vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, April 4, 2017

இன்னும் சில நாட்கள்

இன்னும்  சில  நாட்கள்
 வைதீஸ்வரன்

அசோகமித்திரனின்  இரண்டாவது  சிறுகதைத் தொகுப்பு  1972 ல்  வெளி வந்தது  தலைப்பு    “இன்னும்  சில  நாட்கள்  “  அதற்கு நான்  எழுதிய  முன்னுரை   இப்போது  மீள்வாசிப்புக்காக...----------
                           ******************
              


 ஒரு  அனுபவம்
---------------------------------
  நவீன  சிறுகதைகளைப்  படித்தவுடன்  மனம்  உயர்ந்த  அனுபவத்தால்  நிறைவு கொள்கிறது. அந்த  நிறைவு  தரும்  மௌனத்தில்  மிதப்பது  வாசகர்களுக்கு  சுகமான  நிலை. அந்த   நிலையை  வார்த்தைகளாக  மாற்றி அபிப்ராயங்களாக  குழைத்து கதைகளைப்  பாராட்ட முயலும்போது அது வார்த்தைகளுக்கு  பிடிபடாமல்  நழுவி விடுகிறது.

    இன்று அசோகமித்திரனின் கதைகளைப்  பற்றி எழுத முயலும்போது அந்த  மனக் குறையுடன்  தான்  எழுதுகிறேன்.  இந்த  விமர்சன  சாத்தியத்தை  மீறிய  உணர்வுகள்  தான்  ஒரு கதையை  உயர்ந்த  படைப்பாக  நிலைக்க வைக்கிறதென்று   நிச்சயம்  ஏற்படுகிறது.

    “வாழ்விலே  ஒரு  முறை”  க்குப் பிறகு  அந்தத்  தலைப்பைப்  பொய்யாக்கிக்  கொண்டு வெளிவரும் அசோகமித்திரனின்  இரண்டாவது  தொகுப்பு  “இன்னும் சில  நாட்கள்

   முதல்  தொகுப்பில் பல  காரணங்களால்  விடுபட்ட  பல நல்ல  சிறுகதைகள் இத்தொகுப்பில்  ஒன்று  சேர்ந்து கொள்ளுகின்றன.

   அசோகமித்திரனின் கதைகள்  தமிழ் நாட்டு  வாசகர்களுக்கு  ஏற்கனவே அறிமுகமானவை தான்.  இவருடைய கதைகள்  வாழ்வின் முழுமையை அதன் இயல்பான  ஓட்டத்தை  நுண்மையான  கலைஉணர்வுடன்  தேர்ந்து  காட்டக் கூடியவை.

  இவர் கதைகளை வாசிக்கும்போது  எனக்கு  “ Man  is  a  fondling  abandoned  by  the  forces that  created  Him “  என்கிற  கவி வரிகள்  ஞாபகத்துக்கு  வருகின்றன.  இவர்  கதைகளில்  வாழும்  மனிதன்  தெய்வத்துக்கும்  அசுரத்தனத்துக்கும்  சிக்கியவனாய்  விடுதலைக்கு  ஏங்குபவன்.  FRANCIS BACON  ஓவியங்களில்  சித்தரிக்கப் படும்  மனித முகத்தைப் போல் துக்கமும்  கோமாளித்தனமும்  ஆணவமும்  குற்றத்தின்  சுமையும்  பல பல கோணங்களில் காட்டும்  உருக்கமான  முகங் கொண்டவன்.

  வறுமையிலும்  புறவாழ்வுப்  போராட்டங்களிலும்  தன்னை  இழந்து  கொண்டிருப்பதை  உணர்ந்தும் உதவிகளற்று வேதனைப்;படுபவன்  வாழ்வின் நிரந்தர  அமைதிக்கான  ஏக்கம்  அவனை  மௌனமாக்கி  துக்கத்தில் ஆழ்த்துகின்றனதனக்கும் பிறருக்கும்  தீங்கிழைத்துக்  கொண்டு  வாழ்க்கையைத் துன்பமாக்கி விடும்  தன் பலஹீனத்தை  எண்ணி  பல முறை வெட்கப்படுகிறான். விபரீதமான  சம்பவங்களின் மூலைகளில்  வாயடைத்து  நிற்கிறான். அகங்காரமாக  காரியங்கள்  செய்து  விட்டு  அசடாகத்  திரும்புகிறான்வழிதெரியாத  ஊருக்குப் பயணம் தொடங்கி விட்டு  இடையில்  குற்றச் சுமையுடன்  ஒர் கொலைஞனின்  பிரமையுடன்  நிற்கிறான்மிக சாதாரணமான  விஷயங்கள்  மகாபாதகமாகி  அவனை  கொலையாளியாக்கி  நிற்க வைக்கும் போது  வாழ்வின்  நியதிகளின்  மேல் அவனுக்கு இனந்தெரியாத  ஆத்திரமும்  குழப்பமும்  ஆனால்  அதுவே  ஒரு  தெளிவின்  ஆரம்பமாகவும்  தெரிவதை  உணருகிறான்.

    வாழ்க்கை  இவனை ஏமாற்றுவதும்  இவன்  வாழ்க்கையை  ஏமாற்றுவதும் சம்பவங்களுடன்  தட்டாமாலை  சுற்றி  மயங்கிப்  போய் மூச்சு முட்ட நிற்பதுவும்  இந்தக் கதைகளில்  இழையோடும்  IRONY சம்பவங்களையே  முதுகெலும்பாக்க்  கொண்ட  இவர்  கதைகளில்  சம்பந்தமற்றதெனத்  தோன்றும்  சாதாரண  நிகழ்ச்சிகளும்  மிக  இயல்பாக  ஒரு  இசைலயத்துடன்  சேர்ந்து  கொண்டு வாசகனுக்கு புதிய  தெளிவையும்  ஆழ்ந்த  பிரமிப்பையும்  கொடுக்கின்றன.

    பத்து  சிறுகதைகளையும்  இரண்டு  குறு நாவல்களையும்  கொண்ட  இத்தொகுப்பில்  தனித் தனியாக  ஒவ்வொரு  கதையின்  நிகழ்ச்சிகள் பற்றி  வர்ணனை  செய்ய  நான்  விரும்பவில்லை.  இத்தொகுப்பில்  உள்ள  எல்லா கதைகளும்  விசேஷமான  படைப்புகள்.  “குருவிக்கூடு”  என்கிற  கதை மட்டும்  முழுத் திருப்தி  அளிக்கவில்லைகதையில்  வரும்குருவி”   ஆசிரியராக  மாறி   ரஸனையின் குறுக்கே பறந்து  தொந்தரவு  செய்கிறது.

   அசோகமித்திரனின்  படபடப்பற்ற  பாவனையும்  எளிய வார்த்தைகளும்  சொற்சிக்கனமும்  மேலோட்டமான  வாசகர்களை  ஏமாற்றி விடக் கூடியவை
   சிந்தனைக்கு  சோம்பலுற்ற  இலக்கிய  உணர்வுகளற்ற  அவசர வாசகர்களின்  பார்வையில்  இந்தக்  கதைகள்  நத்தையாக  சுருங்கிக்  கொள்ளும்.

  1.       15- 8 - 1972                              எஸ். வைதீஸ்வரன்






No comments:

Post a Comment