vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, September 27, 2012

தாகம் -a poem by vaidheeswaran


தாகம்
                      ---------------------------
 
வானத்து உச்சியில்
 குதிரையை அவிழ்த்து விட்டு
 வாசலுக்கு ஓடி வந்தான்.
 கொதிக்கும் உலை நின்று
 கூத்தாடும் ஆவியாய்
 பதைத்த சுடு மூச்சில்
 பகற்கனவு கலைந்தெழுந்தேன்
“நீ யார் “என்று நினைக்கவும்
நேரமில்லை.--------------
“தாகம்...தாகம்...” என்று
 தோள்மீது குடை சாய்ந்தான்.
“நாக்கில் கனல்தாங்கி
நாயாய் அலைகின்றேன்
மேற்கும் கிழக்காக
மேய்த்துத் திரிகின்றேன்
தாகம் தண்ணீர்..என்று
தவித்துக் கையேந்தினான்.

நெஞ்சில் சுரந்த ஈரம்
கையில் பெருகவில்லை.
 பஞ்சாகப் பறந்தோடி
பூவாளி தூக்கிப்போய்
படுத்திருந்த நதி முதுகைக்
குடைந்து குடைந்து பார்த்தேன்.
நகமும் நனையவில்லை
புதுக் கிணற்றில் காலை விட்டுக்
கொப்புளமாய் எழுந்து வந்தேன்
வறண்ட பூமியெங்கும்
வாடிக்கை கை விடவும்
நேற்று விதைத்த விதை
நெஞ்சில்  தட்டுப்பட---
“விதைத்தவன் நான் கேட்டேன்...
நீரில்லை-  தேனிருக்கோ?..
நேரமில்லை நிற்க” வென்றேன்
“காலம்வர வேண்டுமப்பா...
சூலாகிச் சுரக்க..
வாயேன் பார்க்கலாம்..”
என்று வளைந்தது முளை.
“ஹூம்...காலம்..
தாகத்திற்கு காலமில்லை...
தண்ணீருக்கு என்ன காலம்?..
வாசலில் வெந்து  நிற்கும்
வாய்க்கு என்ன சொல்வேன்?...
இதென்ன தேசம்?.......”
என்னெஞ்சும் உடலும்
உருகி  உப்பாச்சு.
கண்கள் குளமாக
வெறுங்கையில் வாளி யேந்தி
வாசலுக்குத் திரும்பி வந்தேன்.
“அரைக்கணம் பொறுக்க வேணும்..
மலருக்குள்  தேனில்லை
நதி மனசில்  நீரில்லை
அரைக் கணம் பொறுக்க வேணும்..
அமருங்கள்..”  என்றேன்
“ ஐய்யய்யோ...நான் கடவுள்...
காலம்  எனக்கில்லை..
மேலும் பொறுத்து நின்றால்
குதிரை கட்டவிழ்ந்து
திசையைத் தின்று விடும்..
நீயும்  வியர்த்தாய் -  --“என்று
நெற்றியைத் துடைத்து விட்டு
சிறகை விரித்துப்
படபடத்துப்  பறந்தான்
“தாகம்....தாகம்.. என்று 
தனைமறந்து பின் தொடர்ந்தேன்
“ஆமாம்...தாகம்....
நீர் கொடுக்கவில்லை நீ..
நானோ தாகத்தைக் கொடுத்தேன்..
பாடு! “ --- என்று பறந்தான்  விண்ணுக்குள்.
மேகம்  கனைத்தது.

           -வைதீஸ்வரன்    –1962
[*If I could say    this  can be   treated    as  a  Metaphorical  poem  and   has  a  Classic   tone
  Published   in  a  TAGORE  -SPECIAL  issue from  Calcutta  and  the   creative  writings from Tamil.
Was  compiled    by  Ashoka Mitran]


. 

Saturday, September 1, 2012


பிரதியைத் தொலைத்தவன்

[வைதீஸ்வரன்]

                                              ----------------------------------------------
அந்த எழுத்தாளர் மனமொடிந்து தன்னுடைய சோகக்கதையை என்னிடம்  சொல்லிக் கொண்டிருந்தார்.  இது நடந்தது சுமார்  நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன் ஒரு மழை மூட்டமான மாலையில் என்று நினைக்கிறேன்.........
 
 “எனக்கு தற்கொலை செஞ்சிக்கலாமான்னு இருக்குது..
 
 “ அய்யய்யோ...ஏன் ஸார் இப்படி நம்பி ஏமாந்து போனீங்க..
 
 “ என்ன செய்யறதுஎன்னுடைய கெட்ட நேரம்.....
 
 “ ஒங்க நாடகப் பிரதி எவ்வளவு பக்கம் இருக்கும்..?..”
 
மொத்தம் முன்னூத்தம்பது பக்கம் இருக்கும். கையொடியநெஞ்சொடிய நானே ராத்திரியெல்லாம் கண் முழிச்சி எழுதினது....அப்போ என் மனைவிக்கு வேறெ உடம்பு சரியில்லே....ராவெல்லாம் விளக்கைப் போட்டு அவ தூக்கத்தயும் கெடுத்துகிட்டு இருந்தேன்.. அவ பாவம்...நீங்க எழுதுங்க.. எனக்கு ஒண்ணும் உபத்திரவம் இல்லைன்னு அடிக்கொரு தரம் இருமிகிட்டே  சொல்லிகிட்டே இருப்பா...
 
நேரா நீங்களே கொடுத்த பிரதிய எப்படி அந்தப் படுபாவி    தொலைத்தான்?....  நடிகனா இருந்தா மனுஷத்தனமை இல்லாம போயிடுமா?..
 
 “இல்ல ஸார்.. என் கெட்ட நேரம்னு தான் நெனைக்கிறேன். பெரிய நடிகர் மூலமா என் நாடகம் அரங்கேறினா எனக்கு பேரும் புகழும் வந்து பெரிய வசதிகள்ளாம் ஏற்படும்னு ஒரு  பேராசை.....தெரியாத்தனமா கொடுத்துட்டேன்....
 
 "எப்போ கொடுத்தீங்க? “
 
அவரை வீட்டுலெ பாத்து கொடுக்காலாம்னு  ரொம்ப முயற்சி பண்ணினேன்.  எப்போ  போனாலும் அவர் வீட்டுலே இல்லேன்னு சொல்லிட்டாங்க...பிறகு அவரு நாடகம் நடந்த அன்னிக்கு தியேட்டருக்கே போனேன்.. நாடகம் முடிஞ்சவுடனே  அவரு ஒப்பனை அறைக்குப் போனேன். ”அவரு மீசையை எடுத்துட்டு மூஞ்சிலே எண்ணை பூசிகிட்டிருந்தாரு.. டோபாவை ஒருத்தன் தலையிலேருந்து  கழட்டிக்கிட்டிருந்தான்....

அய்யா  நான் ஒரு நாடக ஆசிரியர்...ஒங்க நடிப்புன்னா எனக்கு உசுரு...  உங்களையே மனசுலே வச்சு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி ஒரு நாடகத்தை எழுதியிருக்கேன்...நீங்க ஒரு முறை படிச்சுப் பாத்தீங்கன்னா  நிச்சயம் இது உங்களுக்குப் புடிச்சிப் போகும்"ன்னேன்.
 
நடிகர் ஒரு துண்டால் முகத்தை வழிச்சுகிட்டு ஒத்தைக் கண்ணால் என்னைப் பார்த்தார்.  “ஒங்க மாதிரி எழுத்தாளர்கள் இப்படி தேடி வந்து பாராட்டறது பெருமையா இருக்கு..  நல்லா இருங்க... நல்லா இருங்க... என்று அடிக்குரலில் சொன்னார்..
 
நான்  அழகாக பைண்டு செய்து வைத்திருந்த என் நாடகப் பிரதியை தயக்கத்துடன் நீட்டி னேன்..
 
 “டேய் இதை வாங்கி வைய்யிடான்னார். பக்கத்திலிருந்த பைய்யன்  அதை வாங்கி மூலையில் வைத்தான்...  நான் பாத்துட்டு  உங்களுக்கு சொல்லி அனுப்பறேங்க"   என்று கை கூப்பினார்.
 
 என் நாடகப் பிரதியை கடைசியாகப் பார்த்தது அப்போதுதான்.....
 
 “அய்யயோ... அப்புறம் அவரைப் பாக்கவே இல்லையா? “
 
 “பிரதியைக் கொடுத்த பிறகு ஒரு மாசம்  காத்திருந்து பாத்தேன்.. யாரும் என்னைத் தேடி வரலே..  நடிகர் வீட்டுக்கு  நடையா நடந்தேன்.. எப்பப் போனாலும் ஏதாவது ஒரு கும்பல் நின்னுகிட்டு இருக்கும்..   வெளியிலெ காவல்காரன்கிட்டே சொன்னேன்.. "அய்யா  ஷூட்டிங் போயிருக்காரு... அய்யா வெளியூரு போயிருக்காரு...  அய்யா  டிஸ்கஷ்ன்லெ இருக்காருன்னு எதையாவது சொல்லிகிட்டே இருந்தான்...
 
 ஒரு முறை காவல்காரன் இல்லாத சமயமா உள்ளே போய்ட்டேன்..  அங்கே  உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் கிட்டே  விஷயத்தை சொல்லிக் கண்ணீர் விட்டேன்...  அவர் ...அடடா... தம்பி எதயும் கையிலே வச்சிக்கமாட்டானே!!   நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? தம்பி எதை யுமே படிக்கற  வழக்கமே இல்லே... வசனத்தக் கூட  டைரக்டரை  ஒரு தடவை  சொல்லிக்காட்ட சொல்லுவான். அவ்வளவு தான் அப்படியே  மனசுலே ரெகார்டு ஆயிடும். திருப்பி  உணர்ச்சி வசமா அப்ப்டியே பேசிடுவான் ஆண்டவன் எல்லாருக்கும் அப்படி ஒரு திறமைய கொடுக்க றதில்லே...என் தம்பிக்கு  அப்படி ஒரு  அருள்!!..என்று தனக்குள்ளெ நெகிழ்ந்துகொண்டார். கொஞ்சம் நெகிழ்ச்சிக்குப் பின் ..ஒங்க பிரதியை அப்படி யாரும் களவாண்டு போயிட மாட்டாங்க.. இங்கே தான் எங்கயாவது இருக்கும் ..நான்  பாத்து எடுத்து  தம்பீகிட்டே என்ன செய்யலாம்னு  கேக்கறேன்.. நாளைக்கி   தம்பி சிங்கப்பூரு போவுது..  எதுக்கும் ஒரு பத்து நாளு கழிச்சி வந்து பாருங்க...
 
நான் பத்து நாள் கழித்து போனேன்..அந்தப் பெரியவர் அங்கே தென் படவில்லை... செத்துப் போயிருக்க மாட்டார் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்....என் கையில் இருந்த ஒரே ஒரு பிரதியை நான் தலைமுழுகிவிட்டேன்....என்னுடைய  ஆறு மாசத்து உழைப்புப் போய் விட்டது.. அதை நெனைச்சா அடிக்கடி தற்கொலை செஞ்சிக்கலாம்னு தோணுது!
 
        
***************

அந்த நாட்களில் பல எழுத்தாளர்களுக்கு மேற்சொன்ன  மாதிரி நிறையஅதிர்ச்சிகள் ஏற்பட் டிருக்கின்றன.. இன்றுபோல் அன்று  நகலகங்கள்நடைமுறையில் வரவில்லை.  பெரிய நாவல் களோ நாடகங்களோ எழுதுபவர்கள் இன்னொரு பிரதியை  தன் கைவசம் எழுதி வைத்துக் கொள்ளுவது பெரிய வேலை. பெரிய உழைப்பு...கார்பன் வைத்துக் கொண்டு எழுதும் முன்னெச்சரிக்கையும் பலர் மேற்கொள்ளவில்லை..  தொழில்முறை  தமிழ் தட்டச்சு செய்பவர் கள் இருந்தார்கள்..ஆனால் உபயோகப்படுத்திக்கொள்ள பணச்செலவாகும். எதிர்கால அங்கீ காரமோ  வருமான சாத்தியமோ உத்தரவாதமில்லாத சாதாரண எளியஎழுத்தாளனுக்கு இந்த செலவு சற்று பாரமாகத் தான் இருந்தது. ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையில் என் நண்பர் தன் நாடகப் பிரதியைக் கொடுத்துத் தொலைத்து விட்டார்.!
 
ஆனால்இன்று நிலைமை அடியோடு மாறிவிட்டது. இப்போதைய கணிணி ஊடக வசதிக ளால்  எழுத்தாளர்கள் தங்கள் ஒரே படைப்பை வெவ்வேறு தலைப்புகளில் நான்கு பத்திரிகை களுக்கு அனுப்பு கிறார்கள்!!.. எதிர்காலப் பிரயோகத்துக்கும் தங்கள் கைவசம் ஏகப்பட்ட பிர திகளை வைத்துக்கொள்ளுகிறார்கள்..!அர்ஜுனன் அம்புகள் மாதிரி இன்று ஒவ்வொருவரிட மும் ஏராளமான பிரதிகள் "தொலைக்கமுடியாத அசாத்யத்தில்"அடுக்கிவைக்கப்பட்டுள்ளன ! 
 
இப்படித்தான் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோபர்னிக ஸுக்கும் ஒரு விபத்து ஏற்பட்டது. சற்று வேறு மாதிரியான விபத்து..
 
கோபர்னிகஸ் யார் என்று ஓரளவு படிப்பு ஞானமுள்ளவர்கள் கேட்கமாட் டார்கள்.!.  அவர் ஒரு மகா மேதை...கிரகங்களின் சுழற்சிகளைப் பற்றிய  பேருண்மையைக் கண்டறிந்த  போலந்து நாட்டை சேர்ந்த அபூர்வமான வானவியளாளர்.  தீர்க்கதரிசி!
 
சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று அன்றுவரை நம்பிக் கொண்டிருந்த பைபிள் வேதக் கருத்தை மறுத்து பூமி தான் சூரியனை சுற்றிவருகிறது என்கிற பௌதீகப் பேருண் மையை முதல்முதலாகக் கண்டறிந்து உலகுக்கு  சொன்னவர்...
 
இந்த ஆராய்ச்சியின் முடிவுக்கு வருவதற்கு  பின்பலமாக உள்ள ஏராள மான விஞ்ஞான  பௌதீக கணக்கியல் தகவல்களை அவர் சேகரிக்க வேண்டியிருந்தது.  அது ஒரு பெரிய ஆவணம்.  அதைத் தயாரிப்பதற்கு அவருக்கு சுமார் 30 வருட காலம் ஆகிற்று. அது முடியும் போது அவருக்கு வயது சுமார் எழுபது.மூப்பின் தள்ளாமை வேறு.. இந்த ஆவணத்தைப் பற்றி  அறிந்த அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதை உடனடியாக அச்சில் கொண்டு வர வேண்டுமென்று அவசரப்படுத்தினார்கள்...
 
ஏராளமான ஆழமான  சங்கேத தகவல்கள் அடங்கிய கையெழுத்துப் பிரதி ஒன்று தான் அவரிடம் இருந்தது. அதை அச்சில் பதிக்கக் கூடிய  நல்ல அச்சகம்  Nuremburg   என்ற  ஒரே இடத்தில்தான் இருந்தது.  வயதின் காரணமாக  கோபர்னிகஸால் அங்கே நேரில் சென்று  உட்கார்ந்துகொண்டு பிழை திருத்தம்  பார்க்க இயலவில்லை.
 
இந்தப் பொறுப்பான பணியை  மேற்கொண்டு செய்து முடிக்க அவரிடம் பாசமும் மரியாதை யும் கொண்ட இளம் விஞ்ஞானி Rheticus என்பவரிடம்  பிரதியை ஒப்படைத்தார்.
 
Rheticus  நல்லமுறையில்  செயல்பட்டு அச்சுப்பிழைகள் ஒழுங்காக பார்த்துவந்தார். ஒவ் வொரு கட்டத்திலும் திருத்திய பிரதிகளை கோபர்னிகஸுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று ஒழுங்காக  அச்சுப்படுத்திக்கொண்டு வந்தார்..
 
துரதிருஷ்டவசமாக  அப்போது Rheticusகு   கலாசாலையில் ஒரு பெரிய பேராசிரியர் பதவிக் காக அழைப்பு வந்துவிட்டது.அந்த அரியவாய்ப்பை   அவரால் தட்ட முடியவில்லை. அதனால் பாக்கியுள்ள கொஞ்ச வேலையை அவருடைய இன்னொரு நண்பரான  Andrias Osiander என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு கோபர்னிகஸிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
 
ஆண்ட்ரியாஸும்நன்றாகத்தான் காரியங்கள் செய்துவந்தார். அந்த அற்புதமான ஆவணத்தை புத்தகவடிவில் தயாரிக்க ஆவன செய்தார்.  கடைசியாக முன்னுரை ஒன்றுதான்  பாக்கி இருந் தது..
 
அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை...கொபர்னிகஸ் எழுதிய  கையெழுத்துப் பிரதியில் அவருடைய முன்னுரையின் முடிவில் ஆசிரியரின் கையொப்பத்துக்கு மேல் கொஞ்சம் இடைவெளி இருந்தது.. ஆண்ட்ரியாஸுக்கு அந்த இடைவெளியைப் பார்த்தவுடன் கை துருதுருத்தது.
 
கூடியவரை ஆசிரியரின் கையெழுத்தைப் போலி செய்து கீழ்க்கண் டவாறு  அந்த இடை வெளியில்  தன் வரிகளை எழுதினார் .
 
நீங்கள் வாசிக்கப் போகும்  இந்த ஆவணம் வெறும் கையேடு தான்.  வருங்கால ஆய்வாளர்களுக்கு கிரகங்களின் சுழற்சிகளையும் வேகத்தை யும்  ஓரளவு சுலபமாக கணித்துக் கொள்ளஅனுமானிக்க இது வானவி யலாளருக்கு  பயன்படலாம்.

மற்றபடிக்கு இதில் சொல்லியிருக்கும் பௌதீகத்தகவல்கள் எல்லாம் என்னுடைய ஸ்வாரஸ்யமான கற்பனை யே தவிர, உண்மையல்ல!!.
 
சந்தேகமில்லாமல் சூரியன்தான் பூமியை சுற்றிக்கொண்டுவருகிறது     ­_ இப்படிக்கு  கோபர்னிகஸ்.
  
இந்த அதிர்ச்சிகரமான இடைச்செருகலுடன்  புத்தகம் வெளிவந்தது இந்த விஷயம்   சில நாட் களுக்குப்  பிறகு தான் நண்பர்கள் மூலம் கோபர்னிகஸுக்கு தெரியவந்தது..
 
தள்ளாத வயதில் இப்படிப்பட்ட அதிர்ச்சியான தகவலை அவரால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. இது ஒரு பச்சைத் துரோகம்.நயவஞ்சகம். கோபர்நிகஸின் தள்ளாத வயதில் இப்படிப் பட்ட அதிர்ச்சியான தகவலை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இது ஒரு பச்சைத் துரோகம். நயவஞ்சகம். கோபர்நிகஸின்  நண்பர்கள் இதை எதிர்த்து  ஆண்ட்ரியாஸின் மேல்  வழக்குத் தொடுக்க வேண்டுமென்று சொன்னார்கள்..
 
கோபர்னிகஸுக்கு ஏற்கனவே கைகள் நடுங்கி மூளை பேதலித்து விட் டது.அவரால் சிந்திக்க முடியவில்லை.  செயல் பட முடியவில்லை.
 
முப்பது வருட காலம் இரவும் பகலுமாக வானத்தைப் பார்த்துக் கண்டறிந்த அரிய கண்டுபிடிப்பின் இந்த அவலமான வெளிப்பாட்டி னால் அவர் ஜடமாகி உடல் விதிர்த்து சில மாதங்களிலேயே இறந்துபோனார்..

ஆனால்  கோபர்னிகஸ் ஸ்தாபித்த உண்மை இறந்துபோகவில்லை சூரியனுக்கு நிகரான மேதைமை அவருடையது. பிற்கால விஞ்ஞானிகள் அவர் ஆய்வை சோதித்துப்பார்த்து அதன் இடைச்செருகலை நீக்கி உண்மையைக் கண்டறிந்து கொண்டார்கள்  அந்தக் கண்டுபிடிப்பின்  முழுப்பெருமையும் கோபர்நிகசுக்கே  உரித்தானதென்று  உறுதிப்படுத்தினார்கள்.
   
 அவருடைய  கையெழுத்தின் மூலப் பிரதி இப்போது போலந்துநாட் டில் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
 
இப்போதைய நகல்வசதிகள்அன்றுஇருந்திருந்தால்கோபர்நிகஸ்அசலைத்தன்னிடம் வைத்துக் கொண்டிருப்பார். நகலைத் தன் நண்பனிடம்  அச்சுக்குக் கொடுத்திருப்பார்! நயவஞ்சகத்துக்கு இரையாகி இருக்க மாட்டார்.