vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, June 7, 2015

முடிவாக ஒரு வார்த்தை

முடிவாக ஒரு  வார்த்தை

வைதீஸ்வரன்


 

 நான் வேலையிலிருந்து களைப் புடன் உள்ளே நுழைந்தேன்.

நான் வருவதை அம்மா கவலை யுடன் பார்த்துக் கொண்டிருந் தாள்.

 நான் "என்ன?“ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்தேன் அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.

எப்படி இருக்கே அப்பா?   சட் டையைக் கழட்டிக் கொண்டே கேட்டேன்.

அப்பா அரை மயக்கத்திலிருந் தார்.  போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்தது. அவர் மெள்ள தலையைத் திருப்பி குரல் வந்த  திசையைப் பார்த்தார்.

“ நீ வந்துட்டியா?”

நா குழறிய குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது.  அம்மா மெது வான குரலில் சொன்னர்.

இதோட ஆறெழு தரம் சிறு நீர் கழிச்சுட்டார்..

நான் கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன்  அவர் அருகில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். இன்னும் ஒரு நாளைக்கு தேவையான மாத்திரைகள் இருந்தன.டாக்டர் நாளைக்குத் தான் வரச் சொல்லியிருந்தார்.

 கடந்த ஆறு மாத காலமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அப் பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தது. அவருக்கு சிறுநீர கக்கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக் களெல்லாம்  சிறுநீர் மூலமாக வெளியேறிக்  கொண்டிருந்தன. ஆபத் தான நிலைக்குப்  போய் விடுவார்.

ஆஸ்பத்திரிக்குப்போய் இரண்டு மூன்று நாட்களுக்கு  நாலைந்து பாட் டில்கள் ஊட்டத்தை செலுத்தினால் தான்   ஓரளவு நிலைமை சீராகி  வீட்டிற்கு வருவோம்.  ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத் திரும்பி விடும்.

"இது தற்காலிக வைத்தியம் தான்... வயதாகி விட்டது...   பார்த் துக் கொள்ளுங்கள்...””   என்றார் டாக்டர் எச்சரிக்கையுடன்

 அப்பா தலையை மெள்ள என் பக்கம் திருப்பினார்.

 "இன்னிக்குத் தானே போகணும்...?” 

இன்னிக்கு இல்லேப்பா..நாளைக்குத் தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்....

 “அப்போ...இன்னிக்கு இல்லையா?...”

இன்னும் ஒரு நாளைக்கு மாத்திரை இருக்கே!அதுமுடிந்தபின் நாளைக் குப் போகலாமே...

என் பதில் அப்பாவுக்கு   ஏமாற்றமாக இருந்தது. மெதுவாக இரண்டு முறை பெருமூச்சு விட்டுக் கொண்டார்.  நான்  உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனேன்.

அப்போ இன்னிக்கு இல்லையா?... இன்னிக்கே போ..க. லா..மே...

 அவர் குரல் என் பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன்  தனக் குள்ளே  முனகலுடன்  முடிந்தது.

 எனக்கு அவர் வேதனையை  உணர முடிந்தது.  இதை கவனித் துக் கொண்டிருந்த  அம்மா அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலே... அவருக் கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு இருக்கு . ..” என் று எதிர்பார்ப்புடன் என்  முகத்தைப் பார்த்தாள்.

 சிறிது தயக்கத்துக்குப் பிறகு நான் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில் தான் நகரத்தின்  பிரதான சாலை இருந்தது.  ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும்சிரமம் அல்ல.

கடந்த சில மாதங்களாக ஓயாமல் தொந்தரவுபடுத்தும்  அப்பாவின்டல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும் எனக்குள் நிவர் த்தி யில்லாத   துக்கத்தையும்  சலிப்பையும் ஏற்படுத்தி யிருந்தன.

அப்பாவைப் பற்றி அப்படிப்பட்ட  சலிப்பு ஏற்பட்டு விடக் கூடாதெ ன்று எனக்குள் எவ்வளவோ எச்சரிக்கை செய்து கொண்டேன்.

அப்பா  சமீபகாலம்வரை ஆரோக்கியத்துடன்  இருந்தவர்.  சொல்லப் போ னால் என்னை விட  உடல் தெம்புடன் இருந்தவர்.  இர ண்டு வரு டங்களுக்கு முன்பு கூட தீராத  ஆஸ்துமா  வேதனை யில் நான் தவித்த போது  மழை கொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்து கொண்டு நடந்து போய்  டாக்டரை அழைத்து வந்து  ஊசிபோடச் செய்து  மூச்சுத் திணறலை  ஆறுதல்படுத்தி னார். அவருக்குவயதாகி உடல்நலம் இப்ப டிக்  கெட்டுப் போகு மென்று  நான்  எண்ணிப் பார்த்ததேயில்லை

பிரதான சாலை  ஒரு ஆட்டோ கூட இல்லாமல் விரிச்சோடிக் கிடந் தது. வித்யாசமாக பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலை யின் இருபக்கமும் காவல் காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

சாலையின் விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக் கொடிகள் எந்த அக்கறையுமற்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

மெதுவாக ஒரு காவல்காரரரை நெருங்கி   "இன்னிக்கு என்ன ஸார் விசே ஷம்?..”  என்று கேட்டேன்.

இது தெரியாதா?.. பேபர்லே எல்லாம் வந்திருக்கே! இந்தத் தெரு முனையிலே இருக்கற பெரிய ஆஸ்பத்திரியை  பிரதமர் வந்து தொறக் கறாரே... முதல் மந்திரி எல்லாம்  வரப் போறாங் களே!.....

 “அப்போ...

இன்னும் ரெண்டு அவருக்கு இந்த ரோடு க்ளோஸ்...

 நான்  உதவியற்று  சாலையின் வெறுமையைப் பார்த்து  விட்டு நடந்தேன்.

 வீட்டுக்குள் நுழைந்து சட்டையை கழட்டினேன். நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி  தலையைத்  தூக்கினார் அப்பா.

இன்னிக்குப் போக முடியாதுப்பா...

 “ என்னாச்சு? “ 

பிரதம மந்திரி இந்தவழியா போறாராம். அதனாலெ ட்ராபிக்கை எல் லாம் நிறுத்தி வச்சிருக்கான்.  இப்போ போகலைன்னா  டாக் டரை நாளைக்குத் தான் பாக்க  முடியும்.  

அப்பா  இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார் .பெருமூச்சு விட்டார்.

பிரதம மந்திரி ஒரு ஓரமா போனா...நாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”

 அப்பாவைப் பார்த்து நான் சிரித்தேன். அவர் இதை விளையாட்டாக சொன்னதாக தெரியவில்லை.   அவர் கேட்டது ஒரு வகையில் நியாய மாக யதார்த்தமாகக் கூட இருந்தது. 

மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை .அவர் வாயில் மெள்ள  ஊற்றி   மீதி இருந்த மாத்திரைகளைப் போட்டேன் . போர்த்தி விட் டேன். 

கொஞ்சம் பொறுத்துக்கோங்கோப்பா.....நாளைக்கு போயிடலாம்... ஏற்கனவே நாளைக்குத் தான் டாக்டர்  அப்பாய்ண்ட்மெண்ட்  கொடுத் திருக்கார்..

நான் மெதுவாக என் அறைக்குள் போய்க் கொண்டிருந்தேன்.

ஏம்ப்பா..பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா ஜனங்களை இப்படிவிரட்டி அடிக்கணுமா?.. எம்மாதிரி பிராணாவஸ்தை பட்றவ...னெ..ல்லாம்...... வார்த்தை வரா மல்    துக்கம்  தொண்டையை அடைத்து    ஏதோ முணுமுணுப் பாக முடிந்தது.  ..

அவர் முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுமுணுப்பாக தொனிக் காமல்இதுமாதிரி வேதனைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் எத்தனையோ பாமர மக்களின்  குரலாக ஒலித்தது.
   


* * *

 மறு நாள் அப்பாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனேன்.

நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகிவிட்டது. அப்பா பெரி தாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். நிலைமையை  பார்த்து அறிந்து கொண்ட  நர்ஸ் ஓடிப்போய்  டாக்டரை  அவசரமாக வெளியே அழைத்து வந்தார்.

 டாக்டர்  அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு
 “அய்யய்யோ...” என்றார், தனக்கு மட்டும் சொல்லிக்கொண்ட மாதிரி.

நேற்றே வந்திருக்க வேண்டும் டாக்டர்...  .வரமுடியாமல் போய் விட்டது....”  என்றேன்  கவலையுடன்

 "அடடா..... நேற்று  வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!   .....ஏன் இப்படி தாமதப் படுத்தினீங்க? .  என்னா ஆச்சு?””””

அது  வந்து..   ரோட்லே ....”  நான் சொல்ல வாயெடுத்தேன்.
அதற்குள் அப்பாவின் கையும்  தலையும்  வேகமாக அசைந்தது. 

 பேச்சு வராமல்   மூச்சு  தொண்டையில் சிக்கிக்கொண்டு உயிரின் இரைச்சலுடன் இழுத்துக்கொண்டிருந்தது ..

 அப்பா  நடுங்கிய விரல்களை அந்தரத்தில் யாரையோ சுட்டிக் காட்டியவாறு  அவர் சொன்ன அந்த முடிவான  வார்த்தை.....

பி...ர....தழ்..  ம்ம ….. ர்..













No comments:

Post a Comment