vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, January 29, 2015

அகராதி

அகராதி

 வைதீஸ்வரன்





 அஹிம்சை என்றால் என்னவென்று

கேட்டான்  என்  குழந்தை

அர்த்தம்  எனக்கு  எப்போதோ  படித்தது.

மறந்து  போச்சு.

அக்கம்பக்கத்திலும்  ஆருக்கும்

நினைவில்லை.

ஊருலகத்தில்  அப்படி  ஒரு

வார்த்தை  உண்டாவென்று

என்னை  வேடிக்கையாகப்  பார்த்தார்கள்

பழங்கால  அகராதியைப்  புரட்டினால்

நிச்சயம்  பொருள் இருக்குமென

தூசு  தட்டிப் பார்த்தேன்

நல்ல வேளை  அகராதி  மீதி  இருந்தது;

செல்லரித்த  வரை படமாக

ஆவன்னா  பக்கத்தைப்

பிரித்துப்  பார்த்தேன்

ஒட்டிக்  கொண்டு  கிடந்தது சடையாக.

போராடித்  தான்  அதைத்

திறக்க  முடிந்தது.

ஆனாலும்  “ஆ”வில்  ஒரு  பொத்தல்

அறம்  அன்பு  ஆனந்தம்

ஆறுதல்  அமைதி  அத்தனையும்  பொத்தல்

“அ”ஹிம்சை  ஹிம்சையாக  இருந்தது

அகராதியைத்  தூக்கி  எறிவது  தவிர

வழியில்லை. அல்லது  எடைக்குப்  போட்டு

குச்சிக் கிழங்கு  வாங்கலாம்

மறந்து  போன  விஷயத்தை

மகனிடம்  ஒப்புக்  கொள்ள வேண்டியிருந்தது.

வெட்கமாயிருந்தாலும்.

பொருளைத்  திரித்துக்  கூறுவது

ஒரு  தலைமுறைக்கு  நான்  செய்யும்

துரோகம்.

மகனே!..எனக்குத்  என்றோ தெரிந்ததை

உனக்கு  நிரூபிக்க  முடியாத  சூழல்  இன்று.

முடிந்தால்  அதன்  பொருளை

மீண்டும்  நீ  கண்டறிந்து  கொள்..ஆனால்

மீண்டும்  தொலைத்து  விடாதே....

என்று  பொதுவாகச்  சொல்லி  வைத்தேன்.


    









                  

Monday, January 26, 2015

அ “சோக” சிங்கங்கள்


       சோகசிங்கங்கள்

வைதீஸ்வரன்
26 janauary  15





கூட்டங்கள்  நெரிசலாகி
வாகனங்கள்  திசை  மாறி
அலை மோதும்
இந்தியச்  சாலைகளால்
என்றோ  மருண்டு  போய்
நாற்சந்திக்  கம்பங்களில்  ஏறிக்  கொண்ட
நான்கு  சிங்கங்கள்
இறங்கிக்  கடப்பதற்கு
இன்னமும்  காத்துக்  கொண்டிருக்கின்றன.


Monday, January 12, 2015

ஓலையும் மாலையும்

ஓலையும்  மாலையும் 
வைதீஸ்வரன்




என்  விமான  சேவைத் தொழிலில்  ஒரு  சம்பவம்  ஞாபகத்துக்கு  வருகிறது.

என்  சக  ஊழியர்  ஒருவன்  ஓய்வு  பெறுவதற்கு  இரண்டு  நாட்கள்  இருந்தன.  அவன் என்னுடன்  டியூட்டியில்    இருந்தான்.

 அப்போது விமானம் தரை  இறங்கி  விமானஓட்டி  உள்ளே  வந்தவுடன்  மறு நாளை க்கு  எந்த  FLIGHT  பறக்க  வேண்டும்  என்கிற  தகவல்  உள்ள  கடிதத்தை அவனி டம்  கொடுக்க வேண்டும்.

  என்  வயதான  சக  ஊழியன்  ஆர்வமாத்தால்  "நானே  இந்தக்  கடிதத்தை  அந்த பைலட்டிடம் கொடுத்து விடுகிறேன்.  ஏனென்றால்  அவன்  என்  நல்ல  நண்பன். அவனிடம்    சந்தித்துப்  பேசி  விடை பெற்று விட்டு  நானே  கொடுத்து  விடுகிறேன்" என்று  வாங்கிக்  கொண்டு  வெளியே  அந்த  விமான  ஓட்டியை  சந்திக்கப்  போனான்

மறுநாள்  அந்த  ஓய்வு  பெறும்  ஊழியனுக்காக  சின்ன  பார்ட்டி  நடந்து  கொண்டிருந்தது.

அப்போது  இரண்டு  மூன்று  பேர்  ஓடி  வந்தார்கள் . ”விமானம்    PILOT  வராமல்  நின்றுகொண்டிருக்கிறது. அந்த  விமானஓட்டி  வீட்டில்  இல்லையாம்.  அவருக்கு   இந்த  FLIGHT  பற்றி  யாரும்  தகவல்  கொடுக்கவில்லையாம்"  என்றார்கள்

 சக  ஊழியன்  கழுத்தில்  மாலையைப்  போட்டுக்கொண்டு  மேடையில் பேந்தப் பேந்த  விழித்தான்  அவன்  அந்தக்  கடுதாசியை  விமான  ஓட்டிக்கு  கொடுக்க  மறந்து  போயிருந்தான்!!!!!!!!!!

பிரிவுபசாரத்தின்  இடையில் அவனை  எப்படி திட்டுவது ?  அதுவும் அந்த  சமயம்
அவனுடைய  இத்தனை  ஆண்டுகளான  திறமையான  சேவையைப்  பற்றி  .  யாரோ  மேடையில் புகழ்ந்து தள்ளிக்  கொண்டிருந்தார்கள்  என்ன  செய்வது??

பைலட்டுக்கு  வயித்தாலை  அதனால்  வரவில்லை’, என்று  வேறு  ஏதோ காரண த்தை    சொல்லி  சமாளித்தோம்  அன்று  FLIGHT    ஒரு  மணி  நேரம்  தாமதமாக   
புறப்பட்டது"

ஊழியன்  தொழிலில் இவ்வளவு  ஸீரியஸான  தப்பை  செய்து  விட்டு  மாலையும்  
சால்வையுமாக  வீட்டுக்குப்  போனான்!!  அவனுடைய  ராசி!!




Saturday, January 10, 2015

கவிதைகள் _ சொல்ல நினைத்தேன்(இரண்டு) , விழித்த போது

 கவிதைகள்

      சொல்ல நினைத்தேன் [இரண்டு] 



இன்றைய  வெளிச்சத்தில்

இசைந்து
  வாழ்

நாளை
 என்பது கற்பனை இருட்டு

நினைத்து
  மருகுவது  பேதமை

இரண்டையும்
  இயக்குவது

ஏதோ
  ஒரு  உண்மை

இன்னதென்று
  புரியாத

எண்ணங்களின்
  இயலாமை

* * *
 விழித்த  போது

             இரவின் மிச்சம்  இன்னும்  

இருக்கிறது


  காற்று  இன்னும்  தோட்டத்தைத் 

  வருடுகிறது.

  இளங்காலை  இலைகளில்

  பளபளத்து  வழிகிறது;

  குஞ்சுக் கதிரின்  மழலை ஈரம்.

  நெஞ்சுக்குள்  பஞ்சுப்பூவைப் 

போல்

        ஒரு  புதுச்  சொல்.



         * * *

வைதீஸ்வரன்

Sunday, January 4, 2015

பாரம்

பாரம்



வைதீஸ்வரன்


இதோடு  மூன்றாம்  முறையாக  இப்படி  ஆகி விட்டது.  

உமாவின்  அம்மாவுக்கும்  அப்பாவுக்கும்  கவலையும்  பாரமும்  இப்போது  மேலும் அழுத்திக்  கொண்டிருந்தது.

முதல்  இரண்டுடவையாவது  உமாவைப்பார்க்க வந்தவர்கள் சற்று அந்தஸ்து  உயர்ந் தவர்கள்.  பிள்ளையும்  நன்றாக  நல்ல  உத்யோகத்தில்  இருந்தான்.  உமாவினுடைய  நிலைமைக்கு  சற்று  பெரிய இடமாக வே  இருந்தது.. 

இந்த  முறை அப்படி  இல்லை.  சற்று  சாதாரணமான  குடும்பத்து  பிள்ளையைத் தான் பார்த்திருந்தார்கள். பிள்ளைக்கும் அதிகப் படிப்போ பெரிய  உத்யோகமோ  இல்லை.. 
உமாவுக்கு  சரியாகவே  பொருத்தமாக இருக்கலாம்.....  ஆனால் இவர்களுமா  இப்படி?

 பெண்ணைப்  பார்த்து விட்டு  பிள்ளையுடன்  அவன்  பெற்றோர்கள்  வழக்கம்போல “”யோஜனை  பண்ணிட்டு  பதில் சொல்கிறோம்”  என்று திரும்பினார்கள்.  கூடவே தரகர் சாமாவும்  போனார்.  உமாவின்  அப்பா  சாமிநாதன்  அதிக நம்பிக்கையில்லாமல்  வாசலில் நின்று  கொண்டிருந்தார். உமாவின்  அம்மா உள்ளே  போய் விட் டாள்.

  உமாவும் அவள்  தங்கை  சரோஜாவும் பக்கவாட்டு அறையில் நின்று ஜன்னல் வழி யாக வெளியே அவர்களைப்  பார்த்துக் கொண்டிருந்தார்கள்  பிள்ளை வீட்டாருக்கு பெண்ணைக்  கவர்ச்சியாகக் காட்டுவதற்காக ஒப்பனை செய்த உமாவின்  முகம்  வியர்த்து வழிந்து  மேலும்  மோசமாக  இருந்தது.  ஏற்கனவே  கருப்பான முகத்துக்கு  அதிகமாக  வெள்ளைப் பௌடர்  பூசினால்  அது கருப்பைத் தான் தூக்கிக் காட்டும்.. 

அந்த முகத்தை இன்னும் விகாரப் படுத்தும் படியாக உதட்டுக்கு வெளியே  பற்க ளும்  தூக்கலாக  இருந்தது...

அதுவும்  அவள்  அருகில்  லட்சணமான  அவள்  தங்கை  சரோஜா  நிற்கும்போது     உமாவைப்  பார்க்க வருபவர்கள்  மேலும் முகத்தை  சுளித்துக்கொள்வார்கள்.  உமாவின்  அப்பா வாசலிலேயே  நின்று பார்த்துக்  கொண்டிருந்தார்.  பெண் பார்க்க  வந்தவர்கள்  வெளியே  தரகன்  சாமாவுடன்  பேசிக்கொண்டிருப்பது  தெரிந்தது.

  தரகன்  சாமா  அவர்களை அனுப்பிவிட்டு  திரும்பி  வந்து  கொண்டிருந்தான்..
  சாமிநாதன்  பதட்டமுடன்  அவனைப் பார்த்தார்.


  “மாமா.....நான்  அவா  பேருலே  கோவப்பட மாட்டேன்...அவா  எங்கிட்டே சொன்னது  சரியாவே  படறது..”

“என்னடா..சொன்னா.. அவா..?  சொல்லுடா..”

“ அவாளுக்கு உங்களோட  சம்பந்தம்  வைச்சுக்கறதிலே  ஆட்சேபணை இல்லையாம்.. ஆனா  நீங்க  இஷ்டப்பட்டா  அக்காவுக்குப்  பதிலாதங்கை  சரோஜாவை  ஏத்துக்கறோம்னு  சொல்றா....அந்தப்  பிள்ளையும்  எப்படியாவது  சரோஜாவை பேசி  கல்யாணம் பண்ணி வைச்சுடுங்க மாமான்னு என்னைக் கேக்கறான்”

  உமாவின் அப்பாவுக்கு  கோபம்  பொத்துக்கொண்டுவந்தது. 

“பெரிய  பொண்ணைப்  பாக்க  வந்துட்டு  தங்கையை  பண்ணிக்கறேன்னு சொல்லிட்டுப் போனா நன்னாவா  இருக்கு?  என்னடா  அர்த்தம்?  இதுக்கு  நான்  சம்மதிப்பேன்னு  எதிர் பாக்கறாளா? “

  தரகன்  தழைந்த குரலில்  சொன்னான்...

“ மாமா...அவா  விருப்பத்தை அவா  சொல்லிட்டுப்  போய்ட்டா.. நீங்க  அதுக்காக  கோவிச் சுக்க வேண்டாம்.அவசரப்பட வேண்டாம்..  நான்  சொன்னதை  மாமியோட மத்தவா ளோடே கலந்து பேசி  நிதானமா யோசிச்சுட்டு முடிவைச் சொல்லுங்கோ...சந்தர்ப்பம்  சூழ்நிலை மையை  புரிஞ்சிண்டு  முடிவுக்கு  வாங்கோ....அவசரமில்லை...எனக்கென்னமோ  அவா  கேக்கறதில்லே தப்பில்லேன்னு  தான் தோணறது...”

இதைக்  கேட்டுக் கொண்டிருந்த  உமா சட்டென்று  சரோஜாவை  முறைத்துவிட்டு  விலகி  உள்ளே  போய் விட்டாள்.

ஆனால்  சரோஜா  இன்னும்  நின்று  கேட்டுக்கொண்டிருந்தாள்.

 “என்னடா  சொல்றே...நீ?..  மூத்த  பொண்ணை  வீட்லே வைச்சிண்டு  ரெண்டாம் பொண் ணுக்கு  கல்யாணம்  பண்ணா.. அப்பறம்  அவளை  எப்ப டிடா  கடை  தேத்த றது?  பாழுங் கிணத்துலே  தான்  தள்ளணும்..”
 
 “மாமா.....இப்போ  உங்களுக்கு  எதுவும்  தோணாது  ..ஆத்திரமாத்  தான்  இருக்கும்....  நிதா னமா  தீர  யோசனை  பண்ணி  அப்பறம்  ஒங்க  முடிவை  சொல்லுங்கோ... இதுலே யாரை யும்  கட்டாயப்படுத்த முடியாது.....  .இந்த  இடம்  இல்லைன்னா வேறெ  இடம்?  நான்  வரட்டுமா? ”

  தரகன் திரும்பி நடந்தான். உமாவின்  அப்பா  இன்னும் கதவைப் பிடித்துக்கொண்டே  நின்று கொண்டே  இருந்தார்.  .தரகன்  வாசல்    வரை  போய் விட்டு  மீண்டும் திரும்பி  வந்தான்.

  “ மாமா...ஒரு விஷயம்  ஏற்கனவே  சொல்ல  மறந்து  போய்ட்டேன்..”

  “ என்ன?  “

உமாவைப் பாக்க  முதல்லே  இரண்டு  சம்பந்தம்  வந்துதே!....”

”..ஆமாம்...”

..அவா  கூட  உமாவைப் பாத்துட்டு  இந்த  மாதிரி  தான்  அபிப்ராயப்பட்டா...  கேக்க .. எனக்கே  கஷ்டமாத்  தான் இருந்தது... நீங்க  மனசு  வருத்தப்படுவேள்னு  தான்  நான்  ஒங்க ளுக்கு  சொல்லலே!  வரட்டுமா?” 

தரகன் போய் விட்டான்.

உமாவின்  அப்பா    உள்ளே போனார்.

சரோஜா மட்டும்  ஜன்னலை  வெறித்தபடியே  நின்றுகொண்டிருந்தாள்.

பின்னால்  கொல்லைப்புறத்தில் கிணற்றடியில்  உமா விசும்புவது கேட்டது  சரோஜா திரும்பி பார்த்தாள்.  உமா  தலையிலிருந்து பூவைப்  பிய்த்தெறிந்து கொண்டிருந்தாள்.  தலையை விரித்துப் போட்டுக்கொண்டு  இங்குமங்கும்  கைகளை  உதறிக்கொண்டு  நடந்து கொண்டி ருந்தாள்.  தலையில்  அடித்துக் கொண்டாள்.  துக்கத்தை அடக்கிக் கொண்டு  வழிந்த கண்ணீ ரைத்  துடைத்துக்  கொண்டு  உள்ளே வந்தவள் அங்கே நின்ற  சரோஜாவை எரித்துவிடுவதை  போல் பார்த்துக்கொண்டு  கடந்தாள்.



எம் மேலே எதுக்குடீ  ஆத்திரப்படறே? ”  சரோஜா உமாவைப் பார்த்துக் கத்தினாள்.

“ஆத்திரப்படாமே  கொஞ்சிக் குலாவ சொல்றயா?  ஏண்டீ என்  கூடக் கூட வந்து  நிக்கறே?  என் கல்யாணம் தடை படறதுலே  ஒனக்கு அவ்வளவு அக்கறையா? “

“நான் என்னமோ வர்ரவனை  உன்னைப்  பாக்க  வேண்டாம்னு  குறுக்கே  வந்து தடுத்த  மாதிரி  பேசறயே!..  .எங்க  அக்கா  மாப்பிள்ளை  எப்படி இருக்கான்னு நான்  பாக்கக்  கூடாதா? “  


“ஆமா..  தெரியாதா.  ஒன்னோட  கெட்ட எண்ணம்?.....எனக்கு நல்லது எதுவும்  நடக் கப் படாது..........அப்படித்  தானே! “

சரோஜாவுக்கு  உமாவின்  மேல்  ஆத்திரமாக வந்தது. என்னடி...எம்மேலே  எரிஞ்சி விழறே?  நீ  வீட்லே இருக்க  வரைக்கும்  எனக்கும் தான்  விடிவு  காலம்  வரப் போறதில்லே....எனக்கு நீ  தான்  எமனா  வந்து  வாச்சிருக்கே!.. அதைத்  தெரிஞ்சிக்கோ!” என்று  பரபரவென்று  கூடத்துப் பக்கம்  போனாள் சரோஜா.
               
 * * *   * * *   * * *
             
சேலத்தில் எங்கள் வீட்டுக்கு  எதிர் வீட்டில்  தான்  அவர்கள்  இருந்தார்கள்.  எனக்கு எட்டு  வயது  இருக்கலாம்.  அந்த  வீட்டு நிகழ்வுகளைப்  பற்றிய  முழு விவரத்தை  பின் னால் தெரிந்து கொண்டேன்.


 ஆனால்  எனக்கு  அப்போது  உமா அக்கா  சரோஜா  அக்கா  இரண்டு  பேரையும் மிகவும் பிடிக்கும்  பள்ளிக்கூடம் விட்டு  வந்தவுடன்  மாலை வேளையில்  நான் அவர் கள்  வீட்டுக்கு  ஓடி  விடுவேன்.

சாயங்காலத்தில் இரண்டு  பேரும்  வீட்டுக்  கொல்லை யில்  கிணற்றடியில் அமர்ந்து கொண்டி ருப்பார்கள்  அங்கே  கிணற்றை  சுற்றி  மல்லிகை  அரளி  சாமந்தி இப்படி நிறைய  பூச்செடி கள்  பூத்துக்  குலுங்கும். அதுவும்  அந்த  மாலைக் காற்றில்  குளிர்ச்சியான  மணத்துடன்  அந்த  வெளி  நிரம்பி இருக்கும்  கிணற்றை சுற்றி போடப்பட்ட கல் மேடையில்  உட்கார்ந்து கொண்டு  கதை  பேசுவதற்கு  சுகமாக இருக்கும்.

நான்  போகும் போதெல்லாம்  சரோஜா  அக்கா  ஏதாவது  ஒரு  நாவலை  வைத்துப் படித் துக்கொண்டிருப்பாள்.  உமா அக்கா  ஏதோ பூத் தொடுத்துக் கொண்டு  பாட்டை முனகிக்  கொண்டிருப்பாள்.  நான் வந்ததும் அவளுக்கு  மகிழ்ச்சியாக  இருப்பதுபோல் தோன்றும் .
சரோஜா  “என்னடா.. ஸ்கூல் விட்டதும்  நேரா  இங்க  வந்துட்டயா? என்று  என் தலையைத் தடவிவிட்டு  மும்முரமாக  நாவல் படிப்பதில் இறங்கிவிடுவாள்.  ஆனால் உமாவுக்கு என் மேல் சற்று  அலாதி பிரியமாக  இருக்கும்.  என்னை அருகில் உட்கார வைத்துக்கொண்டு வாஞ்சையுடன் பேசுவாள்.   பள்ளிக்கூடத்தில்  நடந்த  விஷயமெல்லாம் கேட்பாள்.  ஏதாவது  கதை சொல்லுவாள்.  கன்னத்தைக்  கிள்ளிவிடுவாள். பாட்டுப் பாடி என்னையும்  சேர்ந்து  பாடச்சொல்லி  ரஸிப்பாள்.

மேற்படி  சம்பவம்  நடந்த  அன்றும்  நான் அப்படித்  தான்  கொல்லையில் கிணற் றடிக்குப்  போனேன்.  சரோஜா  புத்தகம்  எதுவும்  படிக்கவில்லை.  ரோஜாச் செடி க்கு  அடியில்  மண் வெட்டியால்  கொத்திக் கொண்டிருந்தாள்  நான்  வந்ததைப் பார்த்த பின்னும்  எதுவும் பேசாமல் மண்ணைக்  கொத்திக்  கொண்டே இருந்தாள்.

 உமா அக்காவைப்  பார்த்தேன்.  அவள்  முகம்  கருத்து வீங்கிய  மாதிரி  இருந்தது. நிறைய  அழுததைப்  போல்  இருந்தது.  கண்களில் ஈரம்.... தலை  வழக்கத்திற்கு மாறாக  கலைந்து விரிந்து கிடந்தது.

என்னைப் பார்த்தவுடன்  அவளுக்கு  ஏனோ  மேலும்  அழுகை  வந்த  மாதிரி  ஆனால் அடக்கிக்கொண்ட  மாதிரி தோன்றியது.  ஆனாலும்  லேசாக  சிரிப்பை  வரவழைத்துக் கொண்டு  என்  தலையைத்  தடவி  விட்டு  “ உட்காரு”  என்றாள்  உட்கார்ந்தேன்.

சரோஜா எங்களைப் பார்த்தவாறே  மண்வெட்டியைப்  போட்டுவிட்டு  உள்ளே போனாள்.
திடீரென்று சுழற்காற்று  வேகமாக  அடித்து  செடிகளெல்லாம்  குலுங்கி  ஆடி  பூக்கள் சிதறி  மண்ணில் பறந்து  விழுந்தன  நான்  உமா அக்காவையே  பார்த்துக் கொண்டிருந்தேன்.  

திடீரென்று  உமா அக்கா என்னைப்  பாசமுடன் தழுதழுத்துக் கட்டிக் கொண்டாள்.

“டேய்...கண்ணா....நெஜமா சொல்லு.டா.....நான்  அழகா  இல்லையா? நான்  அழகா இல்லையா?....... “

அவள்  குரல்  கம்மியிருந்தது..  எனக்கு  உடனடியாக  என்ன பதில் சொல்லுவதென்று தோன் றவில்லை  நான்  அந்த  மாதிரியெல்லாம்  இதற்கு  முன்பு  நினைத்துப்  பார்த்ததில்லை..

“நான்  அழகா  இல்லையா?”  மீண்டும்  கேட்டாள்.

அவள்  கேள்விக்கு  என்ன  பதில்  சொல்லுவதென்று  குழப்பத்திலிருந்தேன்  சரோஜாவைப்  போல் அவள்  அழகாக  இல்லை  தான்....

“ .....உன்னை  எனக்கு  ரொம்ப  பிடிச்சிருக்கு  அக்கா”  

“பிடிச்சிருக்குன்னா.......? “

“நீ  நல்ல  அக்கா  எனக்கு  கதையெல்லாம்  சொல்றே!  ஆசையா  அன்பா.....பேசறே!  அதான்  பிடிச்சிருக்கு...” 

"அப்போ…  நான்  அழகா  இல்லேன்னாலும்..... உனக்குப் பரவாயில்லே...அப்படித்தானே!”

எனக்கு  என்ன பதில்  சொல்வதென்று  தெரியவில்லை.....

நான்  நெளிந்த  மாதிரி  எழுந்து கிணற்றடியின் இன்னொரு  பக்கத்துக்குப்  போய் அங்கே  நந்தியாவட்டைச்  செடியைப்  பார்த்துக்கொண்டு  நின்றேன். அதன் மேல்  பட படத்துக்  கொண்டிருக்கும்  பட்டுப் பூச்சிகளை  விரட்டிக் கொண்டிருந்தேன்.

 உமா அக்கா என்னை  பின்னாலிருந்துவந்து  கட்டிக் கொண்டாள்.  தேம்பிக் கொண்டே  சொன்னாள்.

 “கண்ணா...கண்ணா...உன்னோட  மனசு  ஏண்டா  இந்த  ஆண்களுக்கு  இல்லை..? யாரும்  என்னை  ஏண்டா  சரியாவே  பாக்கறதில்லே...  என்  முகத்தை  மட்டும்  ஏண்டா  பாக் கறா…?”

நான்  பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இவாள்ளாம்  பொண்ணைப்  பாக்கும்போது  ஏதோ  சினிமாக்காரியை  மனசுலெ   வைச்சி ண்டு  வறாடா.......உடம்பைத்  தாண்டி  எதையுமே பாக்கறதில்லே”

“என்ன  அக்கா  சொல்றே?”  நான்  மீண்டும் பட்டுப்  பூச்சிகளை  விரட்டினேன்.

“உனக்குத்  தெரியுமா?  ஏதாவது  கண்ணில்லாதவன்  தான்  ஒரு  பொண்ணை  சரியாப் புரிஞ் சிப்பாண்டா.....அவனுக்குத்  தான்  இந்தத்  தோல்  சதை  உடம்பு  எதுவும்  பெரிய விஷயமா  படாது...அவன்  தாண்டா  உயிரை  நேசிப்பான்......ஆமாம்...”

 “அக்கா...நீ  இன்னிக்கு  என்னென்னவோ  பேசறே.. ...நான்  போறேன்..”

உமா  என்னை  இன்னும்  தன்  பிடியில் இருந்து  விடவில்லை.

“கண்ணா...என்னை  நீ  கல்யாணம்  பண்ணிக்கிறயா?  பண்ணிக்கிறயாடா?..............”

அவள்  குரலும்  பார்வையும்  சகஜமான  மனதிலிருந்து  வரவில்லை. ஏக்கமும்  வேதனையும்  அடங்காமல்  வழிந்துகொண்டிருந்தது.  எனக்கு திகைப்பாக  இருந்தது.  நான்  உமாவிடமி ருந்து  விலகிக்  கொள்ள முயற்சி  செய்தேன். 

  “என்னை  விடு  அக்கா...”

  “கல்யாணம்  இப்போ  இல்லேடா..”  அடுத்த  ஜன்மத்துலே “. 

 உமா  பலமாக  சிரித்தாள்.

நான்  உமாவிடமிருந்து  விலகிக்கொண்டு  “அக்கா  நான்  போய்ட்டு  வரென்க்கா....”  என்று  வேகமாக  வெளியே  ஓடிவிட்டேன்.

அன்று  இரவு  முழுவதும்  உமா  அக்காவின் குரலும் துக்கமும்  அரவணைப்பும்  எனக்குள்  சுழன்று  கொண்டே  இருந்தன.
                 
* * *   * * *  * * *

இரண்டு வாரங்கள்  கழித்து  ஒரு  நாள் உமாவின்  வீட்டுவாசலில்  வாழைத்  தோரணம் கட்டியிருந்தார்கள்.  எல்லோரும்  சரோஜாவுக்கு  கல்யாணம்  என்று  பேசிக் கொண்டார்கள்.

“அதெப்படி  அக்காவுக்கு பண்ணாமல் தங்கைக்கு  இப்படி  கல்யாணம்  செய்வார்கள்?” என்று யாரோ  சொன்னார்கள்.

“எத்தனை  நாள்  தான்  சரோஜா  காத்துக்  கொண்டிருப்பாள்?  பாவம் அவளுக்கும் வயசாகல் லியா?..........” என்றார்கள்  சிலர்.

“உமா  சம்மதிச்சுட்டாளாம்...”  என்றார்  பக்கத்து  வீட்டில் இருந்த  ஒரு  மாமி.

 இரவு  நான்  தூங்கப்  போன  போது  என் அப்பாவும்  அம்மாவும்  பேசிக் கொண்டது  காதில்  விழுந்தது.

  உமாவின்  அப்பாவும்  அம்மாவும் அவளுக்கு  நிலைமையை எடுத்து  சொல்லியிருக் கிறார்கள்.

  “உமா...உனக்கு  இப்போதைக்கு  கல்யாணம்  நடக்காது. தட்டிப்  போய்க் கொண்டே இருக் கும்னு  ஜோஸியர் சொல்றார்.  சரோஜாவுக்குத்  தான் முதலில்  நடக்குமாம். எங்களுக்காக  இந்தக்  கல்யாணத்தை விட்டுக் கொடுத்துடு....கெஞ்சிக் கேட்டுக்கறோம். சரோஜாவும்  அந்தப்  பிள்ளையைப்  பாத்ததுலேருந்து  ஒரே பித்துப்  பிடிச்ச  மாதிரி இருக்கா... ஒரு பொண்ணுக்காவது  கல்யாணத்தைக் கழிச்சா எங்களுக்கு  ஒரு  பாரம்  விடும், இல்லை யாம்மா?....  நீ  விருப்பபட்டா  உன்னை மேலே  படிக்க  வைக்கறேன். வேலைக்குப்  போகலாம்...நெறையா  சம்பாதிக்கலாம்...என்ன  சொல்றே...??..”    

உமா  உடனே  பதில் சொல்லலியாம்...  பிறகு  மெதுவாக  சொன்னாளாம்....”அப்பா ....என்  ஜாதகமே அப்படி சொல்லும்போது அதுக்குமேலெ நீங்களும் நானும் என்ன  செய்ய  முடியும்.  .தாராளமா  சரோஜாவுக்கே  கல்யாணம்  பண்ணிடுங்கோ....உங்களுக்கும் ஒரு  பாரம் கொறை யும்..இல்லையா? .எனக்கு  எதுவும்  சந்தோஷம்தான்.. .”  என்றாளாம்.

* * *  * * *  * * *

கல்யாணத்துக்கு  முதல் நாள்  மாப்பிள்ளை அழைப்பு  ஊர்வலம்  உறவுகளின்  கூட் டம்  கொண்டாட்டம் விளக்குகள்  விருந்து  எல்லாம்  அமர்க்களமாக  நடந்தது.  சரோஜாவுக்கு  மகிழ்ச்சி  பொங்கிக் கொண்டிருந்தது.  வரவேற்புக்கு  வந்த  உறவுகளும் நட்புகளும் சரோ ஜாவை  அதிர்ஷ்டசாலி  என்று  வாழ்த்தினார்கள். சரோ ஜாவே இப் படி ஒரு அதிர்ஷ்டத்தை  நினைத்துப் பார்க்கவில்லை. உமா  எப்படி இதற்குசம்மதித்தாள்  என்று  புதிராக இருந்தது.


அடிக்கடி  மாப்பிள்ளை முகத்தைப் பார்க்கும்போது  கூடவே  உமாவையும் அவள் கண் கள்  தேடிக்கொண்டிருந்தன. ஒரு வேளை  அவளுக்கு  நன்றி  தெரிவிப்பதற்கோ? அல்லது, தான் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது என்ற பெருமிதத்தைக் காட்டுவதற்கோ?

 உமா அதிகம் யார் கண்ணிலும் படவில்லை.  உள்கூடத்தில்  சில உறவுகளுடன்  பேசி யவாறு உட்கார்ந்துகொண்டிருந்தாள்.  அடிக்கடி சிரித்துக்கொண்டே  இருந்தாள். தூர த்தில் தெரிந்த  மாப்பிள்ளையின் முகத்தை மட்டும்  ஒரே  ஒரு  முறை  வெறித்தவாறு பார்த்தாள்.

 இரவு விருந்து  முடிவதற்கே வெகு நேரம் ஆகிவிட்டது.. 

நெருங்கிய சில உறவினர் கள்  அங்கேயே  கிடைத்த  இடத்தில் கூடத்தில் படுத்துக்  கொண் டார்கள். 
பன்னிரண்டு  மணி  ஆகி  விட்டது.  உமாவின்  அப்பா  ஸாஸ்திரிகளிடமும்  சமையல்காரரி டமும்  மறுநாள் முகூர்த்தத்துக்கு  வேண்டிய  ஏற்பாடுகளைப்  பற்றிய  விவரங்களை  கவன மாக  சரிபார்த்துக்  கொண்டிருந்தார்.  

முகூர்த்தம்  எந்த  குழப்பமும்  இல்லாமல்  சீராக  நடக்கவேண்டுமேயென்று  அக்கறையுடன்  எல்லாவற்றையும்  பார்க்க  வேண்டிருந்தது .

 ஸாஸ்திரிகள்  சொன்னார்  “  மாமா...  வெடியகாலத்துலேயே  முகூர்த்தம்.  எல்லாரும்  சீக்கி ரமா  எழுந்து  குளித்து தயாராகணும்  நாங்க எல்லாம்  ரெடியா  ஆய்டுவோம்..” என்றார்.

 எல்லோரும்  படுத்துக் கொண்டார்கள். சரோஜா  பெற்றோர்களின்  நடுவில் படுத்துக் கொண் டாள்.  உமா  வழக்கம் போல்  தன்  அறைக்குப்  போய்விட்டாள். 

 எல்லோருக்கும்  அரைத்  தூக்கம் தான்...  கூடத்தில்  மாட்டியிருக்கும்  கடிகாரம் மட் டும் நாக்கை  ஆட்டிக்கொண்டு  இரவுத் தச்சனைப்போல் “டக்..டக்”கென்று  ஒலித்துக் கொண்டி ருந்தது. 

சாமிநாதன்  புரண்டு  புரண்டு  படுத்துக்  கொண்டிருந்தார்.  இடை  இடையில் அவருக்கு  உமாவைப்  பற்றிய  நினைப்பு  வந்து மனதை  சங்கடப்படுத்தியது.. .. ஏதோ  தவறு  செய்துவிட்டோமோ என்று  உறுத்தியது..

உமாவுக்கு எப்படியாவது ஒரு வரனைப்  பார்த்து முடித்து விட  வேண்டும்.  கடவுளே! அது இனிமேல் முடியுமா? அவள் என்ன பாவம்  செய்தாள்? இப்படி ஒரு அவஸ்தையை அனுப விக்க!!  தங்கைக்காக  அவளால்எப்படி  விட்டுக்  கொடுக்க முடிந்தது. எவ்வளவு நல்ல மனசு!! “ பெருமூச்சுடன் புரண்டு  படுத்துக்கொண்டார். 

 “நாழி ஆகிவிட்டதோ “ என்று இரண்டு முறை அவசரமாக எழுந்து உட்கார்ந்து கொண் டார்.  கண்ணைக்  கசக்கிப்  பார்த்த  போது  மணி  மூன்று தான்  ஆகியிருந்தது ….இன் னும்  ஒரு  மணி  நேரம்  ஓய்வெடுக்கலாம்..

மீண்டும்  படுத்துக்  கொண்டார்.  நிச்சயமாகவே இப்போது  உறக்கம் பிடித்து  விட் டது.

’இதென்ன...திடீரென்று  ஏதோ உரத்த  சத்தம்.. யாரோ  ஏதோ கூச்சல்  போட்ட மாதிரி….. கனவில்  தான்  இந்த  இரைச்சலா?’

சாமிநாதன்  எழுந்து  உட்கார்ந்தார். அந்த  சத்தம் இன்னும் பலமாக ஆண் குரல் அலற லாகக்  கேட்டது. கூடத்தில்  படுத்திருந்த உறவினர்களும் கூட திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு உன்னிப்பாகக்  கேட்டார்கள். 


எங்கோ  துரத்தில் ..இல்லை  பின்கட்டில்...இல்லை..அதையும்  தாண்டி.....கொல்லைப் பக்கம்  கேட்ட  மாதிரி  இருந்தது.

 “அய்யோ..அய்யோ...மாமா ..இங்க  வந்து  பாருங்களேன்... எல்லாம்  ஓடி  வாங்கோ... .ஐய்ய் யோ...சீக்கரம்  வாங்கோ  மாமா “

 குரல்  ஸாஸ்திரிகளிடமிருந்து  வந்தது  கொல்லைப்புறத்திலிருந்து  கேட்டது.  கொல்லைப்  புறத்தில்  விளக்கு  வெளிச்சம் கூட  சரியாக  இல்லை.  மஞ்சள் பூசி  இன்னும் இருட்டாக  பூச்சி  பறந்துகொண்டிருந்தது.... 

 எல்லோரும்  ஓடினார்கள்.

“ஐய்யோ...விளக்கைக்  கொண்டு  வாங்கோ...”  ஸாஸ்திரிகளின்  குரல்  தான்.

’ஏதோ  பாம்பு  தான்  கடித்து  விட்டதோ........’


அங்கே ஸாஸ்திரிகள்  சொட்டச்சொட்ட  நனைந்தவாறு அரைத் துண்டுடன் கிணற்று தாம்புக் கயிற்றை ஒரு  கையில் பலமாக இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.  

பக்கெட் கிணற்றுக்குள்  இருக்கவேண்டும்…

 சாமிநாதனும்  மற்றவர்களும்  ஓடிப்போய்ப்  பார்த்தார்கள்.

“என்ன  ஆச்சு  ஸாஸ்திரிகளே... பாதி  குளிக்கும் போது  என்ன  ஆச்சு?..”

“என்னா  ஆச்சா?...  மாமா.....உள்ளே  எட்டிப் பாருங்கோ.  பக்கட்டை  மேலே  இழு  முடியலே..  .உள்ளே  பாருங்கோ..”

 எல்லோரும்  உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.




உள்ளே  ஆழத்தின்  அரை  இருட்டில்  உமாவின்  சேலையும்  கூந்தலும்  பக்கெட்டின்  கம்பி வளைவுகளில்  எக்குத்  தப்பாக  மாட்டிக் கொண்டு  உடல் வளைந்து  தொங்கி தண்ணீரல்  மிதந்து ஊசலாடிக்கொண்டிருந்தது…வயிறு  உப்பிப் போயிருந்தது.

  பக்கட்டை மேலிழுக்க  முயன்ற போது பாரத்தால் கயிறு மேலும் இறுகிப்போய் கீழே இழுத் துக் கொண்டே  இருந்தது  உமாவின்  அழகற்ற  உடம்பின்  பாரம்.

 “அய்யோ”  என்று  கத்திக்கொண்டே இரண்டு மூன்றுபேர் கயிற்றைப் பிடித்து  மேலி ழுக்க  முயற்சித்தார்கள்.

உப்பிப்  போன  உமாவின்  முகம்  மட்டும்  ஒவ்வொரு  முறையும்  மேலே நீருக்கு மேலே  வந்து வந்து  எல்லோரையும்  விதவிதமாகப்  பார்த்து  சிரித்துக் கொண்டே மூழ்குவது  போல் தோன்றியது…..

ஏளனமா...எகத்தாளமா...எக்களிப்பா...!!!!. 

தெரியவில்லை....

முக்கியமாக அது எட்டிப் பார்ப்பவர்களுக்கிடையில் சரோஜாவின்  முகத்தைத் தேடிக் கொண் டேயிருந்தது......
                 

 *88- வைதீஸ்வரன்  

அம்ருதா    ஜனவரி  2015

“  
  
    

“  “