vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, October 11, 2015

இப்படி ஒரு தகவல்


இப்படி  ஒரு  தகவல்

{வைதீஸ்வரன் }

 அந்த  விஸ்தாரமான நகர பஸ் நிலையம்  பயணிகள்  அதிகம்  பேர்  தென் படாமல் அநேகமாக  காலியாக  இருந்தது.. பஸ் வளாகத்தில்  காலியாக  வரிசையாக  நிறைய பேருந்துகள்  புறப்படுவதற்கு  இன்னும்  தயாராகாத  நிலையில்  வெறுமையாக  நின்று  கொண்டிருந்தது.

   அங்கே  வளாகத்தில்  நுழைந்தபோது சரியான உச்சி  வெய்யில்.  என் மண்டையைப்  பிளந்து  வேர்த்து வழிந்து கொண்டிருந்தது.   வளாகத்தில்  நான்  போக வேண்டிய  எண்ணுள்ள  பேருந்துகளும்  இரண்டு மூன்று நின்று கொண்டிருப்பதைப் பார்த்த போது  சற்று  ஆறுதலாக  இருந்தது. எப்படியும் ஏதாவது  ஒரு பஸ்ஸில்  நிம்மதியாக  பயணம்  செய்யலாம் என்ற  நம்பிக்கையும்  கூட.
  
        ஆனால் அங்கே  எந்த  பஸ்  முதலில்  கிளம்பும்சுற்றுமுற்றும்  விவர மறிய  தகவலுக் காக  யாரையாவது  தேடினேன்.  அங்கே  சற்றுத்  தூரத்தில் தள்ளியிருந்த டீக்கடை  மர நிழலில்  மூன்று  போக்குவரத்து  நெறியாளர்கள்  சீருடையில்  நின்று கொண்டு  கையில் பஸ்  அட்டவணைகளுடன்  தோளில்  விஸில் பட்டைகளுடன்  வாயில் லேசாகப் புகைந்து கொண்டிருந்த  சிகரட்டுடன்  நின்றுகொண்டிருந்தார்கள்.  அவர்களைக்  கேட்டால்  எனக்கு  சுலபமாக  தகவல்  கிடைக்கும்.

  நான்  அவர்களை  அணுகியபோது  அவர்கள்  பேச்சு  மும்முரமாக  வேறு எதைப் பற்றியோ  இருந்த்து.  நான்  அவர்களிடம்  எதையோ  கேட்க  முயற்சி செய்வதை  அவர் கள்  கவனித்ததாக  தெரியவில்லை.. பொருட்படுத்திய மாதிரியே தெரியவில்லை.

   “எப்படியும்  இரண்டு  நாளில்  முடிவு  தெரிந்து  விடும்..”  என்றார்  ஒருவர். போன வருஷத்து  வெலை வாசி  வேறே...இந்த  வருஷம்  வேறே!.. ஒரு பெர்ஸண்ட்  கூட சேத்து கொடுக்கலைன்னா.. வேஸ்ட்!..”  என்றார் 

இன்னொருவர்.  “என்னய்யா...செய்யறான்  அந்த  செக்ர்ட்றீஎப்ப கேட்டாலும்  இன்னும்  அமைச் சர்  கூப்பிடலை  கூப்பிடலைன்னு  சொல்றான்...”  வாயிலிருந்து  கோபமாக  பீடியைத்  தூக்கி எறிந்தார்  இன்னொருவர்.

 நான்  இரண்டு  முறை  “ ஸார்...ஸார்..”  என்று  கூப்பிட்டேன்  ப்போது  ஒரு  பேருந்து  வேக மாக   கிளம்பி  வெளியேறியதால்  நான்  கூப்பிட்டது  அவர்கள்  காதில்  விழவில்லை.  நான்  இப்போது  இன்னும் உரத்த  குரலில்  கூப்பிட்டேன்.  அந்த  மூவரும்  என்னை  அப்போது  தான்  திரும் பிப்  பார்த்தார்கள்.  நான்  கத்தியது  அவர்களுக்கு  வினோதமாக  தோன்றி இருக்கவேண்டும். 

  “ என்னய்யா?  “ 

 “ ஸார்.. நான்  மாம்பலம்  போகணும்  இந்த  ரெண்டு  மூணு பஸ்ஸுலே   எந்த  பஸ்  முன்னால கெளம்பும்னு  தெரியணும்...
 “அட்டா...நீங்க  அதுக்காகவா  நிக்கறீங்க....இப்பத்தானே   ஒரு  பஸ்  போவுது...என்றான்  ஒருவன்  அனுதாபத்துடன்.

நான்  பேசாமல்  நின்றேன்.  தகவலைக்  கேட்பதற்காக  அவ்ர்களிடம் வந்து நின் றது  என்  தவறு  என்கிறானோநான் என்  பதிலுக்காக  அவர்களை எதிர்பார்த்து நின்றேன்.

 அவர்களில்  ஒருவன்  பக்கத்திலிருந்த  பேருந்துகளை இரண்டு  முறை  பார்த்தான். 

 “அதோ  அந்த  ரெண்டாவது  பஸ்ஸுலே  போய் ஏறிக்கோங்க..” 

அது  தான்  முதல்லே  போகுமா? “

“  போகும்  போகும்...

  “ரொம்ப  நன்றி ஸார்...” 

நான்  அவர்களை  விட்டு  விலகி நடந்து  அந்தப் பேருந்திடம்  போய்  ஏறப் போனேன்.

எதுக்கும்  கேட்டுட்டு  ஏறுங்க..”  என்று  தூரத்திலிருந்து  இன்னொரு  அதிகாரி  சொன்னான்! 

அவர்  சொன்னது  எனக்கு  விளங்கவில்லை.   அதில் எதாவது  பொறுப்ப்பான  தகவல் இருக்கிறதா..வென்று  தெரியவில்லை. அவர் என்ன சொல்லுகிறார்!! மீண்டும்  அவர்க ளிடம்  போய்  விவரங்கள்  கேட்க  முயலும்போது  அந்தப்  பேருந்துகளில்  இன்னொன்றும்  என்னை விட்டுவிட்டு  சென்று  விடலாம்  எனக்கு  இப்போது   தேவை  உட்காரு வதற் கு  ஒரு  இடம்.  நின்று கொண்டிருக்கும் ஒரு பஸ்ஸுக்குள்  ஏறிக் கொள்வது  தான்  அதற்கு  வசதி.

  நான்  ஏதோ  நம்பிக்கையுடன்  அந்தப்  பேருந்துக்குள் ஏறி   உட்கார்ந்து கொண் டேன்.  பதினைந்து  நிமிடங்கள்  ஆகியிருக்கும்..  அநேகமாக  தூங்கியே  விட்டேன்திடீரென்று  எனக்கு  அருகாமையில்  நின்று கொண்டிருந்த  இன்னொரு  பேருந்து  க்ரீச்சென்ற  சப்தத்து டன்  சீறிக்  கிளம்பிக் கொண்டிருந்தது.  பயணியை  ஏமாற்றி விட்டு  ஓடுவதில்  இந்த  பஸ்க ளுக்கு ஏனோ  இவ்வளவு  ஆனந்தமும்  அவசரமும்!

    நான் கிளம்பிய  பஸ்ஸை  நிறுத்த   உரக்கக்  கத்தி யதும்  அதன்  காதில்  விழ வில்லை. இப்போது நான் என்ன செய்வது” இப்போது இத்தனை நேரம் வரைஉட்கார்ந்து  கொண்டிருந்த  பஸ்ஸை விட்டு  கீழே இறங்கி னால்  ஒரு வேளை  இதுவும்  என்னை  விட்டு விட்டு  ஓடி  விடலாம் பிறகு  எல்லாம்  கைவிட்ட  அனாதை நிலை!

  அந்த  மூன்று  போக்குவரத்து  நெறியாளர்களும்  டீக்கடை விவாதங்களை  ஒரு வாறு  முடித்துக் கொண்டு  இப்போது மெதுவாக  வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒருவன்  நான்  பஸ்ஸுக்குள்  உட்கார்ந்திருப்பதைப் பார்த்து  அடையா ளம்  தெரிந்து கொண் டான் அவனுக்கு என்  மேல்  ஏனோ  ஒரு  அக்கறை...

அடடா..  ஏய்யா.. பெரியவரே.... இந்த பஸ்ஸுலே ஏன் ஏறினீங்கஇப்பத் தானே அந்த  வண்டி போச்சு

நான்  பதில் பேசவில்லை.  எனக்குள்  வெந்துகொண்டிருந்த  கோபத்தை நானே  ஜீரணித் துக்  கொள்ளவேண்டி இருந்தது.
அவர்கள்  மேலும் நிற்காமல்  என்னைக் கடந்து  நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்களில்  இன்னொருவன்  மட்டும்  என்னைப்  பார்த்து  “ஸார்...  இந்த  வண்டி  கெளம்பறதுக்கு   இன்னும்  இருபது  நிமிஷம்  ஆகும்..”  என்று  உபகார சிந்தையுடன்  என்னைப் பார்த்து   சொல்லி விட்டுப்  போய்க்  கொண்டிருந்தான்..

அடடா..

மேலும்  எவ்வளவு  நேரம்  காத்திருக்க  வேண்டுமென்ற   ஒரு  அவசியமான   தகவலை    அக்கறையுடன்  எனக்குத்  தெரிவித்தற்காக  நான் அவருக்கு நன்றி  சொல்லித்  தான்  ஆக  வேண்டும்!!

  நான்  பேருந்தை  விட்டுக்  கீழே இறங்கினேன்.  நிதானமாக  நடந்தால்  என்  வீட்டுக்கு ஒரு  அரை  மணி நேரத்தில்  சென்று  விடலாம். ஆனால்  இப்போது  உச்சி  வெய்யில்.  நிழல் பார்த்து  நின்று நின்று  போனால்  கூட எப்படியும்  முக்கால்  மணியில்  போய் விடலாம்.

 என்  மனதுக்குள்  பொருமிக்  கொண்டிருந்த  இந்த  பஸ் நிலைய  அனுபவத்தை  விட  வெய்யி லின்  உக்கிரம்  குறைவாகத்  தான்  இருக்கும்.  நான்  நடக்க  ஆரம்பித்தேன்.   பத்து  நிமிஷம்  நடந்திருப்பேன். .  நான்  விட்டு விட்டு  இறங்கி வந்த  அந்த  பஸ்  என்னைக்  கடந்து புழுதியைக் கிளப் பிக் கொண்டு  காலியாகப்  போய்க்  கொண்டிருந்தது!.


             *************

  வெளிநாட்டிலிருந்து  வருகிறவர்கள்  நம்மூரில்  நடக்கும்  இப்படிப்பட்ட  சின்ன சின்ன  விபரீதங்களைப்  பற்றி  மிகுந்த  மனக்கசப்புடன்  பேசுவதைப்  பார்த்திருக்கிறேன்.   அவர்களுக்கு  என்ன  பதில் சொல்லுவதென்று எனக்குள்  எப்போதுமே  சங்கடம்.  அவர்கள் சொல்லுகி றார்கள்......” நாம்  எப்போதுமே    இந்தியாவின்  சுதந்திரத்தை  தவறாக  வழியில்  பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று.!!.




*கணையாழி  அக்  2015
  









No comments:

Post a Comment