vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, March 8, 2013


ஜன்னல்  கச்சேரி
வைதீஸ்வரன்

ப்போதுஎனக்குஏழுவயதிருக்கலாம்.சினிமாவை அப்போது பார்த்ததில்லைவீட்டில் பார்க்க அனுமதித் ததில்லை.அப்பாவைத் தேடிக்கொண்டு சிலசமயம்வீட்டுக்கு வரும் சிநேகிதர்கள்  அப்போது  ஊரில் ஓடும்  சினிமாக்கள்  பற்றி மிக உற்சாகமாக  உரத்தகுரலில் பேசிக்கொள் வார்கள்.  படத்தின்  விறுவிறுப்பான காட்சிகள்பற்றியும்பாடல்களின் ரம்மியங்களைப் பற்றியும்  நடிகரின் குரலைப் பற்றியும் நடிகையின் உதடுகளைப்  பற்றியும் லயிப்புடன்  பேசிக் கொண்டிருப்பார்கள்.முக்கியமாக சினிமாவில்வரும்   மாயாஜாலக் காட்சி கள்அல்லது   தந்தி ரக்காட்சிகள் பற்றிப்பேசுவதில்அவர்களுக்கு பரபரப்பான உற்சாகம்.  சமூக சினிமாக்கள்  குறை வாக வரத்தொடங்கிய அச்சமயம் சினிமா என்றாலே புராணக் கதைகள் தான். திரைப்படங்கள்  எல்லாமே மாயா ஜாலங்கள் தான்.

கதாநாயகன் மரமாகிவிடுவதும்  மரமானாலும் கிளையாட்டிக் காதலி யைப் பார்த்து  விருத் தங்கள்  பாடிக்கொண்டு  நடந்துபோவதும், பாம்புகள்  தேவகன்னிகையாக விருட்டென்று ரூப மெடுத்து அருள்பாலிப்பதும்  முனிவர்கள் திடீர்திடீரென கோபமடைந்து  எதிரில் இருப்பவனை பேயாக  மிருக மாகக் கல்லாக மரமாக சபித்துவிட்டு நகர்வதும், பெருத்த பூதங்கள் உடம்பை மடக்கிக்கொண்டு சொன்னஏவல்களையெல்லாம் செய்துவிட்டு  விளக்குக்குள் ஒளிந்துகொள் வதையும்  இதெல்லாம் எப்படி எடுத்திருக் கான்..என்னமா  எடுத்துருக்கான்...” என்று உச்சுக் கொட்டுவதையும்   நான் என்   தந்தையின்   மடியில்உட்கார்ந்துகொண்டு  கேட்டுக்கொண்டிருப் பேன்.  சினிமா  என்பதே  ஏதோ கனவு லகம் என்று   தோன்றும்  என் அப்பா   சினிமா பார்ப்பாரா என்று எனக்கு ஞாபகமில்லை.ஆனால், அம்மா ஒரு தடவைகூடப்போனதில்லை. ஒருவேளை பாட்டிக்குப் பயந்தோ என்னமோ ஞாபக மில்லை. 


ஆனாலும், தெருவில் சினிமா விளம்பரத்தட்டிகளைக் கட்டிக்கொண்டு  போகும்  மாட்டுவண்டி களை நாங்கள் ஜன்னலோரம்உட்கார்ந்து வேடிக்கைபார்ப்பதைபாட்டியால் தடைசெய்ய முடிய வில்லை.  பாட்டியும் எங்களோடு சேர்ந்து  வேடிக்கை  பார்த்துக்கொண்டிருப்பாள்..


தவிரஅப்போது அக்கத்துபக்கத்து வீடுகளில்  கிராமபோன் பெட்டிகளில் சினிமாப் பாட்டுக்கள் ஒலிக்கஆரம்பித்துவிட்டன. அற்புதமான பாட்டுக்கள் வயது வித்யாசம் பார்க்காமல் எல்லோ ரையும் கட்டிப்போடும் இசைக் கவர்ச்சி உள்ள பாடல்கள். தியாகராஜபாகவதரும் எம்.எஸ். சுப்பலட்சுமி யும் அவர்கள் பாடிய பாபனாசசிவன் பாடல்களும் காதிலும் மனதிலும்   சுழன்று ரீங்காரித்துக்கொண்டே இருக்கும்  அலை ஓசைகள். அந்தக்கால காற்றில் மிதந்த கீதங்கள் சமூகத்தின் செவிகளின் மூலமாக உன்னதமான  ஒரு கலாரஸனையைஉள்ளமைதியை வளர்த்துக்கொண்டிருந்தன என்று  நினைக்கத்தோன்றுகிறது.


எங்கள் வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் கிராமபோன் வைத்திருந்தார்கள். பாட்டுப்போடும் போதெல்லாம் நானும் என் அக்காவும் அங்கே  ஓடிவிடுவோம் அந்த மாமா நல்லவர் நாங்கள் வருவதை  அவர்  தொந்தரவாக நினைக்கவில்லை.


எனக்கும் என் அக்காவுக்கும் தியாகராஜபாகவதரின் பூமியில் மானிட ஜன்மம டைந்தும் ஓர்...’ பாட்டு அத்துப்படி. பாட்டின் வார்த்தைகள் எதைச் சொல்லுகிறது ஏன் சொல்லுகிறது என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு  யோசனை கிடையாது. வாழ்க்கையைப்பற்றி,  நாம் வாழும் விதத் தைப்பற்றி ஏன் அவ்வளவு நொந்து கொள்ளுகிறது  என்று  எந்தக் கவலையும் இல்லை.  பாகவதரின் குரலும்  வார்த்தைகளின்  சுகமும்  எங்களுக்குப் போதும்... மனம் சிறகடித்துப் பறக்கும்.


பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் ஜன்னலோரம் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஸ்டூல் போட்டு நின்றுகொண்டு பூமியில் மானிட ஜன்ம த்தைப் பாடுவதில் எங்களுக்கு அலாதி மகிழ்ச்சி. ஜன்னலில் ஜிலுஜிலுவென்று காற்று அடித்துக்கொண்டிருக்கும்.ஊரைப்பற்றி யாரைப்பற்றியும் கவலைப் படாமல் உரத்த குரலில் இதைப் பாடிக்கொண்டிருப்போம்.   பின்னால் என்  அம்மாபாட்டிஒண்டுக்குடித்தனத் தில் இருந்த  மாமி,  வயதான மாமா எல் லோரும் இந்தக் கச்சேரியை பின்னாலிருந்து சிரிப்பைப் பொத்திக்கொண்டு கேட்டு நிற்பதை நாங்கள் கவனிப்பதில்லை.அப்படி கவனித்திருந்தாலும் பாட்டுப் பாடுவதில்எங்களுக்கு இருந்த குஷியும் சுதந்திரமும்  அவர்களைப்  பொருட்படுத்தத் தோன்ற வில்லை.


சிலசமயம் ஆளுக்கு ஒரு கைமுறுக்கை வைத்துக்கொண்டு இந்தப் பாட்டைத்தொடங்குவோம். முத லில்  இருவரும்சேர்ந்து பாடஆரம்பித்து பிறகு   அக்கா இரண்டு வரி பாடும்போது  நான்  ஒரு கடி... .நான் இரண்டு வரி பாடும்போது  அக்கா ஒரு கடி என்று மாறி  மாறி முறுக்கும்  பாட்டுமாக எங்கள் நிகழ்ச்சி   நடக்கும்.  பாட்டின் கடைசி வரியாக  புத்தனைப்  போற்றுதல்   நம் கடனே. என்று  பாகவதர்  மிகவும் நெக்குருகிப் பாடி முடிக்கும்போது   எங்கள் முறுக்கும் வாயில் கரைந்துபோகும்.


0



No comments:

Post a Comment