுகிறார்கள்.

இங்கே வீடுகள் கட்ட அனுமதி கொடுத்தபிறகுதான் தெருவும்        
இன்ன பிற சௌகரியங்களும்  யோசிக்கப் படுகின்றன..

யாருடைய  அஜாக்கிரதையாலோ  நகரங்களில் திடீர்திடீரென்று  குப்பங்களிலும் ஏழைக் குடியிருப்புகளிலும்  தீப்பிடித்து
ஒட்டுமொத்தமாக சாம்பலாவதை நாம் பார்க்கிறோம் ..அது ஒரு
நல்ல விபத்து தான்.  ஆனாலும்  அந்த இடங்களில் மீண்டும்
எழுப்பப் படும்  அடுக்ககங்கள்  பழைய குப்பத்தின்  அசௌகரி
யங்களை  தக்க  வைத்துக் கொண்டது போல்  தோன்றுகின்றது.

ஒரு சமூக நல பணியாளர்  சராசரி மக்களுக்கு  தெருக்களின்
சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு  ஏற்படுவத்துவதற்காக  
அறிவுரை வாசகங்களை தெருமுனைகளில்  எழுதிவைக்க 
வேண்டுமென்று ஆசைப்பட்டார்..  நானும் ஆசையுடன் ஒரு
வாசகத்தை எழுதிக்கொடுத்தேன் ..

''குப்பைகளை தெருவில்  போடாதே- பிறகு
தெருவைக்   குப்பைக்குள் தேட வேண்டியிருக்கும் !!

அந்த பணியாளர் சிரித்து விட்டு  ''இது கவிதை போல் இருக்கிறது..
இது சரி வராது.. '' என்று சொல்லிவிட்டு   ''இங்கே குப்பைகளைப்
போடாதீர்கள் '' என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி
வைத்தார்.

அது யாருக்கும் புரியவில்லை என்பதை  அங்கே  கிடந்த
குப்பை கூளங்கள் பறைசாற்றிக்கொண்டிருந்தன  !!

 


Friday, February 10, 2017

யதார்த்தத்தை வெளிப்படுத்தும் திருப்பங்கள்
 அம்ஷன் குமார்
வைதீஸ்வரன் கதைகள் --–எஸ். வைதீஸ்வரன் .

கவிதா பப்ளிகேஷன் . 8, மாசிலாமணி தெரு . பாண்டி பஜார் , சென்னை 600 017.
 விலை ரூ 225 
பக்கங்கள். 304 
தொலைபேசி 2436 4243, 24322177.
சந்தி பிரித்து சொற்களை தெரிந்தெடுத்துக்கொள்ளவோ அருஞ்சொற்களுக்கு பதவுரை காணவோ அவசியம் ஏதுமின்றி புதுக்கவிதைகளை சுமாராகத் தமிழ் தெரிந்தவர்கள் கூட படித்துணரலாம்   என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் எழுபதுகளில் புதுக்கவிதை புரியவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக ஒரு சில மூலைகளில் ஒலித்தது . நவீன ஓவியமும் புரியவில்லை என்றும் அக்காலத்தில் அதிகமாக சொல்லப்பட்டது . புதுக்கவிஞர்கள் , நவீன ஓவியர்கள் ஆகியோரில் சிலர் புரிந்து கொள்ளப்படாமை என்பது மக்களின்  பிரச்னைகளேயன்றி தங்களுக்குள் அதில் ஈடுபாடு இல்லை என்று தெரிவித்தனர் . நான் என்ன கோனார் நோட்ஸா போடமுடியும் என்று கேட்ட கவிஞர்களும் உண்டு . அப்போது எஸ்.வைதீஸ்வரன் உதய நிழல் தொகுதியின் மூலம் அறிமுகமாயிருந்தார். அவரது கவிதைகள் படிக்கப்பட்டு விரிவாக பேசவும் பட்டன . அவர், ஞானக்கூத்தன் , தருமு அரூப் சிவராமு ஆகியோர் புதுக்கவிதையின் முக்கிய கவிஞர்களாக அறியப்பட்டனர். மூவருமே தங்கள் சிறந்த கவிதைகளை அநேகமாக எழுபதுகளிலேயே எழுதிவிட்டிருந்தனர் .
எஸ்.வைதீஸ்வரனை முதன் முதலாக 1974 இல் திருச்சியில் திருச்சி வாசகர் அரங்கு  நடத்திய  புதுக்கவிதை மாநாட்டில்தான் பார்த்தேன் . தான் எழுதிய கவிதைகளைப் பற்றி தானே பேசக்கூடாது என்று இறுக்கமாக இருந்த கவிஞர்களிடையேயிருந்து  அவர் மாறுபட்டிருந்தார் . கவிஞன் தன் கவிதை பற்றி பேசுவதன்மூலம் அதன் புரிதல் விஸ்தரிக்கப்படுமாயின் அது பற்றி பேசுவதில் தவறு ஒன்றுமில்லை என்று அவர் கூறியது எனக்கு ஞாபகத்திலிருக்கிறது.
அவரது கதைகள் அடங்கிய இத்தொகுப்பைப் படிக்கும்போது அன்று அவர் காட்டிய  அதே நிதானத்துடனும் எளிமையான சொற்சேர்க்கைகளுடனும் இவற்றை எழுதியிருப்பது தெரிகிறது .

இத்தொகுப்பில் முப்பத்தி நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன . எந்தெந்த ஆண்டில் அவை வெளியாயின என்கிற குறிப்புகள் தரப்படவில்லை . சில கதைகளின் நடப்புலகம் காலத்தால் முற்பட்டவையாயும் ஆனால் கதை சொல்லுதல் நிகழ் காலத்தினதாயும் உள்ளன . வேறு சில நடக்கும் காலம் மட்டுமின்றி அவை சொல்லப்பட்ட காலமும் முற்பட்டதாக தோன்றுகின்றன.

`மூன்றாவது தந்தி` தந்தி பட்டுவாடா மூலம் அபாயகரமான செய்திகள் தெரிவிக்கப்பட்ட காலத்தியது. அக்கதை அது நடைபெறுகிற காலத்திலேயே எழுதப்பட்டது போன்றுள்ளது . பெரியவரின்  உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தந்தி தெரிவிக்கிறது .அவரது மகள் பதைபதைக்கிறாள்.ஆனால் அவளது கணவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தன் சிறுவயது மகனுடன் ஊருக்கு விரைகிறாள் . அங்கே பெரியவர் நல்ல உடல் நலத்துடன் காணப்படுகிறார் . அவளது சகோதரன் தேவைக்கதிகமாக பயந்து தந்தி அடித்திருக்கிறான் .இரண்டாம் முறை தந்தி வருகிறது . மீண்டும் மருமகனின் அதே சுபாவம் வெளிப்படுகிறது . ஊர்ப்பயணம் அதேபோல் நடக்கிறது . பெரியவருக்கும்  கவலைப்படும்படி ஒன்றும் இல்லை .  மூன்றாவது தந்தி வருகிறது . `இந்த முறை நமது அப்பா நிஜமாகவே செத்துப்போய்விட்டார் . ஏமாற்றவில்லை ` என்று அதில் கண்டிருக்கிறது . மரணம் அதிர்ச்சியைத் தருவதற்குப் பதில் சிரிப்பை வரவழைக்கிறது. `என் தாத்தாவும் இதைத்தான் விரும்பினாரோ` என்று கதை சொல்லியான சிறுவன் சொல்ல கதை இருண்மையான  நகைச்சுவையுடன் முடிகிறது.

`தவளையின் ரத்தம்` முற்றிலும் வேறுமாதிரியான கதை . இதுவும் நான் என்கிற கதைசொல்லியின் வாயிலாக சொல்லப்படுகிற கதை . கதைசொல்லியின் அத்தைக்கு நீண்டகாலம் குழந்தை பிறக்கவில்லை . ஒரு பெண் சித்தரின் மந்திர ஆலோசனைக்குப்பின்  அவளுக்கு கண்ணன் பிறக்கிறான் . அவளது கணவன் இறக்கவே கண்ணனே அவளது உலகம் என்றாகிறது . அவனுக்கு பதினெட்டு வயதாகும்போதே வம்சம் தழைக்கவேண்டும் என்ற அவசரத்துடன் பதினாலு வயதுப் பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறான். பேத்தி பிறக்கிறாள் . கண்ணனுக்கு தீடிரென காய்ச்சல் . அலோபதி டாக்டரை முழுதாக நம்பாமல் அவள் அதே பெண் சித்தரின் உதவியை நாடுகிறாள் . அவள் தரும் சிகிச்சை எவ்வளவு விபரீதமானது என்பதை கடைசி நேரத்தில் அழைக்கப்படும் டாக்டர் வரும்போது தெரியவருகிறது . அந்த சிகிச்சை என்ன அதைப்பார்த்துவிட்டு டாக்டர் என்ன கூறினார்  அது கண்ணனின் தாயாரை எவ்வாறு பாதித்தது என்பனவற்றையெல்லாம் நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும் . இதுபோன்ற எதிர்பாராத திருப்பங்கள் அவரது கதைகளில் உண்டு . ஆனால் அவற்றை மெலோடிராமா உத்திகளாகக் கருதிவிடமுடியாது . சகமனிதர்களின் வாழ்வு நிகழ்வுகளை  திடுக்கிட்டு உணரவைக்கும் திருப்பங்களாகவே அவை அமைகின்றன. அவற்றினூடே ஒரு உள்ளார்ந்த அமைதியின்மையையும் நம்மால் உணரமுடிகிறது . `

எங்கிருந்தோ வந்தான்` கதையில் இரவு வேளையில்  ஆள் நடமாட்டமில்லாத ஒரு நெடுஞ்சாலையில்  ஒருவரின் ஸ்கூட்டர் பழுதடைந்து நின்றுவிடுகிறது . அவர் அவசரமாக பணிக்கு செல்லவேண்டும் . உதவ எவருமில்லை என்றிருக்கிற சமயத்தில் ஒரு மெக்கானிக் வழிப்போக்கன் தோன்றி ஸ்கூட்டரை சரிசெய்து கொடுத்துவிடுகிறான் . அவன் அதை பழுதுபார்க்கும்போது அவன்மீதே ஸ்கூட்டர் ஆசாமிக்கு சந்தேகம் . எங்கே மெக்கானிக் அதை அபகரித்து ஓட்டி சென்றுவிடுவானோ என்று . கதையின் திருப்பமாக அது இருக்கலாம் என்று நம்மை வைதீஸ்வரன் அனுமானிக்க வைக்கிறார் . ஆனால் அவன் நேர்மையானவன் . பின்னர் இரவுநேர ரோந்து போலீசாரால் சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்படுகிறான் . அப்பாவியான அவனைக் காப்பற்ற முடியாத வருத்தத்தில் ஸ்கூட்டர் ஆசாமி வருத்தத்தில் ஆழ்கிறார் . கதையின்  இத்திருப்பத்தில் மனிதாபிமானம் இழையோடுகிறது . `தவறான கோபம்` இந்த பாணியில் உள்ள மற்றுமொரு கதை . கதைத் திருப்பங்கள் நமக்கு வாழ்வின்  யதார்த்தங்களை உணர்த்துபவையாய் உள்ளன .அவை ஒன்றுக்குமேற்பட்ட அர்த்தங்களை சாத்தியமாக்குகின்றன .

உதாரணமாக சிருஷ்டி என்கிற கதை . இக்கதையில் பிள்ளையார் சதுர்த்தியன்று  அதுநாள்வரை களிமண்ணை விரல்களால் பிசைந்திராத ஒரு குடும்பஸ்தர் திடீரென  பிள்ளையார் பிடிக்க முயல்கிறார். பிள்ளையார் பிடிக்கவேண்டுமென்றால் முதலாவதாக பிள்ளையார் பற்றிய பிம்பம் மனதில் இருக்கவேண்டும் . காலண்டரில் உள்ள படத்தைப் பார்த்தும்கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை . முடிவாக ஏதோ ஒரு உருவத்தை கோணல் மாணலாக பிசைந்துவிட்டு அதுதான் பிள்ளையார் என்று தன் மகனிடம் மார் தட்டிக்கொள்கிறார் . மற்றவர்கள் வழிபடும்  களிமண் பிள்ளையார்களை  அவர் மார்க்கெட் பிள்ளையார்கள் என்று பரிகசிக்கிறார். .நைவேத்யம் தயாராகிவிட்டபடியால் படையலுக்கு எதோ பிள்ளையார் என்று ஒன்று கிடைத்தாலே போதும் என்று அவர் மகனும் அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். எவ்விதப் பயிற்சியுமின்றி அவர் ஆவேசத்துடன் உருவாக்கிய பிள்ளையார் என்னவாக இருக்கமுடியும் என்று எண்ணுகையில் நகையுணர்வு எழுகிறது. இதெல்லாம் சிருஷ்டியாக எண்ணத்தக்கதுதானா என்கிற கேள்வியை கதை எழுப்புவதுபோல் தெரிகிறது . மாற்றாக   நெருக்கடி ஏற்படுகையில் சராசரியான ஒரு மனிதன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு தனக்கேயான ஒரு பொருளை வடிவமைத்துக்கொள்ளும்  கணங்களை இக்கதை சித்தரிப்பதாயும் சிருஷ்டி என்பது எல்லோருக்கும் கைவரப்பெற்ற ஒரு செயல்தான்  என்பது  குறியீடாக இங்கு உணர்த்தப்படுவதாயும்  கொள்ளலாம்.

`ஊருக்குள் இரண்டு காளி` ஒரு எதிர்மறையான தொனியில் எழுதப்பட்டுள்ளது. இத்தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று . 

பரோடா கலைக்கல்லூரி மாணவன் அம்ரிஷ் துர்கா பூஜையின்போது ஒரு காளி ஓவியத்தை தனது உள்ளுணர்வுகளின் தூண்டுதலால் வரைகிறான் . அது பாரம்பரியமாக காணப்படும் காளி அல்ல . அதை ஏற்காத அடிப்படைவாதிகள் ஓவிய சீலையை கிழிக்க முற்படுகிறார்கள். அவன் அறையில் சிற்பம் பயிலும் மாணவி ஸவிதாவை நிர்வாணமாக்கி ஓவியம் வரைவதைப் பார்த்தவுடன் அவர்கள் கோபம் கட்டுக்கடங்காமல் போகிறது . இருவரையும் அடித்து துரத்துகிறார்கள் . ஆனால் ஸவிதாவின் நிர்வாண சிற்பம் அதற்கான அங்கிகரிப்பினை தகுந்த இடத்தில் பெறுகிறது . சமகாலத்திய நிகழ்வு ஒன்றை அதன் அடிப்படை அரசியல் பின்புலத்துடன் பார்க்கிறது  இக்கதை . அதுபற்றிய விமர்சனம் தானாக கதை வாயிலாக எழுகிறது .

`மலைகள்` என்று ஒரு கதை . தினமும் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ட்ரங்க் ரோடிலுள்ள ஆலமரத்தின் நிழலில் இருந்து அந்த மலைகளைப் அடிக்கடி பார்க்கிறான் அவன்  . அவற்றின் மீதான விதவிதமான உணர்வுகள் அவன் மனதில் தீவிரமாக கூடிக்கொண்டே போகின்றன. ஒருநாள் மலைகள் அருகே செல்கிறான் .பரவசத்துடன் ஒலிகளை எழுப்புகிறான் . அப்போது அவன் எதிர்பாராது வேறு ஒலிகளைக் கேட்க நேரிடுகிறது . அந்த மலைகள் கற்களுக்காக சம்மட்டிகளால் பெயர்க்கப்படுகிற ஒலிகள் அவை . மலையை வியாபாரத்திற்காக சிதைக்கும் மனிதக் கூட்டத்தினரில் தானும் ஒருவன் என்று தன்னையே நிந்தித்துகொண்டு செல்வதாக கதை முடிவுறுகிறது. சுற்றுப்புற சூழலுக்காக இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைப்பதும் மனிதர்களின் ஜீவாதாரத்தை முன்னிறுத்தி செயல்படுகிற சுயநலம்தான். ஆனால்  கட்டற்ற இயற்கையை காரண காரியங்களின்றி மலைகள் கதாநாயகன் போன்று உள்வாங்கும்போது ஏற்படும் மனவெழுச்சிகள் உன்னதமானவை.

எஸ்.வைதீஸ்வரன் கதைகளை ஆர்.கே.நாராயண் கதைகளுடன் இணைத்து ஒப்பீட்டளவில் பார்ப்பதில் ஒரு பொருத்தம் தென்படுகிறது . ஆர் .கே .நாராயணைப்போலவே இவரும் பிரதானமாக கதைகள் சொல்கிறவர். .அவ்வாறு கதைகள் சொல்கிறபோது தத்துவ , அரசியல் , சமூக பார்வையுடன் உலகை படைப்பதில்லை . போதனைகள் ஏதும் அவற்றில் இருப்பதில்லை .அதேவேளை தீவிரமான கருத்தாக்கம் மிகுந்த பார்வையை முன்வைத்து  எழுதுபவர்களின்  படைப்புகள் எவற்றையெல்லாம் வெளிப்படுத்துகின்றனவோ அவற்றின் இழையோட்டங்களை  இவரது கதைகளிலும் காணமுடிகிறது .

வாழ்வின் பல்வேறு கூறுகளையும்  உணர்வு நிலைகளையும் இக்கதைகள் சுவாரஸ்யம் குறையாது  வெளிப்படுத்துகின்றன.
             ----------------------------------------

அம்ருதா  பிப்ரவர்  2017





Make yourself at home.


Thursday, February 2, 2017

கோமல் சுவாமிநாதனும் நானும் - வைதீஸ்வரன்


கோமல் சுவாமிநாதனும் நானும்
வைதீஸ்வரன்

கோமல்  சுவாமிநாதனை  பல  வருஷங்களுக்கு  முன்னே இளம் வயதிலேயே சந்தித்து  விட்டேன்.

அவரைப்  போலவே பிற்காலத்தில்  முக்கியமானவர்களாக வளர்ந்த  பல  நல்லவர்களை  நான் ஆரம்ப காலத்திலேயே  சந்தித்திருக்கிறேன் . அது என்  முன் வினைப் பயன். என்று  சொல்ல வேண்டும்.

சுவாமிநாதனை நான் முதல்  முதலாக  1956ல் பார்த்தேன்.  அவர் அப்போது  தேசத் தொண்டில் நாட்டம்  கொண்டவராக  காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில்  பங்கேற்பவராக  முற்போக்குக் கொள்கைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டவராக இருந்த  இளைஞர்,  இலக்கியத்தின் மூலம் முக்கியமாக நாடகங்களின்  மூலம் அத்தகைய லட்சியங்களை சமூகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பரப்பி பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற கனவுகள்  நிறைந்தவராக இருந்தவர்,  நிரந்தரமான  உத்யோகம் கிடைக்கக் கூடிய தகுதிகள் இருந்தும் அவைகளை  நிராகரித்து விட்டு சற்றும் உத்தரவாதமில்லாத எதிர்காலத்தை குடும்பக் கவலைகளையும் மீறி ஏற்றுக் கொண்டவர் அவர்.

அப்போது  மூத்த நாடகத் திரைக் கலைஞர்  திரு  எஸ். வி ஸஹஸ்ரநாமம் அவர்கள் மேற்பார்வையில்   நாடகக்  கல்வி  நிலையம் என்ற குறுகிய கால பயிற்சி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது.    நாடகத்  துறையில்  ஈடுபட  ஆர்வமுள்ள  இளைஞர்களை  அங்கே  மாணவர்களாக  ஏற்றுக் கொண்டு   நாடகக் கலை பற்றிய பல வகையான  அங்கங்களைப் பற்றிய  அடிப்படையான அறிமுகமும்  செயல் முறைபயிற்சியும்  மூன்று  மாத காலத்தில் அளிக்கத் தொடங்கப் பட்டது .

கோமல் சுவாமிநாதன்  அந்தக் கல்வி நிலையத்தில் தான்  ஒரு மாணவராக   வந்து  சேர்ந்தார். அப்போது  அவர்  வெறும் சுவாமிநாதன்  தான்.  அவர்  நாடகக் கதாசிரியராக  இயக்குனராக வளர வேண்டுமென்ற  விருப்பம்  கொண்டவராக  பயிற்சிக்கு வந்திருந்தார்.

இந்த  நாடகக் கல்வி நிலையத்தை  முன்னெடுத்து நடத்தும் இயக்குனராக பணியாற்றியவர் திரு. ராஜாமணி  அவர்கள்.  {அவர் எனது ஒன்று விட்ட சகோதரர்.  பெரியம்மா மகன்}

அப்போது கவிதை கலைகள் இவைகளில்  மிகவும் ஆர்வங்கொண்டவனாக  கல்லூரிப் படிப்பை முடித்திருந்த எனக்கு   அடிக்கடி  நாடகக் கல்வி நிலையத்து  மாணவர்களை  சந்தித்து அணுகிப் பேசுவதற்கு  சூழ்நிலையும் ஆர்வமும்  அமைந்திருந்தது.

அந்த  மாணவர்களில்  சுவாமிநாதன் எனக்கு மிகுந்த நெருக்கமானவராக  ஆனார்.. அப்போது அவர்  வசித்தது. மேற்கு மாம்பலத்தில்... ரயில் பாதையை ஒட்டி சின்ன நீர்த்தேக்கங்களை தாண்டி  விரிந்து கொண்டிருந்த  போஸ்டல் காலனி என்கிற அத்வானத்தில்!!

மாலை நேரங்களில்  ராயப் பேட்டையிலிருந்து  போஸ்டல் காலனிக்கு அவர் நடந்தே  தான்  போவார். வண்டிகள்  தாராளமாகப்  போகும் அளவிற்கு  அங்கே  சாலைகள்  இன்னும்  போட்டு முடியவில்லை.

அப்போது  நானும்  அவருடன்  நடந்து போவது  எனக்கு இனிமையான பொழுது  போக்காக  இருந்தது. அவர் பேச்செல்லாம்  நாடகங்கள்  பற்றியதாகத் தான்  இருக்கும். அவர் வாசித்து வந்த பல மேற்கத்திய நாடகங்களைப் பற்றியும்  அவைகளில் சமுதாயப் ;பிரச்னைகள் எவ்வளவு யதார்த்தமாக சொல்லப்படுகிறது  என்பது பற்றியும்  தமிழ் நாடகக் கலையின் போக்கை மாற்றியமைக்க வேண்டுமென்றும்   நிறையப் பேசிக் கொண்டே வருவார்.
நாடகக் கல்வி நிலையப் பயிற்சி  முடிந்த  பிறகு அவருக்கு தன்னை நாடக ஆசிரியராக நிலை நிறுத்திக் கொள்ள  வாய்ப்புகளுக்காக அவர்  காத்திருக்க வேண்டி இருந்தது. .. அப்போது  ஸேவாஸ்டேஜ் நாடக குழுவின் நீடித்த தொடர்பு  அவருக்கு  அவசியமான ஒரு ஊன்று கோலாக தேவைப் பட்டது.
அப்போது  சேவாஸ்டேஜ்  நாடகக் குழு  பிரபல எழுத்தாளர்களான பி.எஸ் ராமையா...தி. ஜானகிராமன்  கு. அழகிரிசாமி போன்றோரின் நாடகங்களை  ஓரளவு வெற்றிகரமாகவே  நடத்திக் கொண்டிருந்தன.  இந்த வரிசையில் முற்றிலும் புதிய  இளம் நாடக ஆசிரியரான  கோமல் சுவாமிநாதனுக்கு அங்கீகாரமும் வாய்ப்பும் கிடைப்பதற்கு அவர்  சில  வருஷங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

இந்த இடைப் பட்ட வருஷங்களில் அவர்  ஸேவாஸ்டேஜ்  கணக்கு வழக்குகள்  நிர்வாகம் முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளும் காரியஸ்தராகப் அங்கே பணியில் இருந்தார். இது அவர் செய்து  கொண்ட  தற்காலிக  சமரசம்  தான்

அதன் பிறகு  அவருடைய நாடகங்கள்  “புதிய பாதை”  வாழ்வின்  வாசல் “ போன்றவை  ஸேவாஸ்டேஜ்  குழுவினரால்  நடிக்கப்  பட்டு  பரவாலாக  பேசப்பட்டன.  அவருடைய நாடகங்களின் மூலம் அவருக்கு சினிமாத் துறையிலும்  தொடர்ந்து உதவி வசனகர்த்தாவாக  வாய்ப்புகள்  நிறையவே வந்தன. இந்த வாய்ப்புகள் தான்  உண்மையிலேயே அவருக்கு குடும்ப வாழ்க்கையின்  வறுமையை ஓரளவு  சமாளிக்க  “கை கொடுத்த தெய்வமாக”  இருந்தன.

.  அவருடைய  நாடகம்  “தண்ணீர்...தண்ணீர்” மக்களின் வாழ்வாதரப் பிரச்னையை  அரசியல் விமர்சனத்தை அழுத்தமாக பிரதிபலித்த ஒரு நாடகம்.  அது மிகத் திறமையாக திரைப்படமாக  வந்து  அகில இந்திய பரிசு வாங்கித் தந்தது கோமலின்  நீண்ட கால கலை ஊழியத்துக்கு  அவருடைய  நாடக வரலாற்றில்  ஒரு வைரக்கல் என்று அதை  சொல்லலாம். அதேவகையில்  அரசியல் நையாண்டியாக நவாப் நாற்காலி...இந்தியக் கனவு போன்ற  படங்களும்  அவர் இயக்கத்தில்  வெளிவந்திருக்கின்றன      ..

.   நாடக ஆசிரியனுக்கும் நாடகத் தயாரிப்பாளருக்கும்  படைப்பு சுதந்திரம்  வேண்டும். என்று  மிகவும் ஆதங்கப் பட்டார், கோமல்.  பல தரப்பட்ட  மக்களின் இயல்பான  ரஸனைக்கும்  நாடகத் தயாரிப்பாளருக்கும்  இடையே  ஒரு விதமான தரகர்களாக இந்த  சபாக்கள் செயல்  படக் கூடாது  என்று மிகவும் தீவிரமாக  அபிப்ராயப்பட்டார்.

ஸேவாஸ்டேஜ் நாடக மன்றம் இயக்கத்திலிருந்து நின்ற போது கோமல் Stage Friends  என்றொரு  நாடக அமைப்பைத்  தொடங்கி அதே நடிகர்களைப் பயன்படுத்தி நிறைய  நாடகங்களை  எழுதித் தயாரித்து  மேடை ஏற்றினார்.,  அவருடைய  லட்சியப்படியே  இந்த  நாடகங்கள்  எளிமையாகத் தயாரிக்கப் பட்டன.  நேரடியாக பல ஊர்களுக்கு சென்று  சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டினால்  நாடகங்களை எளிய முறையில் நிகழ்த்தினார். அவருடைய நாடங்கள்  வறிய எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அழுத்தமாக  பிரதிபலித்தன, சமூக  ஏற்ற்த் தாழ்வுகளை தீண்டாமைக் கொடுமைகளை உரத்த குரலில் பேசின.

அவருடைய இத்தகைய  நாடகப்போக்குகள்  கம்யூனிஸ ஆதரவாளராக அவரை மாநில முற்போக்குக் கழகத்தின் தலைவர் பதவிக்குத்  தகுதியுள்ளவராக ஆக்கியது.

அவர் நாற்பதுக்கும் மேற்பட்ட  நாடகங்கள் எழுதி இருக்கிறார்.  தமிழ்நாட்டின்  பட்டி தொட்டிகளிலெல்லாம் மேடையேற்றியிருக்கிறார்.   . ஆனாலும்  அன்று இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத் தக்க முக்கியமான சமூக கலாசார  இயக்கமாக ஏன் ஊடகங்களில் பரவலாகப் பேசப்படவில்லை  என்று நினைக்கும் போது புதிராகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

கோமல் எழுதி  ஸேவாஸ்டேஜ்  தயாரித்த  “புதிய பாதை “ என்று ஒரு நாடகம். அநத  நாடகத்தில்  ஏழைகளின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு  அட்டுழியம் செய்யும் ஒரு நாட்டாமையின் பாத்திரம் வரும். அவருக்கு  ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள  ஏழைகளின் மேல் இரக்கங் கொண்டவனாக  ஒரு மகன்.  ஒரு காட்சியில் அப்பாவுக்கும் மகனுக்கும்  பலத்த வாக்கு வாதம் நடக்கும் மகனின் போக்கைக் கண்டித்து அப்பா  கோபமாக திட்டுவார். மகன்  அவருடைய போக்கைக் கண்டித்து எதிர்த்துப் பேசிக் கொண்டே இருப்பான் . ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு கோபம் எல்லை மீறி  மகனை  அறைந்து அடிக்கத் தொடங்கி விடுவார்.  அந்த  மகன் பாத்திரத்தில் தான்  நான்  நடித்தேன்.

இந்த நாடகம்  நிகழ்ந்த போதெல்லாம் பொதுவாக அந்த“” நாட்டாமை” “”நடிகர்  என்னை அடிப்பது  போலத் தான் நடித்துக் கொண்டிருந்தார். நானும் வலிப்பது போல  நடித்துக்  கொண்டிருந்தேன்  ஒரு தடவை அவருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை நிஜமாகவே நாலு அடி போட்டு அறைந்து விட்டார். அன்று நான் நிஜமான வலியால் கத்தியது தத்ரூபமான  நடிப்பாக  இருந்ததாக ஜனங்கள்  அனுபவித்து ஆரவாரித்தார்கள்!! “புதிய  பாதை “ இன்னும் எனக்குள் நடுக்கத்தை  ஏற்படுத்துகிறது.

கோமல் சுவாமிநாதனின் வாழ்க்கைப் பணிகளில் வினோதமான புதிய திருப்பமாய்  நேர்ந்தது  அவர் “சுபமங்களா” என்கிற பத்திரிகைக்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டது  தான்.

சுபமங்களாவை அவர் வடிவமைத்த நேர்த்தி .. அவரை  ஒரு  சிறந்த இலக்கிய பத்திரிகை ஆசிரியராக  ஒரு சிறப்பான  கௌரவத்தை அவர்  வாழ்க்கையின் அந்திம காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்தது. ஏற்கனவே வேறு தரத்தில் வெளிவந்து கொண்டிருந்த சுபமங்களா பத்திரிகை அவர் மேற்பார்வையில் ஒரு புதிய சமூக இலக்கிய அடையாளத்தைப் பெற்றது. பல  சீரிய எழுத்தாளர்கள் எழுதினார்கள். வளரும் பல இளைய எழுத்தாளர்களுக்கு அது சங்கப் பலகையாக  இருந்தது. கதைகளும் கட்டுரைகளும் விவாதங்களும் நேர்காணல்களும்  சீரிய வாசகக் கூட்டத்தை  உருவாக்கும் விதமாக  வெளி வந்தன.  அதற்குப் பின் வந்த பல இலக்கிய இதழ்களுக்கு சுபமங்களா ஒரு முன்மாதிரியாக  ஒரு உந்துதலாக  இருந்ததென்பதை  நாம் பார்க்க முடிகிறது. இந்த அதிசயம் நிகழ்ந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்  நோய் உபாதையால் மறைந்து விட்டார்.

அவர் விட்டுச் சென்ற “சுபமங்களா” இதழ்களும்  அவருடைய அருமையான  மனைவி பிள்ளைகள்  பெண் சார்ந்த குடும்பம்   இவை தான் அவருடைய  பெருமையை  பல்லாண்டுகள் நீடிக்கச் செய்யும்.

சுபமங்களா” வின்  ஐந்து ஆண்டுப் பிரதிகளை  இணையத்தில் தரவிறக்கும் செய்து பார்க்கும் வசதியை குவிகம் இலக்கிய வாசல்  குழு இப்போது  செயலாக்கி இருக்கிறது.

அந்திம காலத்தில்  ஒரு பிரகாசமான சுடராய்  1995ல் கோமல் சுவாமிநாதன் தனது அறுபதாம் ஆண்டில் மறைந்த போது   சமூகத்தின் அரசியல் சினிமா  இலக்கியம் சார்ந்த பலதரப்பட்ட நண்பர்கள்  அவர் இழப்பினால்  வருந்தி  அஞ்சலி செலுத்தக் கூட்டமாகக் கூடினார்கள்.

  .                      அமுதசுரபி பிப் 2017