vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, September 4, 2010

நிழலாடும் நினைவுகள் _ அம்மாவைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரை

   

நிழலாடும் நினைவுகள்
----------------------
நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து மறைந்த மிக நெருங்கிய வர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. அதுவும் 94 வயதில் காலமான என் தாயாரைப் பற்றிய என் 72 கால நினைவுகளை இங்கே சில வார்த்தைகளில் கட்டுக் கோப்பாக பகிர்ந்து கொள்வது அவ்வளவு எளிதான தல்ல.

நினைத்துப் பார்க்கும்போது என் ஆறு ஏழு வயதில் என் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு மார்க்கண்டேய புராணம் கேட்ட பொழுதுகள் ஞாபகத்துக்கு வருகிறது..எமனுடன் போராடி ஆயுளை நீட்டிக் கொண்ட மார்க்கண்டேயன் கதையில் என் தாயாருக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது.

ஞாயிற்றுக் கிழமைகள் வந்தால் எங்களுக்கு வயிற்றைக் கலக்கும்.கையில் விளக்கெண்ணைக் கரண்டியை வைத்துக் கொண்டு எங்களைத் துரத்துவார்.. எப்படியாவது எங்கள் மூக்கைப் பிடித்து வாயில் ஊற்றி விடுவார். எங்கள் ஆரோக்கியத்தின் மேல் அவள் கொண்ட இந்த கசப்பான அக்கறையை நாங்கள் பல வருஷங்கள் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அதே போல் நாங்கள் விஷமம் செய்தால் எங்களை அடிக்க மாட்டார். மாறாக
சுக்கை அரைத்து கண்ணில் போட்டு விடுவார். நாங்கள் பாதி கண் பாதியாக
சேர்ந்து அழுது அரற்றி விடுவோம். இந்த தண்டனை கண் ஆரோக்கியத்துக்கு
நல்லது என்று அப்போது பரம்பரை நம்பிக்கை..எங்களால் ஒப்புக் கொள்ள
முடியாத நம்பிக்கை.

அம்மா பிறந்த போதே தன் அம்மாவை இழந்தவர்.. மூன்று சகோதரர்களும்
இரண்டு சகோதரியுமாக ஒர் பெரிய குடும் பம் சரியான பராமரிப்பும் பரிவும் அற்ற சூழலில் தத்தளித்து வளர்ந்தது ..அந்த ஆதரவற்ற சூழலிலிருந்து தப்பித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய என் தாயாரின் சகோதரன் 'பாய்ஸ் கம்பனியில் சேர்ந்து பல சோதனைகளை தாண்டி வளர்ந்து பிற்காலத்தில் சிறந்த நாடகக் கலைஞராக மிளிர்ந்த எஸ்.வி ஸஹஸ்ரநாமம்

'' என் அண்ணா என்ன? நானும் நடித்திருக்கிறேன் '' என்று ஜம்பமாக சில சமயம் அம்மா சொல்வதுண்டு. ஆறு வயது குழந்தையாக இருந்த போது பள்ளிக் கூடத்தில் ஞானசௌந்தரி ' நாடகத்தில் கதாநாயகியாக நடித்து ''அழுது புலம்பியிருக்கிறாராம் '' சிறப்பாக ''அழுததற்காக சிறப்பு பரிசு பெற்றதாக சொன்னார். ''எப்படி அப்படி அழுதாய்? என்று கேட்டேன்.

''பொண் கொழைந்தெளுக்கு அழுகறத்துக்கு என்ன கஷ்டம் ?''சிரிக்கத் தான் முடியாது.. அப்போதெல்லாம் சிரிச்சாலும் அது குத்தம் ''

அவர்களுக்கு பல விஷயங்களில் ரொம்ப பிடிவாதம் உண்டு. அதை கௌரவமாக வைராக்கியம் என்றும் சொல்லலாம். சொந்த பேரன் கல்யாணத்தில் கூட சாப்பிடுவதற்கு மறுத்து தனியாக சமைத்து சாப்பிடுவார்..ஆசாரம்; மடி என்ற பரம்பரை வறட்டு வழக்கத்தில்.

சின்ன வயதில் ஸாமிக்கு நமஸ்காரம் செய்து ஸ்லோகம் சொல்லும் படி ஒரு கட்டளையாக என்னை வற்புறுத்துவார். அந்த ஸ்லோகத்தை ஒரு படத்தின் முன்னால் நின்று கொண்டு தான் சொல்ல வேண்டுமா.. நடக்கும் போது விளயாடும் போது அல்லது மனத்துக்கு தோன்றும்போதெல்லாம் சொல்லக் கூடாதா? என்று எனக்குள் எப்போதும் ஒரு போராட்டம் ஏற்படுவதுண்டு. நான் பெரியவனாகி முரண்டு பிடிக்கும்வரை என்னை ஸாமியின் முன் நிறுத்துவதில் கருத்தாக இருந்தார்.

இந்த பிடிவாதங்களால் மற்றவர்களின் மௌனமான கோபத்துக்கும் நிராகரிப்புக்கும் ஆளாவதை அவள் பொருட்படுத்தியதே இல்லை. அவளுக்கென்று ஒரு கடமையை ஒரு சூழலை ஒரு உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு திருப்தியுடன் வாழ்வில் ஆசையுடன் நல்ல சுவையான ஆகாரங் களில் நப்பாசையுடன் வாழ்ந்து முடிந்தவர்.

93 வயது வரை வாசிப்பையும் யோசிப்பையும் அவர் விடவேயில்லை. அந்த காலத்து மடிசிஞ்சி பத்திரிகை முதல் சமீபத்திய வணிகப்பத்திரிகை வரை சளைக்காமல் வார வாரம் கேட்டுக் கேட்டு வாசிப்பார்...என்னுடைய கதையோ கவிதையோ படிக்க நேர்ந்தால் நேரடியாக என்னிடம் சொல்லாமல் என் மனைவியிடம் அதை படித்ததாக சொல்லுவார்..

என் காரணமாக சில பத்திரிகை இலக்கிய ஆசிரியர்களை வீட்டில் பார்த்திருக்கிறார். அவர்களுடைய படைப்புகளை அடையாளம் கண்டு கொண்டு என்னிடம் அதை சுட்டிக் காட்டுவார்.

அமுத சுரபி ஆசிரியரின் எழுத்தை எங்கே படித்தாலும் அல்லது ஊடகத்தில் பார்த்தாலும் உடனே எனக்கு சொல்லுவார். [இது நிஜமான தகவல் ]

நூறு வயது வரை வாழவேண்டுமென்று அவருக்கு ஆசை இருந்திருக்கிறது. இந்த வாழ்க்கையும் இந்த உலக சூழலின் வேதனைகளும் அவரை தீண்டவே யில்லை என்று தோன்றியது..

இருதயம் தன் செயலை மெள்ள மெள்ள குறைத்துக் கொண்டு வந்த அவருடைய கடைசி தருணங்களில் கூட அவருக்கு உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற சபலம் இருக்கத்தான் இருந்தது. மிகுந்த தள்ளாமையையும் மீறி அவர் நாற்காலியை விட்டு எழுந்து நின்று கீழே விழுந்தார்..

பிறகு நகர முடியாத நிலையில் படுக்கையோடு இரண்டொரு நாட்கள் பிதற்றிய வண்ணம் கிடந்தார்.

சாவதற்கு சில மணி நேரங்கள் முன் ஏதோ நொறுங்கிய சத்தம் கேட்டு நான் அவள் அறைக்கு சென்று பார்த்தேன்.

அவள் அருகில் ஸ்டூலில் வைத்திருந்த கடிகாரம் கீழே விழுந்து  கண்ணாடி சிதறித் தரையில் கிடந்தது..

காலத்தை நொறுக்கியதான திருப்தியுடம் என் அம்மா கண்களை மூடிக் கொண்டு கிடந்தார்..

பனிப் பேழைக்குள் [ice box ] படுத்திருந்த அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவள் எதற்காகவோ சிரிப்பது போல் எனக்கு தோன்றிக் கொண்டேயிருந்தது..

வைதீஸ்வரன் -






Friday, September 3, 2010

மொழியற்ற உலா _ கவிதை

                               

கவிதை:

 மொழியற்ற  உலா
  ---------------------------

             தவழும் பூமியை நெருடும்
             ஈரக் கிரணங்கள்
             இளங்காலை.

              முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள்
              இலைகள  சூடிக் கொண்டு
               சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து
               வானவில்லைத் தரித்த மரங்கள்
               தோகை விரிக்கும் வழியெங்கும்.

                வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத
               வானம் முகில்களால்
                எழுதி எழுதிக் கலைக்கும்
                மொழியற்ற கவிதைகள்..    
                 பொழுதற்று.

                வேளைக்கு ஒரு நிறம் பூசித்
                 தன்னழகை விண்ணில் தேடியவாறு
                 அண்ணாந்து கிடக்கும் கடல்.

                 காற்றில் தள்ளாடும் மலரென மழலைகள்
                  புல்வெளியில் கூவிக் குதிக்கும் ஆனந்தத்தால்
                  இயற்கையின் எழில் ஒரு கணம்
                   தோற்றுப் போகும்.

                                    வைதீஸ்வரன்   [யுகமாயினி ]
               
                

ஞானத் தேநீர் - வைதீஸ்வரன் எழுதிய கவிதை

                           




ஞானத் தேநீர்.
                               --------------------------

       அந்தக் கடைக்கு நாங்கள்
       அடிக்கடி போவது
       அவள் தரும் போதைகாகத் தான்

       கொஞ்சும் அவள் பேச்சிடையில்  
       விம்மும் பெருமேச்சால்
        படபடக்கும் அவள் நெஞ்சு.

       நாற்காலிகளின் இடைவெளிகளில்
      அன்னத்தின் நளினத்துடன்
       நகரும்...நெருங்கும்...குலுங்கும்...குனியும்
       அவள் பணிவிடைப் பாங்கு
       நாங்கள்  பார்த்துத் தீராத கவர்ச்சி
                       
        எங்கள்  சுவைத்த கிண்ணங்களில்
        அவள் ஸ்பரிஸத்தின் எச்சம்
         சுவைக்கு சுவையூட்டும்

       பார்வை கிறங்கிய இருட்டில்
         அவள்  உடலை
        உருட்டிக் கொண்டேயிருக்கும்
         எண்ணங்கள்.
          வீடு திரும்பும் வரை!
   
          ஆனால் இன்று அவள்
          அந்த"  அவளாய் இல்லை.    
          உடம்பு வேறு தான் வேறாய்
           உட்கார்ந்திருக்கிறாள்.
           ஈ  விரட்டுவது  போல்
           எங்களை வரவேற்கிறது அவள் கை.

           நரைத்த கூந்தலுடன்
            கறுத்த பற்களிடையில்
           ஒழுகி வரும் சிரிப்பில்
            உடலின் ஓய்ச்சல்  வழிகிறது....

            இருந்தாலும்
             அவளிள்  ஊறும்  பிரியமோ
              மலர்ந்து பரவும் மனோரஞ்சிதம்!

             அவளைப் பார்த்த கணம்
             வெறியடங்கி
             சுகத்தின் மடியில் ஆழ்கிறது  காமம்
             காலத்தின்  மாயப் பூச்சழிந்து
             கருணை பரவுகிறது...காதலாக.
              போதையற்ற  போதம்
               பரவுகிறது  உள்ளெங்கும்.

                 திரும்பும் வழிகளில்
             உலகம் மூப்பற்று
              உள்ளம்  மிதக்கிறது
               நிர்வாணமாய்.


                                 வைதீஸ்வரன்   Published  in  Yukamaayini