vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, March 2, 2013

மூக்கு - மொழிபெயர்ப்புச் சிறுகதை


 மூக்கு
ர்யுனொசெகெ  அகுடாகோவா [1918]
மொழிபெயர்ப்பு  : வைதீஸ்வரன்

 



மூக்கு

ர்யுனொசெகெ  அகுடாகோவா [1918]

மொழிபெயர்ப்பு  : வைதீஸ்வரன்

ஸென்ச்சீ  நைய்கு [ZenchiNaigu] மூக்கு” என்று மட்டும் சொன்னால்போதும். இகிநொநொ  [Ike-no-no]  கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று.   அவர் பெயர்  zen  தத்துவப் பொருளைச் சுட்டுவ தாக இருக்கலாம்; அவர்  பத்து குருமார்களில்  ஒருவராக  க்யோடோவின்  அரசாங்க அரண்மனையின்  சிறப்பு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கலாம்.. ஆனாலும் அவரைப் பற்றி யார் பேசினாலும்  அது அவர்  மூக்கைப் பற்றியதாகத் தான் இருக்கும்.

 புருவ மத்தியிலிருந்து  ஒரே பட்டையாக  அகலமாக நீண்டு அவர் உதடுகளைக் கடந்து  ஏதோ  காய்கறி முளைத்துத் தொங்குவது போல் சுமார் ஆறு அங்குலத் துக்கு தொங்கிக்கொண்டிருந்தது. அவருடைய விநோதமான  மூக்கு.

சின்னவயது முதல் இப்போது வயது ஐம்பதையும் தாண்டி ஒரு  கௌரவமான பதவியில்  அமர்ந்திருக்கும் இன்றைய நாள் வரைக்கும்  நைய்குவுக்கு தன் மூக் கைப் பற்றிய  கவலை தீராமல் வருத்திக்கொண்டுதான் இருந்தது. இருந்தா லும்  எல்லாவற்றையும்  துறந்து  ஞான நிலைக்காக  தவம் செய்யவேண்டிய இந்த வயதில்  ஒரு தத்துவ போதகரான  அவர்  தன் மூக்கைப் பற்றிப் பெரிதாகக் கவலை கொள்வது  தவறானது என்றும் அவருக்கு  உறுத்திக்கொண்டி ருந்தது.  

அதைவிட அவருக்கு இருந்த பிரச்னை,  தன் மூக்கைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடுமோ என்பது தான்!  இன்னும் அதிகமாக பொதுவாக  நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சு சுற்றி வளைந்து மூக்கு பக்கமாக  திரும்பிவிடக் கூடாதே என்பது அவர் பயம்.

அன்றாடம் இரண்டு பிரச்னைகளால் மூக்கின்  நீட்டம் அவரைப் பாடுபடுத்திக் கொண்டிருந்தது.  ஒன்று அது எப்போதும் அவர் உதடுகளை மறித்துக்கொண்டே இருந்தது. இரண்டு அவர் சாப்பிடும்போதெல்லாம்  அது உணவுக்கும் வாய்க்கும் இடையில் நந்தி மாதிரி  தடுத்துக்கொண்டிருந்தது. நந்தியை விலக்கிக் தூக்கி நிறுத்துவதற்காக  அவர் தன் அந்தரங்க சிஷ்யன் ஒருவனை  நியமித்திருந்தார். அவன் அவர் சாப்பிடும்போது எதிரே உட்கார்ந்துகொண்டு  ஒரு நீளமான மெல் லிய தடியின் மூலம்  அவர் மூக்கை சற்று தூக்கிநிறுத்திக்கொண்டிருப்பான்.

ஆனாலும், இது அவ்வளவு எளிதான  காரியமல்ல. ஒருதடவை  தடியைப் பிடித் துக்கொண்டிருந்த சிஷ்யன் பலமாகத் தும்மல்போட,மூக்கு தடாலென்று சூடான உணவுத்தட்டில் விழுந்து விட்டது.  இதைக் கூட  நைய்கு எப்படியோ பொறுத்துக் கொண்டுவிட்டார். ஆனால் இந்த சம்பவம் எப்படியோ வெளியே கசிந்துபோய் அவருக்கு மிக அவமானத்தை உண்டுபண்ணிவிட்டது.

இகி-நொ-நொவில் இருந்த  மக்கள்   நைகு மதகுருவாக இருப்பது அவருடைய அதிர்ஷ்டம்  என்று பேசிக்கொண்டார்கள். பின்னே  இந்த விசித்திர மூக்குள்ள பிறவியை எந்தப் பெண் தான்  கல்யாணம் செய்துகொள்வாள்?  ஆனால் அவருக் குத் தான் என்னதான் பெரிய குருவாக இருந்தாலும் அது  மூக்கு ஏற்படுத்தும் வேதனையை எள்ளளவும் குறைத்ததாகச்  சொல்ல முடியவில்லை. அவருக்கு மனைவி வாய்ப்பதும் வாய்க்காததும் இரண்டாம் பட்சமானது.  ஏற்கனவே ஊர் மக்களுக்கு அவன் மேல் இருக்கும் மதிப்பு தேய்ந்துகொண்டுவந்து கொண்டிருந் தது.

தனிமையில் இருக்கும்போது  நைய்கு முகக் கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு மூஞ்சியை பல கோணங்களிலும் திருப்பித் திருப்பிப் பார்த்து  ஏதாவது கோணத்தில் அந்த மூக்கின் நீளம் சற்றுக் குட்டையாகத் தோன்றுகிறதா என்று  தீவிரமாக உற்று உற்றுப் பார்ப்பார். ஆனாலும் அந்த மூக்கு சற்றும் குறையாமல் சில கோணங்களில்  வழக்கத்தைவிட மேலும் நீண்டுவிட்டதாக பயமுறுத்தும்.  அப்போது  நைய்கு  வெறுப்படைந்து கண்ணாடியை மூலையில் எறிந்துவிட்டு  மீண்டும் வேத புத்தகத்தை   பாராயணம் செய்யத்தொடங்குவார்.

நய்கு  இன்னொருவிதமாக  மூக்கைப்பற்றியதுக்கத்தை மாற்றிக் கொள்வதற்காக சுற்றுப்புறத்தில் நடந்துபோகும் மனிதர்களின் மூக்கை  உற்று கவனித்துப் பார்க்க முற்பட்டார். கோயிலிலும் அதைச் சுற்றிய மைதானங்களிலும் பரவலாக உபன் னியாசங்கள்  கச்சேரிகள் அன்னதானங்கள் என்று பொது நிகழ்ச்சிகள் பல நடந்தன. மேலும்  துறவிகள்  குடியிருப்புகள் அருகே உள்ள குளத்தில் புனித நீராடுவதற்காக  பலர் வருவார்கள்.  நைய்கு அந்த இடங்களிலெலாம் போய் நின்றுகொண்டு  ஒவ்வொருவர் மூக்கையும்  கூர்மையாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்.  போகப் போக அவருக்கு ஜன்ங்கள் அணிந்திருந்த   ஆடைகளோ வைத்திருந்த பொருள்களோ தூக்கிக் கொண்டிருந்த குழந்தைகளோ எதுவுமே பார்வையில் படவில்லை. பார்க்கப்போனால்  அவர் கண்களில்   பட்டது  வித விதமான மூக்குகள்தான்;   ஜனங்கள் அல்ல!

 அப்படியும் அது  ஏமாற்றமாக  அவர் பார்வைக்கு எப்போதாவது சற்று நீண்டு கொக்கி போல் வளைந்த கழுகு மூக்குதான் சிக்குமே தவிர அவருடையதைப் போல்  இத்தனை விகாரமாக யாரிடமுமே காணமுடியாத மூக்காக  இல்லாமல் இருந்தது அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.  மற்றவர்களிடம் பேசும் போது அவர் கை விரல்களால்  மூக்கின் நுனியை மறைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
 திடீரென்று அவர் இன்னொரு விதமாக  தன் பிரச்னைக்கு சமாதானம் தேடிக் கொள்ள முயற்சி செய்தார்.  பழங்கால  புராணங்கள்   இதிகாஸங்கள்   ஜாதகக் கதைகள்  எல்லாவற்றையும் துருவித்துருவிப் படித்து  அதன் பாத்திரங்கள் யாருக்காவது தன்னுடையதைப் போன்ற   மூக்கு இருப்பதை அறிந்தால்  தன் னையும்  பழம்பெருமை வாய்ந்த இதிஹாஸ பாத்திரங்களின் சாயலாக நினைத்து மனதைத்  தேற்றிக்கொள்ளலாமே  என்று நினைத்தார்.

அதிலும் அவருக்கு ஏமாற்றமே  பலித்தது.  கடோத்கஜன் கும்பகர்ணன் போன்ற வர்களின் மூக்குக் கூட  அவர்களின் பூதாகாரமான முகத்தைக் கெடுக்கிற மாதிரி யாக  இல்லாமல் முகத்தின்  அகலத்திற்கு  ஏற்ற அளவுடன் பொருத்தமாக இருந்தது. பல நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட சீனக் கதை  ஒன்றில் அந்நாட்டின்   புகழ் பெற்ற   அரசன்  நீளமான  காது உடையவனாக சித்தரிக்கப் பட்டிருந்தான்.  அய்யோ.....என்ன துரதிர்ஷ்டம்!

காதுக்கு பதிலாக  அந்த ராஜாவுக்கு என்போல் நீளமான மூக்கு இருக்கக் கூடாதா? அப்படி  இருந்தால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக  ஆதரவாக இருக் கும்!   என்று அலுத்துக்கொண்டார்.

மூக்கின் அசாத்திய நீளத்தைக் குறைக்க அவர்  இயற்கை வைத்தியம் மூலிகை சமாச்சாரங்களையும் கையாண்டு பார்த்தார். புடலங்காய் ரஸத்தில் மருந்துப் பொடிகளைக் கலந்து கொதிக்கக் கொதிக்க  குடித்துப் பார்த்தார். சகிக்க முடியாத  படுநாற்றமுள்ள  எலி மூத்திரத்தை  மூக்கின் மேலும் கீழும் தேய்த்துக் குளிப்பாட்டிப் பார்த்தார்.  அதன்  நீளம்  அப்படியே தான் இருந்தது.

ஒருகோடைகாலத்தில் அவருடைய அந்தரங்க சிஷ்யன் க்யோடோவுக்கு சென்று திரும்பிவந்தபோது  போன இடத்தில் ஒரு சிறந்த   வைத்தியரிடமிருந்து   இந்த மாதிரி நீண்டு போன மூக்கைக் குறைக்கும்  வைத்தியத்தைக் கற்றுக்கொண்டு வந்ததாகத் தெரிவித்தான்.

அந்த புகழ் பெற்ற வைத்தியர் க்யோட்டோ ஆலயத்தில் தலைமைப்  பாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தான். இதைக் கேட்டதும்  நைய்குவின்  நெஞ்சிலும் கொஞ்சம் சந்தோஷம் படபடத்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் சிஷ்யனின் வார்த்தைகளில்    ஆர்வம் இல்லாதவன்போல் நடந்துகொண்டார். ஆனால் சிஷ்யன் இந்த நடிப்பை ஊகித்துக்கொண்டவனாக தன் குருவின்  மூக்கை எப்படி யாவது சரியாக்கவேண்டும் என்ற அக்கறையுடன்வைத்தியத்தை தொடங்கினான்.

அந்த சிகிச்சை ஒன்றும் அவ்வளவு சிக்கலானது அல்ல. மூக்கை கொதிக்கும் நீரில் முக்கி  சூடாக்கி வைத்து ஒருவர் பாதத்தை அதன் மேல் அழுத்தவேண் டும்! அவ்வளவுதான்.

ஒரு வாளி  நிறைய கொதிக்கும் நீரை வைத்து  அதில் குனிந்து மூக்கை மட்டும் நனைக்க முயலும்போது முகமும் சேர்ந்து முங்கிவிடக்கூடும். அப்போது முகத் தின் தோல் வெந்துபோகலாம். அதனால் வென்னீர் வாளியை சுமாரான துவார முள்ள  மூடியால் மூடி  மூக்கை மட்டும் துவாரத்தில் நுழைத்துக்கொள்வது நல்ல யுக்தியாகப்பட்டது.  நய்கு தன் நீண்ட மூக்கை நுழைத்துக் கொண்டு குறிப்பிட்டநேரத்துக்கும் அதிகமாகவே  அசையாமல் வாயினால் மூச்சு இழுத் துக்கொண்டு  இருந்தார்.

கொதிக்கும் நீருக்குள் மிதந்த மூக்குக்கு  எதுவுமே  சூடாகத் தெரியவில்லை என்பதும் இன்னொரு காரணம்.

சிஷ்யன் பயந்து போனான்.  குருஜீ....இவ்வளவு  நேரத்தில் அது நன்றாக  வெந்து போயிருக்கலாம்.. என்றான்.  குரு தனக்குள் சிரித்துக்கொண்டார். நல்ல வேளை வெளியில் இதைக் கேட்பவர்களுக்கு அது மூக்கு என்று தெரியாது”  நைய்கு மெள்ளத் தலையைத் தூக்கினார். மூக்கைச் சுற்றி ஏதோ கொசுக்கள் மொய்த்த மாதிரி ஒரு  விறுவிறுப்பு மட்டும் இருந்தது.

சிஷ்யன்  நய்குவின்  செக்கச் சிவந்து உருண்டு நீண்ட  மூக்கை மேசையின் மேல் பரத்தி  தன் பாதவிரல்களால்   பலங்கொண்டமட்டும் அழுத்தி அழுத்தி மிதித்து உருட்டினான். நய்குவின்  சாய்ந்த முகத்தின் கண்கள் இரண்டும்  அவன் பாதத்தின் அசைவை  மேலுங் கீழுமாக தொடர்ந்துகொண்டே இருந்தன. மரியாதைக்குரிய குருவின் மூக்கை இப்படி கொஞ்சமும் தயக்கமில்லாமல் மிதித்து  நசுக்குவதை எண்ணி சற்று துக்கமாகவும்  பாபம்செய்வது போலவும் வருத்தியது சிஷ்யனுக்கு.

 “வலிக்கிறதா ஐயா....மருத்துவர்  இதை விட  அதிகமா மிதிக்கச் சொன்னார்.. .வலிச்சா சொல்லுங்க  என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

 சிஷ்யனின் கேள்விக்கு சௌகரியமாக  பதில்சொல்ல முடியாமல் மூக்கில் சிக்கியிருந்த முகத்தை  ஆட்டமுடியாமல் காலடியிலிருந்த குரு   விழிகளை மட்டும் மேலே செருகிக்கொண்டு பொறுமையிழந்து வலிக்கலேடா....ஒண்ணும்  வலிக்கலேடா...”  என்று  அவ்வப்போது கத்திக்கொண்டிருந்தார்.

 இப்படி பயங்கர அமுக்கத்தில்  மூக்கு  மிதிபட்டுக்கொண்டிருந்தாலும் குருவுக்கு அது மெத்தென்று ஒத்தடம் கொடுப்பது போல் சுகமாக   வருடிவிட்டது  போல் இருந்தது. இந்தமுறையில் சிலகாலம் வைத்தியம் தொடர்ந்து கொண்டிருந்த போது  நைய்குவின் மூக்கில் சின்னச் சின்ன முளைவிட்டது   போல் உருண் டைகள் பரவலாகத் தென்பட்டு  பின்னால் அதுவே  ஒரு கொத்தாகி உரித்த பறவைத் தலைபோல் மாறி வந்தது.  சிஷ்யனுக்கு க்யோட்டோ வைத்தியர் ஏற்கனவே சொல்லியிருந்த அறிகுறிகள்   தென்பட்டுவிட்டதாகத்  தோன்றியது.  

அவன் ஒரு சிறிய  இடுக்கியினால்  அந்த உருண்டை முடிச்சுகளை ஒவ்வொன் றாக அழுத்தமாகப் பற்றிப் பிடுங்க ஆரம்பித்தான். நைய்கு கன் னத்தைத் துருத்திக்கொண்டு  அவஸ்தையைப் பொறுத்துக்கொண்டு அதேசமயம் சிஷ்ய னுக்கு தன்னிடம் இருக்கும்  அபூர்வ பாசத்தையும் எண்ணி   நெகிழ்ந்துகொண்டி ருந்தார். மூக்கின்  மேற்புறத்திலிருந்து   அந்த சதைப்பந்துகளை இடுக்கியி னால்   நீள நீளமாக இழுத்து  வெளியே அகற்ற வேண்டயிருந்தது.

குருவே....எல்லா  சதைகளும் அகற்றப்பட்டுவிட்டது இப்போது மீண்டும் மூக்கை வேகவைக்க வேண்டும்.

மனத்துக்குள் அலுத்துக்கொண்டாலும்  மூக்கை இன்னொரு தடவையும்  வேக வைக்க ஒப்புக்கொண்டார்.

இரண்டாம்  கொதிக்குப் பின்  நைய்குவின் மூக்கு  வெகுவாக்க் குறைந்து அநேக மாக  சாதாரணமாக  சிலரிடம் காணப்படும் கழுகு மூக்கை விட சற்று மேலும் வளைவாக இருந்தது. இருந்தாலும் உதடுகளுக்குக் கீழ் தொங்கவில்லை. குட்டையாகிவிட்ட மூக்கை மெள்ளத் தயக்கத்துடன் தடவித் தடவிக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார் குரு. நிஜமாகவே நம்பமுடியாத அளவுக்கு அந்த மூக் கின் நீளம் குறைந்துவிட்ட்து. அங்கங்கே  மிதிபட்ட இடங்கள் மட்டும் சற்று ரத்தச்சிவப்பாக இருந் தது. இனிமேல் அவர்  மூக்கைப் பார்த்து யாரும் கேவலமாகச் சிரிக்கமாட்டார்கள். கண்ணாடியில் தெரிந்த உருவம் நைகுவை திருப்தியுடன் பார்த்துச் சிரித்தது.

ஆனாலும் அவருக்கு  மீதிநாள் முழுவதும்  பயமாகவும் படபடப்பாகவும் இருந் தது.  மூக்கு மீண்டும் மெள்ள வளர ஆரம்பித்துவிடுமோ என்று  நிமிஷத்துக்கு ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொண்டே இருந்தார்.  வேதம் ஜபிக்கும் போதும் சாப்பிடும்போதும் அவருக்கு இதே கவலை. ஆனாலும் மூக்கு இருந்த இடத்திலேயேதான் இருந்தது. இரவு தூக்கம் தூங்கி மறுபடியும் காலையில் விழித்தவுடன்  மீண்டும்  தொட்டுப்பார்த்துக்கொண்டார்.  நிச்சயமாக மூக்கு வளரா மல்  குட்டையாகத்தான் இருந்தது.

பல வருஷங்களுக்குமுன் இளம்பருவத்தில் என்றோ புதைந்துபோன சந்தோஷம் மீண்டும்  பீறிட்டு  உடல்முழுவதும் பரவிற்று. கல்லூரியில் கல்வித்தேர்வில் முதலாவதாக தேர்ந்து தங்கப்பட்டயம் வாங்கியபோது  பொங்கிய மகிழ்ச்சி இப்போது மீண்டும் பொங்கிவழிந்தது.

மூன்றுநாள்  கழிந்தது. முதல்முறையாக இகி நொ நொ கோவிலில் பணியாற்றிக் கொண்டிருந்த  ஒரு பூசாரி  இவரைக் கடந்துபோகும்போது மீண்டும் திரும்பி வந்து உற்றுப் பார்த்துவிட்டு நகர்ந்தான். அவன்  எதற்கோ சிரித்துக்கொண்டு போவதாகத் தோன்றியது.  அடுத்ததாக  பூஜைப் பாத்திரங்களைக் கழுவுகிற பணி யாள் இவர்  முகத்தை  சற்று திகைப்புடன் பார்த்துவிட்டு  உடனே நகர்ந்து போனான்.  திடீரென்று பீறிட்டுவந்த சிரிப்பை அடக்கமுடியாமல்  இரு கைகளை யும் பொத்திக்கொண்டு  தூணுக்குப் பின் மறைந்துகொண்டான். ஆனாலும் அடக்கமுடியவில்லை.  வயிற்றைப் பிடித்துக்கொண்டு  எக்கிஎக்கி சிரித்துக் கொண்டிருந்தான். கோவிலில் நெடுங்காலமாக பணிவிடை செய்துகொண்டிருந்த சாதுவான கிழவன்  கூட முதலில்  நைய்குவின் முன்னல்  நின்று  அவர் சொல் லும் உத்தரவுகளை  பணிவுடன் கேட்டுக்கொண்டேஇருக்கும்போது  அவன் முகம்  திடீரென்று கோணலாகி  வாயில் சிரிப்பு நெளிந்து  அடக்கிக்கொள்ள முடியாமல் அவசரமாகப் பொத்திக் கொண்டு  அகன்றுபோனான். 

 ஆரம்பத்தில் நைய்குவுக்கு  இது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. திடீ ரென்று தன் முகத்தில் ஏற்பட்டு விட்ட மாற்றத்தை யாரும் இப்படித்தான் எதிர் கொள்வார்கள் என்று நினைத்தார். ஆனாலும்  அவர்கள் இப்போது சிரித்த விதம்  மூக்கு நீளமாக இருந்தபொழுதை விட சற்று மோசமாக இருந்தது. ஒரு வேளை நீளமாக இருந்ததைவிட குட்டையாகிவிட்ட  மூக்கு மேலும் கோமளித் தனமாக மாறிவிட்டதோ என்று எண்ணிப் பார்த்துக் கலவரப்பட்டார். 

முன்பெல்லாம்  அவர்கள்  இவ்வளவு துணிச்சலாக  முகத்துக்கு எதிரே நின்று சிரித்ததில்லை.  நைய்கு  கூடத்தில் மாட்டியிருந்த புத்த பகவான் படத்துக்கு முன் நின்று ஜபத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.  சில வாரங்களுக்கு முன்னால்  நீண்ட மூக்குடன்  இந்த அளவுக்கு அவமானப்படாமல் நடமாடிக் கொண்டிருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது   துக்கத்தை மேலும் அதிகப் படுத்திக்கொண்டிருந்தது.

மக்களுக்கு  பொதுவாக இரண்டுமுகங்கள்  உண்டு. ஒருவன் மிகுந்த கஷ்டமான பிரச்னையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது அவனைப்  பார்த்து மிகுந்த அனுதாபப்படுவார்கள். ஆனால்,  அதே மனிதன்  தன் கஷ்டத்தைப் போராடி ஜெயித்து விடுவானாகில்  மக்கள்  அதை மனம் திறந்து பாராட்டி சந்தோஷப் படுவதில்லை.  அவன் ஜெய்த்தது அவர்களுக்குள்  ஏதோ  ஏமாற்றத்தை ஏற்படுத் துகிறது. திரும்பவும்  அவன் பழையமாதிரி கஷ்டப்பட மாட்டானா....நாம் அவனைப்  பார்த்து அனுதாபப்பட மாட்டோமா என்று கூட உள்ளுக்குள் ஒரு  நினைப்பு ஓடுகிறது.... இந்த வக்கிர எண்ணத்தின் மறு பக்கம்  அவனை பற்றிய  லேசான விரோத உணர்வு கூடத் தலை தூக்குகிறது.  இதற்கும் அடிப் படையில் ஜெயித்துவிட்ட மனிதனிடம்  மீண்டுவிடுகிற அகந்தையைப்  பொறுத் துக்கொள்ளமுடியாத  இயல்பும்சற்று தலைதூக்குகிறது. பொதுவாக இப்படிப்பட்ட குயுக்தியான இயல்புகள்  மதகுருமார்களிடம்  சகஜமாக காணப்படுகின்றன.

அதுவும் இகி நொ நொ சமுகத்தில் உள்ள பாதிரிகளிடம்  இந்த விதமான  குண விசேஷம்  சற்று  மேலாகவே  இருப்பதை நைய்கு  உணர்ந்தார்.

 நாளுக்கு நாள் நைய்குவின்  மனம் மிகவும் அல்லல்பட்டுக்கொண்டிருந் தது.   யாரிடமும்  முகங் கொடுத்துப் பேச முடியவில்லை. இவருக்கு  மூக்கு சிகிச்சை பார்த்த சிஷ்யனே இவரை உதாசீனப்படுத்திப் பேசினான். “எங்களிடம் கடுமையாக  நடந்துகொள்வதைத் தவிர இவர் என்ன பெரிய தத்துவம்  உபதேசித்துவிட்டார்.
இவற்றை விட கேவலமாக இன்னொரு சிஷ்யன் நடந்துகொண்டான். அவன் ஒரு சிறு தடியை ஒரு  சடை நாயின் மூக்கருகில் நீட்டி  “உம் மூக்கைத் தூக்கப் போறேன்..மூக்கை தூக்கப் போறேன்  என்று ஜாடையாக இவரைப்பார்த்துக் கத்திக்கொண்டிருந்தான்.  நய்கு  ஓடிப் போய் அவனிடமிருந்து தடியை ஆத்திர மாகப் பிடுங்கி  அவனை மிரட்டித் துரத்தினார். அவர் முன்பெல்லாம் சாப்பிடும் போது மூக்கைத் தூக்கி நிறுத்திக்கொள்ளப் பயன்படுத்தியது  இதே தடி தான் என்று  கண்டபோது அவர் ஆத்திரம் எல்லைமீறிப் போயிற்று.

அவருக்கு இரவுகளில்அமைதியும்   தூக்கமும்  அற்றுப்போய்விட்டது. மைதியை   வேண்டி புத்த பகவானை தினந்தோறும் பிரார்த்தனை செய்துகொண்டே உறங்கப் போனார்.

 ஒரு இரவின் இருட்டில் அவர்  கண்கொட்டாமல்  ஜன்னலைப் பார்த்துக்கொண் டிருந்த போது  கோவிலைச் சுற்றி   தொங்கவிடப்பட்டிருந்த   அநேக காண்டா மணிகள்  வேகமாக அடித்த காற்றினால்  பலவிதமாக ஆடி ஆடி ஓயாமல்  ஒலித்துக்கொண்டிருந்தன. நய்கு புரண்டு படுத்தார். அப்போது அவர் மூக்கு பயங்கரமாக அரிப்பதை உணர்ந்து எழுந்து உட்கார்ந்து தொட்டுப் பார்த்த போது  முனை  உருண்டையாக வீங்கி இருந்தது போல் தோன்றியது.

இந்த மூக்கைக் குட்டையாக்குவதற்கு என்ன பாடு படுத்தியிருக்கிறேன். அதன் பக்க விளைவு கொஞ்சமாவது  நேர வேண்டாமா? “ என்று நினைத்துக் கொண்டார். 

மறு நாள் சீக்கிரமே எழுந்துவிட்ட நைய்குவின் கண்களுக்கு முன்னால் கோவிலின் ப்ராகாரமெங்கும் மரங்களிலிருந்து கொட்டிய செம்பூக்கள் தங்கப் பாய் விரித்திருந்திருந்தன.. இரவு முழுவதும் கொட்டிய   பனிமழையால்  கோபுரச் சரிவெங்கும் வெண்மையாக தந்தத்தகடு போலவும்;  நடுவில் உயரமாக நின்ற கஜஸ்தம்பம் உதயசூரியனின் சாய்ந்த கிரணங்கள் பட்டு  பொன்னுருகி வழிவது போலவும் இருந்தது  தன்னுடைய படுக்கையறைத் தாவாரத்தின்  நீண்ட ஜன்னல் வழியாக இதைப் பார்த்துக்கொண்டிருந்த நய்கு வின் மனதில் இனமறியாத சந்தோஷம் துளிர்த்தது.

அதே கணத்தில் தான் அவருக்குள்  ஏதோ ஒரு  பரிச்சயமான சிலிர்ப்பு உடலெங் கும்  பரவிற்று.  அவர்  அவசரமாக தன் மூக்கைத் தொட்டுப் பார்த்தார்.  ஹா....இதென்ன இது.?  இது குட்டை மூக்கில்லை.  சில நாட்களுக்கு முன்  அவர் முகத்தில் நீண்டு  தொங்கிக் கொண்டிருந்த அதே ஆறங்குல மூக்குத் தான். உதடுகளைத் தாண்டி  முகவாயைத் தொட்டுக்கொண்டு எப்போதும் போல் ஆடிக் கொண்டிருந்தது.!!  ஒரே இரவில் இப்படி ஒரு வளர்ச்சியா?  நய்குவுக்கு  ஏனோ அதிர்ச்சியைவிட ரொம்ப சந்தோஷமாக  இருந்தது.  அஜாக்கிரதையால் அசட்டுத் தனத்தால் இழந்துவிட்ட தன்  பொக்கிஷம் ஒன்றை இப்போது மீண்டும் கண்டெ டுத்தது  போல் அவருக்கு  மகிழ்ச்சி பொங்கிப் பரவியது
இனிமேல் என்னைப்பார்த்து யாரும் சிரிக்கமாட்டார்கள்.ஏன் சிரிக்கவேண்டும்? இது என்னோடு  பிறந்த  மூக்கு! எனக்கே சொந்தமான மூக்கு..... சிரிக்கிறவன் பைத்தியக்காரன்.. அதனாலெ எனக்கென்ன  போச்சு?..“

தனக்கே சொந்தமான  மூக்கை இப்போது புதிய உற்சாகத்துடன் ஆசையுடன் தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்தார்  மத குரு ஸென்ச்சி நய்கு.
 ________________________________________________________________________________

ஆசிரியர் பற்றி 
Ryun osuke  AkutaGawa

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்   நவீன ஜப்பானிய  இலக்கியப் படைப்பாளி களில் முக்கியமான வர் அகுடாகொவா.  பிறந்த ஒன்பது   மாதங்களுக்குள்  மனப் பிறழ்வுக்கு  ஆளாகிவிட்ட தாயிட மிருந்து பிரிக்கப்பட்டு   வெவ்வேறு   குடும்பங் களில்  வளர்க்கப்பட்டவர். பலஹீனமான உடலும் தாய்ப்பாசமற்று    வளர்ந்த இளம்பருவமும் இவரையும்  இவருடைய வாழ்க்கை  எழுத்து எல்லா வற்றையும் பாதித்தது.  ஆங்கில இலக்கியங்களில் ஆழமான வாசிப்பும்  அதன் பாதிப்பும் இவர்  ஜப்பானியக் கதைகளை ஆக்கபூர்வமாக பாதித்தன. 

பரவலாக வாசிக்கப்பட்டாலும்  முப்பத்தைந்தாவது வயதில் உடலும் உள்ளமும் மிகுந்த வேதனைக்கும்  இனமறியாத பயத்துக்கும் உள்ளாகி வாழ்வுபற்றிய நிராசையும்  போதைப் பழக்கமும் இவரைத் தற்கொலைக்கு  இட்டுச்சென்றது.

இவர் விட்டுச்சென்ற படைப்புகள் அழியாத இலக்கியமாக நாளுக்கு நாள் விரி வான உலக வாசிப்பை பெற்றுக்கொண்டிருக்கின்றன. யுத்தத்தின் முடிவில் அவதிப்படும் நிராதரவான  மக்களைப்பற்றி இவர் எழுதிய சின்னக் கதை பிற்காலத்தில் ராஷோமான் என்ற  பிரபலமான திரைப்படமாகி அகிராகுரா சொவாவை ஒரு  மகா இயக்குனராக    ஸ்தாபித்தது                                   

[தீராநதி  பிப் 2013  ].
                            . .


 

No comments:

Post a Comment