vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, March 8, 2015

இருட்டுக்குள் கதறியவன்



      இருட்டுக்குள்  கதறியவன் 


வைதீஸ்வரன்
                    --------------------------------------------------------------------------    















எங்கள்  விமான ஸர்வீஸின் ஒரு புதிய ஆரம்ப யணசேவை  நிகழ்ச்சிக்காக அப்போது  ஹைதராபாத்துக்கு  செல்ல  வேண்டி    இருந்தது.  பேச்சு வழக்கில்  சொல்ல  வேண்டு மென்றால்  “வெள்ளோட்டத் திற்காக”இந்தியாவு க்கு அரு கில்  இருந்த  தீவுக்கு முதல்  முதலாக  விமான  சேவை  தொடங்க  ஏற்பாடாகி இருந்தது.  நிகழ்ச்சி யின்  அரசியல்  முக்கியத்துவத்துக்குப்  பொருத் தமாக  சில முக்கிய  மந்திரி களும்  பிரபல தொழில் பிரமுகர்களும்  புகழ் பெற்ற  நட்சத்தி ரங்களும் அந்த  முதல்  விமான சேவையின்  கௌரவப் பய ணிகளாக  அழைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது விமானக்கம்பனியில் சாதாரண நடுமட்ட நிர்வாகி தான் .... இருந்தாலும்  அந்த  விசேஷ விமான விழாவின்  ஆயத்த  ஏற்பாடுகளை  மேற்பார்வை  பார்த்து  செயல்படு த்த  அவசியமானவர்களில்  நானும்  ஒருவனாக  நியமிக்கப் பட்டதால்  நிகழ்ச்சிக்கு முதல் நாளே ஹைதராபாத்துக்கு  செல்ல  உத்தரவளிக்கப்பட்டது.


ஏற்கனவே  தொழில் நிமித்தமாக  பல முறை ஹைதராபாத்துக்கு  போய்  வந்தி ருக்கிறேன்.  இது  ஒரு  புதிய  பொறுப்பு  அல்ல.  மேலும் இத்தகைய ஹைதரா பாத்  பயணங்கள்  எனக்கு  எப்போதும் மகிழ்ச்சியான  மாற்றமாக  இருக்கும்.  


விமான நிலையத்தில்  போய்  இறங்கியவுடன்  நான்  எப்போதும்  ஏர்ப்போர்ட் டிற்கு  அருகில்  உள்ள  ஹோட்டலில்  தங்கி  விடுவேன்..  நல்ல  வசதிகளும்  ஏர்ப்போர்ட்டிற்குப் போய்வர  வாகனங்களும்  எல்லாமுமே  பிரச்னையில் லாமல்  இருக்கும்.  

இந்த  உத்தரவு  எனக்கு  வந்த  போது  அத்தகைய  மகிழ்ச்சியான  நினைவுகள் மீண்டு  உற்சாகமாக  இருந்தது. இந்த நிகழ்ச்சியின்    முக்கியத்துவத்தை  நினை த்து  மேலும்  பெருமிதமாக  இருந்தது.

       

சென்னை  நிலையத்தில்வேலையை  முடித்து  விட்டு  ஹைதராபாத்துக்கு  செல்லும்   கடைசி  இரவு விமானத்தில் புறப்பட்டேன்  மாலை  ஏழு  மணிக்கு  கிளம்ப வேண்டிய விமானம்  அரை  மணி  தாமதமாகக்  கிளம்பியது.  ஹைதரா பாத்தில்  இறங்கும்போது மணி  எட்டரை.  இறங்கியவுடன்  அங்கே  கொஞ்சம்  வேலைகளைமுடித்துவிட்டு    நான்  வழக்கமாகத்  தங்கும்  ஹோட்டலுக்குப்  புறப்பட்டேன். 

விமான நிலையத்திலிருந்து அந்த ஹோட்டலுக்கு  பத்து  நிமிஷம்தான். வழக்கமாக அந்தஹோட்டலின்  வரவேற்பு  முகப்பில்  உள்ளவன்    என்னைப்  பார்த்தவுடன்  சிரித்த  முகத்துடன்  “  வாங்க  ஸார்...நல்லா  இருக்கீங்களா?  ”  என்பான்..    இன்று  “ஹா..” என்று    திகைப்புடன்  பார்த்தான்.


“என்னா  ஸார்  இன்னிக்கு  பாத்து  வந்தீங்கோ?”


அவன்  கேள்வி  எனக்குப் புரியவில்லை.


“ ஏன்?.....என்ன”.?....  


“ நாளைக்கு  ஏர்போர்ட்டிலே  பெரிய  function  நடக்கப்போவுதாமே! உங்களுக் குத்  தெரியாதா?... ”


“தெரியுமே!”  


“ஏகப்பட்ட  guestங்கோ....எல்லாம்  இங்கே  தான்  தங்கியிருக்காங்க.....இங்கெ  ரூமே  கிடையாது...எlல்லாம்  FULL....ஸாரி  ஸார்.”


நான்  இந்த  நெருக்கடியை  எதிர்பார்க்கவில்லை... இப்படி  ஒரு  பிரச்னையை  நான் முன்கூட்டியே  நினைத்துப்  பார்த்திருக்க வேண்டும்  .. இப்போது  அவசரத் துக்கு இரவு தங்குவதற்கு அங்கே அறை காலி இல்லை என்று  சொல்லி விட்டான்.  இப்போது எங்கே  தங்குவது? 


வெளியே  வந்தேன்  ஆட்டோக்காரனைப்  பிடித்து அருகில்  வேறு ஏதாவது ஹோட்டல்  இருக்கிறதா  என்று  தேடச்  சொன்னேன்.  

அவன்  அந்தப்  பகுதியில்  இன்னும்  இரண்டு  ஹோட்டல்கள்  இருப்பதாக  சொன்னான்  “முயற்சி  செய்யலாம்  என்றான். 

அங்கே  போன போது  அறை  எதுவும்  காலியில்லை  என்று  அவர்களும்  கையை விரித்து  விட்டார்கள்  எல்லாம் நிகழ்ச்சிக்கு வந்த  கூட்டம். 

 இரவு  பத்து மணிக்கு  மேல்  ஆகிவிட்டது.  நான்  திரும்பவும்  ஆட்டோவில் வந்து உட்கார்ந்து  கொண்டு கவலையுடன்  நெற்றியை  சொறிந்துகொண்டு  வெற்று வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.


“ஸார்..... எனக்குத்  தெரிஞ்ச  ஓட்டலு  ஒண்ணு  இருக்குது.. ரொம்ப  வசதி  எல்லாம் இருக்காது..  சுமார்  தான்.. ஆனா  நமக்குத்  தெரிஞ்சவங்க......ரூம்  கொடுப்பாங்க…. அங்கே  போலாமா?”


ஆட்டோக்காரன்  சொன்ன யோசனையை  நான்  நிராகரிக்கும் நிலையில்  இல்லை.


வேறு  வழியில்லை....எப்படியாவது  ஒரு  இரவைக்  கழித்து  விட்டு  விடியற் காலை விமானநிலையத்துக்குப்  போயாக வேண்டும்  பெரிய  சொகுசை  எல் லாம்  இப்போது  எதிர்பார்க்க  முடியாது.


’சரி” என்றேன்.


ஆட்டோ  எங்கெங்கோ  சந்து பொந்துகளுக்கெல்லாம்  நுழைந்து  வளைந்து போய்க் கொண்டிருந்தது.  சில வழிகளில் வெளிச்சம் மங்கியும்  வெளிச் சமே  இல்லாமலும் இருந்தது. 


சில குறுகிய  சந்துகளில் நுழைந்தபோது  ஏற்கனவே  குடும்பங்கள் வீட்டின் தெரு வாசலில்  இரண்டுபக்கமும்  பாய் விரித்துக் காலை  நீட்டிப் படுத்துக்  கொண்டிருந்தார்கள்.  இரவு நேரங்களில் இங்கே வீடுகள் தெருவுக்கு நீண்டு விடுகின்றன.


ஆட்டோக்காரன்    படுத்திருப்பவர்களின் கால்களின்  மேல்  வண்டியை  ஏற்றி விடாமல்  கவனமாக ஓட்ட வேண்டியிருந்தது.  

“என்னாப்பா?..”  ஹோட்டல்  எப்போ வரும்?”


“இதா.. இப்புடு .....பக்கத்துலே  தான்  ஸார்..”

நல்ல  வேளை  அவன்  கடைசியாக  திரும்பிய  தெரு  முட்டு  சந்தாக  இருந்தது. அதற்கு மேல் அவன்  போக முடியாது.  அந்த  சந்தின்  முடிவில் ஆட்டோ  நின்றது.

”ஹோட்டல்  எங்கே?”  என்றேன்.


“இதான்  ஸார்  பாருங்க...”


இடது பக்கம் நான் இறங்கிப்  பார்த்த  போது .  குச்சு வீடு  போல்  இருந்த ஒல்லி யான  உயரமான  கட்டிடம் . மேலே  “Mansion “  என்று  ஒரு பலகை  சாய்வாகத் தொங்கிக்கொண்டிருந்தது.  நீண்ட பாறைகளைப் போன்ற படிகளில் ஏறிஉள்ளே போனவுடன்  சிமிண்ட் தாவாரம் போல்  இருந்த  இருண்ட  பகுதியில் ஓரத்தில் ஒரு மேஜையும் முதுகில்லாத நாற்காலியும்  தெரிந்தது.    தயக்கத்துடன்  உள்ளே  போய் நின்றேன்.


எனக்கு  முன்பே  ஆட்டோக்காரன்  வேகமாக  என்  பெட்டியை  எடுத்துக்  கொண்டு  உள்ளே  நுழைந்துவிட்டான். 


 நாற்காலிக்குப் பின்னால்  நீளமான கட்டை பெஞ்சி  ஒன்றில்  நீளப் போர்த்திப்  படுத்துக்கொண்டிருந்த ஒருவனிடம்  “என்னா  ராஜூ.....நித்ர போத்துன்னாவா?  சாருக்கு பெஷல்கம்ரா...  குடு...”  என்றான்  பரிச்சயமான  குரலில்  அவன்  பேச்சில்  மூன்று  பாஷைகள்  கலந்திருந்தன.  



லேசாகக்  கண் விழித்துப்  பார்த்தவன்  அதிக  பரபரப்பைக்  காட்டாமல் சோம் பலுடன்  கொட்டாவி  விட்டவாறுபின்னால்  மாட்டியிருந்த  ஒரு  சாவிக்  கொத்தை  எடுத்துக் கொடுத்துவிட்டு  “பேரு ஏமி ஸார்?..“டைம்  ஏமிரா...  இப் புடு? “ஊபர்  சலோ... தெரடு  ப்லோர்...மூணாவது ....பேர்  என்னா..செப்பு?”    பேரேட்டைத் திறந்து  நான் சொன்ன  பெயரை  எழுதிக்கொண்டான்.

   
பக்கவாட்டில் பழங்காலக் கம்பிகளுடன் நின்றுகொண்டிருந்த லிப்டுக்குள்  என்னையும்  அவசரப்படுத்தியவாறு  ஆட்டோக்காரன்  நுழைத்து  மேலே  முடுக் கினான்.

மூன்றாவது  தளத்தில் அது  ஒரு  குலுக்கலுடன் போய்  நின்றது.


அங்கே  மூன்று  சின்ன அறைகளும்  மீதி மொட்டைமாடியாகவும்  தோன்றியது.. இருட்டில்  கவனிக்க  முடியவில்லை.

அதில் மூணாம்  நம்பர்  அறையைத்  திறந்து  அங்கே  இருந்த  இரும்புக்  கட்டி லில் பெட்டியை வைத்து விட்டு  “சரியா..ஸார்..அவசரத்துக்கு  அட்ஜஸ்ட்  பண்ணிக்குங்க.  வரட்டுமா  ஸார்..”என்று  மின் விசிறி ஸ்விட்ஸைத்  தட்டி விட்டான். ஏதோ குருவிகள் அடிபட்டுப் பறந்த மாதிரி ஒரு கத்தலுடன்  விசிறி  லேசாக  சுற்ற  ஆரம்பித்தது.


கொடுக்க வேண்டியதைக்  கொடுத்தவுடன்  “தேங்க்ஸ்..ஸார்..”  என்று  ஆட்டோக் காரன்  கிளம்பிவிட்டான். 

அறையை சுற்றிப் பார்த்தேன்  அதிர்ச்சியடையக்கூடாது என்று ஏற்கனவே திடப்படுத்திக்  கொண்டுதான் பார்த்தேன்.  அவசரத்துக்கு இங்கே  வந்திருக் கிறேன்... 


எதிர்பார்த்தது  போல்  அறை மிக அசுத்தமாக  இருந்தது.


அங்கங்கே  பீடித்  துண்டுகள்.  சுவர் காரைச் சுவர்  ஈரம்  பாய்ந்த விரிசல்க ளுடன்…. . மூலையில் . சீராக  ஈர அழுக்குப் பரவிப் படிந்த சின்ன  மேசை  அருகே  ஒரு  காலொ டிந்த  நாற்காலி..

எனக்கு  இந்த  தருணத்தில் எதுவுமே பெரிய  குறையாகப்படவில்லை.  நல்லவேளை கையில் தண்ணீர்  பாட்டில்  இருந்தது.  குடித்துவிட்டு  உடைக ளைக்  களைந்து  நாற்காலியின் மேல்  தொங்கப் போட்டேன்.  இரும்புக் கட்டிலின்  மேல்  கிடந்த  பழைய தூசுக்  கம்பளியை  மேலும்  உதறா மல் வேட்டியை  விரித்து  படுத்துக்கொண்டேன்.

 படுத்துக்கொண்டவுடன்தான்  ஞாபகம்வந்தது,  விளக்கை  அணைக்க  மறந்து விட்டேனென்று.


எழுந்து  கதவு  நிலைப்படிக்கு வலது பக்கம் இருந்த  ஸ்விட்ச்சை தட்டி  விளக்க ணைத்து  படுத்துக்கொண்டேன்.

விளக்கணத்ததும் கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள  கம்பி  ஜன்னலில்    ஏற்கனவே  நான்  கவனிக்காமல்  இருந்த சதுரமான  வானம்  மேலும் அழுக்கு நீலமாகத்  தெரிந்தது. 


வெளியே புகைமூட்டமாக மஞ்சு  பரவி இருந்தது..  கலப்படமான  ஊர் வாடையு டன்  காற்று விட்டுவிட்டு வீசிக்கொண்டிருந்தது.  கீழே  எட்டிப்  பார்த்தேன் .

அடிஆழத்தில்  அடர்ந்த இருட்டுப்பச்சை  மரங்களும்  பூச்சிகளைப்போல் மினு மினுக்கும்  வீதிவிளக்குகளும்  கலந்து  விரிந்த பரப்பில் நகரம் தூங்கிக்  கொண்டி ருந்தது.

எங்கோ ஒரு தூரத்து மூலையில்  நான்  காலையில் போகவேண்டிய விமான  நிலையமும்  இருக்க  வேண்டும். 

இப்போதே  மணி  பன்னிரண்டாகி  விட்டது.  விடிவதற்கு முன்  நான்கு  மணிக் காவது எழுந்துவிட  வேண்டும். காலைக்காரியங்களைமுடித்துக்கொண்டு  ஐந்து  மணிக்குள்ளாக  விமானநிலையத்துக்குப்  போய்விட  வேண்டும்.  அப்போது தான் ஆரம்ப வேலைகளை  சௌகரியமாக  செய்து  முடிக்க இயலும்  விழா ஏழு மணிக்கு தொடங்குகிறது    மந்திரிகள் பிரமுகர்கள் வருகை பூமாலைகள்    பேச் சுக்கள் விமானத்தின் வெள்ளோட்டம் எல்லாம்  ஒவ்வொன்றாக  நடை பெறும்... இப்போது  சீக்கிரம்  தூங்க வேண்டும்..



இன்னொரு  முறை  பார்த்துவிட்டு  கடிகாரத்தைக்  கழற்றி  கட்டிலில்  தலைய ணைக்கு அருகில்  வைத்துவிட்டுப்  படுத்தேன்.  


 எதிர்பாராத இந்த அவஸ்தையை  நினைத்துப்படுத்தபோது  எனக்கு பலமாக சிரிப்பு வந்து விட்டது... அது  வரவழைத்துக்கொண்ட சிரிப்பாகவும் இருக்க லாம்.  இப்போதைக்கு  ஆறுதலுக்கு  அந்த  சிரிப்பு . அவசியம்.  .பிறகு தூங்கிப் போனேன்.


ஆழ்ந்த  தூக்கம்  வரவில்லை.  புரண்டு  புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.  திடீ ரென்று  தூக்கம் கலைந்து  போய்விட்டது. 


வெகுநேரம் தூங்கி விட்டேனா?  எழுந்து  உட்கார்ந்துகொண்டு  ஜன்னல்  வழி யாக எட்டிப் பார்த்தேன்.

“இது  நள்ளிரவா?  இல்லை  விடிந்து விட்டதா?...”மேலும்  எட்டிப்  பார்த்தேன்.


கீழே  அரை விடியல் வெளிச்சத்தில் சின்னச் சின்ன கோடுகளாகத்  தெரியும் வீதி களில்  அங்கும்  இங்குமாக  எறும்புகள் போல் லாரிகள்  ஊறிக்கொண்டிருந் தன…. வேற்றூருக்குப்  போகும்  பயணிகளின் பஸ்கள்  கூட தெரிந்தது.  எனக்கு “திக்”கென்றது  “இப்போ என்ன  மணி  இருக்கும்?  அதிக நேரம்  தூங்கிவிட் டேனோ?...

அப்போது  தான்  அந்த  “அனுபவம்“ஆரம்பித்தது.  

 நான் இருட்டில் நெப்பாக நடந்துகதவருகில்  உள்ள  ஸ்விட்சைப் போட்டேன். இல்லை,  போடவில்லையா? மறுபடியும்  போட்டேன்..


“இதென்ன  விளக்கெரியவில்லையா?  மின்விசிறி  ஏற்கனவே  நின்றுபோயிருந் தது.


 “அய்யோ”  மின்சாரவெட்டா!! இரண்டு  மூன்று  முறை போட்டுப் போட்டு  அணைத்தேன்.  மின்சாரம்  இல்லை. சுற்றி  இருட்டு.


தலையணைக்கருகில்  வைத்திருந்த  கடிகாரத்தை  எடுத்துப்பார்க்க  யத்தனித் தேன்  இருட்டில் கையைத்  தடவியபோது  கடிகாரம் “பொட்டென்று  கட்டிலுக் கடியில் விழுந்துவிட்டது.  


மேலும்  இருட்டாக  இருந்த  கட்டிலுக்குக்கீழே  குனிந்து  தரையில்  கையைத்  தடவித் தேய்த்து  கடிகாரத்தைத்  தேடினேன்.  முதலில்  இரண்டு மூன்று  பீடித்  துண்டுகள் தான் கையில் சிக்கின. அருவருப்புடன் தூக்கி எறிந்துவிட்டு மேலும் தேடியபோது வழவழப்பான தரையில்  ஏதோ ஈரத்துடன்  கடிகாரம் தட்டுப் பட்டது.  


ஜன்னல் அருகில் போய் மணி  பார்த்தேன்.  மணி  நாலே  முக்காலோ  ஐந்தே  முக் காலோ....சந்தேகமாக  இருந்தது. ஒருவேளை  விழுந்ததில்  கடிகாரம் ஓடாமல்  நின்று விட்டதோ! 


கடிகாரம்  பழசு!  இப்போது  மணி  பார்த்துக்கொண்டு நேரத்தை வீணாக்க  முடி யாது. உடனே  தயாராகி  கிளம்பிவிட வேண்டும்.

 ’அய்யோ  பாத் ரூம்  எங்கே?  நேற்று அந்த ஆட்டோக்காரனையாவது  கேட்டிருக்க வேண்டும்  நான் மறந்துவிட்டேன். கையில்  துண்டை  எடுத்துக் கொண்டு  கதவைத் திறந்து  வெளியே  பார்த்தேன்.  அங்கே  பாக்கி  இரண்டு  அறைகள் இருந்தன. இதில் எது  பாத்ரூம்?’


மெள்ள  ஒரு  அறையின்  கதவைத்தட்டினேன்  அது  திறந்து  கொண்டது  ஆனால்   உள்ளே இருட்டில்  எதுவும்  தெளிவாகத் தெரியவில்லை. பாத்ரூம்  ஆகத்தான் இருக்கவேண்டும்.  காலை  மெதுவாக உள்ளே  வைத்தேன்.  எவனோ ஒருவன்  மிருகம் போலக் கத்தினான்  அவன் கால்களை  நான்  மிதித் துக்கொண்டு நின்றேன்.!!  


 திடீரென்று  துக்கத்தில்  நேர்ந்த அந்த  அதிர்ச்சியில்  அவனுக்கு  நான்  ஏதோ  பிசாசு போல் தெரிந்திருக்கவேண்டும்.. . கொச்சைத் தெலுங்கில்  அவன் துப்பிய கெட்ட வார்த்தைகள் என் மேல் தெறித்தன. குறைந்தபட்சம்“கடங்காரா........”  என்று  சொல்லி யிருப்பானோ!  நல்லவேளை  எனக்கு  தெலுங்கு தெரிய வில்லை. 


“ஸாரி..ஸாரி..ஸார் ஸாரி  ஸார்.. “ என்று  மன்னிப்புக்  கேட்டுக்கொண்டே  கதவை மூடி விட்டு  வெளியே வந்தேன்.  அவன் கத்துவது  இன்னும்  தொடர்ந்து கொண்டு தான் இருந்தது... மிதி  அவ்வளவு  அழுத்தமாக  இருந்திருக்கலாம்….


இப்பொது பாத்ரூம் போயாக  வேண்டும்.  பாக்கி இருப்பது  ஒரு  அறை  தான். அது பாத்ரூம்  ஆகத்தான்  இருக்கவேண்டும்….


இருந்தாலும்  பயந்துகொண்டேநான்  மெள்ள நெருங்கி கதவைத்  திறக்க முயன் றேன். அது  பாதி திறந்துகொண்டு  மேலும்  நகராமல் அழுத்தமாக  நின்றது.  மேலும்  ஒரு தள்ளு. தள்ளினேன். 


 தடாலென்று  கதவு திறந்துகொண்டபோது  என்  கால்களுக்கு  இடையில் இர ண்டு பெருச்சாளிகள்முண்டியடித்துக்கொண்டு வெளியே ஓடின.


 அதிர்ச்சியில்  அநேகமாக  பின்பக்கம் தடுமாறி  விழுந்து  விட  இருந்தேன். 

 ’அய்யோ..இதென்ன  பெருச்சாளிகளுக்கு ஒரு அறையா?....’


என்  பதட்டம் அடங்க  சிலகணங்கள்  பிடித்தது.  இப்போது  மேலும்  அவசர மாக     பாத்ரூம்  போக  வேண்டியிருந்தது....எங்கே  அது?

மாடியை சுற்றிப் பார்த்தேன் அங்கே  ஒரு  மூலையில் குட்டைச்சுவர் தடுப்பு ஒன்று இருந்தது.. ’அதுவா .....பாத்ரூமா?....’

நெருங்கிப் பார்த்தபோது  மூத்திர வாடை  மூக்கைப்  பிய்த்துக்கொண்டு  போனது. அது  பாத்ரூம்  இல்லை.. ஏதோ அவசரத்துக்கு  ஒரு ஏற்பாடு.. அய்ய்யோ... பாத்ரூம். ... பாத்ரூம்... யாரைக்  கூப்பிடுவது? கீழே போக  LIFTம்  வேலை  செய்யாது.


பதட்டமுடன்  கையில் மேல்துண்டும் சோப்புமாக  சுற்றி வந்த  போது ஒரு துருப் பிடித்த கம்பிக் கிராதி போல் கீழே செல்ல  படிகளுடன்  ஒரு இரும்பு  ஏணி ஓரத் தில் தென்பட்டது.  தட்டுத்  தடுமாறி  நேரக்கூடிய  விபத்தையும்  பொருட்படுத் தாமல் அவசரமாக  படியிறங்கிப்  போனேன்.



இப்போது  கீழ்த்  தளத்துக்குள்  போய்விட்டேன்!!

அம்மாடி....இங்கே  பாத்ரூம்  நிச்சயம்  இருக்க  வேண்டும்... இருந்தாக  வேண் டும்... இருந்தது.


இருட்டுக்குள்  மங்கலாகத்  தெரிந்தது. கதவு சரியாக இல்லை.


இருட்டுக்குள்  எதற்கு  கதவு?? உள்ளே  மெதுவாக கால் வைத்தேன்.  ஒரே  சறுக் கலில்  மூலைச் சுவரில் பொருத்தியிருந்த  குழாயின்  மேல்  மோதி  தடுமாறித் தள்ளாடி நின்றேன்.  நான்  சுவற்றில் மோதிய  வேகத்தில்  குழாய்  திறந்து  கொண்டு  தண்ணீர் கொட்டியது.  

 அருகில்  ஏதோ  கழிவுத்  துவாரமும்  தட்டுப்பட்டது.


ஆஹா!  அந்த  நிம்மதியை  வேறெந்த சூழலிலும்  அனுபவிக்க  முடியாது.


எப்படியோ  ஒருவாறு  குளித்து முடித்து ஆனாலும் சோப்பு  நழுவிப்போன தையும் பொருட்படுத்தாமல்  மேலும் வழுக்காமல்  வெளி வந்தேன்.  மீண்டும்  கம்பி  ஏணிப் படிகளில்  மேலே  வந்து  ஒரு  வழியாய் என்  அறைக்குள்  வந்து  சேர்ந்தேன்.  ஏதோ சிகரத்தைத்  தொட்டு  மீண்டதுபோல்  ஒரு  ஆயாசமான  ஈரமான  பெருமூச்சு  வெளிப் பட்டது...

அவசரஅவசரமாக பெட்டியைத்  திறந்து  ஏதோ  நெப்பில்  என்  சீருடையை  வெளியே எடுத்து  அணிந்துகொண்டேன். ஆனால்  வேலைக்குப்  போகும் போது  கழுத்தில் ‘டை’ வேறு  கட்டிக்  கொள்ள  வேண்டும்  அது ஒரு  தொழில் வழக்கம் ...;கட்டாயம். எனக்குப்  பிடிக்காத  அவஸ்தை..


கண்ணாடி  இல்லாமல்  இருட்டில்  டையை  ஒழுங்காகக்  கட்டிக் கொள்வதில்  எனக்கு நம்பிக்கை இல்லை.  சாமர்த்தியமும்  போதாது....


’டை’ யைக்  கையில்  எடுத்துக்கொண்டு போவதுதான்  நல்லது. 

இருட்டில்  நெப்பாகத்  தடவித்  தேடி  பெட்டிக்கு  அடியில் பொதிந்து வைத் திருந்த டையைக் கையில்  எடுத்துக்கொண்டு  கதவைப் பூட்டிக்  கொண்டு  வெளியே வந் தேன்.


எனக்கு  இப்போது  கீழ்த்தளத்துக்குப்  போவதற்கு  வழி  தெரியும்.  சுவர்  ஓரத் திற்குப் போய்  கம்பி ஏணியை  பிடித்துக்கொண்டு படிகளில்  விருவிரு வென்று இறங்கிக் கீழ்த்தட்டுக்கு  வந்துவிட்டேன்.  அங்கிருந்து  நான்  தரைத் தளத்துக்கு  இறங்கியாக  வேண்டும்  LIFT  வேலை  செய்யாது.  படிகள்  எங்கே??


 அந்தத்  தளத்தின்  மூலையில் இருந்த  பாத்ரூமைத்  தவிர  நடுவில் மூன்று  அறைகள் . அதைச்  சுற்றிலும்  இருண்ட தாழ்வாரம்... குப்பைக்  கூளங்களாக  இருந்தது.....


இங்கே  படிகள்  எந்தப்  பக்கம்  இருக்கக்கூடும்? ….

தாழ்வாரத்தின் ஒரு பக்கமாக மெள்ள  சுவற்றைப் பிடித்தவாறு  நகர்ந்து  படி களைத் தேடிப்போனபோது  LIFT  கதவுக்கம்பிகள்  கைகளில்  தட்டுப்பட்டன. ‘ஓ LIFT இங்கே இருக்கிறதா!!.  படிகள்  வேறு  பக்கம்தான் இருக்க வேண்டும்..


வந்தவழியே திரும்பி மீண்டும் அறைகளைத்  தாண்டிவந்தபோது ஏதோ  பேச்சுக் குரல்  கேட்டமாதிரி  இருந்தது….’இந்த  அறையில் யாரோ  விழித்துக்  கொண்டி ருக்கிறானோ?.  இவனைக்  கேட்கலாமோ? …’

முன் அனுபவத்தால் நான் அறைக்கு உள்ளே போகாமல் வெளியே  நின்று கொண்டு “ஸார்..ஸார்..” என்றேன்.


 அலுப்பும்  ஆத்திரமுமாக உள்ளே இருந்து கூர்மையாக  ஒருவன்  கத்தினான்.


“லேய்....ஏமிரா.....ஆதா  கண்டா  ஆவலே...அதுக்குள்ளற  அர்ஜண்டு படுத் துறே?  பைசா...வாங்கலே....இங்கே  என்ன  ச்ச்சும்மாவா... .....துக்கினு  இருக்கோம்...?போடா..அப்பாலே!...”


அதைத்  தொடர்ந்த  மாதிரி ஏதோ  ஒரு  பெண் குரல்  ஹிந்தியில்  ஹீனமாக முன கிய  மாதிரி…தொடர்ந்தது.  அதற்கு  ஆண்  குரல்  இதமாக கொஞ்சலாக சமாதா னப்படுத்தி விட்டு மீண்டும் என்னைப் பார்த்துக் கூச்சல் போட்டது... நேரம் காலம்  தெரியாத  குறுக்கீட்டிற்காக.


அய்ய்யோ! ...எனக்கு  வெடவெடத்த்து..  ! 


 உடனடியாக  அந்த  இரண்டாம்  மாடியிலிருந்து  கீழே  குதிக்க  ஏதாவது  ஜன் னல்  இருக்கிறதா  என்று  ஒரு  கணம்  யோசித்து  நின்றேன்.


’சே...இப்படி  ஒரு  மோசமான  விடியலா....எனக்கு?’நரகக்குழியில் விழும்போது கூட இவ்வளவு  அதிர்ச்சிகளை  எதிர்கொள்ளத்  தேவையிருக்காதென்று  தோன்றியது….



இப்போது எப்படியாவதுகீழே  இறங்கியாகவேண்டும்.  அதற்கு  முதலில்  இந்த  இருட்டுச்  சிறையிலிருந்து  எனக்கு  விடுதலை  வேண்டும்…

கடவுளே!! இது  இருட்டுச்  சிறை  தான்….

நான்  தட்டுத் தடுமாறி  குப்பைக் கூளங்களை  மிதித்துக்கொண்டு தாழ்வாரத்தின் இன்னொரு  பக்கத்திற்குப்  போனேன்.  அங்கே  இடதுபக்கத்தில்  நீளமான  மரக் கதவு  இரண்டடி உயரத்தில் பொருத்தப்பட்டிருந்தது.  அந்தக் கதவுக்குக் கீழே ஒரு வழி மாதிரி இருட்டில் இறங்குவது  தெரிந்தது.  சற்றுக்  கண்ணை  சுருக்கிக்கொண்டு  பார்த்தேன்.


ஓ!  அங்கேதான்  படிக்கட்டுகள்  இறங்கிக்கொண்டிருந்தன. ஆமாம்  அது  தான் படிகள்!  ஹா!  படிகள்  தெரிந்துவிட்டன.!!  ஆனால்  அய்யோ!..  அரைப்பாதிக்  கதவு  பூட்டியிருந்தது.  அதைத்  திறந்தால்தான்  நான்  இறங்க முடியும். எப்படித்  திறப்பது?..


எனக்குள்  குழப்பமும் வேதனையும்  பொங்கிக்கொண்டிருந்தது.



இரண்டு  கைகளையும்  கன்னத்தில் குவித்துக்கொண்டுடார்ஸான் கூவுவது மாதிரி  “அய்யா...அய்யா...ஸார்...ஸார்... ”என்று  இருட்டுக்குள் கீழே  பார்த்துக்  கத்தி னேன்.


“ஸார்.....கதவைத்  திறங்க…டேய்  கதவைத் திறங்கடா.....” கத்திக்கொண்டே இருந்தேன்..


 கீழே இருந்து யாரோ லேசாக கனைக்கிற சத்தமோ, முக்கி அலுத்துக்கொண்ட மாதிரி யோ  கேட்டது.  இரண்டு  மூன்று  படிகளுக்குக்  கீழே  தான்  அந்தக்  சலசலப்பு  கேட்டது.


நெருக்கமாகப் படுத்திருந்த ஹோட்டல்  சிப்பந்திப்  பையன்கள்  இரண்டு  பேரில் ல்  ஒருவன்    விடுவித்துக்கொண்டு  தீனமான ஏக்கமான  குரலில்  முணுமுணுத் தான்.


“எவருய்யா...இந்த  டைம்லோ ... ..யாரு  கூவறது? ஏமி  காவலா  மீருக்கு? ...”  அவன் வேதனை  அவனுக்கு.    


 “தயவுசெய்து கதவைத்  திறந்து  விடுங்கப்பா...கீழே  போகணும்  கரண்டு  இல்லே... lift  இல்லே...”  என்று  கெஞ்சிய  மாதிரி கத்தினேன்.


அந்தப் பையன்  சுதாரித்து  சரிசெய்துகொண்டு  சோம்பல் முறித்துக்  கொட் டாவி விட்டு நிதானமாகப்  படியேறிவந்த போது  ஒரு  யுகம்  கழிந்திருக்கும்.


இடுப்பிலிருந்து சாவியைத்  தேடி எடுத்து  அரைக்கதவைத்  திறந்து விட்டபோது  இன்னொரு  யுகம்  கழிந்திருந்தது.

ஆத்திரத்தையெல்லாம்  அடக்கிக்கொண்டு  படிகளில் தாவி அந்த  இன்னொரு சிப்பந்தியைத்  தாண்டிக் குதித்துக் கோபமாக  வேகமாகக் கீழே  இறங்கினேன்.  இப்போது  தரைத்தளம்  வந்துவிட்டது... 


 நேற்று  இரவில் நான்  உள்ளே  நுழைந்தபோது கண்ட அதே முன்  வாசல் தான்….. அப்பாடா!...விடுதலை...


அங்கே  நேற்று பார்த்த மாதிரியே  நாற்காலிக்குப்  பின்புறம்  நீண்ட பெஞ்சியில் அந்த ஆள் மேலும்  நிம்மதியாக குறட்டை விட்டுக்  கொண்டிருந்தான். எனக்கு  எரிச்சலாக வந்தது.


உடனே அவனை சத்தம்  போட்டுக்  கத்தி  அவன்  நிம்மதியைக்  குலைக்க வேண்டுமென்று ஆத்திரமாக  இருந்தது.  அவன்  மூஞ்சியில் .  நாலு  குத்து குத்தவேண்டுமென்று  பரபரத்தது..


“யோவ்.....எழுந்திருப்பா.....என்ன  தூங்கறே?,,,,,வெடிய வெடிய ஓட்டல்லே கரண்டு இல்லே!!  என்னய்யா...ஓட்டல்  நடத்துறே?  எழுந்திரய்யா.. எழுந்திரு.. ராத்திரியெல்லாம்  தொந்தரவு?.. எவ்வளவு  கஷ்டப்பட்டு  கீழே வந்திருக்கேன்.. தெரியுமா?... எழுந்திரய்யா....”.


அவன் எழுந்திருக்கவில்லை. படுத்துக்கொண்டே நிதானமாக என்னை இடுக்கிய கண்களால் பார்த்தான்.. சற்று  அசைந்துகொடுத்தான். கொட்டாவி விட்ட வாறு மெதுவாக போர்த்தியிருந்த துணியை  கொஞ்சம்  விலக்கினான். 



 “ஏமி  ஸாரு..?” கட்டையான  குரல்.

“யோவ்!...கரண்டுஇல்லாமெ எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? கீழே வந்து  சேர  எவ்வளவு  பாடு......தெரியுமா?”


 என்னாய்யா  ஓட்டலா...நடத்துறீங்க...... இது...என்ன..இடம்?..”

 நான்  கத்தியது  எதுவும் அவனுக்கு  உறைக்கவேயில்லை. 


அவன்  எழுந்திருக்காமல் மேலும் கண்ணைக்  கசக்கிக் கொண்டான் .பெஞ்சியில் சற்று  ஒருக்களித்து  திரும்பியவாறு  இடது  கையை  சற்று மேலே நீட்டி  பின்  சுவற்றில்  அழுக்காக ஒட்டிக் கொண்டிருந்த  ஒரு ஸ்விட்சை  தட்டினான். எனக்கு அதிர்ச்சி…


விளக்கு  எரிந்தது.!  .... இப்போது  விளக்கு  எரிகிறது....!!

நான்  பேச முடியாமல்  நின்றேன்.


அவன் என்னை  ஏளனமாகப்  பார்த்தான். “ஏமி ஸாரு....லைட்டு  எரியுதே.... எந்து க்கு  ஸார்.. பொத்துனெ .பேஜார் பண்றே?...  கரண்டு  அப்புடே  ஒச்சி ந்தே!’  காத்தாலே எந்துக்கு  கூவறே?” 


மனசுக்குள் மேலும் என்னைத்  திட்டிக் கொண்டே  திரும்பிப்  படுத்துக்கொண் டான்.


எனக்கு இப்போது  இன்னும் யார்  மேலாவது  கோபப்படவேண்டும்....  யாரை யாவது  ஓங்கிக் குத்தவேண்டுமென்று பதறியது.  


இப்போது  என்னைத்தான்  அறைந்து கொள்ள  வேண்டுமோ!  இடையில் மீண்டும் எப்போது  கரண்டு  வந்தது?...இடையில் நான்  சோதித்துப் பார்க்கவில் லையோ...!


இப்போது எதைப் பற்றியும்  வருத்தப்பட்டுக்கொண்டிருக்க நேரமில்லை.


அவமானத்தையும் அதிர்ச்சியையும் மனதுக்குள் சுருட்டிக்கொண்டு நான்  வெளியே படியிறங்கி  வீதிக்கு  வந்தேன்.

  
’இதென்ன?’ என் கையைப் பார்த்தேன்.


என் கையில் “டை”க்கு  பதிலாக ஜட்டியை வைத்துக்கொண்டிருந்தேன்….  இருட் டில்  குளறுபடி ஆகிவிட்டது.


இப்போது நான்  மீண்டும்  திரும்பி  மேலே  மூன்றாவது  தளத்துக்குப் போயாக வேண்டும்.............................................  




                                                 அம்ருதா  மார்ச் 15




  




1 comment: