vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, February 26, 2013


கவிஞர் சி.மணிக்கு    எனது  நினைவாஞ்சலி
  
கவிஞர் சி.மணி பற்றிய சில நினைவுகள்
                     --------------------------
 வைதீஸ்வரன்




ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்  தமிழ் நாடு அரசு''வாழ்நாள் சாதனைக்காக '' குறிப்பிட்ட  சில மூத்த படைப்பாளிகளுக்கு  பரிசளித்து பணமுடிப்பளித்து கௌரவம் செய்தது.   தேர்வான அந்த பேர் களில்  கவிஞர் சி.மணியின் பெயரை பார்த்ததும் எனக்கு  மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 பல வருஷங்களுக்கு முன்பே  இலக்கிய சுழலில்  இருந்தும் எழுத்து உலகத்திலிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டு  உடல் நலிவுற்று வாழ்ந்து  கொண்டிருந்த ஒரு முக்கியமான ஆரம்பகால புதுக் கவிஞரை  மீண்டும் நினைவு கூர்ந்து சரியான சந்தர்ப்பத்தில் அவரை கௌரவித்தது ஒரு  நல்ல  நிகழ்வு..

ஒரு துறையில் முக்கியமான பங்களிப்பு செய்தவர்கள் வெகு சீக்கிரம்   ஞாபகத்திலிருந்து மறைந்து போய்விடுகிறார்கள்   .அல்லது  அவர்களை  ஞாபகம் வைத்துக்கொள்ள அரசாங்கத்துக்கு விருப்ப மில்லை .

கவிஞர் சி. மணியும்  நானும் ஒரு ஊரை சேர்ந்தவர்கள். அவர்  இறந்தபோது அவருக்கு வயது 69.  அவரை விடஎனக்கு  அவர் கவிதைகள் தான் அதிக பரிச்சயம். என்னோடு அவர் பேசிய  சில சந்தர்  ப்பங்களில் நான் தான் அதிகம் பேசியதாக ஞாபகம்.. ஆனால்  அவருடைய  விமர்சனக் கட்டுரைகள் மூலமும் கவிதைகள்   மூலமும் அவருடைய  வாசிப்பின் யோசிப்பின் ஆழத்தை என்னால்  உணர்ந்து கொள்ள முடிந்தது. 

தமிழ் இலக்கியத்துக்காகவும்  புதுக் கவிதைகளின் ஆதாரமானவளர்ச்சிக்காகவும்  அவர்  தன்  சிந்தனை யையும் சொந்த  பொன் பொருளையும்  அளவுக்கு அதிகமாகவே வாரிக்கொடுத்திருகிறார் என்பது உண்மை.

சி. மணி ஒரு தீவிர படிப்பாளி.  சைதாப்பேட்டை ஆசிரியர்பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வந்த சமயம்தான் அவருக்கு ''எழுத்து '' அறிமுகமானது என்று எண்ணுகிறேன். அவர் தேர்ந்து கொண்டது ஆங்கில  ஆசிரியர் பயிற்சி என்றாலும் அவருக்கு தமிழில் சிறந்த புலமையும் ஆழ்ந்த  தொல்லிலக்கிய பரிச்சயமும்இருந்தது.
 
இந்த அடிப்படை தகுதியுடன்  அவர் தமிழ் கவிதையை புதிதாக படைக்க வேண்டுமென்ற தன்னார் வத்துடன்   அவர்  ''எழுத்து' பத்திரிகையில்  எழுத விழைந்தார்.  செல்லப்பாவுக்கு  மணியின் மேல் அளவு கடந்த மதிப்பும் விசேஷ நட்பும்  இருந்தது.

அந்த கால கட்டத்தில் ஆங்கில நவீன கவிதைகளின் பரிச்சயமும் தமிழின் பாரம்பரீய  அறிவும் ஒருங்கிணைந்த சில பேர்களில் மணி  முக்கியமானவர். 

அவருடைய கவிதை முயற்சிகள் அனேகமாக  இத்தகைய விசேஷ பிரக்ஞையை  ஊடுபாவியதான  வெளிப்பாடுகள்..

அன்றைய சமூகத்தின்  ''நவீன மோஸ்தரான '' மொழிஅடையாளங்களையும்  தமிழின் செவ்வியல் வார்த்தைகளையும்  குலுக்கிக் கலந்து ஒரு  வித்யாசமான அனுபவத்தை ''அவஸ்தையை ''ஒரு  புதிய சோதனையாக தமிழுக்கு  கொண்டுவந்தார்.

அவருடை ய  ''நரகம்'' இவ்வகையில் ஒரு முக்கியமான நீண்ட கவிதையாக பேசப்படுகிறது.

'எழுத்து'' ஒரு தீவிரமான சிற்றிதழாக  உள்ளடக்கத்தில் ஒரு  கட்டுப்பாடான  வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருந்தது. 

அந்த  இறுக்கமான  வட்டத்திலிருந்து  மாறி ஒரு விரிந்த தளத்தில் பிற கலைகளையும்  ஒருங்கிணை த்துக்கொண்டு ஒரு இலக்கிய சிற்றிதழ்  வர வேண்டுமென்று மணியும் அவருடைய  நெருங்கிய நண்பர்களான முத்துசாமி வெங்கடேசன் இன்னும் சிலரும் தீர்மானித்தார்கள்.  ''நடை'' அப்படிபட்ட வித்தியாசமான   கட்டமைப்புடன் மிக  அழகாக தயாரிக்கப்பட்ட      அருமையான சிற்றிதழ்.

மணி ஆசிரியராக  ஏற்று  நடத்திய ''நடை'' தமிழ் சிற்றிதழில் சிறந்த  உதாரணமாக இன்றும் பேசப் படுகிறது.

பல நவீன ஓவியர்களின் சங்கமம்  அதன் மூலம் தமிழ் பத்திரிகைக்கு கிடைத்தது...   தமிழ் பாரம் பரீய கலைகள் பற்றிய விஷயங்கள்  ஐரோப்பிய  நாடகங்கள் ஓவியங்கள் தமிழில்  நவீன நாடகங்கள்  என பல புதிய பகுதிகள்  அதில் இடம்பெற்றன.

பொருள் நஷ்டத்தை லட்சியம் செய்யாமல்  சி.மணி ஏற்று குறுகிய காலம்  வெளிக் கொணர்ந்த ''நடை''  மணி  தமிழுக்கு செய்த கொடை என்று சொல்லலாம்.

யோசித்துப் பார்க்கும் போது  சி.மணிக்கு  அவர் வாழ்க்கையிலும் கவிதையிலும் உடம்பு தான் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்திருக்கிறது.

''இந்தக் கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? வெறும் தோள் முனைத் தொங்கல் ? என்று ஒரு கவிதையில் அவர் கேட்கிறார்.  உடம்பை உபயோகப் படுத்த முடியாமலோ விரும்பாமலோ   உடம்பை விட்டு  விலகி அந்தரத்தில் நிற்கும்  மனம் இப்படி ஒரு விசாரம் கொள்ளுகிறது.   அல்லது இந்த உலகத்தில் உடம்பின் இயக்கம்  அர்த்தமற்றதாக அபத்தமாக தோன்றக்கூடிய ஒரு  மனநிலை.

அவருக்கு உடம்பு  இந்த  உலக யதார்த்தத்தில்  நரக அவஸ்தைக்கு தள்ளப்படுகிறது..  உடம்பு என்பது மணியின் கவிதைகளில் அநேகமாக  பாலுணர்வின்  மொத்தக் கிடங்காகி.. இந்த சமூகத்தின்  ''கவர்ச்சி நாகரீகத்துக்கும் ''  நன்னெறிக் கட்டுகளுக்கும் இடையில் வடிகாலற்று  புரண்டு புலம்பும் தீராத வேதனையாக    சித்தரிக்கப்படுகிறது.

பல சமயம் இது ஒரு வலிந்து விகாரப்படுத்தப்பட்ட  அல்லது விவகாரப்படுத்தப்பட்ட  ஒரு கவிப் பொருள் என்று  எனக்குதோன்றுவதுண்டு.

கவிஞர் சி.மணிக்கு  5 ஆண்டுகளுக்கு முன் விளக்கு பரிசு கொடுக்கப்பட்டது. அதற்காக  எனது வாழ்த் துரையை நான் அவருக்கு  எழுதி  வழங்கினேன். மணிக்கு அது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. .... அதற்கு நன்றி கூறி  எங்களுடைய நெடுங் காலக்   கவிதையுறவுகளையும்   என் கவிதை ''கிணற்றில் விழுந்த நிலவு பற்றிய   நெகிழ்ந்த ரஸனைகளையும் குறிப்பிட்டு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியி ருந்தார்.       

அது தான் அவர்   எனக்கு  முதல் முதலாக எழுதிய கடைசி கடிதம்..!

அந்தக் கடிதம்  நான் இருக்கும் வரையில் என்னிடம் பத்திரமாக இருக்கும்..அவர் கவிதைகளின் ஞாபகங்கள்போல.


[சி.மணி  மறைந்த போது  பிரசுரிக்கப்பட்ட  கட்டுரை]


No comments:

Post a Comment