vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, September 3, 2018

ஆவியின் மணம் - வைதீஸ்வரன்


ஆவியின் மணம்
வைதீஸ்வரன்
(கணையாழி    செப்டம்பர் 2018)

விடியற்காலங்களில் தூக்கத் துக்கும் விழிப்புக்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும் சமயங்களில் மனத்துக்குள் நாடகம் போல் என்னென்னமோ நிகழ்கிறது. நிகழ் வது கனவா நனவா என்று நிச்சயமற்ற குழப்பமாக இருக்கி றது. அநேகமாக நிஜம் போலத் தான் தோன்றுகிறது!.. நிஜத்தின் நீட்சி போல் தோன்றுகிறது. ..


இப்படி ஒன்று எனக்கு நேற்றும் நேர்ந்தது, .

நாங்கள் வசிக்கும் வீடு இப்போது சில மாதங்களாக விசாலமாகி விட்டது. சற்று எதிர்பாராதவிதமாக வீட்டில் முன் இரண்டு அறைகள் காலியாகி உபரியாக ஆகி விட்டன.

அந்தக் காலியான அறைகளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனைவி என்னை தொந்தரவு செய்து கொண்டே இருப்பாள்.

யாருக்காவது வாடகைக்கு விட்டால் என்ன? நமக்கு எவ்வளவு வருவாய் அதிகமாகும்! எவ்வளவு சௌகரியமாக இருக்கும்! “ என்று ஓதிக் கொண்டே {ஊதிக் கொண்டே ] இருப்பாள்.

எனக்கு உடனே மனசு ஒப்பவில்லை. அந்த அறைகள் நிஜமாகவே காலியாகி விட்டதாக எனக்கு இன்னும் ஒப்புக் கொள்ள முடியாமல் இருந்தது. ஏதோ ஒன்று தடுத்து வந்தது. அந்த அறைக்குள் போனால் அது இன்னும் காலியான மாதிரி தோன்றுவதில்லை.

ஆனால் நிகழ்ந்த சந்தர்ப்பம் என்னை அந்த தடங்கலை மீறி செயல் பட தூண்டியது.

வேலைக்குப் போகும் இரண்டு இளைஞர்கள் வந்து அங்கே வாடகைக்கு தங்க மிகவும் கேட்டுக் கொண்டார்கள் கேட்ட வாடகைக்கும் இசைந்தார்கள். என் மனைவி உடனே ஒப்புதல் தெரிவிக்க சொல்லி விட்டாள். நான் சற்று தாமதித்தால் அவளே கூட சம்மதம் தெரிவித்திருப்பாள்!.

ஆனால் அந்த நாளிலிருந்து எனக்கு விடியலில் தொந்தரவு ஆரம்பித்தது
அரைத் தூக்கத்தில் என் அப்பாவின் அரட்டலான குரல்...என்னைத் தட்டி எழுப்பிக் கேட்டது.

…...” எப்படீடா அந்த ரூமை வாடகைக்கு விட்டே!.. அது என்னுடைய ரூம்.டா.....நான் அங்கே தூங்க வேண்டாமா! சாப்பிட வேண்டாமா! அது என் ரூம்..டா! அது நான் கட்டின இடம் டா!.. எப்படீடா வாடகைக்கு விட்டே! “ …
ஒவ்வொரு காலையிலும் நான் மிகுந்த அவஸ்தையுடன் தான் எழுந்தேன். என் மனைவியை எழுப்பி கனவில் என்னை அப்பா மிரட்டுவதைப் பற்றி சொல்வேன்.

அவள் அதைக் கேட்டு சிரித்தாள். ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவே இல்லை...

""கனவில் கேட்டதையெல்லாம் யாராவது உண்மையாக எடுத்துக் கொள்வார்களா? அப்புறம் எல்லோரும் பைத்தியமாகி அலைய வேண்டியது தான்! என்றாள்.

“ ... ஒங்க அப்பா உயிரோட இருந்த போதே உங்களுக்கு அவரைப் பாத்தா பயம்!. .அவர் போனாலும் அந்த பயம் மட்டும் இன்னும் உங்களை விட்டுப் போகலே! அது தான்..இப்படி!!....நீங்க பயப்படறது உங்களுக்கே அசட்டுத் தனமா ..இல்லே! “ . என்றாள்.

இல்லேடீ......அவர் குரல் அவ்வளவு தெளிவா இருக்கு. நெஜமாவே அவர் ஆவி இன்னும் அந்த ரூம்லே இருக்கலாம்னு தோண்றது! நாம்ப ஏதோ தப்பு பண்றோம்! “ என்றேன் தழுதழுத்த குரலுடன்.

பிறகு அவள் இரவு நேரத்தில் எனக்கு தூக்க மாத்திரை கொடுக்க ஆரம்பித்தாள். சீக்கிரமே தூங்கச் சொன்னாள். நான் தூங்குவதை விழித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஓரிரண்டு நாட்கள் அப்பா வரவில்லை. தூக்க மாத்திரை தான் காரணமோ? ஆனால் அந்தக் கோளாறினால் பகலில் தூங்க ஆரம்பித்தேன். பகலில் கூட அப்பாவின் ஆவிக்கு தடங்கலில்லாமல் வர முடிந்தது. ஒரு பகல் தூக்கத்தில் அப்பாவின் கரகரப்பான குரல் கேட்டது.

என்னடா!...நான் சொல்றது ஒன் மண்டையில ஏறவேயில்லையா!...

என்னோட ரூமை வாடகைக்கு விட ஒனக்கு என்னடா உரிமை? அது என் வீடு....மரியாதையா நான் சொல்றதை கேளு....ரூமைக் காலி பண்ணச் சொல்லு. ! என்னோட நிம்மதியைக் கெடுத்தா...உங்களுக்கு எல்லாம் ஏதாவது ஆயிடும். சொல்லிட்டேன்! “ என்று எச்சரிக்கை குரல் கேட்டது.

நாற்காலியில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். அநேகமாக முன்னால் சரிந்து விழுந்து விட்டேன்,
பார்த்த போது பகல் பன்னிரண்டு மணி! சற்று நடுக்கமாக இருந்தது.

ஆனாலும் பகலானால் என்ன? இரவானால் என்ன? அப்பாவின் பேச்சுக்கு நான் செவி சாய்க்காமல் இருக்க முயன்றேன்.. அப்பாவின் அல்லது அப்பாவின் ஆவியின் ஆதங்கம் தொடர்ந்து மிரட்டிக் கொண்டே தான் இருந்தது.

அந்த அறையைக் காலி செய்தால் தான் எனக்கு தொலைந்து போன தூக்கமும் நிம்மதியும் மீண்டு வரும் என்று தோன்ற ஆரம்பித்தது.

அது எப்படி இப்போது சாத்தியம்? வந்தவர்களை உடனே காலி செய்யச் சொல்வது எப்படி? என்ன காரணம் சொல்வது? வேலைக்கு போகும் அந்த இளைஞர்கள் இப்போது தான் குடி வந்திருக்கிறார்கள்!......

அப்போது வெளியே குரல் கேட்டது . யாரென்று பார்த்தேன். முன்னறையில் வாடகைகு வசிக்கும் அந்த பையங்கள் தான்!

என்ன? “

: ஸார்...ஒரு நல்ல செய்தி. நாங்கள் மூன்று மாதத்திற்கு முன் விண்ணப்பித்திருந்த கம்பனியிலிருந்து நியமன உத்தரவு வந்து விட்டது.

நாங்கள் இவ்வளவு சீக்கிரமாக எதிர்பார்க்கவில்லை. நாளைக்கே நாங்கள் பெங்களூருக்கு கிளம்ப வேண்டும். உங்கள் அறைகள் நல்ல ராசியான இருப்பிடம். மிக்க நன்றி போய் வருகிறோம்" என்று சிரித்த முகத்துடன் சொன்னார்கள். ஒரு கணம் எதுவும் நம்ப முடியாமலிருந்தது!

ரொம்ப சந்தோஷம். போய் வாருங்கள் !” என்று மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன்.

யதேச்சையாக நேர்ந்த இந்த திருப்பம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது....இது எப்படி வாய்த்தது? இதற்கு. என் அப்பாவும் ஒரு மறைமுகக் காரணமோ!

அப்பாவும் அதற்குப் பிறகு என் தூக்கத்தை குலைப்பதை நிறுத்தி விட்டு அமைதியாகி விட்டார்.. அல்லது தூக்க மாத்திரை அவரை வரவிடாமல் தடுத்து விட்டதா? !

என் மனைவி தான் இரவெல்லாம் பொருமிக் கொண்டே இருந்தாள்.

அதென்ன அப்படி ஒரு வன்மம்! அவரு இருக்கற காலத்துல தான் தொந்தரவுன்னா.. இப்படி போன பிறகு கூட நம்ப இஷ்டப்படி இருக்க விடமாட்டேங்கறாரு!. இருந்தாலும் .அவ்வளவு எரிச்சல் ஆகாது மனுஷருக்கு! “

இதுலே அவர் என்னடீ பண்ணாரு? “

எனக்கு அப்படித் தான் உள்மனசுலே தோண்றது! இதெல்லாம் அவர் செய்யற வேலையாத் தான் இருக்கும்! .” என்றாள்.

அப்பாவின் ஆவிக் குரலில் அவளுக்கு இப்படி நம்பிக்கை ஏற்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு உள்ளூர சந்தோஷம் தான்.

ஆனால் எனக்கு இதைப் பற்றி சிந்திக்கவே தயக்கமாக இருந்தது. கூடியவரை இது நினைவுக்கு வராமல் இருக்க வேண்டும் என்பது தான் என் கவலை!

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் நன்றாகத் தூக்கம் வந்தது.

ஆனால் திடீரென்று ஊரெல்லாம் பேய் மழை. பிடித்துக்கொண்டது. இப்படிப்பட்ட மழை இந்த ஊரில் பல வருஷங்களுக்கு முன் ஒரு முறை வந்திருக்கிறது. ஊரையே புரட்டிப் போட்டது. இப்போதும் ஏறக் குறைய அந்த மாதிரி அடை மழைதான்.

தெருக்கள் நிரம்பி பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. ஆறுகள் கரை கடந்து விட்டது. ஆற்றோரம் இருந்த குடிசைக் குடியிருப்புகள் அடித்துக் கொண்டு வெள்ளத்தோடு போய் விட்டன. திடீரென்று ஏராளமானவர்கள் அனாதைகளாக தெருவுக்கு வந்து விட்டார்கள்.

அந்த நான்காவது இரவு நள்ளிரவில் தான் என் வீட்டுக் கதவை யாரோ வேகமாகத் தட்டினார்கள்.

அவசரம் என்று தெரிந்தது. நான் போய்க் கதவைத் திறந்தேன்.

ஆறுமுகம்....... என்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் கடை நிலை சிப்பந்தி... நிலை குலைந்து சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தான். அவனருகில் அவன் மனைவி இடுப்பில் மயங்கித் தலை தொங்கி இருக்கும் குழந்தையுடன் அலங்கோலமாக நின்றுகொண்டிருந்தாள். அவர்கள் அருகில் ஒரு பதினைந்து வயசுப் பையன் கேவிக் கேவி அழுதவாறு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் அவர்களை ஒன்றும் கேட்கவில்லை. கதவைத் திறந்து விட்டு உள்ளே வாங்க..! என்றேன் அவர்கள் நிலைமை பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கும் விதமாக இல்லை விவரித்து சொல்லும் நிலையில் அவர்களும் இல்லை.

அந்த அறைகளைத் திறந்து விட்டேன்.

ஆறுமுகத்தை என் மனைவிக்கும் தெரியும். அவள் ஒரு அடுக்கில் கஞ்சி போட்டுக் கொண்டு வந்தாள்.

நான் அவர்களுக்கு மாற்று உடைகளை கொடுத்தேன்.

அவர்கள் ஆவலாகக் கஞ்சியைக் குடித்தார்கள். கண்களில் பொங்கிப் பொங்கி நீர் வழிந்து கொண்டிருந்தது. அவர்களை படுத்துக் கொள்ள சொல்லி விட்டு நகர்ந்தேன்.

இரவெல்லாம் அந்தக் குழந்தைகளின் விசும்பல் கேட்டுக் கொண்டிருந் தது. எங்களுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை.

ஆறுமுகம் வசிக்கும் இடம் எனக்குத் தெரியும். அது கால்வாய் அருகே புதிதாக உருவெடுத்த குடிசைவாரியப் பகுதி. அதன் கதி என்ன ஆகி இருக்கும் என்று கற்பனை செய்யவே அச்சமாக இருந்தது.

ஏங்க...ஆறுமுகம் எதாவது சொன்னானா? “ என்று கேட்டாள் மனைவி.

காத்தாலை கேட்டுக்கலாம். அவர்களைப் பாத்தாலே தெரியலே! கையிலே ஒரு பெட்டி கூட இல்லை...ரொம்ப பாவமா இருக்கு! “ என்றேன்.

அதெல்லாம் சரி....இதுக்கு ஒங்க அப்பா ஒத்துப்பாரா? ஒங்களை மிரட்டமாட்டாரா?”” என்றாள் என் முகத்தை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு.

அதைப் பத்தி இப்பொ ஏன் நெனைக்கணும்.? மிரட்டினா பாத்துக்கலாம். இப்பொ தூங்கு! “ என்றேன்.

அவளுக்கு எப்படியோ தேள் மாதிரி கொட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்து விடுகிறது!!.

ஆனாலும் நானும் அந்த மிரட்டலைப் பற்றி கவலையுடன் தான் இருந்தேன்.

ஆனால் அன்று இரவு அப்பாவின் மிரட்டலை எதிர்பார்த்துத் தான் நான் தூங்கிக் கொண்டிருந்திருப்பேன்! ஆனால் தூக்கத்தில் அப்பா வரவேயில்லை. எதுவும் பேசவில்லை எனக்குக் கூட சற்று ஏமாற்றமாக இருந்தது.!.

அடுத்த நாலைந்து நாட்கள் ஆறுமுகம் குடும்பம் அந்த அறைகளிலேயே தான் தங்கி இருந்தார்கள்.. நான் ஆறுமுகத்தை அவசரப் படுத்தவில்லை. அவன் குடும்பத்தின் சொந்த ஊரிலிருந்து அவன் உறவினர்கள் ஓடி வந்து நிறையவே உதவிகள் செய்தார்கள்.

மழையின் தாக்கங்கள் அடங்கி ஊர் வழக்கமான நிலைமைக்கு வந்தவுடன் ஆறுமுகத்துக்கு வாடகைக்கு வேறு வீடு பார்த்துக் கொள்ள முடிந்தது.

ஆறுமுகம் இந்த செய்தியை என்னிடம் தெரிவித்த போது நான் அவனை அவசரப்பட வேண்டாம் என்று தடுத்தேன். அவனுக்கு உதவிகள் கிடைத்ததால் அவன் மேலும் எனக்கு தொந்தரவு கொடுக்க விரும்பாமல் கிளம்பிப் போனான், ஆனால் நான் அவன் பிள்ளையை அந்த அறையிலேயே தங்கச் சொன்னேன். ..

நான் அவன் படிப்புக்கு உதவிகள் செய்து அவனை பராமரிக்கிறேன் என்று சொன்னேன் அந்தப் பிள்ளையின் பள்ளிக்கூடம் பக்கத்திலேயே இருந்தது. மேலும் அந்தப் பிள்ளைக்கு இது தான் கடைசி வருஷம். அவனும் மிக நன்றியுடன் சம்மதித்தான்.

இவ்வளவு நடந்தும் கூட என் அப்பா என் கனவில் வந்து மிரட்டவே இல்லை.

நான் தூக்க மாத்திரை உபயோகிப்பதைக் கூட நிறுத்திப் பார்த்தேன். அவர் வரவேயில்லை!

என் மனைவி நான் தினமும் காலையில் எழுந்தவுடன் அப்பா வந்தாரா......மிரட்டினாரா என்று கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தாள். ஒரு வேளை அப்படி நடக்க வேண்டுமென்று தான் அவளுக்குள் ஒரு நப்பாசை இருந்திருக்க வேண்டும்.!.......

ஆனால் இன்னொரு விசித்திரம் நடக்க ஆரம்பித்தது. எங்கள் வேலைக்கார சிறுமி தினமும் அந்த அறையின் ஜன்னலுக்கு வெளியே பெருக்கப் போகும் போது தினமும் கை நிறைய மல்லிகைப் பூக்களை அள்ளிக் கொண்டு வந்தாள்!

ஏது இத்தனை மல்லிப் பூ உனக்குக் கிடைக்குது? என்றேன் வியப்புடன்.

அதான் அய்யா...எனக்கும் புரியலே! அந்த ரூம்க்கு ஜன்னலுக்கு வெளியே .. தினமும் மல்லிப்பூ இரைஞ்சி கிடக்குது..... பக்கத்துலே அக்கத்துலே எந்த செடி கொடியும் காணமே! யார் வந்து கொட்றங்க!! அதிசயமா இருக்கு!..” என்றாள்.

எங்களுக்கும் அது புரியாத வினோதமாகத் தான் இருந்தது. ஆனால் அந்தப் பூக்களின் மணம் மனதில் நாள் முழுதும் நிறைந்து சந்தோஷப் படுத்திக்கொண்டே இருந்தது

அப்பா தான் அதற்குப் பிறகு கனவில் வரவேயில்லை.







No comments:

Post a Comment