vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label உயிருக்குள் எத்தனை உலகங்கள்! - வைதீஸ்வரன். Show all posts
Showing posts with label உயிருக்குள் எத்தனை உலகங்கள்! - வைதீஸ்வரன். Show all posts

Monday, February 19, 2018

உயிருக்குள் எத்தனை உலகங்கள்! --------------------------- வைதீஸ்வரன்


உயிருக்குள்
எத்தனை உலகங்கள்!
---------------------------
வைதீஸ்வரன்

ஐநூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருக்கிற பிரும்மாண்ட மரங்கள் பலவற்றை காண முடிந்தது.

பூமியின் மனித வாடையற்ற பிரதேசங்களில் தவத்திலிருக்கும் மகாமுனிவர்களைப் போல் அவைகளின் அடர்த்தியான மௌனமும் அமைதியும் கம்பீரமும் பார்க்க அற்புதமாக இருந்தன.

அந்த மரங்களின் மேலும் கீழும் அகண்டு நீண்ட பக்கவாட்டுக் கிளைகளிலும் ஏராளமான உயிரினங்கள் ஆனந்தமாக ஆடிப் பாடி ஓடிக் களித்து கூடிக் கொண்டாட்டமாக வாழ்ந்து கொண்டிருந்தன.

இவை தவிர மரங்களின் கீழே சுற்றியுள்ள நிலப் பரப்பில் வளைகள் தோண்டி அதற்குள்ளே எலிகள் அணில்கள் வர்க்கம் போன்ற வித விதமான அடர்த்தியான வாலுள்ள பல பிராணிகள் பத்திரமாக குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.

இவைகள் அங்கே கூடி வளை தோண்டி குடித்தனம் நடத்துவதற்கு என்ன ஆதாரமான வசதிகள் காரணமாக இருக்கும்அதைத் தான் இந்தப் படம் அழகாக ஸ்வாரஸ்யமாக காண்பிக்கிறது.

முதலில் இந்த நெடுங்கால மரங்கள் எப்படி வம்ச விருத்தி செய்து கொள்ளுகின்றன என்பது விவரிக்கப் படுகிறது.

இந்த மரங்களில் ஏராளமாகப் பூப் பூத்துக் காய்கள் காய்த்து அவை முற்றிய பின் காம்பை விட்டு உதிர்ந்து மண்ணில் விழுகின்றனஇந்த முற்றிய காய்கள் தடித்த ஓட்டுடன் வழ வழப்பாக சின்னஞ்சிறிய உருண்டைகளாக கோலிகளைப் போல் இருக்கின்றனஒரு சின்னக் காற்றடித்தாலும் சுலபமாக உருண்டோடுகின்றன.



இந்த இயல்பினால் அவைகள் பெரிய காற்று வீசும் போது வெகுதூரம் உருண்டு போய் மண்ணில் படிந்து மழையும் வெய்யிலும் வீசி நாளடைவில் வேர் பிடித்து துளிர் விட்டு மெல்ல செடியாக மரமாக தாய் மரத்தின் வாரிசாக காலத்தில் வளர்ந்து நிலைத்து வாழ்கிறது.

அதேசமயம் இந்த உருண்டைக்கொட்டைகள்தான் அங்கே வளைகளுக்குள்   உயிர்வாழும் சின்னஞ்சிறிய பிராணிகளுக்கு தேவைப்படுகிற அவசியமான   ஆகாரம். இந்த சின்னப் பிராணிகளின் அன்றாடத் தொழிலே இந்தக் கொட்டைகளை கொண்டுபோய் வளைக்குள்பாதுகாத்து சேமித்து வைத்துக்கொள்ளுவதுதான்இந்தக் கொட்டைகளைஅவைகள் ஒவ்வொன்றாக வாய்க்குள் போட்டுக்கொண்டேயிருக்கும்.

தொண்டை வரை அவைகளை அடுக்கிக்கொண்டு நேராக வளைக்குள் போய் அவைகளை தரையில் துப்பிக் கொட்டி அடுக்கி வைக்கும்இதுதான் அவைகளின் உணவுக்கிடங்கு.











ஆனால் இந்தக் காரியத்தில் 
அவைகளுக்கே ஊகமான நமக்குத் தெரியாத ஒரு பௌதீக ரகஸியம் அடங்கியுள்ளது.! அந்தக் கொட்டை களை அப்படியே கொண்டு போய் பதுக்கி வைத்தால் அது நாளடைவில் வேர் பிடித்து துளிர் விட்டு வளர்ந்து விடும்அதை எப்படித் தடுப்பதென்று அந்த சின்னப் பிராணிகளுக்கு மட்டும் தெரியும்.


அவைகள் ஒவ்வொரு கொட்டையையும் முதலில் கையில் வைத்துக் கொண்டு முனையைக் கடித்து கடித்துக் அந்த உறுதியான கொட்டையின் முனையை உடைத்துப் பிளந்துவிடும்முனை பிளந்த கொட்டைகள் மண்ணில் முளைக்காது!! .

அப்படிப்பட்ட கொட்டைகளை வளைக்குள் பல வாரங்களுக்கு பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டு சாப்பிட முடியும்!

இந்தப் பிராணிகளின் ரஸிக்கத் தகுந்த சாதுரியம் நம்மை வியக்க வைக்கிறது.

உயிர்கள் எளிமையாக சுகமாக பத்திரமாக அமைதியாக வாழ்வதற்கு மொழியும் புத்தகப் படிப்பும் யந்திர உபாயங்களும் எதுவுமே தேவை யில்லையோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது இங்கே இயற்கையின் வாழ்க்கை ரகஸியங்கள்!

ஆனாலும் இதை விட முக்கியமான ஒரு பேருண்மையின் மறைமுகமான துணை அதற்கு நிரந்தரமாகத் தேவைப்படுகிறது. ...என்பதும் நமக்கு நிதர்சன மாகிறது....இல்லையா?




Ø