vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, December 27, 2012


க.நா.  சு
 வைதீஸ்வரன்
க. நா. சு வை  யாருக்குத் தான்  தெரியாது?
க.நா. சு வை எனக்கும்தெரியும் என்று யார் தான்
சொல்லிக்கொள்ள  மாட்டார்கள்?
ஆனால் எனக்குத்  தெரியும் என்று நான் சொல்லிக்
கொள்ள முடியாது. அவருக்கும் என்னைத் தெரியாதது
போலத்தான்   ஊகித்துக்கொள்ள வேண்டும்.
தூரத்தில் காராக்ருகத்தில் பார்த்த
பொய்த் தேவுதான்  எனக்கு  அவர்  உருவம்.
ஐம்பது வருஷங்களுக்கு முன் என் தாய்மாமன் வீட்டுக்
கூடத்து  ஊஞ்சலில்   அவர் ஆடாமல் அசையாமல்
உட்கார்ந்திருக்கிறார். காட்சி  இன்னும் எனக்குள்  
ஆடிக் கொண்டிருக்கிறது.
பரிச்சயமில்லாத முகம் பயப்படுத்துகிறது.
பி.எஸ்.ராமையா  மணிவிழா பற்றிய சந்திப்பு.
 கூட வந்த செல்லப்பா  தான் குரலைக் காட்டினார்.
அவருடைய  மௌனம்  அலுக்க வைத்தது
அவருடைய  சிந்தனைப் போக்கை  அத்தனை எளிதாக
 ஊகித்து விடமுடியாது.
 அவர்  காட்டும் பாதையில் பண்டிதமும்  பகட்டும்
 அறவே  கிடையாது
இலக்கியம் என்று அவர் சொல்லும்   ஒன்றை   அத்தனை  சுலபமாக  அலட்சியம் செய்து விட முடியாது.   
சுயமாக சிந்திக்க நமக்குப் பொதுவான  சோம்பல்
ஆனால் திசை குழம்பிய வாசகனுக்காக  சிந்திப்பது
அவருக்கு  ஆயுட்கால  லட்சியம்.
அயராத  எழுத்து ..  ஓயாத  படிப்பு...        
தோழமையும்  சுய லாப நோக்கும்   
இரண்டாம்  பட்சம்.   
யாரை ஏன்  எப்படி ரஸிக்கிறார்  என்பது  மாலியின் மனோதர்ம
வாசிப்பு போல...... 
பருவத்துக்கு பருவம்  மாறும்  அபிமானங்கள்           .  .
உலகத்தின்   நல்லெழுத்தெல்லாம்  வாசித்து
ஊருக்குப்  பொழிந்தவர்..  அகில எழுத்துக்களை                                                                
தமிழுக்குள் வடிகாலாக்கி  வளப்படுத்தியவர் .
இலக்கிய மொழிக்கு தன்னலமற்ற  பங்களிப்பு... 
க. நா. சு  அதற்கொரு  முன்னோடி. 
கவிதையை  மாற்றி யோசித்ததில் .. இன்னொரு முன்னோடி.
ஒரு  பாமரனின்  சாதாரணமான   ஜீவிதம்  அதன்
இடர்ப்பாடுகள்.  விதிக்கப்பட்ட  துக்கங்கள்  
பிழைப்பு  பசி  சுயவிசாரணை   பழக்க வழக்க  முரண்பாடுகள்  
நடுத்தரப் பாசாங்குகள்  இதை எளிமையற்ற எளிமையாக
பேச்சு வழக்கே  கவிதையாக தொனித்தது அவர்  குரலில்
சி.சு செ க்கு சிக்காத கவிதைப் பாங்கு...

மணிக் கொடி கால  எழுத்தாளர்கள்  பலர்  மணி மணியாக
எழுதினார்கள்.  சிலர் கலங்கரை விளக்கானார்கள். 
சிலர் இலக்கியத்தின்   பொன்னெழுத்தானார்கள்
வாரிசுகளை ..... ஆராதிக்கும்  சீடர்களை  பெற்றார்கள்
ஆனால்  எழுத்தை  எடை போடுவதும்  தரம் பிரிப்பதும்
அலசி  ஆராய்வதும் கூர்மையாக  விமர்சிப்பதும்  பலனற்ற    
இலக்கிய  ஊழியம்.   .நா.சு  அதற்காக  தோன்றியவர்
மொழியின் படைப்பு வளத்தை அதன் இருப்பை  காலத்தின்        
பின்புலத்தில் பொருத்தமாகத்  தைத்து வைப்பவர்.    
ஆயுட்கால அர்ப்பணிப்புள்ள  விமர்சகர்கள்              
அவர்கள்  சேவை   தச்சனின் உழைப்பைப் போல..
மொழியோடு  கரைந்து  மறைந்து  ஆரவாரமற்று  நிற்பது. 
பாராட்டுக்குத்  தப்பித்துக் கொள்வது. 
 க.நா. சு  அப்படி ஒரு  பெருந் தச்சன்.  அவர்  சிற்பியல்ல.

0
  

Thursday, December 20, 2012

கவிதை



வேற்றூரில் ஒரு காலை
               
                                       வைதீஸ்வரன்


      அசையாமல் அசைந்து 
      காற்றை மெல்லக் காட்டிக் கொடுக்கின்றன..
     
மேகங்கள்.
      பறவைகள் பூத்த மரங்களின் கன்னம் சிவந்து
     
கனிகள் பாடுகின்றன காலைஇசையை..
      துவளும் பூமியை மெள்ளத் தடவும் கிரணவிரல்கள்
     
கிளுகிளுக்கின்றன  பசுமை சிலுசிலுத்து
      வழக்கத்திற்கு அடிமையற்ற வானம்
     
உன்னத ஒவியங்களை ஓயாமல்
     
எழுதிக் கலைத்துக் கொண்டே  சிரிக்கின்றன
      வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசமழிந்த புள்ளியில்
     
மௌனத்தில்  சயனித்திருக்கிறது உள்மனம்..
      தற்காலிக மரணத்தின்
     
அழகான சமாதி வரிசைகளாக     
     
சாலையின் இருமருங்கிலும்
     
உறங்கும்  வீடுகள்
     
உயிர்களை தாலாட்டியவாறு....

 
 0

Thursday, November 15, 2012


           
சிறுகதை                    
மலைகள்
                    ----------------------------------------வைதீஸ்வரன்

அந்த மலைகள் என்னை என்னவோ செய்தன. தினம்தினம்செய்து கொண்டிருக்கின்றன. அவைகளை தூரத்திலிருந்து பார்க்கும் போதெல் லாம்  ராம லட்ச்மணர்கள் மாதிரி;  இரட்டையானைக் குட்டிகள் மாதிரி வானை முட்டிக் கொண்டு நிற்கும் காளைக் கொம்புகள்  மாதிரி இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறையும். சில சமயங்களில் அவைகள் மனதில்  விபரீதமான பாலுணர்ச்சிகளைக் கிளறி விடுவ தையும் நான் உணர்கிறேன். அமானுஷ்யமான உருவத்தில் ஒரு அழகுப்பெண்னை எதிரே கண்டு அணைத்துக்கொள்ள சக்தியற்றுத் தவிக்கும் வேதனை அந்த மலைகளைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படுவது உண்டு. அவைகள் வெறும் மலைகள் தான் என்று தட்டிக் கழிக்க நான் ஒரு போதும் விரும்பியதில்லை.


உச்சிவெய்யிலில்  ட்ரங்க் ரோடில்  இரண்டு மூன்று பர்லாங்குகள் நடந்துபோய் ஒரு குறிப்பிட்ட ஆலமர நிழலில் நின்றுகொண்டு அந்த மலைகளைப் பார்ப்பது எனக்கு அன்றாடப் பொழுதுபோக்கு. லாரி களின் ஓயாத பாய்ச்சல்களால் கிளம்பிக் கண்களை  வருத்தும் புழுதி யையும் பொருட்படுத்தாமல் மலைகளைப் பார்த்துக் கொண்டு நிற்பது நாட்பட நாட்பட எனக்கு தீராத  போதைப்பொருளாக மாறி என்னை சாலையில் நட்டு நிறுத்தின.  இனி அவைகளைப் பார்க்காமல் என் பகல் வேளைகள் நகராது.
                        ********
  ஆபீஸில் சின்னச் சேருக்கும் மேஜைக்கும்   நடுவில் உடம்பைப் புதைத்துக்கொண்டு கணக்கைப்  புரட்டி வார்த்தையைப் புரட்டிக் காலத்தைக்  குப்பையடித்து  விட்டு உணர்வு செத்த பகலில் பசியும் இழந்து  சோகைபிடித்த மனத்துடன்  கூட்டங்  கூட்டமாக ஹோட்டலை நோக்கி நகரும் பிராணிகளில் நானும் ஒருவன்.
 ஆனால் நடுப்பகல் என்னைப் பேயாக்கி விடும். உடம்பை உலுக்கிக் கொண்டு என் பசியைத் தேடிக்கொண்டு  டிரங்குரோடில் தலைதெறிக்க ஓடுவேன்; லாரிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு....
 ...............என் பசியைத் தேடிய வாறு.........
ஆலமரத்து நிழலில் நின்று  கொண்டு பார்த்தால் என் பசிகள் பச்சைப் பசேலென்று கண்களுக்குத் தெரியும்...உயிரைத் தொடும்..
 பைல்களின் கனத்தை உதைத்தெறிந்துவிட்டு அந்த மலைகள் என் மனத்தை எட்டி அடைத்துக்கொள்ளும்.  உயரமும் அகலமுமாய் மனசு விரிய விரிய சிசு துள்ளும் வயிறாய் எனக்குப் பெருமிதமும் கர்வ மும் ஊற்றெடுக்கும்.  பசி  பிறக்கும்
 அந்த மலைகளைச் சுற்றி அரணாக்கயிறு மாதிரி  கட்டிக்கொண்டிருக் கும் ரயில்தண்டவாளங்களில்  சில வேளைகளில் சிவப்பு ரயில் பெட்டிகள் பொன்வண்டுக் கூட்டங்கள் மாதிரி நகர்ந்து மறைவதைக் காணும்போது எனக்கு ஏதோ ஆங்கிலப் படக்காட்சிகள் நினைவுக்கு வரும்.
இன்றும் அப்படித் தான்... ஆலமரத்து நிழலில் நின்று மலைகளைப் பருகிக் கொண்டிருந்தேன்.சிப்பாய் ரெக்ரூட்டுகள் கூட்டங்கூட்டமாக   மலைச்சாரலில் குப்புறப் படுத்துக்கொண்டு துப்பாக்கி சுட்டுப் பழகிக் கொண்டிருந்தார்கள். மலையின் அடிவாரங்களில் சற்றைக் கொரு தரம் மண் அலைகள்  குபீர் குபீரென்று எழும்பிமடிவதையும் தோட்டா வின் சப்தங்கள் சற்று லேட்டாக என் காதுகளில் வந்து விழுவதை யும் அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
 மலைக்கு முன் மனிதர்கள்  கும்பிட்டு விழுந்து சக்தியைவேண்டித் தவிப்பது போல் பட்டது எனக்கு..
 எனக்கு மலையைத் தொடவேண்டும்போல் இருந்த்த்து. ஏதோ இன மறியாத பயமோ  கூச்சமோ என்னை இத்தனை நாட்களாக அதனிடம் நெருங்கவிடாமல் தடுத்து  நிறுத்திவிட்டதாக எனக்குத்   தோன்றியது. சிப்பாய்களின் துப்பாக்கிகள் எனக்கு அந்த உணர்வை போக்கித் துணிவைக்கொடுத்தது. நான் மலையைநோக்கி மெள்ளமெள்ள  நடந்து போனேன்.
 டிரங்க்ரோடை விட்டு குறுக்கே  பள்ளத்திலிறங்கி புல்வெளிகளைக் கடந்து ரயில்கேட்டைத் தாண்டி நடந்தேன். பரந்த நீலவெளியில் மலைகள் நீண்டு அகன்று படர்ந்து கொண்டே வந்தன. ரோமங்கள் மாதிரி மலை மேனியில் புற்களும் தாவரங்களும் தெளிவு படலா யின. மலையினுச்சியில் சிவப்பு வெள்ளைப் பட்டையிட்ட சின்னக் கோயில் சுவரும் யாரோ  புடவை உலர்த்திய   மாதிரி தெரிந்தது.
சிப்பாய்கள் சுட்டு விட்டு துபாக்கிகளை மடக்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சிவெய்யிலைப் பார்த்துக்கொண்டு பூட்ஸுகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.  சிலர் என்னை உற்றுப்பார்த்து விட்டு மெல்ல சிரித்தார்கள்.
 நான் அவர்களை அவர்கள் சிரிப்புகளைக்கடந்து  மலைப் பாதையில் நகர்ந்துகொண்டிருந்தேன்.  அவர்கள் சிரிப்பும்பேச்சும் மெல்ல மெல்லக் குறைந்து அடங்கிக் கொன்டிருந்தன.
மலைகளும் என்னையும் தவிர  வேறு யாரும் அங்கிருப்பாதாகத் தெரியவில்லை. அந்த விரிந்த மைதானத்தில் மலைகளின் இடைவெளிகள் கொல்லன் துருத்தியாக்க் காற்றை ஒரே திசையில் பாய்ச் சிக் கொண்டிருந்தது.  அதன் வேகத்தில் நான் லேசாகி காற்றாடி வாலாகத் தள்ளாடினேன். தன் முயற்சியற்று காற்றோடு காற்றாகத் தள்ளாடுவது மனதிற்கு பேரனுபவமாக இருந்த்து. யாரோ என்னைக் குழந்தையாக்கித் தொட்டிலாட்டுவது போல்...
 மலையை  அம்மாவென்று  கூப்பிட வேண்டும்போல் இருக்கிறது..
 மலைகள் விசுவரூபம் எடுத்து  என் முன்னால் நின்றன. எனக்குக் கொள்ள முடியாத நிறைவு.   நான் மலையைக் கிட்ட நெருங்கி   விரல்களால் மெல்லத் தடவினேன்.... மணபெண்ணைத் தொடுவது மாதிரி..அதன்  மீது வளர்ந்துகிடக்கும் இலைகளையும் புற்களையும் இங்குமங்கும் வாரி இறைத்தேன்.
நெஞ்சையும் காதையும் அதன் மீது வைத்துக்கொண்டு உற்றுக்கேட் டேன். முதுகைஅதன்மீது  சாய்த்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு  மல்லாந்து கிடந்தேன்.  கர்வம்... மயக்கம்.... தள்ளாமை... ஆனந்தம்... துக்கம் ..எல்லாமே கலந்து நெஞ்சை மத்தாகக் கடைந்தன.
 சற்று நேரம் பொறுத்து கண்ணை மெள்ளத் திறந்து  பார்த்த போது என்னை வெறும் நீலவானமும் வெற்று வெளியும் சுற்றிக் கொண்டி ருந்தன.
வெகு தூரத்தில் சிப்பாய்க் கூட்டங்களும்  ஆலமரங்களும் ட்றங்க் ரோடும் ஒன்றோடொன்று  குழம்பி பதினெட்டாவது செஞ்சரி இயற்கை வண்ண ஓவியமாக மங்கி மக்கலாக மாற்றிக்கொண்டிருந்தன.
  நான் மலையை விட்டு நகர்ந்து  காற்று வந்த திசையை நோக்கிக் குதித்து  நடந்தேன்.நிர்ஜனமான  அந்தசமவெளியில்உரக்கத் தொண்டை  கிழிய குரல்போன போக்கில் கத்தினேன். ஒலியை மனம் போன போக்கில்  வளைத்து  இறக்கி ஏற்றி விடுதலையாகக்  கூவினேன்.
 தெரிந்த ராகங்களும் போட்ட தாளங்களும்  என்னை எள்ளவும்  கட்டுப் படுத்தவில்லை. புதுப்பாட்டுப் பிறந்தாலும் பிறக்கட்டும்  புதுத் தாளம் சேர்ந்தாலும் சேரட்டும் எனக்கு எதுவும்  அகரையில்லை
பாய்ந்த மலைக்காற்று வெள்ளத்தில்  என் ஒலித் துளிகள் சின்ன சின்ன மலர்களாக  மிதந்து மிதந்து மௌனத்தில்மறைந்து கொண்டி ருந்தது.
 நான் மேலும்மேலும் பாடிக்கொண்டே [இல்லை,கத்திக் கொண்டே} காற்றை  எதிர்த்து நடந்து கொண்டிருந்தேன்.  சற்றே என் ஓசையை நிறுத்தி விட்டு மௌனத்தை உற்றுக் கேட்ட போது ஏதோ சதங்கை ஒலிகள்.....
மெள்ளக் காதில் விழுந்தன.  ஜன சஞ்சாரமற்ற  அந்த பிரதேசத்தில் சதங்கை ஒலிகள் எனக்கு நிதானிக்க முடியாத புதிராக இருந்தன.
 வெறும் வெட்டிப் பிரமைகளை மனதில்வளர்த்திக்கொண்டு பறப்பதில் எனக்கு விருப்பமில்ல.  மலைக்குப் பின்புறம் காட்டு வெளியிலே ஏதோ மோகினிக் கூட்டமோ வன தேவதைகளோ காலில் சலங்கை கட்டிக்கொண்டு  நடனம் பயின்று என்னை மயக்கி அழிக்க சதி செய்துகொண்டிருப்பதாக கற்பனை செய்து என்னை ஏமாற்றிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனாலும்  அவைகள்--  அந்த சப்தங்கள் -சதங்கைகள் தான்.. நடை பயிலும் சின்னக் குழந்தைகளின் காலில் ஒன்றாகக் கட்டிக் குதிக்கவிட்ட மாதிரி  இன்பஓசைகள் என்னைக்  குழப்பதில் ஆழ்த்தின.
  நான் மூச்சிரைக்க மேடேறி சப்தம்வந்த திக்கைநோக்கி விரைந்தேன்.
 அநேகமாக மலையின் உச்சியையே அடைந்து விட்டேன். ஓசைகள் கணீர் கணீரென்று இன்னும் தெளிவாக பலமாகக் கேட்ட்து.
பாதை முடிந்துவிட்டது. பாதை முடிந்து  ஆளுயரப் பாறைகள் வழி அடைத்துக்கொண்டுவிட்டன மலையின் மறுபக்கம் செங்குத்தாக கூர்மையாக சரிந்திருந்திருந்தது. பாறையின்மேல் மெள்ளக் கையூன்றி ஏறித் தலைதூக்கி மலையின் மறு பக்கம் எட்டிப் பார்த்தேன். மறு கணமே திக்கென்று அதிர்ச்சியுற்று தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டேன். ஒரே கணத்தில் அந்தப் பள்ளத்தாக்கில் சுமார்  நூறு பேர்களை  ஒருங்கே கன்ணுற்ற போது   மனம் வெலெவெலத்தது
 நூறு பேர்கள் -  ஆதற்கு மேலுமிருக்கும்   சில நிமிஷங்கள் என் கண்களையே நம்பமுடியவில்லை. ஜன சஞ்சாரமே அற்ற அந்த மலை பிரதேசத்தில் தனியாக வெகுதூரம் நட்ந்து விட்ட பிறகு அந்த திடீர் பள்ளத் தாக்கில்  அவ்வளவு  மனிதர்களை எதிர்ப்பட்டது  எனக்கு ஏதொ மாய உலகத்தை நினைவுபடுத்தியது.  ஆனால் சிலகணங்கள் தான்..
  நன்றாக உற்றுப் பார்த்த போது அந்தக் கூலிகள்  மடுவில் நின்று   சம்மட்டிகளைக் கொண்டு பாறைகளைப் பிளந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஒரு இரணூறு கரங்கள் ஆயுதமேந்தி ஒய்வு உளைச்ச லின்றி மலையைமலைப்பாறைகளை மாறி மாறித் தாக்கிக் கொண்டி ருந்தார்கள். ஏதோ கடிகார அசைவுகள் போல் அவர்கள் இயக்கம் சீரான  வெறியுடன்  இயங்கிக்கொண்டிருந்தன.
அவர்கள் அடித்த அடியில் அங்கே என் மலைகள  துகள் துகளாக் சிதைந்துகொண்டிருந்தன.மலைக்குப்பின்  ஒளிந்துகொண்டு இத்தனைக்   கூட்டங்கள் மாசக்கணக்காக  வருஷக் கணக்காக மூர்க்கமாக மெள்ள மெள்ள  மலையைக்  குடைந்து கொண்டிருக்கிறார்கள். காசம் பற்றிய மார்க்கூடாக மலைமுதுகு மெலிந்து திடமிழந்து  இருள் செதிலாக மாறிக்கொண்டிருக்கும்விபரீதத்தைக் கண்டு  என் கண்களில்  நீர் துளிர்த்த்து.  இது சதி -  மனித ஜாதியின் வழக்கமான பெரும் சதி----
 நான் கேட்ட ஒலிகள் சலங்கை ஒலியல்ல..சம்மட்டி ஒலிகள் ...அடங்காப் பசியுள்ள மிருகங்களின் வெறித் தாக்குதகள்....
சூரியன் உச்சியை விட்டு சற்று இடப்புறமாக சரிந்துகொண்டிருந் தான்.
   “  பூ...ம்  என்று  திடீரென்று பள்ளத்தாக்கின் ஆழத்திலிருந்து   நீண்ட   சங்கொலி  வெளியெங்கும் பரவியது.. நான் அமைதியற்றவனாக   மீண்டும் பள்ளத் தாக்கை எட்டிப்பார்த்தேன்.   சிறு சிறு மனிதக் குஞ்சுகள்  கலைத்து விட்ட எறும்புக்கூட்டங்கள் மாதிரி கலைந்து கொண்டிருந்தன. பிறகு  கூடி  ஒரு சாரியாக நகர ஆரம்பித்தன.   அவர்களின் பேச்சொலிகளின் கடைசி  எழுத்து மட்டும் என் காதோரம் பட்டு நகர்ந்து போயின. பள்ளத்தை விட்டு அவர்கள் மெதுவாக ஒற்றைப் பாதையின் வழியாக மேலேறிக்கொண்டிருந்தார்கள் என் திசையை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர்  பெண்கள்..அவர்களில் சிலர் குழந்தைகள் கூட...
மேலேறி நெருங்கி வர வர அவர்களின்  பழுப்பான ஆடைகளும்  பரட்டையாகக் காற்றில் அலையும்  கேசங்களும் கருப்பு உடல்களும் தெளிவாகிக் கொண்டு வந்தன.  தோளில் தொங்கிய சோற்றுக் கலயங் கள் கூடவே தலையாட்டிக்கொண்டு வந்தன.
அந்தக் கூட்டத்தில் முதலில் ஒரு கிழவன் ஆடி அலுத்து நடந்து வந்துகொண்டிருந்தான். நான் நின்று கொண்டிருந்த திசையை நோக்கி நெருங்கி வந்து மெதுவாக வந்துகொண்டிருந்தான். என்னைக் கடந்து சென்றபோது பல்லற்ற வாயை விரித்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே பாதையின் மறுபுறம் இறங்கினான்  அவன் காய்ந்த வழுக்கைத் தலைக்கு மேல்  சும்மாட்டில் ஒரு சின்ன மலைக் குஞ்சு உட்கார்ந்துகொண்டிருந்த்து. 
 கிழவன் பின்னால் ஒரு  இளம்பெண் நடந்துபோனாள்..பிறகு ஒரு வாலிபன் நடந்து போனான்  அவன் பின்னால்  ஒரு சிறுவன்... ஒவ் வொரு வரும் ஒரு  சின்ன “மலையைத் தோளிலோ தலையிலோ சுமந்து கொண்டு அரிசியேந்தும்  எறும்புகளாக நகர்ந்துகொண்டிருந் தார்கள் கடைசியில் ஒரு குழந்தையுமொரு சின்னக் கல்லை சுமந்து கொண்டு கோவணத்தோடு  பாதையின்  சரிவிலிறங்கி ஓடியது. 
எல்லோரும் போய்விட்டார்கள்.  அவர்கள் சென்ற திசையை சற்று நேரம்  பார்த்தவாறு  நின்றிருந்தேன்.  எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அதே பெருந்தன்மையுடன்  நின்றுகொண்டிருக்கும் அந்த மலையைப் பார்த்து பெருமூச்சு விடுவதைத் தவிர   எதுவும் செய்யமுடியாதவ னாக நின்றேன்.
மலையைத்  திருடிப் பிழைக்கும் மனித ஜாதிகளுள்  நானும் ஒருவன் தானே!  இது உண்மை.  எனக்கும் பசித்தது.  இதுவும் உண்மைதான்.
நான் சாலையைக் கடந்து சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தேன்
  * [1968  தீபம் இதழில் வெளியானது] .

Friday, October 26, 2012


என்னை  வளர்த்த  சென்னை
    வைதீஸ்வரன் 
         

 ஒரு குழந்தை  பிறந்து விளையாடி  வாலிபனாய் வளர்ந்து  நடு வயதின் பக்குவத்தை அடைந்து  வயதாகி முதுமை எய்தி  நலிவுற்று நோய் படர்ந்து  பிறகு மெல்ல மறைந்து போகும் பான்மையில் தான்  நம் பூமியில் நகரங்களின் சரித்திரமும்  பரிணமிக்கிறது  என்று  நினைக்கிறேன்..

நான் வளர்ந்து வாழ்ந்த சென்னை பட்டணத்தையே எடுத்துக்கொண்டால்  இத்தகைய கால வளர்ச் சியை கண்டு    அறிய முடிகிறது.

கடலை நம்பி வாழ்ந்த  ஏழை மக்கள் ஜீவிக்கும்  கால்வாய்கள்  நிறைந்த கிராமமாக கடந்த நூற்றாண் டுகளில் தோற்றம்  கொண்ட சென்னை  இன்றைய காலம் வரைக்கும்  எத்தனையோ வாழ்வு மாற்றங் களை  ஏற்றுக் கொண்டு  ஒவ்வொரு  கால கட்டத்திலும் ஒரு புதிய நாகரீகத்தை போர்த்திக்கொண்டு வளர்ந்திருக்கிறது.

கடந்த அறுபது வருடங்களாக நான் கண்கூடாக பார்த்து வரும் இந்த சென்னை நகரம் தான் எத்தனை சாயல்களை  மாற்றிக் கொண்டிருக்கிறது??

நாற்பதுகளில் தெருக்களின் நட்ட நடுவில் தண்டவாளத்தில் ட்ராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன.. மக்கள்   எதிர்ப்படும் ரிக் ஷாக்களையும்  சைக்கிள்களையும் கடந்து  சுதந்திரமாக  வீதியில் திரிய முடிந் தது. கார்கள் அபூர்வமாக  தெருவின் காட்சிக்கு ஒட்டாமல் அன்னியனைப் போல்  ஓடிக் கொண்டிருந் தன.


பையில் பத்து ரூபாய் இருந்தால் ஒரு பெரிய தொகையை சுமந்து செல்லும் கவலையும் எச்சரிக்கையும் மனதை ஆட்கொண்டவாறு  பையை அடிக்கடி தொட்டுப்பார்த்துக் கொண்டே நடக்க வேண்டி வரும்!..

 அந்த காலகட்டத்தில்  கூவம் அத்தனை அழகாக பருவத்தை எட்டும்  கிளுகிளுப்புடன் ஓடிக் கொண்டி ருக்கும்.. அந்த நினைப்புக்கு  என் வயதும்  ஒரு காரணமாக இருக்கலாம்.

சென்னையின் குறுக்கு மறுக்காக ஓடும்  கூவத்து வாய்க்கால்களில் நீண்ட பெரிய படகுகளில் தேங்காய் மூட்டைகளும்  மீன்கூடைகளும் வைக்கோல் பொதிகளும் கடந்து போவதை நான் கரையோரம் நின்று  வேடிக்கை பார்ப்பதுண்டு.

 அந்த காலத்து  ஓவிய மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த சில   வாரங்களுக்குள்ளே இந்தக் கூவக் காட்சிகளை நேரில் பார்த்து   வரைவதை  ஒரு ஒரு பெரிய கலா அனுபவமாகவே பயின்று வந்தார்கள்.  


 அந்த வருடங்களில் ஒரு முறை  கூவத்தில் படகு மூலமாக பயணம் செய்து மகாபலிபுரம் போயிருக் கிறேன். அப்போது சென்னையிலிருந்து மகாபலிபுரம் போவதற்கு நேரடியான சாலைகள் கிடையாது.


 உ.வே.சாமினாதய்யர் கூட ''என் சரித்திரத்தில்'' இந்த மாதிரி பயணத்தை குறிபிட்டிருக்கிறார்..

சுதந்திரம் கிடைத்து பத்தாண்டுகளில் எங்குபார்த்தாலும் தொழில் வளர்ச்சிகளின் வேகமும் பொருளா தார வளர்ச்சியின் பாதிப்புகளும் ஊர்களை நகரமாக  சந்துகளை சாலைகளாக மாற்றத்தொடங்கியது. சின்ன சின்ன ஓட்டு வீடுகள்  லாயக்கற்ற கிழவர்களைப்போல் ஆட்டங்கண்டு இடிந்து புதிய காங்க்ரீட்  மாளிகைகள்  முளைக்க   ஆரம்பித்தன. 

    
இத்தனை மாற்றங்களையும் சாதிப்பதற்கு  நிறைய மனித உழைப்பு  தேவையாக இருந்தது. நகரத்தை சுற்றியிருந்த கிராமங்களில் இருந்து   நிறைய  தொழில் சார்ந்த மனிதர்கள் சென்னை யில் குடியேற ஆரம்பித்தார்கள்.

அதிகவசதிகள் இல்லாத  பல ஏழைத்தொழிலாளி கள் கூவம் வாய்க்கால் கரைகளில் குடிசைகளை போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். அப் போது கூவத்தில் துணிகளை துவைத்து குளிக்க முடியும். 

இம்மாதிரி காட்சிகளை பார்த்துக்கொண்டிருப்பது எனக்குள்  ஒரு கனிவான நெகிழ்ச்சியை கொடுக்கும்..அந்த ஏழை மாந்தர்களின் எளிய ஜீவனத்துக் குள் ஆசைகள் நிராசைகள் கனவுகள் காதல்குடும்ப பாசங்கள் என்று எத்தனை உணர்வுகள் அந்த கூவத்தின் ஓட்டத்தைப்போல் ஓடிக் கொண்டிருக்கும்!


அந்த அனுபவத்தின்  பாதிப்பில் எழுந்த இந்த மெல்லிசைக் கவிதை  இப்போது மீண்டும் கண்டெடுத் தேன். நீங்களும் வாசியுங்கள்..
              
                                      ********************
                ஏழையின் கனவு
    [1961-இல் எழுதப்பட்டது]
             ----------------


        கூவம் நதிக் கரையோரத்திலே


        கேளடி பொன்னம்மா

        குடிசை யொண்ணு கட்டப் போறேன்
        நானடி பொன்னம்மா


        பாயி பானை சட்டி யடுப்புகள்


        கோடித் துணிமணிகள்

        சீப்புகள் சாப்பிடத் தட்டுகளும்
        சீராய் வாங்கிடுவேன்


        நானும் நீயும் நல்ல ஜோடியடீ


        ஆமடி  பொன்னம்மா

        நாளொன்று பார்த்து நல் நாழிகையில்
        பால் காய்ச்சி உண்போமடீ


       காலையில் உன் முகம் கண்டு விழித்தால்


       கஞ்சியு மேதுக்கடீ

       காதலமிர்தத்தை உண்டவனுக்கே
       சாதமும் ஏதுக்கடீ


       வேலை முடிந்ததும்  கூலி கிடைத்ததும்


       ஓடோடி வந்திடுவேன்

       சாலையில் விற்றிடும் சாமந்தி முல்லையை
        சலீஸாய் வாங்கிடுவேன்
       
        மாலை வெய்யிலிலே நீலக்குயிலென
       கோலமாய் நிற்பாயடீ
       கால்வலி கைவலி யாதுமறந்து நான்
       காதல் மொழிவேனடீ


      கூலிக் காசு கொஞ்சம் குறைவென்றாலும்


      குழந்தை வேணுமடீ

      கூழுக் கஞ்சி மிகக் கொஞ்சமென்றாலும்
      பாசங்கள் வேண்டுமடீ


      பாலனொருவனைப் பெற்று விடு  நானும்


      பார்த்து மகிழ்வேனடீ

      கூவம் நதிக் கரை பிள்ளைகளோ டவன்
       கூடிக் களிப் பானடீ
       
      ஆத்திச் சுவடிகள் அரிச்சுவடிகள்
      யாவையும் கற்பானடீ
      சாலை விளக்கினில் பாடம் படித்தாலும்
      ஜகத்தை ஆள்வானடீ




     
     0