vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, April 8, 2017

சுமை

சுமை
 வைதீஸ்வரன் ]
 
எப்போதுமே     இருட்டாக  இருந்தது.  நான் பிறந்து  வாழ்ந்து 
முதுமை யடைந்த வீடு.  ஒரு வேளை இன்றைய வினோத மான அதிசய  பிரகா சத்தைக் கண்ட பிறகு தான்  என் வீட்டின் அந்தஇருண்ட முது மையை இன்னும் தெளி வாக  உணர்ந்து
கொண்டேனோ??

திடீரென்று அப்படி ஒரு  வெளிச்சம்......  எனக்கு  
எதிரே  விரிந்த  
 பரந்த  ஜோதி மயம்....... .நெடுங்காலமாக  அடைத்துப் பூட்டிக்கிடந்த  என் வீட்டுக் 
கதவு தானாகத்திறந்து கொண்டது போல்.  ...ஹோ....இதென்ன  இது.??

....இப்படிஒரு  கூர்மையானவினோதமான வெளிச்சம் என்  வீட்டுக்கு வெளியே  இருந்ததாக நான் இந்த  வயது வரை அறிந்து கொள்ளா மல் எப்படி ஒரு பேதைத்தனமாக வாழ்வைக் கழித்திருக்கிறேன்?

  ஓ...என்ன  அழகு..  என்ன  வியாபகம்... இறப்புக்கு முன் தோன்று மென்று சொல்லுகிறார்களே  அந்த ஒளிப்பெரு வெள்ளம்  தானா இது?  இவ்வளவு ஆண்டுகளாக  நான் இருட்டிலேயா வாழ்வைக் கழித்திருக்கிறேன். 

என் பேதமையை  உணர்ந்து நான் மிகவும் வெட்கப் பட்டேன்..
யா..ர்... .. யாரங்கே...?  யாரப்பா  அங்கே  என் வீட்டுக் கதவை எனக்காகத் திறந்து விட்டது?.. ...உன் முகத்தைக் காட்டு... உன் அடையாளத்தை  எனக்கு  காட்டு...”  என்று கூவினேன்...

 சற்று நேரம்  யாரும் எட்டிப் பார்க்கவில்லை.  ஆனால்  அந்த ஜோதி இன்னும் பல பல விந்தைகளை  பல வடிவங்களாக என்  முன் விரித்துக் கொண்டே  இருந்தது வேடிக்கை காட்டியது. நீண்டும்விரிந்தும்  மிதந்தும்  ஏதோ  ஒளியால்  பேசுவது போல்  ஒரு  
இயக்கம்..

இப்படி  பேரொளியால் ஜாலங் காட்டி  என்னை வியப்பில் ஆழ்த்தும் அந்த மாயக்காரன்  யார்?  முகத்தை உடனே பார்க்க வேண்டு மென்று ஆவல் மீறியது.  நான் உள்ளமுருகி இறைஞ்சினேன்:

 “நண்பனே... நீ  யார்?  இன்னும் ஏன் உனக்கு என் ஏக்கம்  புரிய வில்லை.வா...உள்ளே  வா...வந்து உன் முகத்தை எனக்குக் காட்டு. அல்லது உன் முகத்தை என்னிடமிருந்து மறைக்கும் திரையை  அகற்று.  நெடுங்காலமாய் நான்  காத்திருப்பது இந்த த் தருணத்துக்குத் தான் என்று எனக்கு தோன்று கிறது  தயவு செய்து தாமதிக்காதே.. நீ யார் என்று நான் தெரிந்து கொள்ளக் கூடாதா?..” 

 மேலும் என்னைப் பொறுமையிழக்கச் செய்யவில்லை அந்த மாயன்.

திடீரென்று  அந்த ஜோதி திரண்டு உறைந்து  திடம்பெற்று அற்புத மான  பரிமாணம் பெற்று தரைக்கும் கூரைக்குமாய்  உயர்ந்த  ஒரு அமானுஷ்ய  காருண்யம்   என் முன்னால்  நின்றது.

“ நீ  யாரப்பாதிடீரென்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என் கதவைத் திறந்து விட்டவன்?.   ..உன் பெயரென்ன? “

  “ அவன்  அழகாக சிரித்தான். என் கேள்வி அவனுக்கு ஒரு அறியாத குழந்தையின் பிதற்றலாக ஒலித்திருக்க வேண்டும்.

 அவன் சொன்னான்..

.நான் யாரா?  யாருமில்லை.. பெயரென்று  எனக்கு  எதுவும் இல்லை.என்னை  நீஎன்ன பெயர் சொல்லியும் அழைக்கலாம்.   நண்பனே...விரோதியே....மேதையே மூடனே   நல்லவனே   நாசகாரனே..... படைப்பவனே அழிப்பவனே  எப்படி வேண்டுமானாலும் அழைக்க லாம்...

  “ உனக்கு சுருக்கமாக ஒரு பெயரும் இல்லையா?”

  “ கடவுள் என்று சொல்லிக் கொள்.. நம்பிக்கை இருந்தால்… …..    இல்லா விட்டால்கல்லே “  என்றும் அழைக்கலாம்  தவறி ல்லை…“ எப்படிக் கூப்பிட்டாலும்   நீ என்னைத் தான் அழைக்கி றாய் என்று புரிந்து கொள்வேன்..

 “ வேடிக்கை காட்டுகிறாயா?  அதிருக்கட்டும்.  இப்போது  இங்கே  
வந்து என்னை ஆச்சரியப்படுத்துவதற்காகவா  வந்தாய்?  உனக்கு என்ன வேண்டும்.?..  நான் இத்தனை வருடங்களாக  உன்னைத் தேடியதே இல்லையே!!  உனக்கு என்ன தான் வேண்டும்..?.”

 “அதைக்கேட்டாலும்  உனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும்    எனக்கு நீ தான் வேண்டும்...ஹ்ஹ்ஹ்ஹா.....

  “நானா...நானா...”?

 “ஆமாம் என் அருமை  நண்பனே!  நீயே தான்...

  “ நான்  உன்னுடன் வருவதைப் பற்றி   யோசித்துப்  பார்த்ததே இல்லையே  இதுநாள் வரை... ..நான் இன்னும்  வரத் தயாராக இல்லையே.!!!..  நான் இது நாள் வரை உன்னைப் பற்றி நினைத்த தே   இல்லையே!  உன்  தேவையை  உணர்ந்ததே இல்லையே!.. தயாராக இருக்கும்போது  உன்னைக் கூப்பிடுகிறேன்..  அப்போது வரலாம்..போய் வா...  .”

ஹ்ஹாஹா.......  இது எல்லோரும் சொல்லுகிற ஸால்ஜாப்புத் தான்..அதனால் தான் அந்தத்  தேர்வை  உங்களிடம்  விட்டு வைப்ப தில்லை....சரி...சரி..  காலம் ஏற்கனவே புள்ளியாகக்   குறைந்து போய் விட்டது...உடனே புறப்படு.....உனக்காக  ஒரு வெள்ளி வீதி யையே  விரித்து வைத்திருக்கிறேன்..  உன் பயணம் ஒரு மெல்லிய இறகின் மிதப்புப் போல... சுகமான  மெல்லிசை போல இருக்கும். கவலைப்படாதே!  நீ அதை அனுபவிக்கும் போது  சற்றும்  வருத்தப் பட மாட்டாய்.....

 “என்ன  இப்படி திடீரென்று.... சரீ...உன் பேச்சில் ஒலிக்கும்  கனி வும்   குரலின் பாசமும் என்னால்  எவ்விதமும்  மறுக்க முடியாத படி     கீழ்ப்படியச் சொல்லுகிறது    ..ஆனாலும்...ஆனாலும்...
 “என்ன..ஆனாலும்.... பழைய காலத்துப் புராணப் பாத்திரங்களைப் போல் என் ஆணைக்கு கட்டுப்படுவதாக  இருந்தால்   ஏதாவது வரம் கிரம் தர வேண்டுமென்று கேட்கப் போகிறாயா?’

 “  உன்னால் எல்லாவற்றையும் ஊகிக்க முடிகிறது நண்பனே!...ஆனால் அது வரம் என்று  நினைத்துக் கொள்ள வேண்டாம்...


 “ சரி சொல்லு...உன் விருப்பம் தான் என்ன?..”

 “  நான்  உன்னுடன் வரும்போது  எனக்குப் பிரியமானது ஏதாவது ஒன்றை  எடுத்துக்கொண்டு  வரட்டுமா  எனக்கு  மிகப்   பிரியமானது....ஒன்றே ஒன்று...................!!!

  “ஹ்ஹ்ஹாஹாஹ்ஹ்ஹ்.....பேஷ்..பேஷ்...வேடிக்கை தான்.”

  “ஏன் சிரிக்கிறாய்?   என்ன நினைக்கிறாய்?”

.நீ  கேட்பது ஒரு முட்டாள்தனமான வேண்டுகோள்  என்று உனக்கு இப்போது தெரியவில்லை.யே  என்று சிரிக்கிறேன்.

“ இல்லை...கடவுளே...உனக்குத்தான் என் விருப்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை..

 “ அப்படி என்ன  உன் விருப்பம்...

“ இவ்வளவு நீண்ட  வருஷங்கள்  இந்த மண்ணோடு மண்ணாக புரண்டு வளர்ந்து வாழ்ந்து விட்டேன்....ஆசை ஆசையாக எத்தனை  காரியங்கள் செய்திருப்பேன்...எத்தனை   பொருட்கள் சேர்த்திருப்பேன்?  எத்தனை வீடுகள் கட்டியிருப்பேன் எத்தனை படைப்புகள் உருவாக்கி இருப்பேன்?..  எத்தனை உறவுகளை சேர்த்திருப்பேன்இன்னும் எத்தனை எத்தனையோ....அவற்றில் ஏதாவது ஒன்றையாவது என் நினைவுப்பொருளாக  எடுத்துக் கொண்டு வரக் கூடாதா?  அதில் என்ன உனக்குப் பிரச்னை?... நீ என்னைக்  கூட்டிச் செல்லும் இட்த்தில்  அதை வைக்க இடமில்லாமலா போய் விடும்? “

  கடவுள்  மறுபடியும் சிரித்தான்.. “உன்னைப் பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது . உன்  ஆசைகள் எனக்கு அனுதாபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன... .உபயோகமற்று அர்த்த மற்றுப்  போய் விடக் கூடியஅதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து என்னசெய்யப் போகிறாய்?  சாத்யமே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்...?”

   “நீ  மகா சக்தி வாய்ந்தவன்  என்று  எல்லோர் வாயாலும் சொல்ல வைத்து விட்டாய்...உனக்கு அசாத்தியமானது என்று ஏதேனும்  உண்டா?”



 “அப்படி  இல்லை...நான்  எப்போதும்  உன் மீது  கருணை  கொண்ட வன்.. அதனால் தான் ..உன்னுடைய   ஆசைகளின் விளைவுகளைப் பற்றி கவலைப்படுகிறேன்...

 “ இதே மாதிரி  வாசகங்களைத்தான்  இங்கே  உள்ள  ஞான குரு மார்களும் சொல்லக்  கேட்டிருக்கிறேன்...அவர்களும்  ஆசையின்   காரணமாகத் தான் இப்படியெல்லாம்  உபதேசம்  செய்கிறார்கள் ...

   “முதியவனே!...நான்  இப்போது  உன்னிடம் பேசிக் கொண்டி ருப்பதேசற்று இயற்கைக்கு  முரணானது..  என்னுடைய  வார்த்தைகளின்   சத்தியத்தை  நீ  உன் மனிதத்திறனால்   புரிந்து  கொள்ள முடியுமென்று   எதிர் பார்ப்பது  சற்று மிகையானது தான்... இப்போது  என்ன வேண்டுமென்கிறாய்?”

  “என்னை  இங்கிருந்து பிரித்துக்  கொண்டு போவதென்று  உறுதி யாகி விட்டதா?”

   “  ஆமாம்  அதைத்தான்  உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்..

  “  அப்போது  நான்  விரும்புவது  அதிகம் ஒன்றுமில்லை.  இதோ பார் இது என்னுடைய  வீடு...நான் பிறந்து வளர்ந்து தவழ்ந்து  என் குழந்தைகளைப் பெற்ற வீடு  இது  .என்னுடைய உயிரோடு  பிணை ந்து விட்டது  இந்த  வீடு.. இந்த  வீட்டைப் பிரிந்துபோய்விட்டால் அந்த துக்கம் என் சாவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்கும்    தயவு செய்து என் வீட்டை என்னிடமிருந்து பிரித்து விடாதே!.. என்னுடன் என் வீடும்  வர வேண்டும்...  அது  தான் என்  ஒரே ஒரு  ஆசை...”

“ இதற்கும்  மேல்  உன்னுடைய  பேதமையை  புரிய வைக்க விரும்ப வில்லை. அந்த அவஸ்தையை  நீயே  அனுபவிப்பதை இப்போது வேடிக்கை  பார்க்கவேண்டுமென்றும்  எனக்கே  ஒரு  ஆசை  
பிறந்துவிட்டது..  சரி  புறப்படுவோம்  வா...”

 “வீடூ......

  “ உன்னுடைய வீடு உன்னோடு வரும் .  உன் முதுகில்  மேல் அது சுலபமாகப்  பொருந்திக் கொள்ளும் .. என்னுடன் வா.  உனது நீண்ட பயணம் முழுவதும் அதை சுமந்துகொண்டு  வரும்  சக் தியை  நீ  பெறு வாய்...அதற்கு மேல் நீ  சந்திக்கும் விளைவுக ளுக்கு  நான்  பொறுப்பல்ல....

    “மிக்க  நன்றி  கடவுளே......கடவுள்  தானே  நீங்கள்?...”

    “ஹாஹ் ஹாஹா  ஹாஹ்ஹா...”.


                 ****************

 அடுத்த  கணம்  என்உடம்பு  சதை  நிணம்  ரத்தம்  எலும்பு  எல்லாம்  ஒவ்வொன்றாக கழன்று  உதிர்ந்து  தூள்தூளாக  வெளியில்  உதிர்ந்து  கொண்டிருப்பதை  என்னால் உணர  முடிந்தது.. 

என்னுடைய  பிரக்ஞைக்கும்என்னோடு  இத்தனை  வருடங்களாக 
ஒட்டிக் கொண்டிருந்த  இந்த  உதிரிபாகங்களுக்கும்  சம்பந்தமற்றது போல் உணர்ந்தேன்.  ஆனாலும்  முன்னிருந்ததை  விட பாரமாக தாங்கமுடியாத  பளுவுடன் ஏதோ ஒன்று  என்  உருத்தெரியா மல்  என்  மேல் ஏறிக்  கொண்டு  வதைத்துக் கொண்டிருந்தது. 

  நான்  எங்கோ  பயணப்பட்டு போய்கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தப்  பயணம் மிகவும் வேதனையாக  பன்மடங்கு  துக்கம் நிறைந்ததாக  என்னை பீடித்துக் கொண்டிருந்தது. உதறி உதறிப்  பார்த்தும்  கண் ணுக்குத்  தெரியாத அந்த  பாரம் என்னை  மேலும் மேலும்  அழுத் திக்  கொண்டே இருந்தது..  

 அந்த  சுமையின் பாரம்   தாங்காமல்  நான்  ஓலமிடுவதும் கதறு வதும்  என் அனுபவமாக  இருந்தது.  சற்று முன் தான்  அந்த  ஜோதி ரூபத்துடன்  வாதாடும்போது அது சொன்ன வார்த்தைகள்  எனக்குள் மீண்டும் ஒலித்தன.

  “உன் பயணம்  சிறகின்   மிதப்புப் போல  மெல்லிசையின் இழைகள் போல  சுகமாக இருக்கும்  புறப்படு..” என்றது.

 நான் பிடிவாதமாக இருந்தேன்.  என்  வீடு  இவ்வளவு பெரிய  சுமை யாக  கழட்டி விட முடியாத  மலைப் பாம்பாக  என்னை  வளைத்து அழுத்தி  என் பயணத்தை  துன்பகரமானதாகச் செய்யும்  என்று எனக்கு  தெரியாமல் போய்   விட்டது. 

வெளியில்  என்னை சுற்றிப் பார்த்தேன்.  அழகழகான  மின்மினிச் சிட்டுகளாக  பலஉயிர்கள்  முயற்சியற்று  விடுதலையாகப்  பாடிப்பறந்து கொண்டிருந்தன.  கடக்கும் போது  ஒவ்வொன்று  என்னைப் பார்த்து “அய்ய்ய்யோ..! “  இப்படி  ஒரு  சாபமா உனக்கு?  என்ன  பாவம்  செய்தாய்?  இவ்வளவு  பெரிய  பாரத்தை உன் மேல்  ஏற்றி விட்டவன்  யார்?....” என்று  சொல்லிக்   கொண்டே  அனுதாபத்துடன்  கூறிக் கடந்து போய்க் கொண்டிருந்தன.

 சற்றுமுன்  அவ்வளவு  சௌகரியமாக  என்  அகந்தையின்  பிரத்யட்சமாக  பரந்து நின்ற என்  வீடு   இப்போது  அர்த்தமற்றுப்போய் செத்த  கனத்துடன்  என் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் விதியை   நினைத்து  விடுபட முடியாத  வேதனையுடன் அரற்றிக் கொண்டி ருந்தேன். 
  “அய்யோ..தெய்வமே...எனக்கு  விடுதலை  கொடு.  என்  பயணத்தின்  சுகத்தைக்கெடுக்கும்  இந்த  அரூபமான  பாரத்திலிருந்து  என்னைப்  பிரித்து   விடு...எனக்கு வேண்டாம்  இந்தத்  தேவையற்ற மூட்டை...  நான் சென்றடையும்  விசாலமான வெளியில்  இத்தகைய  மூட்டைகள்  உபயோகமற்ற  வெறும் கேலிக்கூ த்தாக பைத்தியக்காரத்தன மானதாக  தோன்றும் 

  அந்த  ஜோதி  மீண்டும்  எனக்கு  முன்  தெரிந்தது.. “ நண்பனே!  உன்  அந்திம  விருப்பத்தைத்  தானே  நான் நிறைவேற்றினேன்.. இப்போது இப்படிச் சொன்னால்....

 “ ஐய்யோ....தெய்வமே...இப்போது  உங்களிடம்  வெட்கப்பட்டு  கூனிக் குறுகி நிற்கிறேன்.  என்  முட்டாள்தனத்தை  நானே புரிந்து கொள் ளும்  விதமாக  நீங்கள் தண்டனை  அளித்து விட்டீர்கள். எனக்கு  விடுதலை கொடுங்கள்..”

  “ஏன்...உன்னுடைய  பாசம் மிகுந்த  அழகான  வீட்டைத்  தானே  நீ இப்போது  சுமந்து கொண்டிருக்கிறாய்...அந்த  சுமையை  நீ  ஆசையுடன்   சுமக்க வேண்டாமா?  நீ விரும்பியது  எப்படி  உனக்கு  ஒவ்வா மல்  போகும்? “

  “தெய்வமே!!  என்  அறியாமையை  நான்  காலங் காலமாகப் போற்றிவளர்த்துக் கொண்டு  வந்திருக்கிறேன்.  அந்தப்  பொய்யறிவை  உணர்ந்து  கொள்ளும் சாத்தியங்களையும்  தவிர்த்து  வந்திருக்கிறேன்  அது  என்  சாபம் போலும்!.  என் பொய்யை  நான் உணர்ந்து கொள்ளும்  சமயம் வந்ததையும்  நான்  புரிந்து  கொள்ள மறுத்தது தான் என்  வினைப் பயனா?”

  “ சற்றுக் காலங்கடந்த  இப்போதாவது  உன்  கண்கள்  திறந்து 
கொண்டதா?  உனக்கு  நல்ல  காலம் தான் ! ”

தெய்வமே!  நான்  வாழ்ந்துகடந்து  வந்த  பௌதீக  உலகத்தின்  விதிகள்   இப்போது நான்  கடக்கும்  வேறு  விதமான  சூன்யவெளியில் செல்லாக் காசாகப்  போய்விடுமென்று  நான்  அப்போது  உணர வில்லை.  நீருக்குள் மனிதன்  வாழ முடியாது. தரையில் மீன்கள்   வசிக்க முடியாது.  அதே போல்  தான்  உயிர்  உடம்பற்றுப்  போகும் போது  அதன்  இயற்பியல்  மாறிவிடுகின்றன.  இருப்புவிதிகள்  
வேறாகி விடுகின்றன.  இது  எனக்குத்  தெரியாமல்  போய்விட்டதே!” 
 “அன்பரே!...இதற்கு  ஒப்பான  உதாரணத்தை  நீ  பூமியில்  இருக்கும் போது கண்கூடாகப்  பார்த்திருக்கலாமே!  நீ  ஏவுகணைகள்  மூலம்  விண்கலங்கள்  வெளியில் எறியப்படுவதைப்  பார்த்ததில்லையா?  அந்த  விண்கலங்கள்  உயரங்களைத்  தாண்டி செல்லுகையில்  ஒவ்வொரு  நிலையிலும்  அதன் யந்திரபாகங்களை  உடை கழற்றுவது போல்  கழட்டிஎறிந்து  கொண்டே  போவதைப்  பார்த்ததில்லையா?  அந்த விண்கலம்  தன்முடிவான  இலக்கை  எட்டும்போது  அது  ஒரு  சிறிய  பறவையைப் போல்  சிறுத்து   உபயோகம்தீர்ந்த  தன்  அனாவசியமான  பாரங்களையெல்லாம் துறந்துவிட்டு  லேசாக  மிதப்பதை  நீ கண்டதில்லையாபாரங்களைத்  துறந்ததனால்தான் அது தன்  இலக்கை அடைவது  சாத்தி யமானதை  நீ  கண்கூ டாக  பார்க்க வில்லையா?”

 “ஆமாம்...இப்போது அந்தக் காட்சி மேலும்  அர்த்தபூர்வமாக  தத்துவதரிசனமாக எனக்குத்  தெரிகிறது.  எவ்வளவு  அபத்தமாக  என்  வீட்டைத்  தூக்கிக்  கொண்டு வந்திருக்கிறேன்?  இந்த  தேவையற்ற  
பாரத்தினால்என்  பயணம்  தடங்கலாகி அனாதியாக  அமைதியற்று வெளியில்  சுற்றிக் கொண்டிருக்க நேர்ந்து  விடுமா?”

 “ அப்படி  எதுவும்  நேராமல்  விடுதலை  பெறுவதும்  இப்போது  உன் மனோவலிமையில்  தான்  இருக்கிறது  நான்  சற்றே  அதை  சாதகமாக்க  முடியும்.

 “தெய்வமே  சொல்லுங்கள்... எனக்கு  இந்த வேதனையின்  பாரம்  
வேண்டாம்..

 “ பாசத்தின் சின்னத்  துகள்  போல் ஒன்று பிசுக்காக  இன்னும்  உன்னிடம்  ஒட்டிக் கொண்டிருப்பதை  நீ ஆழ்ந்து  உணரவேண்டும்.  அது  ஏன்இன்னும்  அங்கே  இருக்க 
வேண்டும்  என்ற  கேள்வி  அடர்த்தியாக  உனக்குள்  தோன்றவேண்டும்.  அந்தக் கேள்வியே  அதன்  விடையாகி  அந்தப்  பாசத்துகள்  உன்னை விட்டு  உதிர்ந்து போகும்  க்ஷணத்தை  நீ  பார்க்கக் கூடும்.  அப்போது  உன்மீதுள்ள  பூடகமான நிவர்த்தியற்ற  பாரம்  
காற்றாகக்  கரைந்து  வெளியில்  மறைந்து  தொலைந்து போய் விடும்  . நீ லேசாகி  விடுதலையின்  சொரூபமாக  மாறி  விடு வாய்.  மற்ற   உயிர்களைப் போல் ஒளித் துளியாக  சிறக டித்து  ஆனந்தமாக  மிதந்து கொண்டிருப்பாய். 

“ தெய்வமே... உங்கள்  வார்த்தைகள்  எனக்குள்  திறனை ஊக்கு கின்றன.  நான்  அந்த நிலைக்கு  என்னை  நெறிப்படுத்திக்கொண் படுத்திக் கொண்டிருக்கிறேன்.”

“ நல்லது..ஆனால்  அந்த  அபூர்வ  ஆனந்தம்  உனக்குள்  எழும்போது.தப்பித்  தவறி நினைவு  மீண்டு   கடந்த  கால பூமி சுகங்களுடன்  இந்த  நிலையை  ஒப்பிட்டுப்  பார்க்க முயலாதே!...
அது  அபத்தமான  செயல். உனக்கு   தற்போது  வாய்க்கும்  ஆனந்தம்  ஒரு  சம்பந்தமற்ற  இணையில்லாத அனுபவம்.  அது  ஒப்பிட்டுப் பார்க்க தகுந்ததல்ல.  .  சரியா?”

  அந்த  வார்த்தைகள்  ஒவ்வொன்றும்  என் விழியைத் திறந்து  பார் வையை  விசாலப் படுத்திக்   கொண்டே  வந்தன.  நான்  அந்த  தவ நிலைக்குத்  தயாராகி  விட்டேன்.

 பாசத்  துகள் அற்ற  முற்றிலும்  விடுபட்ட அந்த  அற்புத  விடுதலை தலை  நிலையை  உள்ளு ணரும்  கணத்தை  கவனத்துடன்  எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறது  மனம் என்ற  ஏதோ ஒன்று  எனக் குள்.......எல்லையற்ற  நிலையில் எனக்குள்  சுமையற்ற வெளிச்சம் நிரம்பிக்கொண்டிருப்பதால்  நானற்றுப்போனேன்.....................
             



(அம்ருதா  ஏப்ரல் 2017)
-        
   


No comments:

Post a Comment