vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, October 18, 2015

ஒரு நல்ல கவிதை வாசித்த பின்


            ஒரு  நல்ல கவிதை வாசித்த பின்

         --------------------------------------------------------------

                       வைதீஸ்வரன்



  பறக்கத் தொடங்கும்
  குஞ்சுப் பறவையின் சிறகு  போல
   மனசு விம்ம  வேண்டும்.

   தூரல் விழுந்த  மண்ணைப் போல்
   உள்  சிலிர்க்க  வேண்டும்.

   பயப்பட்டது போல் வாழ்க்கை
   அவ்வளவு  மோசமில்லையென்று
   தெளிவு தெரிய  வேண்டும்.

    எதிர்ப்படும் சக மனிதனை
    “நண்பாஎன்றழைக்க
     ஆவல் துளிர்க்க வேணும்.

     விம்மலும் பரவசமும் கலந்த
     விந்துத் துடிப்பின் உச்சம்
     நினைவெங்கும் ஆட்கொள்ள வேண்டும்.

     நினைத்து நினைத்து சிரிக்கும்
     உயர்ந்த ஹாஸ்யத்தின் நவிற்சி
    நம்மைத் தொத்திக் கொள்ள வேண்டும்.

    கடவுளைப் பற்றிய பயங்கள்
    கட்டோடு  அழிய வேண்டும்.

     நியாயமான கோபங்களால்
     நெஞ்சில் சத்திய வலி தோன்ற வேண்டும்.

     என்  அகச் சுவர்கள்
     பிரபஞ்சத்தின் விளிம்புகளை நோக்கி
     எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்;

     ஒரு நல்ல கவிதை வாசிக்கும் போது..............






Ø     

No comments:

Post a Comment